Thursday, September 3, 2015

பாமா செய்த தந்திரங்கள்!

ஆகையால் தன் மூத்த சகோதரன் ஆன பங்ககராவைத் தன் நம்பிக்கைக்கு ஏற்றவனாக நினைத்த பாமா அவனுடன் தன் லட்சியத்தைப் பகிர்ந்து கொண்டாள். தன் தந்தைக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே உள்ள உறவைச் சரியாகப் புரிந்து வைத்திருந்த அவனோ இவள் நோக்கத்தைக் கேட்டுச் சிரித்தான். முட்டாள் தனமாகக் கனவு காண்கிறாள் எனக் கேலியும் செய்தான். ஆனால் பாமாவோ தன்னளவில் தீர்மானமாக இருந்தாள்; கிருஷ்ணன் ஒருவனே அவள் கணவன்! தன் எண்ணத்தையும் உறுதியையும் அவளால் மாற்றிக் கொள்ள இயலாது. தன் வீட்டு மனிதர்களின் துணையின்றியே அவள் கிருஷ்ணனைக் குறித்த நல்ல விதமான பிரசாரங்களின் மூலம் அனைவர் மனதையும் மாற்றவும் நினைத்தாள். சில காலம் முன்னர் கிருஷ்ணன் யுதிஷ்டிரனின் அழைப்பை ஏற்று ஹஸ்தினாபுரம் சென்று  அங்கிருந்து வடநாட்டிற்கு மற்ற அதிரதர்களுடன் சென்றதுமே அவள் தன் முயற்சியைத் தொடங்கி விட்டாள்.

தன் தாயின் சகோதரியின் மகனும், கிருஷ்ணனின் சிறந்த நண்பனுமான கிருதவர்மனைத் தன் நம்பிக்கைக்குப் பாத்திரனாகக் கொண்டாள். அவன் மூலம் அவள் கிருஷ்ணனுக்குக் குதிரைகளையும் ஆயுதங்களையும் அவன் அறியாமல் கொடுத்து உதவி வந்தாள். அவள் தந்தையின் குதிரை லாயங்களில் கணக்கில்லாமல் இருந்த குதிரைகளாலும், ஆயுதக் கிடங்குகளில் கிடந்த எண்ணிக்கையற்ற ஆயுதங்களாலும் அவளால் இதைச் செய்ய முடிந்தது. அத்தனை அதிகமான அளவில் இருந்ததால் அவள் எடுத்ததே எவருக்கும் தெரியவில்லை. அதிர்ஷ்டம் அவள் பக்கம் இருந்தது. கிருஷ்ணனோடு ஹஸ்தினாபுரம் செல்லத் தயாராக இருந்த சாத்யகியைப் போகவிடாமல் தடுக்கவும் அதோடு அவனை அடியோடு கொன்றுவிடவும் அவள் தந்தை ஜயசேனனை ஏற்பாடு செய்திருந்தார். அது அவளுக்குத் தெரியவந்தது. அவள் சிற்றப்பன் தன்னுடன் சூதாடுவதிலும் குடிப்பதிலும் ஜயசேனனுக்கு உதவிகள் செய்து அவனைத் தங்கள் பக்கம் வளைத்தான். அதுவும் அவளுக்குத் தெரிய வந்தது.

அவள் தந்தை சாத்யகியைக் கடத்துவதற்கும், அவனைக் கிருஷ்ணனோடு சேர விடாமல் தடுப்பதற்கும் செய்த ஏற்பாடுகள் மட்டுமின்றி அதற்கான காரணங்களைக் கூட அவள் அறிந்திருந்தாள். அவளை மணக்க முடியாது என மறுத்தது ஒரு காரணம் எனில் கிருஷ்ணனின் ஏற்பாடுகளை முற்றிலும் தகர்த்து அவனை ஒன்றுமில்லாதவனாக ஆக்க வேண்டும் என்பது இன்னொன்று. ஆகவே அவள் எதிர் நடவடிக்கை எடுத்தாள். அவளுக்கு மிகவும் பழக்கமான அவள் அந்தரங்கக் காவலர்கள் சிலரின் உதவியை நாடினாள். அவர்கள் உதவியுடன் சாத்யகியைக் கடத்தினாள். அதிலும் அவள் முந்திக் கொண்டாள். ஜயசேனனும் அவன் ஆட்களும் சாத்யகியைக் கொல்லும் முன்னரே அவனை அவள் கடத்தி மறைத்துவிட்டாள். கிருஷ்ணனின் வேலை முழுவதுமாக வெற்றியுடன் முடிவடையவே அவள் விரும்பினாள். அதில் அவன் தோற்றுப் போகவோ அவன் தூது செல்லக் கிளம்ப முடியாமல் அவனைத் தடுப்பதிலோ அவளுக்கு விருப்பமில்லை.  தன் தந்தையின் அனுமதி இன்றி கிருஷ்ணனுக்குக்குதிரைகள் மட்டுமின்றி ரதங்கள், ஆயுதங்கள் என அளித்தாள். இதை சாத்யகியின் மூலம் செய்து முடித்தாள். இதற்கு பதிலாக சாத்யகியிடம் அவள் வாங்கிய உறுதிமொழி கிருஷ்ணனை அவள் மணப்பதற்கு வேண்டிய உதவிகளை அவன் செய்ய வேண்டும் என்பதே! இப்போது சாத்யகி மட்டுமின்றி அவனுடைய நெருங்கிய இரு நண்பர்களும் அவளுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் அவள் பல முறை முயன்றும் கிருஷ்ணனின் இரு மனைவியரின் உதவியும் அவளுக்கு எவ்வகையிலும் கிட்டவில்லை. ருக்மிணி ஒரு யாதவத் தலைவரின் மகள் என்ற முறையில் அவளை மரியாதையுடனேயே நடத்தினாள். ஷாயிப்யாவோ அவளை ஒரு சிறு குழந்தையாகவே நினைத்தாள். தேவகியின் உதவியைப் பெறலாம் என நினைத்து அவள் செய்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. அவள் சத்ராஜித்தின் மகள் என்னும் உண்மை அவர்களுக்கு அவ்வப்போது நினைவில் வந்து அவளுடன் அவர்கள் நெருங்குவதைத் தடுத்துத் தொலை தூரத்தில் நிறுத்தியது.  ஆனால் சத்யபாமா தோல்வியை ஏற்க மாட்டாள். அவள் மெல்ல மெல்ல அந்தக் குடும்பத்தை நெருங்கி கிருஷ்ணனின் இளைய சகோதரி சுபத்ராவின் நட்பைப் பெற்று விட்டாள். உல்லாசமாயும், சுறுசுறுப்பாகவும், அதே சமயம் வேடிக்கையாகவும் பேசும் சுபத்ராவுக்குத் தன்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணின் சிநேகிதம் பிடித்திருந்தது. இந்த நட்பை வைத்துக் கிருஷ்ணனின் குடும்பத்தில் நடப்பதை எல்லாம் அவ்வப்போது சத்யபாமா அறிந்து வந்தாள்.

இந்தப் புகழ் பெற்ற கதாநாயகர்கள் வெற்றியடைந்து திரும்பியதைக் கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவள் தந்தை கலந்து கொள்ளப் பிரியப்படவில்லை. குடும்பத்தினரையும் தன்னுடைய கட்டுப்பாட்டினுள் இருக்கும் மற்ற யாதவத் தலைவர்களையும் அவர் தடுத்துவிட்டார். அதோடு கிருஷ்ணன் திரும்பி வரும் செய்தி கிடைத்ததுமே அவன் திரும்பும் நாளுக்குச் சரியாக நான்கு நாட்கள் முன்னரே வேத பிராமணர்களை வைத்து யாகங்களையும்,யக்ஞங்களையும் அவள் தந்தை ஆரம்பித்து வைத்தார். வெகு நேரம் நடைபெறும் இவற்றைச் சாக்கு வைத்து வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போகாமல் இருக்கலாம் என்பதால் தான் அவர் இப்படிச் செய்கிறார் என்பதை பாமா புரிந்து கொண்டாள்.  ஆனால் அதற்காக அவள் போகாமல் இருந்துவிடுவாளா என்ன?  அவள் போக முடிவு செய்து விட்டாள்.

கிருஷ்ணன் இப்போது பெரும்புகழுடன் வந்திருக்கிறான். அவனுடைய தெய்விகத் தன்மையையும் நிரூபித்திருக்கிறான். அவள் தகப்பனின் கொடுங்கோன்மையைத் தாண்டி அவள் இதில் வெற்றியடையும்படியாகக் கிருஷ்ணனைக் குறித்து நல்லபடியாகப் பேசியாக வேண்டும்.  இன்று அதிகாலையிலே அவள் சுபத்ராவுடன் கிருஷ்ணனை துவாரகை வாயிலில் வரவேற்கும் நிகழ்ச்சிக்குச் சென்றாள். மற்ற யாதவப் பெண்களுடன் சேர்ந்து கொண்ட அவள் அவர்களைப் போலவே ஒரு தாமிரப் பானையையும் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவள் தந்தை ஒரு செல்வந்தர் ஆயிற்றே. தங்கப்பானையைக் கொண்டு சென்றாள் பாமா. அனைத்து யாதவப் பெண்களும் அவளைக் கொஞ்சம் பொறாமையுடன் தான் பார்த்தனர். அவர்கள் எல்லாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் செல்வம் என்று வரும்போது அவள் தந்தையிடம் இருக்கும் செல்வம் அவர்களிடம் இல்லை. அவர்கள் இதில் அவளோடு போட்டி போட முடியாது.

யாதவத் தலைவர்கள் அனைவரும் அவள் தந்தையின் செல்வத்தையும் அவரையும் மதிப்பதே இல்லை. அவரைக் கீழ்த்தரமாகவே நினைக்கின்றனர். அதிலும் அந்த அக்ரூரர்! சில மாதங்கள் முன்னர் அவள் மாளிகைக்கு வந்திருந்தார். அவள் தந்தையிடம் பாண்டவர்களுக்காக அவர்கள் சொத்தில் ஐந்தில் ஒரு பாகம் குதிரைகள், ரதங்கள், தங்கம், பசுக்கள் எனக் கொடுக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு அவள் தந்தை நிச்சயமாக மறுத்துவிட்டார். யாதவர்கள் அனைவரும் பாண்டவர்களின் படை வீரர்களா? அவர்களுக்காகச் செலவழிக்க யாதவர்கள் யார்? அவர்களின் சொத்தை ஏன் பாண்டவர்களுக்காகக் கொடுத்து அழிக்க வேண்டும்? யுதிஷ்டிரன் என்ன பெரிய சாம்ராஜ்யச் சக்க்ரவர்த்தியா? நாம் அவனுக்குக் கப்பம் செலுத்தவேண்டுமா? அதெல்லாம் முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

1 comment:

பித்தனின் வாக்கு said...

மிக அருமை, நீண்ட நாட்களாக படிக்காத பதிவுகள் அனைத்தும் இன்று படித்தேன். மிக நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.