Monday, January 4, 2016

குழப்பம் உருவானது!

விரைவில் ப்ருஹத்பாலன் அக்ரூரர், பலராமன், உத்தவன் மற்றும் சாத்யகியோடு அங்கு வந்து சேர்ந்தான். பெரியவர்களான வசுதேவர், சாத்யகர் மற்றும் அக்ரூரர் ஆகியோர் உக்ரசேனருடன் அடுத்த அறைக்குச் சென்று நடந்த விஷயங்களைக் குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் மீண்டும் மன்னனின் படுக்கை அறைக்கு வந்தபோது உக்ரசேனரின் கைகள் கிருஷ்ணனின் தோள்களைப் பிடித்துக் கொண்டிருந்தன. பொதுவாக ப்ருஹத்பாலனே உக்ரசேனரின் உதவிக்கு வருவான். இன்றோ கிருஷ்ணனின் உதவியோடு உக்ரசேனர் வந்தார். சத்ராஜித் தன் மகன் பங்ககராவுடனும் ஷததன்வாவுடனும் அவர்களைத் தொடர்ந்து தாழ்வரைக்கு வந்தான். வெளி முற்றத்தில் கூடி இருந்த மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கூவிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருந்ததும் அவ்வப்போது காதுகளில் விழுந்தன. ஒரு சிலர் அப்போதே ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இருந்தனர். ஆங்காங்கே ஒரு சிலர் ஆயுதப் பிரயோகமும் செய்தது சப்தங்களால் தெரிய வந்தது.

தாழ்வரைக்கு மன்னனும் மற்றவர்களும் வந்து சேர்ந்ததும் மக்கள் கூட்டம் அமைதியில் ஆழ்ந்தது. என்றாலும் கூட்டத்தில் அமைதியின்மையும் குழப்பமான மனோநிலையும் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அங்கே அப்போது வந்து சேர்ந்த அதிரதிகளுக்காக மக்கள் விலகி வழிவிட்டனர். அனைவரும் அங்கே கூடினார்கள். சத்ராஜித் கிருஷ்ணனை ச்யமந்தக மணியைத் திருடி விட்டதாகக் குற்றம் சாட்டுவதைக் குறித்து அவர்களுக்குத் தெரிய வரவும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு இல்லாமல் மன்னன் முன்னால் பணிவோ விநயமோ இல்லாமல் சத்ராஜித் நடந்து கொண்ட முறையும், மன்னனை அவன் அவமதித்ததையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். மேலும் மன்னனை முறைப்படி சந்திக்க வராமல் பூரண ஆயுதபாணியாக சத்ராஜித், பங்ககரா, ஷததன்வா மற்ற அதிரதர்கள் அனைவரும் வந்திருப்பதும் அவர்களைத் திகைக்க வைத்தது. ஆகவே இப்போது இங்கே கூடிய அவர்கள் அனைவரும் உக்ரசேனர், வசுதேவர், சாத்யகி, அக்ரூரர் ஆகியோரின் பின்னால் போய் அவர்களுக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

குழப்பம் கொஞ்சம் ஓய்ந்து அமைதி நிலவுவதைக் கண்ட மன்னன் கிருஷ்ணனின் தோள்களில் இருந்து தன் கரங்களை விலக்கிக் கொள்ளக் கிருஷ்ணனும், பலராமனும் மற்ற அதிரதர்களுடன் சேர்ந்து நின்று கொண்டனர். அப்போது சத்ராஜித்துடன் வந்திருந்த அதிரதிகளிலும் மஹாரதிகளிலும் இளைஞனான ஒருவன் சற்றே முன்னால் வந்தான் கிருஷ்ணனை நோக்கித் தன் கரங்களை நீட்டிக் கொண்டு, “அதோ! அந்தத் திருடன் நிற்கிறான்! அவன் தான் ச்யமந்தகத்தைத் திருடி விட்டான்!” என்று கூட்டத்தை நோக்கிக் கூவியதோடு அல்லாமல் கிருஷ்ணனை நோக்கிக் காறித் துப்பினான். பலராமனுக்குள் கோபம் கொந்தளித்தது. கோபக்காரனான அவன் கோபத்தைக் கிளறிவிட இது ஒன்றே போதுமானதாக இருந்தது. அடக்க முடிஅயக் கோபத்துடன் தாழ்வரையிலிருந்து கீழே இறங்கினான். அந்த மஹாரதியை நோக்கிச் சென்றான். அவனுடைய முழு உடலும் அந்த மஹாரதியை அப்படியே மறைத்ததால் பலராமன் என்ன செய்கிறான் என்பதே சில கணங்கள் யாருக்கும் புரியவில்லை. அப்படியே அவனை ஒரு குழந்தையைத் தூக்குவது போல் மேலே தூக்கினான் பலராமன். அங்கே நின்றிருந்தவர்களில் கடைசி வரிசைக்குப்போய் அவன் விழும்படி அவனைத் தன் தலைக்கு மேல் சுழற்றித் தூக்கி வீசி எறிந்தான் பலராமன். கடைசி வரிசையில் நின்றிருந்தவர்கள் அவனை அப்படியே பிடித்துக் கொண்டனர். இல்லை எனில் அவன் தலை கீழே மோதிச் சிதறிப் போயிருக்கும்.

கூடியிருந்த கூட்டம் சிரிப்பில் ஆழ்ந்தது. அனைவரும் “ஜெய பலதேவா!பலதேவனுக்கு மங்களம்!” என்றெல்லாம் கூச்சல் இட்டார்கள். பலதேவனுக்கே வெற்றி என்றும் சிலர் கூத்தாடினார்கள். இந்தக் குழப்பத்தில் சத்ராஜித் கூவிய “திருடன், திருடன்” என்னும் கூக்குரல் எவர் காதிலும் விழாமல் போயிற்று. அப்போது சாத்யகன் முன்னால் வந்தார். அவருடைய உறுதியான கட்டுக்கோப்பான தேகத்தையும் அவர் முகத்தில் நிலவிய சாந்தியையும், அவரின் உள்ளத்து நேர்மையை வெளிக்காட்டும் கண்களும் சேர்ந்து அவர் முன்னால் வந்ததுமே கூட்டத்தை அமைதியில் ஆழ்த்தியது. என்றாலும் சாத்யகரும் கூட்டத்தை அமைதியாய் இருக்கும்படித் தன் கைகளால் சைகை செய்தார். கூட்டம்  அமைதியில் ஆழ்ந்தது. கூட்டத்தைப் பார்த்து சாத்யகர் பேச ஆரம்பித்தார்.

“அனைவரும் கேளுங்கள்! உக்ரசேன ராஜாவின் கட்டளைகளை நான் இப்போது சொல்லப் போகிறேன். நைனனின் மகன் ஆன சத்ராஜித் ஒரு குற்றம் சாட்டுகிறான். மாட்சிமை பொருந்திய கோவிந்தனைத் திருடன் என்கிறான். அவனுடைய ச்யமந்தக மணிமாலையை கோவிந்தன் திருடி விட்டதாகக் கூறுகிறான். சாத்யகர் நேரடியாக விஷயத்துக்கு வந்தது அனைவருக்கும் திருப்தியாக இருந்ததோடு சத்ராஜித்தை அவர் “நைனனின் மகன்” என அலட்சியமாகக் குறிப்பிட்டதில் உள்ளூர சந்தோஷமாகவும் இருந்தது. சத்ராஜித்தை யாதவர்கள் பலரும் அவன் நடவடிக்கைகளால் வெறுத்து வந்தனர். இப்போது சத்ராஜித் மேலும் பேச ஆரம்பித்தார்.

“சத்ராஜித் சொல்கிறான். கிருஷ்ணன், இன்று அதிகாலை நேரத்தில் சத்ராஜித்தின் வழிபாட்டு அறையை உடைத்துத் திறந்து கொண்டு உள்ளே சென்று ச்யமந்தகத்தை அதன் பீடத்திலிருந்து எடுத்துச் சென்று விட்டானாம். ஆனால் கோவிந்தன் இதைத் திட்டவட்டமாக மறுக்கிறான். இது ஒரு தீவிரமான விஷயம். முக்கியமான விஷயம்! இதன் தாக்கம் அனைத்து யாதவர்களிடமும் சென்று சேரும். நம் எல்லோரையும் பாதிக்கும். கிருஷ்ணனுக்கு ஒன்று எனில் அது நம் அனைவரையும் நிச்சயம் பாதிக்கும். நம் உயிர், உடல், உடைமைகள் அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை! அவனால் தான் நாம் இன்று உயிருடனும் இத்தனை செல்வங்களுடனும் இருக்கிறோம். நம்முடைய இன்றைய வீரமிக்க சாகசச் செயல்களுக்கும், நமக்குக் கிடைத்திருக்கும் கௌரவத்திற்கும் ஆர்யவர்த்தத்து அரசர்களால் நாம் போற்றப்படுவதற்கும் கிருஷ்ணனே காரணம்.”

சற்றே நிறுத்திய சாத்யகர் கூட்டத்தை ஒரு கணம் யோசனையோடு பார்த்தார். சுற்றிலும் உள்ள மக்களை அவர் பார்த்த விதத்திலிருந்து தம் பேச்சு அவர்களிடையே எவ்வகைத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அவர் கணிக்கிறார் என்பது புரிந்தது. பின்னர் அவர் மீண்டும் பேச ஆரம்பித்தார். “நம் மாட்சிமை பொருந்திய மன்னர் உக்ரசேனர் அவர்கள் நைனனின் மகனிடம் கிருஷ்ணனால் தான் இது திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும்படி கூறுகிறார். ஆகவே இப்போது முதலில் நைனனின் மகனான சத்ராஜித் பேசட்டும். இங்குள்ள பெரியோர்கள் அதை முதலில் கேட்பார்கள். அதன் பின்னர் கோவிந்தன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்போம். கடைசியில் முடிவு செய்யப்படும். சத்ராஜித் சொல்வது உண்மையா என்பதும் அதற்கான தண்டனையை அந்தத் திருடனுக்கு வழங்குவதா என்பதும் முடிவு செய்யப்படும். அல்லது சத்ராஜித் பொய் சொல்லி பொய்சாட்சியத்தை நிறுவுகிறானா என்பதும் முடிவு செய்யப்படும்.”

அப்போது சத்ராஜித் முன்னால் வந்தான். சாத்யகன் பேசுவதைத் தடுத்தான். “என்ன சாட்சி வேண்டும் உனக்கு? இதை விட என்ன வேண்டும்? அந்தக் கிருஷ்ணன் என் ச்யமந்தகத்தை என்னிடமிருந்து பிடுங்கிவிடுவதாக நேற்றுக் கூறினான். எப்படியோ எடுப்பேன் என்றும் சொன்னான். இதோ, இது அவனுடைய காதுக் குண்டலங்கள். இதை அவனுடையது இல்லை என அவனைச் சொல்லச் சொல், பார்க்கலாம்! அவன் திருடிக் கொண்டு ஓடியபோது தப்பிச் சென்ற வாயிலின் கதவு அருகே இது விழுந்து கிடந்தது. “என்று கிருஷ்ணனின் குண்டலங்களை எடுத்துக் காட்டினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

பொய் சாட்சிகள் தயார் செய்வது எந்தக் காலத்திலும் உண்டு போலும்!

:)))