Tuesday, January 5, 2016

என்னை நானே எரித்துக்கொள்வேன்!

சாத்யகர் சத்ராஜித்தை நோக்கித் திரும்பினார். அவருடைய குரல் தீர்க்கமாகவும் உறுதியாகவும் தொனித்தது. “ஆம், அது எங்களுக்கும் தெரியும். கிருஷ்ணனும் அது அவனுடைய குண்டலங்கள் தான் என்பதை மறுக்கவே இல்லை. ஆனால் ச்யமந்தக்த்தை அவன் திருடியதாக ஒப்புக் கொள்ளவே இல்லையே! இதை நான் உங்களுக்கெல்லாம் தெளிவாகச் சொல்கிறேன்.” என்றவாறு தன் கைகளை ஆணையிடும் தோரணையில் உயரத் தூக்கிய சாத்யகர், “யாதவப் பெருமக்களே, கேளுங்கள்! கிருஷ்ணனை நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே நன்கு அறிவேன். அவன் நம்முடைய ரக்ஷகன். பாதுகாவலன். நம்மை மத்ராவின் துயரங்களிலிருந்து மீட்டு இங்கே கொண்டு சேர்த்தவன். அவனால் ஒருபோதும் திருடவே முடியாது! அப்படிப்பட்ட இளைஞன் அல்ல அவன். ஆனால் நைனனின் மகனான சத்ராஜித் மட்டும் அவன் மேல் குற்றம் சுமத்துகிறான். நம்முடைய வாழ்க்கையின் உயரிய நோக்கம், நம்பிக்கை அனைத்துமே இவன் சுமத்தும் குற்றத்தில் அஸ்திவாரமின்றி ஆட்டம் காண்கிறது என்பதை சத்ராஜித் நிரூபித்தாக வேண்டும்.”

கூட்டத்தில் சாது,சாது என்ற கோஷம் எழுந்தது. அதே சமயம் சத்ராஜித்தின் ஆட்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர், “கோவிந்தன் ஒரு திருடன், கோவிந்தன் ஒரு திருடன்!” என்று கூவினார்கள். சாத்யகர் ஏதுமே பேசாமல் தன் கைகளாலேயே அந்தக் கூக்குரலை அடக்கி அமைதியை நிலை நாட்டினார். சாத்யகர் மேலும் பேசும் முன்னர் கிருஷ்ணன் முன்னால் வந்து பேச ஆரம்பித்தான். தெளிவான குரலில் தான் சொல்லப் போவதை உறுதி செய்யும் குரலில் அவன் பேசியது அனைவரையும் ஈர்த்தது. “யாதவப் பெருமக்களே! இந்த சத்ராஜித் சொல்வது அனைத்தும் முழுப்பொய்! நான் ச்யமந்தகத்தைத் திருடவே இல்லை. ஆனால் அதை சத்ராஜித்திடமிருந்து பிடுங்க வேண்டும் என்றும் அதை அக்ரூரரின் கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் சொன்னது உண்மைதான். அதுவும் நம் யாதவர்கள் அனைவரின் நன்மைக்காகவே சொன்னேன். இதை நான் அப்போதே சத்ராஜித்திடம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டேன். மேலும் இப்போது நான் கூறுகிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுவேன். என்ன நடந்தாலும் சரி, நான் சொன்னால் சொன்னபடி செய்வேன். ச்யமந்தகத்தை சத்ராஜித்திடமிருந்து எடுத்து அக்ரூரரின் கஜானாவில் சேர்த்தே தீருவேன்!”

சத்ராஜித் அப்போது குறுக்கிட்டுப் பேச முனைந்தான். ஆனால் கிருஷ்ணன் தன் கரங்களால் அவனைத் தடுத்து நிறுத்தினான். தான் இன்னமும் முடிக்கவில்லை என்பதை அந்தச் செய்கையின் மூலம் நிரூபித்துவிட்டுத் தொடர்ந்தான். “யாதவர்களுக்கும் சத்ராஜித்துக்கும் நான் செய்யக் கூடிய மிகப் பெரிய சேவை என்பதே ச்யமந்தகத்தை சத்ராஜித்தின் தனிப்பட்ட சொத்தாக இருப்பதிலிருந்து மீட்டு யாதவர்களின் பொதுச் சொத்தாக ஆக்குவதே ஆகும். இதனால் சத்ராஜித்தின் அகம்பாவமும், சுயநலமும் அதிகமாகி வருகின்றதே தவிர குறையவில்லை. ஆகவே அதை அவரிடமிருந்து கட்டாயம் மீட்கவேண்டும். இந்த விஷயத்தில் நான் என் வாக்குறுதியைக் கட்டாயமாய்க் காப்பாற்றியே தீருவேன். உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்! நான் எப்போதுமே என்னால் இயன்றவரை முழு முயற்சியும் செய்து கொடுத்த வாக்கைக் காப்பேன் என அறிந்திருப்பீர்கள்!”

கூட்டம் உற்சாகத்தில் ஆரவாரமிட்டுக் கூத்தாடியது. சத்ராஜித்தின் ஆதரவாளர்கள் மட்டும் எதிர்ப்புக் குரல் தெரிவித்தனர். “கேளுங்கள்!” கிருஷ்ணனின் குரல் கொஞ்சம் கடுமையாக மாறியது. ஏதோ மரண தண்டனையை அறிவிப்புச் செய்பவன் போல் முகமும் கடுமையாக மாறியது. “கேளுங்கள், யாதவகுலப் பெருமக்களே! நான் சொன்னபடி செய்யத் தவறினால் மன்னர் உக்ரசேனர் என்னை யாதவ குலத்திலிருந்தே நீக்கிவிடட்டும். என் தந்தை வசுதேவர் என்னை தன் மகன் அல்ல என அறிவிக்கட்டும். என் ஆசாரியரும் குலகுருவுமான கர்காசாரியார் என்னைத் தன் சீடன் இல்லை என அறிவித்து எனக்கு சாபங்களும் இடட்டும்! என் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய சாத்யகரால் நான் க்ஷத்திரியனே அல்ல என்ற அறிவிப்பு வரட்டும். மேலும் நான் ஓர் அதிரதியாக இருப்பதற்குத் தகுந்தவன்  அல்ல என்று கூறட்டும்! என் அண்ணனும் என் உயிரினும் மேலானவனும் ஆன பலராமன் தன் வெற்றுக்கரங்களால் என் மண்டையை உடைத்துச் சுக்கு நூறாக்கி விடட்டும்.” இப்போது கொஞ்சம் நிறுத்திக் கொண்ட வாசுதேவக் கிருஷ்ணன், தழுதழுத்த குரலில் மேலும் பேசலானான். “ நீங்கள் அனைவரும் என்மேல் மாறாத பிரியமும், விசுவாசமும் கொண்டவர்கள். ஏனெனில் நான் தர்மத்தின் வழி நடக்கிறேன் என்பதை அறிந்தவர்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும் நான் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே உயிர்வாழ்கிறேன் என்பதை அறிந்திருப்பீர்கள். இதில் நான் தவறினேன் எனில், நான் உயிர் வாழ அருகதை அற்றவன். என்னை நானே எரித்துக் கொள்வேன்.”

கூடியிருந்த கூட்டத்தில் அனைவரும் இந்தப் பேச்சால் உலுக்கப்பட்டனர். அனைவர் கண்களும் கண்ணீரால் நிரம்பியது. சாத்யகர் மட்டும் எதற்கும் அசையாமல் நின்றிருந்தார். அனைவரும் கிருஷ்ணனின் குரல் எப்போதும் இருக்கும் அன்பும், இனிமையும், மென்மையும் இல்லாமல் இப்போது கடினமாக, உறுதியாக, வருத்தம் கலந்து பேசியதைக் கேட்டு மனம் வருந்தினார்கள். அவர்கள் அனைவரையும் கஷ்டமான காலகட்டங்களில் கூட இனிமையுடனும், ஆதரவுடனும் பேசிய அந்தக் குரல்! இப்போது இப்படிப் பேசுவதோடு அல்லாமல் தனக்குத் தானே தண்டனையும், அதுவும் கடுமையான தண்டனையும் விதித்துக் கொள்கிறதே!

அதன் பின்னர் கண்களில் ஓர் விசித்திரமான ஒளியோடு சத்ராஜித்தின் பக்கம் திரும்பிய கிருஷ்ணன், “மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் யாதவர்களின் சொத்துக்களை அவர்களிடமிருந்து பிடுங்கி விட்டீர்கள். உங்களுடைய பணபலத்தையும், படை பலத்தையும் வைத்து அவர்களை ஒடுக்க நினைத்துவிட்டீர்கள். உங்கள் செல்வமும் அதனால் விளைந்த அகந்தையும் உங்கள் கண்களை மறைத்துவிட்டது. உங்கள் செல்ல மகளுக்கு யுயுதானாவை மணமுடிக்க வேண்டும் என சித்தப்பா சாத்யகரை மறைமுகமாக மிரட்டுகிறீர்கள். இப்போது நீங்கள் என் வாழ்நாள் எதற்காக உள்ளதோ அதை என் வாழ்நாளின் உயரிய நோக்கத்தை என்னிடமிருந்து பறிக்கப் பார்க்கிறீர்கள்! அதை நான் ஒருக்காலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்!”

தன்னுடைய எரிக்கும் கண்களை சத்ராஜித்தின் பக்கம் திருப்பினான் கிருஷ்ணன். அவன் பார்வையின் வேகத்தையும் அதன் உஷ்ணத்தையும் தாங்க முடியாமல் சத்ராஜித் வேறுபக்கம் பார்த்தான். கிருஷ்ணன் மேலே பேச ஆரம்பித்தான். “சத்ராஜித் அவர்களே! உங்கள் மேல் தவறு என்பது உறுதியாகிவிட்டால், நான் எதுவும் சொல்ல மாட்டேன். மன்னர் அவர்களிடம் உங்களுக்குத் தக்க தண்டனை கொடுத்தாக வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்த மாட்டேன். க்ஷத்திரிய தர்மத்தின் எச்சங்கள் ஒரு சிறிதளவாவது உம்மிடம் இருந்தால், அது உங்களுக்கு அதுவாகவே போதுமான தண்டனையைப் பெற வைக்கும். அதையும் நான் பார்ப்பேன்.”

கூட்டத்தை நோக்கித் திரும்பிய கிருஷ்ணன், “மாட்சிமை பொருந்திய அரசரே, பெரியோர்களே, யாதவ குடி மக்களே, நான் உங்கள் அனைவரிடமும் கெஞ்சிக் கேட்பது ஒன்றே ஒன்று தான்! கொஞ்சம் பொறுமையாக இருங்கள்! எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். உங்கள் அனைவரின் கௌரவத்தையும் நான் மீட்டு எடுப்பேன். இது என்னுடைய கௌரவம் மட்டும் அல்ல! மாறாக உங்கள் அனைவரின் கௌரவமும் இதிலே தான் அடங்கி இருக்கிறது. ஆகவே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!” என்று வேண்டிக் கொண்டான்.

கூட்டம், “ஜெய ஶ்ரீகிருஷ்ணா! ஜெய ஶ்ரீகிருஷ்ணா!” என்று ஆமோதித்தது.