Monday, October 17, 2016

இந்திரப் பிரஸ்தத்தில் இரண்டு கிருஷ்ணர்கள்!

மேற்கண்ட சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் ஆன பின்னர் ஆசாரியர் வேத வியாசர் தன் முக்கிய சீடர்களோடு படகுப் பயணமாக இந்திரப் பிரஸ்தம் வந்து சேர்ந்தார். சில நாட்களில் கிருஷ்ண வாசுதேவனும் துவாரகையிலிருந்து வந்து சேர்ந்தான். அவனுடன் உத்தவனும் யாதவர்களில் முக்கியமான மஹாரதிகளும் வந்திருந்தனர். அவர்களோடு குறிப்பிடத் தக்க அளவில் ரதப் படை ஒன்றும் வந்திருந்தது. இந்திரப் பிரஸ்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரே சம்யத்தில் அங்கே இரண்டு கிருஷ்ணர்கள் வந்திருந்தார்கள். இருவரில் ஒருவர் மிகவும் வணங்கத்தக்கவராக இருந்தார். இன்னொரு கிருஷ்ணன் அனைவராலும் விரும்பி அன்பு செலுத்துபவராக இருந்தார். எனினும் மக்களுக்கு இருவரையும் போற்றி அன்பு செலுத்தி வணங்குவதில் எவ்விதமான கருத்துவேறுபாடும் இல்லை. அதோடு இல்லாமல் ஆசாரிய தௌமியர் அங்கே ராஜகுருவாக இருந்தார். ஆகையால் அவருடைய அழைப்பின் பேரிலும் வேத வியாசர் அங்கே வந்திருந்தார். அவருடைய விருந்தாளியாகவே தங்கினார்.

கிருஷ்ணன் தன் அத்தை மகன்கள் ஐவருடனும் அவர்கள் குடும்பத்துடனும் அரச மாளிகைகளில் ஒன்றில் தங்கினான். அனைவரும் கிருஷ்ணனை அன்புடன் வரவேற்று கௌரவப்படுத்தினர். அவர்கள் அனைவரும் அங்கே வந்து சில நாட்களில் குடும்ப நபர்கள் அனைவரும் வெளியேறினார்கள். பீமன் விரைவில் திரும்பி வந்து அப்போதுள்ள சூழ்நிலை குறித்துக் கிருஷ்ணனிடம் தெரிவித்தான். ஆனால் அவர்களின் குழந்தைகள் அவர்கள் நினைத்தபடி செய்ய விடவில்லை. அவர்கள் ஐவரும் திரௌபதிக்குப் பஞ்ச பாண்டவர் மூலம் பிறந்த குழந்தைகள். அவர்கள் எப்போதும் கிருஷ்ணனை விட்டுப் பிரியாமல் அவனையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் அணைப்பில் ஆனந்தம் அடைந்தனர். அவனைப் பார்த்து நடனம் ஆடித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

திரௌபதியைத் தவிர அர்ஜுனன் கிருஷ்ணனின் சகோதரி சுபத்ராவையும் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இருவருக்கும் பிறந்த மகன் அபிமன்யு என்ற பெயரில் வளர்ந்து வந்தான். அவன் தன் மாமனைப் பார்த்ததும் தாயின் கைகளிலிருந்து கிருஷ்ணனிடம் தாவினான். கிருஷ்ணன் மட்டும் உரிய நேரத்தில் அவனைப் பிடிக்கவில்லை எனில் தரையில் விழுந்திருப்பான். இப்படி அனைவரும் கிருஷ்ணனிடம் அளவற்ற அன்பு பாராட்டினார்கள். கிருஷ்ணனிடம் தான் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போன கோபத்தில் பீமன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னான். “கிருஷ்ணா, இந்தச் சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் விளையாடிப் பொழுது போக்கவா வந்தாய்? ஆனால் இவர்கள் அனைவரும் எங்களை விட உன்னை மிகவும் அதிகம் நேசிக்கிறார்கள்!” என்று சொன்னான்.

“அப்படி எனில் இது உங்கள் தவறுதான்!” என்றான் கிருஷ்ணன் குறும்புடன். “இல்லையா, ப்ரதிவிந்தியா? (யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் பிறந்த மகன்) என்று அவர்களில் மூத்தவனைப் பார்த்துக் கேட்டான். அவனும் ஆமோதித்தான். “ஆஹா, நீ நம் புராதனமான நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்ல முயல்கிறாய், கிருஷ்ணா! இது நியாயமா? நம் முன்னோர்கள் தாய், தந்தையரைத் தான் தெய்வங்களாக வணங்கச் சொல்லி இருக்கிறார்கள். இல்லையா? உன்னைப் போன்ற தாய்வழி மாமன்களை அல்ல!” என்றான். கிருஷ்ணன் அதைக் கேட்டதும் வாயைக் குவித்துக் கொண்டு குழல் போல் ஊதினான். அதைப் பார்த்த அபிமன்யு சிரித்தான். கிருஷ்ணன் அவன் கன்னங்களை அழுத்திக் கொண்டு கொஞ்சினான். “நீ உன் தாய், தந்தையரை விட என்னைத் தானே அதிகம் நேசிக்கிறாய்? ஏனடா, குண்டுப்பயலே! அப்படித்தானே!” என்ற வண்ணம் அவன் மோவாயில் தடவிக் கொடுத்தான். குழந்தையும் அதை ஒரு பெரிய சிரிப்பாலும் உற்சாகக் கூச்சலாலும் அங்கீகரித்தது. பீமனைப் பார்த்த கிருஷ்ணன், “அவர்கள் உன்னை விட என்னை அதிகம் நேசிக்கவில்லை பீமா! உனக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரியவில்லை! இவர்களுக்கு அது தெரிந்திருக்கிறது!” என்றான் கிருஷ்ணன்.

“ஹூம், வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்!” என்ற பீமன் கேலியான கோபத்துடன் சிரித்தான். “எனக்கும் தெரியும், என் அன்பை எப்படி வெளிக்காட்டுவது என்பது! உன்னைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் நான் கட்டி அணைத்தால் நீ மூச்சுத் திணறுவாயே! அதனால் உனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்! இப்போதைக்கு நீ இறக்க வேண்டும் என்று நான் எதிர்பாக்கவே இல்லை! இன்னும் சிறிது காலம் இரு! அப்புறம் ஓர் சமயம் வரும்! அப்போது நான் நினைத்ததை நடத்துகிறேன்!” என்றான். “முயற்சி செய்து தான் பாரேன்! கடைசியில் உன்னை நீயே கொன்று கொள்வாய்! அதுதான் நடக்கும்!” என்றான் கிருஷ்ணன் அதே கேலியுடன். அனைவரும் சிரித்தனர். குழந்தைகள் உற்சாகக் கூச்சலுடன் குதித்தனர். ஆஹா, மாமாவுடன் நம் தந்தையும் மோதிக்கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சித்தால்! வேடிக்கையாகத் தான் இருக்கும்! என்று கூச்சல் போட்டனர்.

மறுநாள் காலைக் கடன்கள் முடிந்து அனைவரும் அனுஷ்டானங்களைச் செய்து முடித்த பின்னர், ஆசாரிய தௌமியரின் ஆசிரமத்தில் யாக குண்டத்தைச் சுற்றி அனைவரும் அமர்ந்து ஓர் ரகசியக் கூட்டத்தை நடத்தினார்கள். ஆசாரிய வேத வியாசர் தலைமை தாங்கினார். அவரைத் தவிர ஆசாரிய தௌமியர், கிருஷ்ண வாசுதேவன், உத்தவன், ஐந்து சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவி திரௌபதி, தாய் குந்தி ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். இது ஒரு சம்பிரதாயமான கூட்டமாக இருக்கவில்லை. வழக்கமான அரச உடைகளிலோ அல்லது அவரவர் தகுதிக்கேற்ற கிரீடங்கள், ஆடை ஆபரணங்கள் பூண்டோ ஆயுதங்கள் சகிதமாகவோ சகோதரர்கள் ஐவரும் காணப்படவில்லை! எப்போதும் வில்லை விட்டுப் பிரியாத அர்ஜுனன் அன்று வில்லும் அம்பும் இல்லாமல் வந்திருந்தான். கதை இல்லாமல் பீமன் அமர்ந்திருந்தான். ஆசாரியர் வேத வியாசரின் நரைத்த தலை மயிர் வழக்கம் போல் மேலே எடுத்துக் கட்டப்படாமல் பரந்து விரிந்து அவர் முதுகில் காணப்பட்டது. ஆனால் ஆசாரிய தௌமியரோ தன் தலை மயிரை எடுத்து மேலே கட்டி இருந்தார். ஏனெனில் வேத வியாசர் அவருடைய குரு என்பதால் குருவைச் சரியான முறைப்படி உடை அணியாமலோ தலையை விரித்துப் போட்ட வண்ணமோ பார்க்கக் கூடாது என்பதால் மயிரை நன்கு இறுக்கிக் கட்டி இருந்தார்.

வாசுதேவக் கிருஷ்ணனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த வேத வியாசருக்கு அவன் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் வியப்பைத் தந்தது. அவன் வயதுக்கும் போர்ப் பயிற்சிக்கும் ஏற்றவாறு இல்லாமல் கிருஷ்ணனின் உடல் இன்னமும் மென்மையாகவே காணப்பட்டது. கண்கள் ஒளி வீசிப் பிரகாசித்தன. அன்பு, ஆசை, கருணை ஆகிய உணர்ச்சிகள் அந்தக் கண்களிலிருந்து பிரவாகமாகப் பெருக்கெடுத்தது. அதோடு இல்லாமல் அவன் வயதை விடக் குறைவாகவே மதிப்பிடும்படி சிறு பிள்ளையாகவும் இருந்தான். ஆசாரியர் வேத வியாசர் வாசுதேவக் கிருஷ்ணனைப் போற்றிப் பாராட்டினார். அவனுடைய பரந்து விரிந்து பட்ட பார்வையையும் அவனுக்கு வெளி உலகிலுள்ள நல்லறிவையும் கண்டு வியந்தார். அவன் சிந்தனை வளமும் அவரைப் பிரமிக்க வைத்தது. அவனும் நம்மைப் போன்ற மனிதன் என்றாலும் ஏதோ ஓர் தனித்தன்மை, ஓர் கௌரவம், ஓர் மதிப்பு அல்லது கடவுளரைப் போன்றதொரு தெய்விகத் தன்மை அவனிடம் இருந்தது. அவனை மிகவும் மதிக்கும்படியும் வணங்கும்படியும் செய்தது. அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நம்ப வைத்தது. அது அவன் முகத்திலேயே தெரிந்தது.

No comments: