Wednesday, October 26, 2016

மல்யுத்தப் போட்டிக்குக் காத்திருப்பு!

கிரிவ்ரஜத்தின் மக்களைக் கவர்ந்திழுக்க ஜராசந்தன் எப்போதுமே பல முயற்சிகளைச் செய்வான். இப்போது கேட்கவேண்டுமா? தன்னுடைய அசாத்தியமான பலத்தையும் வீரத்தையும் அதிகாரத்தையும் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது! ஆகவே அவன் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பைச் செய்தான். “மாட்சிமை பொருந்திய மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தான், மல் வித்தையின் ஈடு இணையற்ற தலைவன், ருத்ர பகவானின் அன்புக்குப் பாத்திரமானவன், ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்திகளுள் மிகவும் பிரக்கியாதி பெற்றவனும், அனைவருக்கும் தலைவனுமான, மஹாச் சக்கரவர்த்தி, ஜராசந்தன், ருத்ரபகவானின் சந்நிதியில் பஹு யுத்தம் எனப்படும் மல்யுத்தப் போரை நாளைக் காலை, குரு வம்சத்து அரசனான காலம் சென்ற பாண்டுச் சக்கரவர்த்தியின் இரண்டாவது மகன் ஆன பீமசேனனுடன் நாளை பொருதுவான். பீமசேனன் தன் இளைய தம்பி அர்ஜுனனுடனும், மாட்டிடையன் கிருஷ்ண வாசுதேவனுடனும் வந்துள்ளான். அவர்களும் பார்வையாளர்களாக இடம்பெறுவார்கள்.”

மேற்சொன்னபடி நகரம் முழுவதும் பறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் கிரிவ்ரஜத்தின் மக்கள் அனைவரின் மனதிலும்  தாங்கள் இந்தப் போட்டிக்கு ஒரு சாட்சியாக இருந்து பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரவரும் அவரவர் மனப்போக்கின்படி பேச ஆரம்பித்தனர். விசித்திரமான எண்ணங்கள் உலவின. பல்வேறு விதமான வதந்திகள் பேசப்பட்டன.  மக்கள் இதற்கு முன்னர் இப்படி எல்லாம் நினைத்ததும் இல்லை; பேசினதும் இல்லை என்னும் விதமாக இந்தப் போட்டி குறித்து மக்கள் பேசிக் கொண்டனர். மல்லர்கள் பார்த்தவரையிலும் யாருமே ஜராசந்தன் சொன்னதுக்கு மாறாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மாறாகச் செய்யவும் இல்லை! ஏனெனில் அப்படி யாரேனும் ஜராசந்தனுக்கு மாறாக ஒரு வார்த்தை உச்சரித்தாலே போதும்! அவர்கள் எலும்புகள் நொறுங்கி விடும். அதைக் குறித்து எவரும் எங்கேயும் சென்று புகார் செய்யக் கூட முடியாது! அதைக் குறித்துப் புகார் செய்ய முடிந்தாலும் ஜராசந்தனால் அவை அலட்சியம் செய்யப்படும்.

ஆனாலும் பீமசேனனுடன் ஜராசந்தனுக்கு மல்யுத்தப் போர் நடைபெறப் போவதாக அறிவித்த பின்னர் அதுவும் அரசன் பெயரால் அறிவித்த பின்னர் மக்கள் அதைக் குறித்துப் பேசிக் கொள்வதை எவராலும் தடுக்க முடியவில்லை. முதலில் மெதுவாக ஆரம்பித்த பேச்சு பின்னர் யார் வெல்வார்கள் என்ற கேள்விக்குப் பதில் தேடும் முயற்சியில் வந்து நின்றது. அதோடு இல்லாமல் வந்திருக்கும் விருந்தினர்களைக் குறித்தும் மக்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் பேசிக் கொண்டனர். அதோடு இல்லாமல் கிருஷ்ண வாசுதேவன் தான் ஜராசந்தனின் மாப்பிள்ளையும் மத்ராவை ஆண்டவனுமான கம்சனைக் கொன்றவன் என்பதும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அதைக் குறித்தும் பேசிக் கொண்டார்கள். இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியக் கட்டுக்கடங்காத ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்தனர். சிலருக்கு ஒருவித நம்பிக்கையும் இருந்தது. ஆனால் வயதானவர்களோ ஜராசந்தனின் முதிர்ந்த பருவத்தை நினைத்து வியந்து கொண்டிருந்தனர். ஆகவே அவர்களுக்கு ஜராசந்தன் எவராலும் அழிக்க முடியாதவன், மரணத்தை வென்றவன் என்னும் எண்ணம் இருந்து வந்தது.

அவனை எவராலும் கொல்ல முடியாது. அதே போல் எவராலும் அவனை வெல்லவும் முடியாது. அதுவும் மல்யுத்தத்தில் நிபுணனான ஜராசந்தனால் தோற்கடிக்கப்பட்ட மல்லர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். அப்படிப்பட்டவனைத் தோற்கடிக்க எவரால் முடியும்? ஹூம், பாண்டுவின் மகன் பீமசேனன் மிகவும் வலிமை உள்ளவனாகத் தான் தெரிகிறான். ஆனால் அவன் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டு ஜராசந்தனால் கொல்லப்படப் போகிறான். பாவம், இள வயது! பீமசேனனைப் பார்க்கப் பார்க்க அவர்கள் மனதில் துக்கம் பொங்கியது. துக்கத்தில் தலையை ஆட்டிக் கொண்டார்கள். ஆஹா! இந்தக் கிருஷ்ண வாசுதேவன் இப்படியா கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு ஜராசந்தன் விரித்த வலையில் வந்து விழுவான்? பாவம்!

கிரிவ்ரஜத்தின் மற்ற அரச குலத்தினரும் இந்தப் போட்டியைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். மல்லர்களால் அவர்கள் பெரிதும் மிரட்டி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஆகையால் இப்போது ஜராசந்தன் என்ன செய்யப் போகிறான் என்பது மட்டுமில்லாமல் கிருஷ்ண வாசுதேவனின் கைகளிலிருந்து எப்படித் தப்பப் போகிறான்? ஆரியர்கள் அவனைக் கடவுளாகவே வணங்குகிறார்கள். பலவிதமான சக்திகள் படைத்தவன் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இளவரசன் மேகசந்தி ஏதோ திட்டங்கள் போட்டு வைத்திருப்பதாகச் சில வதந்திகள் உலவின. அது என்ன? எவராலும் அதைக் குறித்து அறிய முடியவில்லை. அதைக் குறித்துப் பேசவும் முடியவில்லை. யாருமே வாய் திறக்கவில்லை.

ஜராசந்தனுக்கும் கிருஷ்ண வாசுதேவனுக்கும் இடையே நடந்த சம்பாஷணைகளைக் குறித்தும் அவர்கள் அறிந்திருந்தார்கள். முழுவதும் தெரியாவிட்டாலும் முக்கியமான சம்பாஷணைகள் அவர்கள் வரை எட்டி இருந்தன. அதிலிருந்து தான் அவர்களுக்கு முதல் முதலாக இப்போது தான் ஜராசந்தனைக் குறித்த சில உண்மைகள் தெரியவந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் கோமந்தகத்தில் ஜராசந்தன் தோல்வியுற்றுத் திரும்பியது. அதன் பின்னர் இந்தக் கிருஷ்ண வாசுதேவன் மற்ற யாதவர்களுடன் ஜராசந்தன் முற்றுகையிடும் முன்னர் மத்ராவை விட்டுத் தப்பி துவாரகையை நோக்கிச் சென்றது, இதன் மூலம் கிருஷ்ண வாசுதேவனையும் யாதவர்களையும் அடியோடு அழிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஜராசந்தனின் நோக்கம் பொசுங்கிப் போனது. மத்ராவை எரித்து அழித்ததோடு ஜராசந்தன் திருப்தி அடைய வேண்டி இருந்தது என ஒவ்வொன்றாய்த் தெரிய வந்தது.

அதோடு இல்லாமல் கிருஷ்ணனின் உத்தரவின் பேரிலேயே ஜராசந்தன் காம்பில்யத்தில் அந்தப் பெரிய சுயம்வர அரசர்களின் பங்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் திரும்ப நேர்ந்தது. வெளியேறியது! எல்லாமும் அறிந்து கொண்டனர். அதோடு இல்லாமல் முதல்நாள் கிருஷ்ண வாசுதேவன் ஜராசந்தனைப் பார்த்த போது அவனிடம் அவன் பிடித்துச் சிறையில் வைத்திருக்கும் இந்த அரச குலத்தினர் 98 பேர்களையும் விடுவிக்கச் சொன்னான் என்றும் அவர்களை யாக அக்னியில் உயிர்ப்பலி இடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டான் என்பதும் அவர்கள் காதுகளுக்கு எட்டி இருந்தது. ஆனால் ஜராசந்தன் அதை முற்றிலும் மறுத்திருக்கிறான். மெல்ல மெல்ல மல்யுத்தப் போட்டி நடைபெறும் நாளும் வந்தது.

மல்லர்கள் அனைவரும் மறுநாள் நடைபெறப் போகும் போட்டியைக் காணவும் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கவும் தங்களைத் தயார் செய்து கொண்டார்கள். தங்கள் புலித் தோலை ஆடையாக அணிந்து கொண்டு அந்தப் போட்டி நடைபெறும் இடத்தின் இரு மருங்கிலும் பாதுகாப்பாக நின்று கொண்டனர். அந்த நகரத்து மாந்தர் அனைவரும் அங்கே கூடிவிட்டனர். அனைவருக்கும் ஒருவித ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர். இப்படி ஒரு அதிசயமான, அனைவரையும் கவர்ந்து இழுக்கும் விதத்தில் நடைபெறப் போகும் போட்டியைக் காண்பதற்கு அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இங்கே இதற்கான புனிதச் சடங்குகள் என்னும் போர்வையில் நடைபெறுவது அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் இம்முறை அதை உண்மையாகவே புனிதமான மதச் சடங்காகவே அவர்கள் உணர்ந்தனர். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. அது பயங்கரமானதா? அல்லவா? புரியவில்லை! பயங்கரமானது நடக்கப் போவது என்னமோ நிச்சயம்! ஆனால் அது ஜராசந்தனின் சாவாக இருக்காது. அவனை எவராலும் கொல்ல முடியாது! அவன் அழிவற்றவன்! ஆகவே வந்திருக்கும் மூன்று விருந்தினர்களும் தான் உடல் நசுங்கித் துண்டு துண்டாகச் செத்துப் போகப் போகின்றனர்

1 comment:

ஸ்ரீராம். said...

இன்னமும் கூடத் தொடங்கவில்லை!