Tuesday, October 25, 2016

நான் கிருஷ்ண வாசுதேவன்!

“என்ன, நான் உன்னைத் தேடுகிறேனா?” ஜராசந்தன் கோபத்துடன் கேட்டான். தன் கண்களைச் சுருக்கியவண்ணம் கிருஷ்ண வாசுதேவனையே சற்று நேரம் உற்றுப் பார்த்தான். “நீ யார்? உன்னை எங்கே சந்தித்திருக்கிறேன்?” என்று கேட்டான். “ஆஹா, நீ என்னைப் பலமுறைகள் பார்த்திருக்கிறாயே! மறந்து விட்டதா?” என்ற கிருஷ்ண வாசுதேவன் ஏளனச் சிரிப்புடன், “கோமந்தகத்தை மறந்து விட்டாயா? அங்கே நான் உன்னைக் கொன்றிருக்கலாம். அப்போது அதற்கான வசதியும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. ஆனால் நான் உன்னைத் தப்பிச் செல்ல விட்டேன். அனுமதி கொடுத்தேன். அதன் பின்னர் நீ மீண்டும் என்னைத் தேடி மத்ரா வந்தாய்; ஆனால் உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உன்னுடைய ஆத்திரத்தை அடக்க முடியாமல் மத்ராவை எரித்துச் சாம்பலாக்கியதன் மூலம் நீ திருப்தி அடைய வேண்டி இருந்தது. உன்னுடைய சூழ்ச்சிக்கும் தற்பெருமைக்கும், அகந்தைக்கும் அது மரண அடியாக விழுந்து விட்டது!” என்றான்.

“என் சூழ்ச்சியா? என்னுடைய தற்பெருமையா? நீ என்னுடைய நம்பிக்கையை நான் ருத்ர பகவானிடம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சொல்கிறாயா? ம்ஹூம், அது ஒருநாளும் ஆட்டம் கண்டதில்லை.” என்றான் ஜராசந்தன். தன்னுடைய ஒரு கண்ணசைவால் அங்கிருந்த மல்லர்களை விட்டு இந்த முரடனை முடிக்கச் சொல்லி இருக்கலாம். அந்த மல்லர்களும் தங்கள் அரசனின் கட்டளைக்கே காத்திருந்தனர். ஆனா ஜராசந்தன் என்ன காரணத்தாலோ ஓர் சைகை மூலம் அவர்களைத் தடுத்தான். தன் வழியிலேயே இந்தப் பகைமைக்குப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான். கிருஷ்ணன் தொடர்ந்தான்.

“ஜராசந்தா! குன்டினாபுரத்தில் நிகழ்ந்தவற்றை மறந்து விட்டாயா? விதர்ப்ப நாட்டு அரசன் தாமகோஷனால் நான் வரவேற்கப்பட்டதை அறிய மாட்டாயா? அப்போது நீயும் தான் அங்கே வந்திருந்தாய் அல்லவா? அதன் பின்னர் நான் உன்னைக் காம்பில்யத்தில் தான் சந்தித்தேன். பாஞ்சால இளவரசி திரௌபதியின் சுயம்வரத்தில். அங்கேயும் என்னுடைய ஆலோசனையின் பேரில் தான் நீ மற்ற அரசர்கள், இளவரசர்களின் பரிகாசப் பேச்சிலிருந்து தப்பிக்க வேண்டி வெளியேற வேண்டி வந்தது.” ஜராசந்தன் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டான். யோசனையில் ஆழ்ந்தான். அவன் அந்த நிகழ்ச்சியை மறக்கவே இல்லை. “ஹூம், அது ஒரு பழைய கதை!” என்றான் கிருஷ்ணனிடம். “அதோடு நீ பொய் சொல்கிறாய்! நான் காம்பில்யத்தை விட்டு வெளியேறியது நீ சொன்ன காரணத்தால் அல்ல. நான் அப்படிச் செய்வது தான் சரி என்று நினைத்தேன். அதனால் நானாகவே வெளியேறினேன்.” என்றான்.

ஜராசந்தன் தன் மல்லர்களை விட்டுக் கிருஷ்ணனைக் கிழித்துப் போட்டுவிடலாம் என்று நினைத்தான். ஆனாலும் அவன் அப்படிச் செய்யவில்லை. அவன் தான் தன் மல்லர்களுக்கு எதிரே மிகவும் அவமானப்பட்டு விட்டதாக நினைத்தான். ஆகவே தான் இந்த அவமானத்திலிருந்தும் தப்ப வேண்டும்; வாசுதேவக் கிருஷ்ணனையும் அழிக்க வேண்டும் எனில் இப்போது செய்ய வேண்டியது அவனை இந்த மல்லர்களுக்கு எதிரே மிகவும் மோசமான முறையில் அவமானம் செய்ய வேண்டும். “ம்ம்ம், நீ யார் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நீ ஓர் கோழை. பேடி! மாட்டிடையன். இடையனான நீ எனக்குச் சமானம் இல்லை. என்னை எதிர்க்க முடியவில்லை உன்னால். ஓர் க்ஷத்திரியன் எனில் உண்மையான க்ஷத்திரியன் எனில் நீ என்னை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் உன்னால் அது முடியவில்லை. போர்க்களத்தில் என்னைச் சந்திக்க முடியாமல் நீ தப்பி ஓடி விட்டாய்!”

“இப்படிப் பட்ட உன்னை என்னுடைய புனிதமான கைகளால் உன்னைத் தொட்டு மல்யுத்தம் செய்வதற்கு அதுவும் அந்த ருத்ரன் முன்னிலையில் செய்வதற்கு எப்படி அழைத்தாய்? என்னால் என்னுடைய புனிதமான கைகளால் உன்னைத் தொட்டு மல்யுத்தம் செய்வது என்பது இயலாது! ஆனால் நீ என்னை இப்போது நாடி வந்துள்ளாய்! ஆகவே நான் உன்னை இப்போது விட மாட்டேன்; அதுவும் உயிருடன் உன்னைத் திரும்பிப் போக விடமாட்டேன். அந்த உறுதியை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று  கிருஷ்ணனைப் பார்த்து ஓர் ஏளனச் சிரிப்போடு கூறிய ஜராசந்தன் பற்களைக் கடித்தான். கிருஷ்ணன் சிரித்தான்.

“இதோ பார் ஜராசந்தா! நேரம் வரட்டும்! என் கைகள் புனிதமானவையாக இல்லாமல் இருக்கலாம்; உன்னுடைன் பொருதத் தகுதியற்றவையாகவும் இருக்கலாம். ஆனால் திரௌபதியின் சுயம்வரத்தில் உன்னைப் பார்த்து நான் எச்சரித்தாற்போல் இப்போதும் உன்னை எச்சரிக்கவே வந்திருக்கிறேன். அநேகமாக இது தான் கடைசித் தடவையாக இருக்கலாம். நீ உன் யாகங்களில் உயிர்ப்பலிகளைக் குறிப்பாக அரசர்களைப் பலி கொடுப்பதை நிறுத்து. அப்படிச் செய்தால் நான் உன்னை மன்னிக்கிறேன். நீ செய்த மற்ற அதர்மங்களையும் பொறுத்துக் கொள்கிறேன்.” என்றான் வாசுதேவக் கிருஷ்ணன்.

“ஏ, இடையா, கர்வம் கொள்ளாதே! உன் அகந்தையைக் குறைத்துக் கொள்! நீ யார் என்னிடம் இதை எல்லாம் பேச? தர்மத்தைக் குறித்து உனக்கு என்ன தெரியும்? தர்மம் என்றால் என்ன என்பதை எனக்கு எடுத்துச் சொல்ல நீ யார்? என்னை மன்னிக்கவும் நீ யார்? உனக்கு என்ன அதிகாரம்?” என்று கேட்டான் ஜராசந்தன்.

“நான் இங்கே வந்திருப்பதே அது என்ன என்று சொல்லத் தான். நீ 98 ராஜாக்களையும், இளவரசர்களையும் உன்னுடைய சிறையில் வைத்திருக்கிறாய். அவர்கள் தலைகளை வெட்டி ருத்ரனுக்குச் செய்யும் யாகத்தில் ஆஹூதியாகக் கொடுக்க நினைக்கிறாய். உன்னுடைய கணக்குப்படி மொத்தம் நூறு அரசர்களை அப்படிப் பலி கொடுக்க வேண்டும். அந்த நேரத்துக்காகக் காத்திருக்கிறாய்! அதற்கான முஹூர்த்த நேரத்துக்காக நீ காத்திருக்கிறாய்! அந்த நேரம் சூரியன் மகர ராசியில் நுழையும்போது வருகிறது. நான் இங்கே வந்திருப்பதே இப்படி ஒரு தீமையான காரியத்தை, பிசாசுகள் கூடச் செய்ய அஞ்சும் ஒன்றைச் செய்யாதே என்று உன்னை எச்சரிக்கத் தான்!” என்றான் கிருஷ்ணன்!

மீண்டும் அந்தப் புனிதமானவர்கள் எனக் கருதப்பட்ட மல்லர்கள் ஜராசந்தனைப் பார்த்து கிருஷ்ணனைக் கொன்று முடிக்க வேண்டி அவன் அனுமதியைக் கண்களின் ஜாடைகள் மூலம் கேட்டனர். ஆனால் ஜராசந்தன் அவர்களைத் தடுத்தான். “நாம் இப்போது விருந்தாளியாக வந்திருக்கும் இவனைக் கொல்லக் கூடாது! அதுவும் ருத்ரனுக்காக நம் மதச் சடங்குகள் நடக்கும் வேளையில் இது வேண்டாம். இவன் ஏதேனும் தந்திரங்கள் செய்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.” என்று சொன்னான். ஆனாலும் ஜராசந்தனின் உள் மனதில் அந்த மல்லர்கள் உள்ளூறக் கிருஷ்ணன் தனக்குச் செய்த அவமானங்களை எல்லாம் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று தோன்றியது! ஹூம், இந்த மாட்டிடையனால் நமக்கு எவ்வளவு அவமானம்!

“இரு, இரு! நான் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன். இம்முறை நீ என்னிடம் இருந்து தப்பவே முடியாது!” என்றான் ஜராசந்தன். கிருஷ்ணன் அதற்கு, “நான் தயாராகக் காத்திருக்கிறேன். நீ எப்படி வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி! உன் விருப்பம்!” என்றான். “முதலில் இதோ இந்த இளைஞனோடு என்னுடைய பங்கைச் சரி செய்து கொள்கிறேன்,” என்ற ஜராசந்தன் அர்ஜுனன் பக்கம் திரும்பினான். “இளைஞனே, நீ என்னுடம் மல் யுத்தத்தில் பொருதத் தயாரா? அதை நீ விரும்புவாயா? ஆனால் நீ ஆண் தன்மை இல்லாதவன் போல் தெரிகிறதே! நான் அப்படிப் பட்டவர்களுடன் போர் புரிவதில்லை! உன் காதுகளில் நீ போட்டிருக்கும் குண்டலங்கள் நீ ஆண் தன்மை இல்லாதவன் என்று காட்டுகிறது! நேரம் வரும்போது உன்னைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்று நினைக்கிறேன்.” என்றவன் பீமன் பக்கம் திரும்பி, “ நீ யார் குண்டனே!” என்று கேட்டான்.

“நான் பீமசேனன்! பாண்டு மஹாராஜாவின் மகன். இந்திரப் பிரஸ்தத்தின் அரசன் யுதிஷ்டிரனின் சகோதரன். நீ நினைக்கிறாய். இந்த மல்யுத்தம் ருத்ர பகவானுக்கு உரியது; மிகப் புனிதமானது என்றெல்லாம் நினைக்கிறாய். நானும் அப்படித் தான் நினைக்கிறேன். உன்னுடன் தோளோடு தோள் பொருதுவதற்கு நான் தயார். உன்னுடைய தற்பெருமையை நான் அடியோடு ஒழித்துக் கட்டுவேன் என்று சத்தியம் செய்கிறேன்.” என்றான்.

“ஹூம் உனக்கு மரியாதையே தெரியவில்லையே! ஓர் அரசனிடம் நடந்து கொள்ளும் முறை தெரியவில்லை. இப்போது இங்கிருந்து நீ போய்விடு!  மேகசந்தி உன்னைப் பார்த்துக் கொள்ளுவான். நாளைக்காலை நம்முடைய அன்றாட நியமங்கள் முடிந்ததும் வழிபாடுகள் முடிந்ததும் நாம் இங்கே சந்திப்போம். ஏதேனும் தந்திரங்கள் செய்தால் தவிர உன்னால் தப்பிக்க முடியாது! ஆகையால் உன் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இரு!”

“ ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்! மரணம் உனக்கும் சம்பவிக்கலாம்!” என்று பீமன் சொன்னான். பீமனின் சொற்களை அலட்சியம் செய்த ஜராசந்தன் திரும்பித் தன்னுடைய இஷ்ட தெய்வமான ருத்ரனின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஆனாலும் கிருஷ்ணனால் கிடைத்த அவமானங்களின் காயம், அதன் உள்ளார்ந்த ரணம் அவன் மனதில் ஆறாமல் இருந்தது. அதை இப்போது கிருஷ்ணனின் வரவு மீண்டும் குத்திக் கிளறி விட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போன்றதொரு வேதனையில் ஜராசந்தன் ஆழ்ந்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாகக் கிருஷ்ணன் முன்னால் பட்ட அவமானங்கள் அவன் கண்ணெதிரே தோன்றித் தோன்றி மறைந்தன.

1 comment:

ஸ்ரீராம். said...

பேசிக்கொண்டே இருக்கிறார்களே.... எப்போது தொடங்கும் யுத்தம்?!!