Thursday, February 23, 2017

பிரபாவதியின் திருமணம்!

பத்து நாட்கள் கழித்து மன்னர் மன்னர் என அழைக்கப்படும் ஷால்வன் பிரத்யும்னனுக்கும் பிரபாவதிக்கும் நடந்த திருமணத்தை முறைப்படி கொண்டாடினான்.  பலருக்கும் இது ஆச்சரியமான நிகழ்வாக இருந்தது. அதிலும் ஆரிய இனத்தின் பிரபலமான வீரனும், யாதவத் தலைவனும் ஆன வாசுதேவக் கிருஷ்ணனின் மூத்த மகன் ஆன பிரத்யும்னனுக்கும் தானவர்கள் அரசின் தலைமைத் தளபதி வஜ்ரநபின் மூத்த மகள் ஆன பிரபாவதிக்கும்  நடந்த இந்தத் திருமணத்தைக் குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள் எனில் அதற்குக் காரணம் இருந்தது. ஏனெனில் ஷால்வனின் நெருங்கிய நண்பன் ஆன ஜராசந்தன், கம்சன் மற்றும் சிசுபாலன் ஆகியோர் வாசுதேவக் கிருஷ்ணனால் கொல்லப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு முறையும் ஷால்வன் கிருஷ்ணனை அழிக்க நினைத்தபோதெல்லாம் அவனால் முடியவில்லை. அவனுடைய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டு வந்தனர். அதிலும் இந்த வாசுதேவக் கிருஷ்ணனிடம் ஏதோ அதிசயமான சக்கரம் ஒன்று சுதர்சனச் சக்கரம் என்னும் பெயரில் இருந்தது. அதை வைத்து அவன் அனைவரையும் கொன்றான்.  அப்படிப் பட்ட கிருஷ்ணனின் மகனுக்கு வஜ்ரநபின் மகள் பிரபாவதியுடன் கல்யாணம்! ஷால்வன் அதைக் கொண்டாடுகிறான்!
திருமண ஊர்வலம் மிகப் பிரமாதமாக நடந்தது. வஜ்ரநபும், பிரத்யும்னனும் அந்த ஊர்வலத்தின் தலைமையில் சென்றனர். பேரிகைகள், எக்காளங்கள், சங்குகள் ஊதப்பட்டன. மத்தளங்கள் அடிக்கப்பட்டன.  கழைக்கூத்தாடிகள் வித்தைகள் காட்டியவண்ணம் ஊர்வலத்தின் முன்னணியில் சென்றனர். அதன் பின்னர் ஒட்டகங்கள் சவாரி வந்தன.  அவர்கள் குலத்தின் முக்கிய வீரர்களும் அதில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் வாள்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்தனர்.  இந்த ஊர்வலத்தில் பெண்கள் அதிகம் கலந்து கொள்ளவில்லை. வஜ்ரநபின் வீட்டுப் பெண்கள் மட்டும் பல்லக்குகளில் ஊர்வலத்தைத் தொடர்ந்து வந்தனர்.

வஜ்ரநபின் மூத்த மனைவியும் பிரபாவதியின் தாயுமான பிரவிசி தன் மகளுடன் ஒரு பல்லக்கில் வந்தாள். அவள் தன் பிரியத்துக்கு உகந்த மகளைப் பிரிவதில் தனக்கிருந்த துக்கத்தை முகத்தில் காட்டிய வண்ணம் அமர்ந்திருந்தாள்.  அரண்மனையின் சபாமண்டபத்தில் ஷால்வன் உதட்டில் ஓர் புன்னகையுடனும், உள்ளத்தில் கொந்தளிப்புடனும் ஊர்வலத்துகாகக் காத்திருந்தான். அங்கிருந்த ஒவ்வொரு தானவனுக்கும் தங்கள் குலத்தின் முக்கியமான எதிரியின் மூத்தமகனைத் தங்கள் குலத்துக்கே மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டது குறித்து உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதோடு இத்தகைய அபூர்வமான விதத்தில் தங்களுக்குக் கிடைத்த இழப்பீடு குறித்தும் மகிழ்ந்தனர்.

ஆனால் ஷால்வன் வஜ்ரநபின் மகளைப் பிரத்யும்னனுக்குத் திருமணம் செய்விக்க நேரிட்டதில் உள்ளூரத் தான் அவமானப் பட்டதாகவே நினைத்தான்.  அதிலும் தன் பரம வைரியான வாசுதேவக் கிருஷ்ணனின் மகனுக்கு அல்லவோ திருமணம் செய்விக்க நேர்ந்திருக்கிறது! இது தான் தோல்வி அடைந்ததுக்கு ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகவும் ஆகிவிட்டது! மிகவும் மோசமான முறையில் தான் தோல்வி அடைந்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது!  ஆனாலும் இப்போதைய நிலைமையில் வேறு வழியே இல்லை. வீரர்கள் அனைவரும் நடந்த போரில் கிடைத்த தோல்வியில் மனம் வெறுத்துப் போய் திருப்தியின்றி இருக்கின்றனர். அவர்களைச் சமாதானம் செய்வதெனில் இதைத் தவிர வேறு வழியே இல்லை. இது ஒன்று தான் ஷால்வனால் செய்யக் கூடியது!

ஊர்வலம் சபாமண்டபத்தை வந்தடைந்தது.  அங்குள்ள அனைத்து வீரர்களும் தங்கள் வாள்களை உயர்த்திக் காட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். இந்தத் திருமணம் நடந்ததில் தங்கள் குலத்துக்குக் கிடைத்த கௌரவத்தில் மகிழ்ந்தனர்.  வஜ்ரநபும், பிரத்யும்னனும் சபாமண்டபத்துக்குள் நுழைந்தனர்.  இருவரும் மன்னர் மன்னன் ஷால்வனுக்கு எதிரே மண்டியிட்டு அமர்ந்து தரையைத் தொட்டு வணங்கினார்கள்.  கூடவே வந்த மற்ற உயர் அதிகாரிகளான வீரர்களும் அவ்வாறே மன்னனுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

ஷால்வன் தன்னுடைய முக்கிய எதிரியான கிருஷ்ணனின் மகனுக்கு வஜ்ரநபின் மகளைத் திருமணம் செய்து வைத்தது குறித்துத் தன் மகிழ்ச்சியை ஜாடைகள் மூலம் வஜ்ரநபுக்குத் தெரிய வைத்தான். ஆனாலும் இது உண்மையான மகிழ்வாக வஜ்ரநபுக்குத் தெரியவில்லை.  வலுவில் ஏற்படுத்திக் கொண்டதாகவே இருந்தது.  வஜ்ரநபின் மனமும் வேதனையில் தான் ஆழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் மனதில் ஒரு கசப்பான அவமான உணர்வு தலை தூக்கி இருந்தது. இதற்குக் காரணம் ஷால்வன் மட்டுமே என்பதும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனாலும் யாரும் அதை வெளிக்காட்டவில்லை. ஷால்வன் அனைவரையும் வரவேற்றான்.

“உள்ளே வா, வஜ்ரநப், மாவீரனே உள்ளே வா! நமக்கு இது ஓர் முக்கியமான நாளாகும்.  ஏனென்று உனக்குத் தெரியுமே! இதைக் கொண்டாட வேண்டி நான் உனக்கு இந்த மோதிரத்தைப் பரிசளிக்கிறேன்!” என்றான். அதன் பின்னர் அவன் பிரத்யும்னனிடம் திரும்பி, “என்னுடைய வாழ்த்துகள் பிரத்யும்னா! இளம் யாதவனே! எங்கள் குடும்பத்தில் ஒருவனாக நீ ஆகி விட்டாய்!  உன் தந்தை பாவத்திலேயே வாழ்கிறான். அவனை விடு! உனக்கு எங்களிடம் பாராட்டுகளும், அன்பும் மட்டுமே தருகிறோம்!” என்றான்.

சற்று நேரம் மௌனமாக இருந்த ஷால்வன் மேலும் தொடர்ந்தான். “நீ இப்போது மிகவும் உயர்ந்த எங்கள் குலத்தின் மாணிக்கம் போன்றதொரு பெண்ணை மணக்கப் போகிறாய்! எங்கள் அருமைத் தளபதியான காலம் சென்ற வேகாவனின் குடும்பத்தில் ஒருவனாக ஆகப் போகிறாய்! உனக்கு நூறு பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். இவை தான் உன் திருமணத்துக்கு என்னுடைய ஆசிகள். நீ, அந்தப் பிசாசு கிருஷ்ணனின் பிள்ளையாக இருந்தாலும், இனிமேல் இந்தத் திருமணத்தின் மூலம் இந்தக் கோட்டையிலேயே நீ தங்கி இருக்க வேண்டும். எங்கள் பக்கமே நீ இனிப் போராட வேண்டும். எங்கள் எதிரிகள் உன்னுடைய எதிரிகள் ஆவார்கள். எங்கள் ரத்தமும் உங்கள் யாதவ குல ரத்தமும் ஒன்றாகப் போகிறது!” என்று நிறுத்தினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

பொடிவைத்துப் பேசுகிறான் ஷால்வன்.