Sunday, February 5, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், பிரபாவதியின் வேண்டுகோள்!

அந்தக் கோட்டையில் பிரத்யும்னனின் நாட்கள் கொண்டாட்டங்களில் கழிந்து ஒரு பக்கம் சந்தோஷத்தையும் இன்னொரு பக்கம் ஓயாத வேதனையையும் கொடுத்தது. அவனை விருந்தாளி என்னும் போர்வையில் முட்கள் நிறைந்த ரோஜாக்களினால் ஆன விடுதியில் சிறை வைத்திருந்தான் ஷால்வன்.  அது பிரத்யும்னனுக்கு நன்றாகப் புரிந்தது. பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும் அது ஓர் சிறைதான். வஜ்ரநபின் குடும்பம் கூட இந்தத் தன்னந்தனியான கோட்டையில் இருப்பதையும் பிரத்யும்னனை அங்கே கொண்டு வந்து வைத்ததும் சிறிதும்விரும்பவில்லை என்பதையும் அதை நினைத்து அவர்கள் வருந்துவதையும் பிரத்யும்னன் நன்கு புரிந்து கொண்டான்.  வஜ்ரநபின் பெரிய பெண் பிரபாவதிக்கு சுமார் 16 வயதிருக்கும். நன்கு செழித்து வளர்ந்திருந்த அவள் தன்னுடைய உடல் அசைவுகள் மூலமும், தன் கவர்ச்சிகள் மூலமும் பிரத்யும்னனை நெருங்க மிகவும் முயற்சிகள் செய்தாள். அவனைத் தனக்குக் கணவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அவள் முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது.

பிரபாவதியுடன் தனிமையில் இருப்பதும் ஒரு பக்கம் கவர்ச்சியாகவும் மனதைக் கவரும் வண்ணமும் இருந்தாலும் இன்னொரு பக்கம் மாபெரும் துன்பமாகவும் இருந்தது.  அவள் அருகே இருந்தால் தான் எதற்காக ஷால்வனைத் தேடி வந்தோம் என்பதையே பிரத்யும்னன் மறந்து விடுவான். அதோடு தன் தாத்தா வசுதேவர் குறித்த நினைவும் அவனுக்கு வராது! பிரபாவதியின் இரு தங்கைகள் முறையே எட்டு வயதும், ஐந்து வயதும் ஆன சிறு பெண்கள். அவர்கள் இருவருக்கும் பிரபாவதியும் பிரத்யும்னனும் தனிமையில் இருந்தால் அங்கே சென்று தொந்திரவு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டிருப்பார்கள் என்று பிரத்யும்னன் ஊகித்தான். ஏனெனில் அவர்கள் வந்தால் பிரபாவதியுடன் பிரத்யும்னனைப் பார்த்தால் உடனே அவர்களைத் தனிமையில் விட்டு விட்டு வெளியே சென்று விடுவார்கள்.

ஒரு நாள் மதியவேளையில் வஜ்ரநப் அன்றிரவு கோட்டைக்குத் திரும்பப் போவதில்லை என்று செய்தி வந்தது. பிரபாவதியுடன் தனிமையில் இருப்பதைத் தடுத்து வந்த சமயங்களில் எல்லாம் அவனுக்கு அவள் மேல் மோகம் அதிகம் ஆகி வந்தது. ஆனால் அவ்ள் அருகே நெருங்கினால் அந்த மோஹம் காணாமல் போயிற்று. அன்று மாலை உணவுக்குப் பின்னர் பிரபாவதியின் இளைய சகோதரிகள் இருவரும் அவர்களைத் தனிமையில் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.  அங்கிருந்த இரண்டு அடிமைப் பெண்களைக் கூடக் காணவில்லை. திடீரென மறைந்து விட்டார்கள்.  அவர்களைப் பிரபாவதி தான் தன் ஜாடைகளால் வெளியே அனுப்பி இருக்க வேண்டும் என்று பிரத்யும்னன் ஊகித்தான்.

சற்று நேரம் மௌனத்தில் சென்றது. இருவருக்கும் முதலில் என்ன பேசுவது என்று புரியவே இல்லை. பின்னர் பிரபாவதி அந்த மௌனத்தை உடைத்தாள். “உங்களுக்கு என்னுடன் இருக்கப் பிடிக்கவில்லையா? ஏன் அப்படி? இப்போது சில நாட்களாகவே நீங்கள் மிகவும் துன்பத்துடனேயே காணப்படுகிறீர்கள்.  ஏன் மௌனமாகவும் இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். “எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை!” என்றான் பிரத்யும்னன்.

“நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை உங்களிடம் சொல்லவே பெரும் முயற்சிகள் எடுக்கிறேன். ஆனால் நான் அப்படி உங்களிடம் சொல்வது மன்னர் மன்னருக்குப் பிடிக்காது! அவருக்குக் கோபம் வந்து விடும்!” என்றாள் பிரபாவதி!

“ம்ம்ம்ம், வரவிருக்கும் ஏதோ ஓர் ஆபத்தைக் குறித்து நீங்கள் அனைவருமே பயப்படுகிறீர்கள். கவலைப்படுகிறீர்கள்!” என்றான் பிரத்யும்னன்.

“அதெல்லாம் சரி, ஆனால் நான் கேட்பது எல்லாம் உங்களை எது தொந்திரவு செய்கிறது? உங்களுக்கு என்ன மனக்கஷ்டம்?  ஏன் மிகுந்த மன இறுக்கத்தோடு இப்போதெல்லாம் காணப்படுகிறீர்கள்?” என்று புன்னகையுடன் கேட்டாள் பிரபாவதி. “நீங்கள் அனைவரும் ஏன் பயப்படுகிறீர்களோ, எதற்குக் கவலைப்படுகிறீர்களோ அதுவே தான் எனக்கும் காரணம்!” என்றான் பிரத்யும்னன்.

பிரபாவதி மனம் உடைந்து போனாள். “உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எந்த வழியில் நான் திரும்பினாலும் பேரழிவைத் தான் சந்திக்க வேண்டும். வேறு வழியே இல்லை!” என்றவள் கண்கள் கண்ணீரைப்பொழிந்தன. “ம்ம்ம்ம், நாங்கள் அனைவரும் மன்னர் விளையாடும் சதுரங்க விளையாட்டில் ஓர் காய்கள். மன்னர் தான் எங்களை நகர்த்துகிறார். அவருக்கு விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணம் எங்களை நகர்த்தி வருகிறார்.” என்றாள்.

“விளையாட்டா? என்ன விளையாட்டு? எனக்கு எதுவும் புரியவில்லையே!” என்றான் பிரத்யும்னன். “நீர் இங்கே ஓர் அரச குடும்பத்து விருந்தாளியாக நடத்தப்படுகிறீர்கள். அல்லவா? அதைவிட வேறென்ன வேண்டும் உங்களுக்கு?” என்று பிரபாவதி கேட்டாள்.

“இதைவிடச் சிறந்த நகைச்சுவை கிடையாது. நான் ஓர் அரச விருந்தாளியாக இங்கே மதிக்கப் படுகிறேன் என்பதென்னமோ உண்மை. ஆனால் நான் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. தங்கக் கூண்டில் அடைத்த கிளி நான்.  அதை விட என்னை உங்கள் மன்னாதி மன்னர் கொன்றிருந்தால் அதைப் புரிந்து கொண்டிருக்கலாம். “ என்றான் பிரத்யும்னன்.

“எப்போது எங்களிடமிருந்து நீங்கள் செல்வீர்கள்?” என்று கேட்டாள் பிரபாவதி.

“ஆஹா, நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்? எனக்கும் இப்போது அது தான் தெரிய வேண்டும். நீங்கள் அனைவருமே என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்தி வருகிறீர்கள். அதிலும் நீ எப்படி எல்லாம் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறாய் தெரியுமா? உன் நடத்தைகளின் மூலம் உன் மேல் எனக்கு நல்லெண்ணம் மிகுதியாக ஆகி இருக்கிறது!”

“உங்களை இங்கேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் பிரபாவதி.

பிரத்யும்னன் ஒரு பெருமூச்சு விட்டான். “அதிகமாய் ஏதும் இல்லை.  இவ்வளவு அன்பான உங்களை விட்டு எல்லாம் பிரிந்து செல்வதை விட எனக்கு மனக்கஷ்டம் வேறில்லை!” என்றான்.

“அப்படி எனில், ஏன் நீங்கள் எங்களுடன் வசிக்கக் கூடாது? என் தந்தையும் தாயும் இதைக் கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். நீங்கள் இங்கே இருக்கிறதாக முடிவெடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!” என்றாள் பிரபாவதி!

1 comment:

ஸ்ரீராம். said...

வலையில் விழுந்து விட்டானா? வலையில் வீழ்த்துகிறானா?