Saturday, February 4, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், ஷால்வனின் கோட்டையில்!

“நீ இப்போது இங்கிருந்து செல்லலாம் வஜ்ரநப்!” என்று சொன்ன ஷால்வன் பிரத்யும்னன் பக்கம் திரும்பினான். “ நீ, எங்கள் மரியாதைக்கு உரிய விருந்தாளி! நீயும் இப்போது வஜ்ரநபுடன் செல்!அவனும் அவன் குடும்பத்தாரும் மற்ற எவரையும் விட உன்னை மிக அருமையாய்ப் பார்த்துக் கொள்வார்கள். இல்லையா வஜ்ரநப்?” என்றான் ஷால்வன். “தங்கள் கட்டளைப்படியே மஹாராஜா!” என்று தலை குனிந்து பதில் சொன்னான் வஜ்ரநப். “இன்னும் எவ்வளவு காலம் நான் உன் விருந்தாளியாக இருப்பேன்?” என்று பிரத்யும்னன் ஷால்வனிடம் கேட்டான். “எங்கள் விருந்தோம்பலில் குறை கண்டு அற்பத்தனமாக நாங்கள் மாறும் வரை அல்லது நீங்களாகவே இங்கிருந்து செல்ல விரும்பும் வரை என வைத்துக்கொள்ளலாமே!” என்றான் ஷால்வன். சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்க, பிரத்யும்னன் பதிலுக்குத் தன் புன்னகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தான்.

பிரத்யும்னனை வஜ்ரநப் தன்னுடைய குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த விருந்தாளிகளோடு அனைவரும் உணவு உண்டனர். “நம்முடன் மல்லன் பூர்ணாவை அழைத்துச் செல்வோம். மற்றவர்கள் இங்கேயே காத்திருக்கட்டும்.” என்றான் வஜ்ரநப்.  பிரத்யும்னனுக்குத் தான் ஆயுதம் எதுவும் பயன்படுத்தாமலேயே வெல்வதற்கான சந்தர்ப்பம் இப்போது தான் கிட்டி இருப்பதாகத் தோன்றியது.  வஜ்ரநபைப் பார்த்து, “என் உயிர் உன் கையில் இப்போது இருக்கிறது வஜ்ரநப்!” என்று கூறினான்.  மூன்றாம் நாள் விடிகாலையில் அவர்கள் அனைவரும் கோட்டையை நோக்கிப் பயணித்தார்கள்.

வஜ்ரநப் தன்னுடன் ஒரே ஒட்டகத்தில் பயணம் செய்யுமாறு பிரத்யும்னனை அழைத்தான். “என்னுடன் வா இளைஞனே!” என்று அழைத்தான்.  அடிவானத்தில் தூரத்தில் தெரிந்த மூன்று மலைக்கோட்டைகளில் ஒன்றிற்கு பிரத்யும்னனை அழைத்துச் சென்றான் வஜ்ரநப். “நாம் ஏன் அதை நோக்கிப்போகிறோம்?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

அதற்கு வஜ்ரநப்,”நாங்கள் எல்லோரும் கோட்டைகள் குறித்த தகவல்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறோம். அதோடு நீயே நேரில் பார்த்தாயல்லவா? அப்பயாவுக்கு எப்படிப் பட்ட தண்டனை கிடைத்தது! அவன் இந்தக் கோட்டைகள் குறித்த தகவல்களை இன்னொரு சௌப வீரனுடன் தான் கலந்து ஆலோசித்தான்.  அம்மாதிரி அவன் பேசி இருக்கக் கூடாது. அப்படி எவனாவது பேசினால் அவர்கள் மிகவும் கடினமான தண்டனைக்கு உள்ளாவார்கள்!” என்றான்.  ஆனால் வஜ்ரநபின் மனதில் இந்த இளம் யாதவன் இந்தக் கோட்டையைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்ற எண்ணம் தோன்றியது.  ஆகவே இவனுடன் இந்தக் கோட்டையைக் குறித்த விஷயங்களையும் இவை எதற்காகக் கட்டப்பட்டது என்பதையும் பகிர்ந்தால் தப்பில்லை என்றே தோன்றியது.

“நடுவில் இருக்கிறதே, அந்தக் கோட்டை தான் மன்னர் மன்னரும் அவர் குடும்பத்தாரும் தங்கும் கோட்டை.  நம்பிக்கைக்கு உகந்த திறமைசாலியான வீரர்களால் அது எந்நேரமும் பாதுகாக்கப்படுகிறது. மன்னர் மன்னன் அனுமதியின்றி அந்தக் கோட்டைக்குள் எவரும் புகுந்து விட முடியாது!” என்றான்.  பின்னர் சற்று நேரம் மௌனமாகச் சென்றது. பின்னர் அவன் தொடர்ந்து, “இடப்பக்கம் இருப்பது தான் பிரபலமான கோட்டை. அந்தக்கோட்டையை என் தந்தை நிர்வகித்து வந்தார். அவர் அப்போது எல்லாப் படைகளுக்கும் தளபதியாக இருந்தார். அங்கேயே வசித்தும் வந்தார். மூன்றாவது கோட்டை, மிகவும் அதிகமாகக் கண்காணிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.  அந்தக் கோட்டையில் தேசத் துரோகிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.  இந்தத் தகவல்களை எல்லாம் நான் உனக்கு அளிப்பதால் நீ என்னையும் இப்படி தேசத் துரோகியாக ஆக்கி மரணத்தை எதிர்பார்க்கும்படி செய்து விடமாட்டாய் என்று நம்புகிறேன். அப்பய்யாவின் திடீர் மரணம் எனக்குக் கொடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை ஆகும். உன்னை நான் இந்தக் கோட்டையில் இருந்து தப்ப விட்டேன் எனில் எனக்கும் அதே கதி தான் என்பதை மன்னர் மன்னர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். எச்சரித்திருக்கிறார்.” என்றான்.

“இன்னும் கொஞ்சம் தகவல்களை அந்தக் கோட்டையைக் குறித்து நீ சொன்னாய் எனில் உனக்கு இதே மாதிரி தண்டனை தானே கிடைக்கும்? இதை விட அதிகமாகக் கிடைக்கப்போவதில்லையே! அது சரி, எனக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நான் என்ன அவ்வளவு பெரிய மனிதனா? எனக்குப் புரியவில்லை!”

வஜ்ரநப் மிகச் சிறிய குரலில் குறுக்கிட்டுப் பேசினான். “அதோ அந்தக் கோட்டையின் கதவுகளை நன்றாகப் பார். அவை எவ்வளவு வலுவாக இருக்கின்றன என்பதோடு எப்படிப் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் கவனி! நீ இங்கிருந்து வெளியேறக் கூடாது என்பதற்கான ஓர் முன்னெச்சரிக்கை அது என்பதைப் புரிந்து கொள்!” என்றான். பின்னர் அவன் மௌனத்தில் ஆழ்ந்தான்.  பிரத்யும்னனுக்கு வஜ்ரநபுக்கு மன்னன் ஷால்வன் தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை அளித்தது பிடிக்கவில்லை என்றும் அதை அவன் உள்ளூர வெறுக்கிறான் என்பதும் புரிந்தது.  அவர்கள் தளபதியின் கோட்டைக்கு அருகே வந்ததும் அங்கே காவலுக்கு இருந்த வீரர்களில் பத்துப் பேர் முன்னே வந்தனர். அவர்கள் பூரண ஆயுதம் தரித்திருந்தார்கள். அருகே வந்தவர்கள் வஜ்ரநபைப் பார்த்ததும் வணக்கம் செலுத்தினார்கள்.

வஜ்ரநப் அவர்களை அழைத்துக்கொண்டு கோட்டையின் நிலா முற்றத்துக்குச் சென்றான். அப்போது அங்கே சில இளம்பெண்களின் கலீர் என்ற சிரிப்புச் சப்தம் கேட்டது. அந்தப் பெண்கள் கோட்டையின் மேல் தளத்தில் நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் வஜ்ரநபின் பெண்கள் என்பது அவன் அவர்களை அங்கே அழைத்த போது புரிந்தது. பிரத்யும்னனுக்குத் தன் பெண்களை அவன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் வஜ்ரநபுக்கும் பிரத்யும்னனுக்கும் வரவேற்புக்கூறி வணக்கம் தெரிவித்தனர். அவர்களில் யாருமே இன்று வரை ஒரு யாதவனை நேரில் பார்த்ததில்லை என்பதோடு இத்தனை அழகான வாலிபனையும் கண்டது இல்லை. அங்கிருந்து வஜ்ரநப் அவனை அங்கிருந்து கோட்டையின் மறுபக்கத்துக்கு அருகிலிருந்த ஒரு அழகான குடிலுக்கு அழைத்துச் சென்றான். பிரத்யேகமான விருந்தாளிகளுக்கென அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பிரத்யும்னன் புரிந்து கொண்டான்.

No comments: