Thursday, February 10, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

ஷாயிபாவின் குரலில் தெரிந்த கசப்பும், வெறுப்பும் அனைவரையும் திகைக்க வைத்தது. “அவனுக்கா, அவனுக்கு நன்மை, தீமை, நல்லவர், கெட்டவர் எதுவும் தெரியாது! “ என்றாள் ஷாயிபா. மேலும் தொடர்ந்து, “ கரவீரபுரத்தில் என் பெரியப்பா ஸ்ரீகாலவ வாசுதேவரை மக்கள் அனைவரும் கடவுளாகவே வழிபட்டு வந்தனர். அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தான் உங்கள் மகன். ஸ்ரீகாலவ வாசுதேவரை கடவுள் இல்லை என மக்களிடம் கூறி அவர்கள் அவரை வழிபடுவதைத் தடுத்த உங்கள் மகனின் குழந்தைப் பிம்பத்தை நீங்கள் கடவுளாக வழிபட்டு வருகிறீர்கள். அவன் என்ன கடவுளா?? அல்லது நீங்கள் அவனைக் கடவுள் என நம்பி வழிபடுகிறீர்களா? இது என்ன நியாயம்?” கோபமும், ஆங்காரமும் குமுறியது ஷாயிபாவின் குரலில்.

தேவகி பொறுமையை இழக்கவில்லை. “ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது குழந்தாய்! உன் புரிதல் சரியில்லை. நடக்கும் நிகழ்வுகளை நீ பார்க்கும் கோணமும் சரியில்லை. போனால் போகிறது. அடுத்த முறை அவனை நீ சந்திக்கும்போது இதைப் பற்றிக் கேட்டுவிடு. அவன் செய்யும் செயல்களினாலேயே அனைத்து மக்களும் கண்ணனை ஒரு கடவுளாக, அதுவும் வாழ்விக்க வந்த இறைவனாக நினைக்கின்றனர். அதில் ஏதும் தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஏன், நீயும் உன் பெரியப்பாவைக் கடவுளாய் வழிபட்டு வந்ததில் அவரிடம் பரிபூரண பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்ததைத் தவறென நான் கூற மாட்டேன்.”

“அவரைத் தான் உங்கள் மகன் கொன்றுவிட்டானே!” பெருங்குரலெடுத்துக் கத்தின ஷாயிபா தன்னை அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த கம்சா இப்போது ஷாயிபாவைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளைத் தேற்றினாள். “அழாதே, பெண்ணே, அழாதே, படைத்தவன் என்ன எழுதினானோ அதை எவரால் மாற்ற இயலும்? நீ என்னுடன் வா. “ என்று கூறித் தானும், தன் தந்தையும் தங்கி இருக்கும் மாளிகையின் அந்தப்புரத்துக்கு அவளை அழைத்துச் சென்றாள். மறுநாள் அனைத்து விஷயங்களும் தெரிந்து கொண்ட கண்ணன் ஷாயிபாவைப் பார்க்க வந்தான். அவன் வந்தபோது வசுதேவரின் மாளிகையின் மேல் மாடத்தில் நின்றகொண்டிருந்த ஷாயிபா தன் பார்வையை எங்கோ தொலைதூரத்துக்குச் செலுத்திய வண்ணம், தன் ஆநந்தமயமான பழைய வாழ்க்கையின் நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்தாள் ஷாயிபா. சற்று நேரம் அவளையே கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்த கண்ணன், “ஷாயிபா, உனக்காக ஒன்று கொண்டு வந்துள்ளேன்.” என்றான் மென்மையாக.

“என்ன அது?” வேகமாய்த் திரும்பிய ஷாயிபாவின் குரலிலும், முகத்திலும் ஆக்ரோஷம்.

“உனக்கு என் தாயாரான தேவகி என் குழந்தை பொம்மையை வைத்து வழிபடுவது பிடிக்கவில்லை எனக் கேள்விப்பட்டேன். எனக்கும் தான் பிடிக்கவில்லை. அதுவும் நான் இத்தனை பெரியவன் ஆன பிறகும் அவள் அவ்வாறு செய்வது பிடிக்கவில்லை. ஆனால் பிறந்ததும் உடனே என்னைத் துறந்த என் தாய் நான் பிறந்தபோது எப்படி இருந்தேனோ அந்தப் பிறந்த கோலத்தின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாள். அதனால் அந்த பொம்மையை வைத்து வழிபடுகிறாள். இதை என்னால் தடுக்க இயலாது. அவளுக்கு அது நிம்மதியையும், ஆநந்தத்தையும் தருகிறது. போகட்டும், இதோ, இங்கே பார்! உன் பெரியப்பாவைப் போலவே தங்கத்தில் ஒரு உருவச்சிலை செய்யச் சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். ஒருவேளை நீ விரும்பினால் இந்தச் சிலைக்கு நீ உன் பெரியப்பாவுக்குச் செய்து வந்த வழிபாடுகளைச் செய்து வரலாம்.” திரிவக்கரை தன் கையில் சுமந்து கொண்டு வந்திருந்த ஒரு வெள்ளிப்பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த சிலையை வெளியே எடுத்துக் கண்ணன் கைகளில் கொடுக்க அவனும் அதை வாங்கி ஷாயிபாவிடம் நீட்டினான்.

“பாவி, மஹாபாவி, என் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டாயே! அவர் உயிரோடு இருந்தபோது அவரைக் கொன்றுவிட்டு, என் வாழ்க்கையைச் சூன்யமாக்கிவிட்டு இப்போது ஒரு தங்கப் பொம்மையை வைத்து என்னை விளையாடவா சொல்கின்றாய்? உயிரற்ற இந்தப் பொம்மையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?” ஷாயிபாவின் கோபம் எல்லை மீறியது. ‘ஏன், ஷாயிபா? இந்த உருவச் சிலையை வைத்து நீ உன் பெரியப்பாவிற்குச் செய்த அனைத்து வழிபாடுகளையும் நன்கு நடத்தலாமே? உன்னுடைய மாறாத பக்தியினால் இந்தச் சிலைக்கும் உயிர் வந்தாலும் வந்துவிடும். “ கண்ணன் மென்குரலில் சொல்லக் கிரீச்சிட்டாள் ஷாயிபா.

“மோசக்காரா, நயவஞ்சகா, நீ ஒரு ஏமாற்றுக்காரன்!”

கண்ணனுக்கோ அவள் கோபம் வேடிக்கையாய் இருந்த்து. கண்களில் குறும்பு கூத்தாட, “ஆ, என்னை அப்படித் தான் சொல்லுவார்கள். ஆனாலும் நான் என்னதான் செய்தேன்? ஒன்றுமே இல்லை! வெண்ணெய் திருடினேன், பாலைக் குடிப்பேன், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பேன். அதிலே அவங்க பிள்ளைகளும் தானே அடங்குவாங்க. அப்படியும் என்னைத் திருடன் என்றார்கள். அது சரிதான் இல்லையா? அப்போது அவர்கள் சொன்னது சரியே. ம்ம்ம்ம்?? இப்போ நீ சொல்லுவதும் சரியாக இருக்கலாம். இல்லையா? சரி, சரி, ஷாயிபா, மிகக் கஷ்டப்பட்டு உன் பெரியப்பா போலவே சிலை செய்யச் சொல்லி வாங்கி வந்துள்ளேன். இதை நாசம் செய்துவிடாதே. என்ன இருந்தாலும் அவர் இப்போது உயிரோடு இல்லை. இறந்துவிட்டார். இறந்துவிட்டவர்கள் என்னதான் கொடுமைக்காரராய் இருந்தாலும் நாம் மரியாதை காட்டவே வேண்டும். அவமதிக்கக் கூடாது. மேலும் அவர் உன் மேல் காட்டிய பாசத்துக்கும், அன்புக்கும் அளவே இல்லை. சொந்த மகளை விட அதிகப் பாசத்தோடு உன்னை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் இல்லையா?” என்றான் கண்ணன்.

கண்ணனின் சாந்தமான போக்கினால் குழப்பமடைந்த ஷாயிபாவுக்கு இன்னும் அதிகமாய் அழுகை வந்த்து. “ நீ சொல்கிறாயா இவற்றை என்னிடம்?? துரோகி, நீ தானே அவரைக் கொன்றாய்? கொன்றுவிட்டு இப்போது என்னிடம் இப்படி எல்லாம் பேச உனக்கு வெட்கமாய் இல்லை?” மீண்டும் அழ ஆரம்பித்தாள் ஷாயிபா.


“இதோ பார், இதை வாங்கிக்கொள், அழாதே, அழுகையை நிறுத்து முதலில். இதை ஸ்தாபிக்க நல்லதொரு இடம் தரும்படி அம்மாவிடம் சொல்லி விடுகிறேன். உனக்கு இஷ்டமிருந்தால் இந்த உருவச் சிலையை நீ வழிபடும் சமயம் உன்னோடு நானும் கலந்து கொள்கிறேன். “

"ஏமாற்றுக்காரா, வேஷக்காரா, என்னை என்னவென்று நினைத்தாய்? இப்படி எல்லாம் செய்தால் நான் உன்னை மன்னித்துவிடுவேன் என்றா நினைக்கிறாய்? எனக்குப் புரிந்துவிட்டது, நீ அதற்காகவே இதை எல்லாம் எனக்குச் செய்கிறாய்! நீ என்ன செய்தாலும் உன்னை என்னால் ஒரு நாளும் மன்னிக்கவே முடியாது.”


“அடாடா, நீ என்னை மன்னிக்கவே வேண்டாம் ஷாயிபா. ஆனால் இந்த உருவச்சிலை என்ன பாவம் செய்த்து? இதை வைத்துக்கொண்டு உன் வழிபாட்டை நடத்து!”


அவன் கைகளில் இருந்து அந்தச் சிலையைப் பிடுங்கிக்கொண்டாள் ஷாயிபா. தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். “ஆம், நான் இதை பத்திரமாய்ப் பாதுகாப்பேன். இதற்கு வழிபாடுகள் செய்வேன். ஏன் தெரியுமா? அதன் மூலம் உன்னுடைய துரோகத்தை நான் மறக்காமலும், உன்னை நான் மன்னிக்காமலும் இருக்கவே. உன்னை எந்நாளும் நான் மன்னிக்கவே மாட்டேன்.” என்றாள் ஷாயிபா. மீண்டும் கண்ணன் குறும்புச் சிரிப்போடு அவளிடம், “சரி, சரி, இன்னும் ஒரே ஒரு விஷயம் இருக்கிறது உன்னிடம் சொல்ல.” என்றான்.

நினைத்தேன். இத்தனை நேரம் நீ என்னிடம் அன்பு காட்டிப் பேசியபோதே அதில் ஏதோ உள் விஷயம் இருக்கிறதென நினைத்தேன். இல்லை எனில் நீ என்னிடம் இப்படிப் பேசி இருக்கமாட்டாயே!” என்றாள் ஷாயிபா.

“திரிவக்கரை சில நல்ல அழகான துணிமணிகளையும், ஒரு சில ஆபரணங்களையும் கொண்டு வந்திருக்கிறாள். நீ உன் பெரியப்பாவுக்குப் பூஜைகள் செய்யும்போது இந்த அல்ங்கோலமான ஆடையோடா செய்யப் போகிறாய்? உன் பெரியப்பாவும் ஒரு மகாராஜாவாய் இருந்தவர். நீயும் ஒரு இளவரசி. ஆகவே உன் தகுதிக்கு ஏற்ற இந்த ஆடைகளையும் அணிந்து கொண்டு, ஆபரணங்களைப் பூட்டிக்கொண்டு உன் வழிபாடுகளை நடத்து!’ என்று சில பட்டாடைகளையும், ஆபரணங்களையும் ஷாயிபாவிடம் நீட்டினான் கண்ணன்.


வெடுக்கென்று அவன் கைகளிலிருந்து அவற்றைப் பிடுங்கி அப்படியே சுருட்டிக் கண்ணன் முகத்திலேயே வீசி எறிந்தாள் ஷாயிபா. மெளனமாயும், நிதானமாயும் அவற்றை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி எடுத்தான் கண்ணன். நிமிர்ந்த கண்ணன் கண்களிலோ, முகத்திலோ கோபத்தின் அடையாளமே தெரியவில்லை. சிரித்தவண்ணமே, கண்ணன்,”என்ன ஆயிற்று உனக்கு? நீ கரவீரபுரத்தில் எவ்வளவு சிறப்பாகவும், அழகாகவும் உன்னை அலங்கரித்துக்கொண்டு இந்த வழிபாடுகளை நடத்துவாய்? இங்கே மட்டும் ஏன் இப்படி?” ஒரு க்ஷணம் கண்ணன் தன்னைக் கண்டு பரிகசிக்கிறானோ என்று எண்ணிய ஷாயிபா அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும், மனப்பூர்வமாகவே கண்ணன் பேசுவதையும் உணர்ந்து கொண்டாள்.


“சரி, சரி, நான் இவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உனக்காக அல்ல, என் பெரியப்பாவின் வழிபாட்டுக்காக. அவருக்காக. “ என்றாள், “நான் சொல்லுவதும் அதுவே!” என்றான் கண்ணன். “நீ ஒன்றும் முழுமனதோடு இதைச் சொல்லவில்லை என்பதை நான் அறிவேன்.” இப்படிச் சொன்னாலும் ஷாயிபாவின் உள் மனதில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அது வரையில் பேசாமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த திரிவக்கரைக்கு நடந்தவைகளைப் பார்க்கவும் கேட்கவும் ஷாயிபாவின் மேல் கோபம் அதிகரித்த்து. அவளைப் பார்த்து, “நான் மட்டும் கிருஷ்ண வாசுதேவனாக இருந்திருந்தால் இத்தனை நேரம் உன்னை அடித்தே கொன்றிருப்பேன்.” என்றாள். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் ஷாயிபாவின் சுபாவம் அவளுக்குப் புரியாததோடு பிடிக்கவும் இல்லை. கண்ணன் அவசரம், அவசரமாக, “ திரிவக்கரை சொல்வதை எல்லாம் நினைத்துக்கொண்டு வருந்தாதே ஷாயிபா. அவள் கண்ணனாக இருந்திருந்தால், திரிவக்கரையே இருந்திருக்க மாட்டாள். என்ன இருந்தாலும் ஷாயிபா ஷாயிபாதான். அவளுக்கு நிகரில்லை. சரி, நான் இங்கே இருப்பது உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் நான் கிளம்புகிறேன்.” என்றான் கண்ணன்.

முதலில் அதைச் செய், என்னைத் தனிமையில் விடு! என்றாள் ஷாயிபா. அவள் கடுகடுப்பான மனநிலைக்கு மீண்டும் சென்றுவிட்டாள்.

5 comments:

பாட்டு ரசிகன் said...

கதை பெரியதான இருக்கு..

பாட்டு ரசிகன் said...

படிச்சாச்சி...
அப்புறம் வந்து முதல் பாகம் படிக்கிறேன்..

priya.r said...

நல்ல பதிவு
இந்த 43 அத்தியாயத்தை படித்து விட்டேன்

பதிவுக்கு நன்றி கீதாம்மா

ஏன் ஆயிசா மேல் கண்ணன் எவ்வளோ பாசம் வைத்து இருக்கிறான் ?!........................
விடை அடுத்த பதிவுகளில் காணலாம்

priya.r said...

மன்னிக்கவும்
ஷாயிபா என்று எழுதுவதற்கு பதில் ஆயிசா என்று எழுதி விட்டேன்

இராஜராஜேஸ்வரி said...

நன்றாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.