Wednesday, February 23, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2.ம் பாகம்

ஷ்வேத கேது மேலும் கூறினான்: “கண்ணா, சிசுபாலனை மணக்க ருக்மிணி இஷ்டப்படவில்லை. போட்டி உண்மையானதாய் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆனால் பெயருக்குத் தான் போட்டி நடக்கப்போகிறது. சிசுபாலன் வெற்றியை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார்கள். ஜராசந்தன் கூறும் அரசர்களும், இளவரசர்களும் மட்டுமே இந்தச் சுயம்வரத்தில் பங்கு பெறப் போகின்றனர். ஆகவே வேறு யாரும் உண்மையாகப் போட்டியிட்டு ருக்மிணியை அடைவதற்கு வழியில்லை. திட்டம் பூர்த்தி அடைந்து நாலாபக்கங்களிலும் உள்ள நாடுகளுக்கு ருக்மியாலும், அவன் தந்தையாலும் செய்திகள் அனுப்பப் பட்டுவிட்டன. வரப் போகும் வசந்த காலத்தின் வசந்த உற்சவம் ஆரம்பிக்கும் மாக மாதத்தின் பூர்ணிமை தினத்தில் சுயம்வரத்தை நடத்தப் போவதாயும் தீர்மானித்து இருக்கின்றனர். மதுராவின் இளவரசர்கள் எவருக்கும் அழைப்பு அனுப்பப் போவதில்லை. அப்படி அழைத்தால் நீ எங்கேயானும் சுயம்வரத்தில் கலந்து கொண்டு ருக்மிணியைத் தூக்கிச் சென்றுவிடுவாய் என அஞ்சுகின்றனர்.”

“ஓ, நான் அப்படி எல்லாம் ஒரு இளவரசியை மணக்கவிரும்பவில்லை. ஆனால் சுயம்வரத்தில் மணப்பெண் தனக்குப் பிடித்த மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவள் தானே?” கண்ணன் மெல்ல யோசித்தான்.

“கிருஷ்ண வாசுதேவா, ருக்மிணி உன்னைத் தான் மணக்கவிரும்புகிறாள்.” ஷ்வேதகேதுவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தாலும் தன் குரலைத் தணித்துக்கொண்டு கண்ணனுக்கும் மட்டும் கேட்கும் கிசுகிசுக் குரலில் பேசினான். உத்தவன் இடை மறித்து, “நாங்கள் கோமந்தக மலைக்கு அடைக்கலம் தேடிப் போகையில் கைசிகனின் வேண்டுகோளின் மேல் அங்கே சில நாட்கள் தங்கி இருந்த போதே எனக்கு அது புரிந்துவிட்டது.” என்றான்.

“ஆஹா, நாம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயமாய் உள்ளது உத்தவா! இப்போது நான் திருமணம் பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை. ஜராசந்தனுக்கு கோமந்தக மலைப் பிராந்தியத்தில் நம்மால் ஏற்பட்ட அவமானத்தை அவனால் ஒருபோதும் மறக்க இயலாது. அவன் எப்போது நம்மைத் தாக்கப் போகிறானோ தெரியவில்லை. எப்போதும் நாம் அதற்குத் தயாராக இருக்கவேண்டும்!” என்றான் கண்ணன். “இருக்கலாம் கண்ணா! ஆனால் இளவரசி ருக்மிணி ஒரு தீர்மானத்திற்கு வ்ந்துவிட்டாளென்றால் அதில் உறுதியாக இருப்பாள். அவள் உன்னைத் தவிர வேறு எவரையும் தன் மணாளனாக ஏற்க மாட்டாள்.”

“ஆஹா, அதுவும் அப்படியா?? அப்படிப்பட்ட மன உறுதி கொண்ட ஒரு பெண்ணை என்னைப் போன்ற வெற்று மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நாம் அநுமதி கொடுக்கவே கூடாது!” கண்ணன் குரலில் குறும்பு. சிரித்துக்கொண்டே அவன் கூறியதைக் கேட்ட நண்பர்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. “ஓ, ஓ, இத்தகையதொரு அவமரியாதையை யாதவர்கள் ஏற்கவே மாட்டார்கள். மதுராவின் யாதவத் தலைவர்களில் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை.. நம் மரியாதையே காற்றில் பறந்துவிடும் போலிருக்கிறதே! நம் கெளரவத்தைப் பணயம் வைத்துவிட்டோம்.”

“நம் மரியாதையையும் , கெளரவத்தையும் எவ்வகையில் காப்பாற்ற முடியும் என்பதைக் குறித்து யோசிப்போம். அதற்கு ஒரு வழி இருந்தால் அதை நாம் மறுக்க முடியாது. என் தந்தையிடம் சொல்லி உக்ரசேன மஹாராஜாவை சபையின் முக்கிய அங்கத்தினர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவும் உடனடியாக்க் கூட வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

இங்கே ப்ருஹத்பாலனின் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டு மேலே என்ன செய்வது என ஆலோசித்துக்கொண்டனர். இந்தப் புதிய ரதப்போட்டியில் அவர்களால் முழும்னதோடு ஈடுபடமுடியவில்லை. மேலும் கண்ணன் ஏற்பாடு செய்தான் என்பதையும் அவர்களால் மறக்க இயலவில்லை. என்ன ஒரு சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இப்போதோ ஆயுதப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி, வில் பயிற்சி, வாள் பயிற்சி. போதாத்துக்கு அதிரதனையும், மஹாரதனையும் கண்டெடுக்கும் ரதப்போட்டி. ரத்த்தை ஓட்டிக்கொண்டே யுத்தம் செய்யவேண்டுமாம். இந்தக் கண்ணனுக்கு அவன் எப்படியானும் மதுராவின் அரசனாக ஆகவேண்டும் என்ற எண்ணம் போலிருக்கிறது. மேலும் இத்தகைய செயல்பாடுகளால் ஜராசந்தனுக்கு இன்னமும் கோபம் அதிகரித்துவிடுமே.

அதை நினைத்தாலே சிலருக்கு இன்னமும் கலக்கமாக இருந்த்து. மதுராவை முற்றுகையிட்டானென்றால்! எங்கிருந்து வந்தானப்பா இந்தக் கிருஷ்ணன்! அனைவரும் ஒருமித்த கருத்தோடு கண்ணன் வரவை மட்டுமில்லாமல் கண்ணனையே வெறுத்தனர். அவன் என்ன செய்தாலும் அது அவர்களுக்குச் சரியாகப் படவில்லை. ஆனால் எப்படியோ அவனுக்கு ஒரு பெயர் மட்டும் கிடைத்துவிடுகிறதே! அவன் செல்வாக்குக் குறைய மாட்டேன் என்கிறதே! அனைவருக்கும் கண்ணனின் செல்வாக்குக் கண்களை உறுத்தியது. ஆஹா, இவன் மட்டும் வந்து தொலையவில்லை எனில்! இவ்வளவு நாட்கள் ப்ருஹத்பாலன் இந்த மதுராவின் யுவராஜா ஆகியிருப்பான்!! இப்போதோ அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதே!

கண்ணனைக் குறித்துச் சில அவதூறான செய்திகளைப் பரப்ப முனைந்தனர் ப்ருஹத்பாலனும், அவன் நண்பர்களும். ஆனால் அதில் அவர்களுக்கு முழு வெற்றி கிட்டவில்லை. அவர்கள் கூறுவதை எல்லாம் மக்கள் காதில் வாங்கிக்கொண்டு கடைசியில், கண்ணனின் புகழே பாடினார்கள். எவ்வளவு அற்புதமானவன் கண்ணன்! என்று நினைத்து நினைத்து மகிழ்ந்தார்கள். இன்னும் சில வயதான மக்கள் கண்ணனிடம் நேரடியாக இவற்றை எல்லாம் பேசுங்கள். தன் மேல் தவறு இருந்தால் கண்ணன் மாற்றிக்கொள்ளுவான் என்று உபதேசம் செய்தார்கள். இது இன்னமும் அவர்கள் ஆத்திரத்தை அதிகரித்த்து. யாரானும் சிலராவது இருக்கமாட்டார்களா கண்ணனை எனக்குப் பிடிக்காது என்று கூற மாட்டார்களா? சத்ராஜித் ஒருவனே கண்ணனுக்கு எதிராகப் பேசினான். கம்சன் இறந்த்தும், மதுராவுக்குத் திரும்பிய யாதவத் தலைவர்களில் அவனும் ஒருவன்.

கண்ணனை ஒரு கொடுங்கோலனாகவே சித்தரித்தான் அவன். இன்னொரு கொடுங்கோலன் தேவையா நமக்கு? என்று அனைவரையும் வினவினான். தன்னுடைய பெரிய வாளை அநாயாசமாய்ச் சுழற்றிக்கொண்டே சத்ராஜித் பேசினான். இன்னொருவன் , “உன் எண்ணங்களை அவன் பூர்த்தி செய்வான்!” என்று கொஞ்சம் கோபம் கலந்த குரலில் கிண்டல் செய்தான். இன்னொருவனோ ,”என்ன இருந்தாலும் கம்சனைக் கொன்றானே, அதை மறக்க இயலாது!” என்றான். அதற்கு சத்ராஜித், “கம்சனை அவன் கொல்லவில்லை என்றால் கம்சன் கண்ணனைக் கொன்றிருப்பானே!” என்றான்.

“சரி, அவன் என்னதான் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் நாம்?” என்று விராடன் என்பவன் கேட்டான்.

2 comments:

priya.r said...

அடடா ! மன்னியுங்கள்

இந்தனை நாள் என்னோட பிடித்தமான தொடரை எப்படி படிக்காமல் இருந்தேன்

இந்த 46 அத்தியாயத்தையும் படித்து விட்டேன்

கண்ணன் மனதிற்க்குள் ஏதோ திட்டம் வகுத்து விட்டான் போலும் !

sambasivam6geetha said...

நன்றி ப்ரியா. அதனால் என்ன மெதுவா வந்து படிங்க.