Monday, February 28, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

“ அட, என்னப்பா, இது? அவன் தான் கடவுள்னு சொல்லிக்கிறானே! அவனே கண்டுபிடிச்சுக்கட்டுமே!”கேலியோடு இன்னொருத்தன் கூறினான். எல்லாரையும் கோபமாய்ப் பார்த்த சத்ராஜித், “அவன் வேலைகளை நம்மிடம் காட்டக்கூடாது. நம் விஷயத்தில் அவன் தலையீடுஇருக்கக்கூடாது!” என்று தீர்மானமாய்க் கூறினான். “அது எப்படிப்பா முடியும்?? நம் வேலைகள் என்னென்ன? அவன் வேலைகள் என்னென்ன?? முதலில் அதைப் பாருங்களேன். மேலும் எல்லாப் பெரியவர்களும் அவன் கட்சிதான். அப்படி இருக்கையில் அவன் செய்ய நினைப்பதைச் செய்ய விடாமல் நம்மால் தடுக்க இயலுமா?” விராடனின் சந்தேகம்.

“நீ ஒரு கோழை!” பத்ரகன் என்பவன் விராடனைக் குற்றம் சாட்டினான். உயரமும், பருமனுமாகப் பார்க்கவே பயங்கரமாய் இருந்த அவன், “ அந்தக் கண்ணன் நம்மை விட்டு அகலவேண்டும்.” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சீற்றமாய்க் கூறினான். அதுவரை பேசாமல் இருந்த ப்ருஹத்பாலன் அப்போது எழுந்து நின்றான். அவன் ஏதோ பேசப் போகிறான் என்பதை உணர்ந்த அனைவரும் தங்கள் தலைவன் பேசுவதைக் கேட்க அமைதியானார்கள். “விராடன் கூறுவது முற்றிலும் சரி. அவன் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் நமக்குள் ஒருமித்த கருத்து வேண்டும். அதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். நம்முடைய விருப்பத்திற்கேற்பவே அவனைச் செயல்பட வைக்கவேண்டும். அது தான் நமக்கு வேண்டியது. இப்போது நம் திட்டம் தான் என்ன?”

“ம்ம்ம்ம், அவன் தான் என்னவோ அந்தப்பரம்பொருள் என்பது போலவே நடந்து கொள்கின்றானே, அதை முதலில் நிறுத்தவேண்டும். அவனும் ஒரு சாமானியமானவனே என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். “ சத்ராஜித் கூறினான்.

“அது எப்படி முடியும்?” இவர்கள் பேச்சை அறவே வெறுத்தான் விராடன்.

“அந்த கோமந்தக மலைக்கே அவன் திரும்ப்ப் போகட்டும். அவனை இங்கே எவர் அழைத்தனர்! மறந்துட்டேனே, போகும்போதே அவன் தன்னுடைய அந்தக் கறுத்த நீலநிறம் என அனைவராலும் பாராட்டப் படும் அந்த முகத்தையும் கூடவே எடுத்துச் செல்லட்டும்!” பத்ரகன் கிண்டலான தொனியில் சொல்ல அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.

விராடனுக்கோ இதெல்லாம் சகிக்கவில்லை. “பத்ரகா, மதுரா உனக்கு எப்படித் தாய் மண்ணோ, அப்படியே அவனுக்கும் தாய் மண் தான் !” என்றான்.

“அட, முதலில் அந்த ரதப் போட்டியை நிறுத்தச் சொல் அவனை. அந்த ரதத்தில் பூட்டும் குதிரைகளைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. “ சத்ராஜித் குரலில் வெறுப்பு மேலோங்கியது.

“ஓ, ஓ, பொதுமக்களுக்குப் பிடித்திருக்கிறதே. இதில் உள்ள சாகசத்தையும், விளையாட்டையும் பொதுமக்கள் ரசிக்கின்றனர். இதில் ஈடுபாடுள்ள எவரும் இதை விரும்புவார்கள். ஆகையால் நாம் செய்யக் கூடியது என்னவெனில் ப்ருஹத்பாலன் யுவராஜாவாய் ஆவதற்குக் கண்ணன் தடை ஏதும் சொல்லாமலோ, செய்யாமலோ இருப்பது மட்டுமே. ப்ருஹத்பாலா, உனக்கும் இது போதுமென நினைக்கிறேன்.” விராடன் கேட்டான்.

“நீ கூறுவது சரியே விராடா, ஆனாலும் நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவேண்டும்.” ப்ருஹத்பாலன் கூறினான்.

“முதல் அடியில் கண்ணனைப் பழிவாங்கி தண்டனை அளிக்கவேண்டும்” என்று பத்ரகன் தன் வாளை உயர்த்திக்கொண்டு ஆவேசத்துடன் கூறினான். பின்னர் அனைவரும் கண்ணனை அழைத்து வரும் வழியைச் சிந்தித்துக் கடைசியில் சாத்யகியை அனுப்பி அவனுடன் கண்ணனை வரவழைத்தனர். எப்போதும் நிழல் போல் தொடரும் உத்தவன் கூட வர சாத்யகி உள்ளூர விரும்பவில்லை. கண்ணனும் அதைப் புரிந்து கொண்டது போல் உத்தவனை வரவேண்டாம் எனத் தடுத்துவிட்டான். கண்ணன் எப்போதும்போல் அமைதியாகவே சலனங்களின்றிக் காணப்பட்டான். அவன் முகமோ கண்களோ குழப்பமான மனநிலையைக் காட்டவில்லை. மிகவும் சந்தோஷமாக அனைவரையும் பார்த்துச் சிரித்தான். அவன் கிரீடத்தில் செருகி இருந்த மயிலிறகும் அவன் சிரிக்கையில் ஒரு ஆட்டம் ஆடித் தன் சந்தோஷத்தைத தெரிவித்துக்கொண்டது. அவன் கழுத்தின் மாலையும்கூடச் சேர்ந்து வண்ணமயமான பூக்களோடும், கிறங்கடிக்கும் நறுமணத்தோடும் தன் சிரிப்பைக் காட்டிக்கொண்டது போல் இருந்தது.

நிராயுதபாணியாக வந்திருந்த கண்ணனைக் கண்ட மற்ற ஆயுதமேந்திய நண்பர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். தர்மசங்கடமாய் இருந்தது அவர்களுக்கு. அனைவரையும் பார்த்துத் தன் மகிழ்ச்சியையும், வணக்கங்களையும் தெரிவித்த கண்ணன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நலம் விசாரித்ததோடு அல்லாமல் தன் தாயின் வழியிலும் , தகப்பன் வழியிலும் சகோதரன் ஆனவனும், தன்னை விடப் பல ஆண்டுகள் மூத்தவன் ஆனவனும் ஆன ப்ருஹத்பாலனை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்துச் சிரித்த கண்ணன் அவன் கால்களைத் தொட்டு நமஸ்கரித்தான்.

“சகோதரர் ப்ருஹத்பாலரே, என்னை இங்கே அழைத்து உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தையும், மரியாதையும் கொடுத்துள்ளீர்கள்.” கண்ணன் குரலில் தெரிந்த பணிவும், விநயமும் அவன் உள்ளார்ந்த நோக்கோடு பேசுவதைத் தெரியப் படுத்தியது.

“ஆம், ஆம், நாம் அனைவரும் கண்ணனைப் பார்க்கவிரும்புகிறோம் என்று கூறிய அடுத்த கணமே கிருஷ்ணவாசுதேவன் நம்மைச் சந்திக்க்க் கிளம்பிவிட்டான்.” என்றான் சாத்யகி. சாத்யகி உள்ளூரக் கண்ணன் அங்கே வர மறுப்பான் எனவும், அப்படி வந்தாலும் அரை மனதோடு வற்புறுத்தலின் பேரிலேயே வருவான் எனவும் நினைத்திருந்தான். ஆனால் அவன் அழைப்புக்காத்திருந்தாற்போல் கண்ணன் உடனடியாகக் கிளம்பியதைக் கண்ட அவனுக்கு உள்ளூரக் கண்ணனைத் தவறாக நினைத்தது குறித்து வெட்கம் வந்தது. கண்ணன் நிராயுதபாணியாகக் கிளம்புவதையும் கண்ட அவன் தன் வாளையும் அங்கேயே ஒரு ஓரமாக வைத்துவிட்டுக் கண்ணனோடு கிளம்பி வந்திருந்தான். “கண்ணா, இந்த ஆசனத்தில் அமர்ந்து கொள்வாய்!” என்று அவனுக்கு உபசாரங்களும் செய்தான். என்ன இருந்தாலும் வ்ருஷ்ணி குலத்தவர் தங்கள் விருந்தோம்பும் வழக்கத்தை மீறக் கூடாது என்ற எண்ணம் அவனிடம். மேலும் தங்களை நம்பி வந்திருக்கும் கண்ணனுக்குத் தகுந்த விருந்தோம்பல் செய்யவேண்டும் என்ற எண்ணமும் எழுந்த்து. ஆனால் கண்ணன் தங்கள் வேண்டுகோள்களை ஏற்பானா?

"சரி, இப்போது உங்களுக்காக நான் எவ்விதத்தில் சேவை செய்வது?" என்றான் கண்ணன்.

எல்லாரும் விழித்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்ததால் யாருக்கும் என்ன சொல்வதெனப் புரியவில்லை எனலாம். அதற்குள் சாத்யகியே,"முதலில் ரதப் போட்டியை நிறுத்து கண்ணா!" என்றான்.

"என்னால் எப்படி முடியும்? மதுராவின் உயர்ந்த தலைவரின் கட்டளை அது. எல்லாத் தலைவர்களுமே ஐந்நூறு ரதங்களுக்குக் குறையாமல் தயார் செய்து ரதப் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். பிடிக்காதவர்கள் கலந்து கொள்ளவேண்டாம். அதற்குத் தடை ஏதுமில்லையே!" என்றான் கண்ணன் இளநகையோடு.

"யுத்தம் ஒன்றுக்கு அதுவும் மாபெரும் யுத்தத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதாய்த் தெரிய வருகிறது கண்ணா! உண்மையைச் சொல், நீ அதற்குத்தான் ஏற்பாடுகள் செய்து வருகிறாயா?" ப்ருஹத்பாலன் கோபத்தோடு கேட்டான்.

"அது பெரியவர்களைத் தான் கேட்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு யுத்தம் நடந்தால் அதுவும் தர்மத்திற்கான யுத்தம் என்பதால் நான் எப்போதுமே முன்னால் நிற்பேன். அது தர்மத்திற்கு விரோதமானது என்பது தெரிந்தால் நான் அங்கே செல்லவே மாட்டேன்." என்றான் கண்ணன்.

"தர்மம்? அதர்மம்?? யுத்தத்தில் அவை எங்கிருந்து வந்தன? தர்மயுத்தம் என்றால் என்ன? அதர்ம யுத்தம் என்றால் என்ன? யுத்தம் என்னமோ யுத்தம் தானே! இல்லையா?" என்றான் சாத்யகி.

2 comments:

priya.r said...

இந்த 47 வது அத்தியாயத்தையும் படித்து விட்டேன்

கண்ணனை சுற்றி உள்ள சூழ்ச்சி வலைகளை கண்ணன் அறிய மாட்டானா என்ன !

பதிவுக்கு நன்றி கீதாம்மா

sambasivam6geetha said...

ம்ம்ம்ம் கண்ணன் அறிவான். ஆனால் வெளிக்காட்டிக்கிறதில்லை! :)