Monday, February 14, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

இவர்கள் அனைவரின் மனதிலும் சந்தோஷத்தை ஆழ்த்தும்படியாக பலராமனின் வெற்றிச் செய்தி கிடைத்தது. அதே சமயம் அந்தச் செய்தி கம்சாவுக்கும் , அவள் மகன் ப்ருஹத்பாலனுக்கும், அவன் நண்பர்களுக்கும் ஆத்திரமூட்டியது என்பதிலும் சந்தேகம் இல்லை. பலராமன் வெற்றி அடைந்ததோடு அல்லாமல் குஷஸ்தலையையும் கைப்பற்றிவிட்டான். புண்யாஜனா ராக்ஷசர்களை அழித்து, கிரிநகரத்தில் மீண்டும் குக்குட்மினை அரசனாக்கிவிட்டான். இப்போது மதுரா திரும்பிக்கொண்டிருக்கிறான். மதுரா நகரமே பலராமனின் வரவுக்கு எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தது. சில நாட்களில் பலராமனும் வந்துவிட்டான். மொத்த நகரும் பலராமனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளித்தது.


பலராமன் பார்க்கவே ஒரு ராக்ஷசன் போல் இருந்தான். அவன் உயரமும், உடல் வலுவும் அனைவரையும் திகைக்க வைத்த்து. குஷஸ்தலையைத் தனியாக வென்றதின் காரணமாகவோ என்னவோ அவன் இப்போது உற்சாகபானத்தை மறைவாக எடுத்துக்கொள்ளாமல் அனைவர் முன்பும் எடுத்துக்கொண்டான். மேலும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்கு உபசாரமும் செய்தான். குஷஸ்தலை வெற்றியைப் பற்றிப் பேசுகையில் ரேவதியை நினைத்துக்கொண்டே அவளாலேயே எல்லாமும் என்பது போல் பேசினான். உத்தவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துக்கொண்டான். கண்ணன் இதை எல்லாம் கவனித்தும் கவனியாதவன் போல் இருந்தான். உள்ளூர அவனுக்கு மகிழ்ச்சியே. பலராமனின் குணத்திற்கும் அவன் உயரம், உடல்வலு போன்றவற்றிற்கும் ஈடுகொடுக்கக் கூடியதொரு பெண்ணை அவன் கடைசியாக்க் கண்டு பிடித்துவிட்டதில் கண்ணனுக்கு மகிழ்ச்சியே. இந்தப் பெண்மணி பலராமனைத் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடுவாள். அவனைப் பற்றிய கவலை இனி இல்லை.

சில நாட்கள் சென்றதும் சில ஆட்களை மதுராவிலிருந்து குஷஸ்தலைக்கு அனுப்பி அந்த நகரைப் புநர் நிர்மாணம் செய்ய உதவ வேண்டும் என்று கட்டளை இட்டனர். அவர்களிடமே பலராமன் தன் செய்தியை ரேவதிக்கு அனுப்பி வைத்தான். இந்த அதிகப்படியான அலைச்சலில் சற்றே கறுத்திருந்த உத்தவன், அதே சமயம் தசைப்பிடிப்புக்களோடு உறுதியும், வலிமையும் பொருந்திக் காணப்பட்டான். எனினும் அவன் மெளனம்! வியப்புக்குள்ளாகிய மெளனம்! எப்போதும் ஒரு நிழல் போல் கண்ணனைத் தொடர்ந்து கொண்டு அவன் விரும்பியதை விரும்பிய வண்ணம் செய்வதைத் தவிர வேறு பேச்சே அவனிடம் எழவில்லை. ஆனாலும் அவனுடைய கூரிய கண்களுக்கு அவன் தாய் கம்சாவின் நடவடிக்கைகள் தப்பவில்லை. கம்சா எப்போது ஷாயிபாவிற்கு ஆதரவாய் நடக்க ஆரம்பித்தாள்? ஆச்சரியம் தாங்கவில்லை உத்தவனுக்கு. அதோடு கம்சா ஷாயிபாவிற்கு ஆதரவு மட்டும் காட்டவில்லை என்றும் மெல்ல மெல்ல கண்ணனுக்கு ஒரு வலுவான எதிரியாக அவளை மாற்றிக்கொண்டிருந்தாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஷாயிபாவின் மனவருத்தத்தை எல்லாம் கண்ணனின் மேல் கோபமாய் மாற்றி வந்தாள் கம்சா. இதைக் கண்ட அவனால் சும்மா இருக்க முடியவில்லை. தன் தாயைப் பார்க்க ஒரு முறை அந்தப்புரம் சென்ற அவன் ஷாயிபாவிற்கு அநாவசியமாக அவன் தாய் அளித்துவரும் ஆதரவையும் அன்பையும் சந்தேகப்படுவதாய்க் கூறினான். மேலும் அவள் ஷ்வேதகேதுவிற்கு நிச்சயம் செய்யப்பட்டவள் என்றும் சுட்டிக் காட்டினான். ஷாயிபாவின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தை ஆதரித்துப் பேசி அவளுக்குச் சலுகைகள் காட்டவேண்டாம் எனவும் கிட்டத் தட்ட எச்சரிக்கை செய்தான்.

கம்சா காத்திருந்தது இதற்காகத்தானே! உத்தவன் இம்மாதிரி பேசியதும் உடனே அவள் கண்கள் மழையென வர்ஷித்தன. தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். அவளைப் போன்றதொரு பிறவி இனி பிறக்கக் கூடாது. அவள் செய்த பாவம் தான் என்ன? ஏன் எல்லாக் கடவுளரும் அவளை இப்படி வஞ்சிக்கின்றனர்?? அவள் என்னமோ எல்லாக் கடவுளரையும் நம்பத்தான் செய்கிறாள். ம்ஹும், அவ்வளவு ஏன்? அவள் தந்தையை அவள் எப்படிக் கவனித்துக்கொள்கிறாள்? என்றாலும் மற்றக் குழந்தைகளிடம் காட்டும் அன்பை அவள் தந்தை அவளிடம் காட்டுவதில்லை. ப்ருஹத்பாலன் எவ்வளவு அருமையான பிள்ளை?? அவன் குணத்திற்கும் வீரத்திற்கும் எதுதான் தகுதி இல்லை?? எதை வேண்டுமானாலும் கொடுக்கலாமே! ஆனால் அவனுக்கு நியாயமாய்க் கிடைக்கவேண்டியவை கூடக் கிடைக்காமல் போகிறது. இந்த உலகமே அவனை வஞ்சிக்கிறது. கடைக்கண்களால் உத்தவனைப் பார்த்துக்கொண்டாள் கம்சா. இதை விட்டால் பிறிதொரு சமயம் கிட்டாது என்பதைப் பூரணமாய் உணர்ந்தவளாய் மேலே பேச ஆரம்பித்தாள்.

“உத்தவா, நீ என்ன கண்ணனின் அடிமையா? ஆம்,ஆம், அப்படித்தான். நீ உன் சொந்த சகோதரர்களை விட்டுவிட்டு தேவகியின் பிள்ளைகளுக்குத் தொண்டு செய்வதை உன் வாழ்நாள் இன்பமாய் நினைக்கிறாய். இயற்கைக்கு விரோதமான உன் போக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உன் சொந்த சகோதரன் ஆன ப்ருஹத்பாலனுக்காக ஒரு துரும்பையேனும் நீ கிள்ளிப் போட்டிருக்கிறாயா? உன் சகோதரனின் நியாயமான உரிமைக்காகக் கண்ணனிடம் போய்ப் பேரம் பேசவேண்டி இருக்கும். அதைத் தான் நீ செய்கிறாய் இப்போது. அவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?? நீ ஒரு மூடன், விவேகமற்றவன். “ கம்சா தொடர்ந்தாள். “கிருஷ்ணன் உனக்கு ஒரு போதும் சகோதரனாகவோ நண்பனாகவோ ஆகமாட்டான். அவனுக்கு அவனுடைய சொந்தக் காரியங்கள் தான் முக்கியம். அதோடு அவனுடைய புகழ், பெருமைக்காக எதுவேண்டுமானாலும் செய்வான். அவ்வளவு ஏன்? அவனுக்குப் புகழ் கிட்டும் எனில் இந்த மதுராவையே அவன் தியாகம் செய்துவிடுவான். புகழ் வெறி பிடித்தவன்!” ஆழ்மனதில் கண்ணன் மேல் இருந்த வெறுப்பு கம்சாவின் முகபாவத்திலும் குரலிலும் நன்றாய்த் தெரிந்தது.

“இதோ பார், குழந்தாய், என்னைப் பார், உன் தாயார் கூறுகிறேன் அப்பா, கேட்டுக்கொள், “ என்ன நினைத்தாளோ, கம்சாவின் குரல் திடீரென மென்மையானது. “ என் குழந்தாய், உண்மையாகவும் சத்தியமாகவும் கூறு, இந்தக் கண்ணன் உன் சகோதரனின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கிறானே? நீ அதற்கு உதவி செய்வாயா?” அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த உத்தவன் வாய் திறந்தான்:” தாயே, ஒரு நல்ல மனதுள்ள சரியான நபருக்குக் கண்ணன் ஒருபோதும் கெடுதல் செய்ய மாட்டான். நினைக்கக்கூட மாட்டான்.”

“எனில் ப்ருஹத்பாலன் நல்லவன் அல்ல, சரியான நபர் அல்ல என்கிறாயா?”

“அவன் சரியான நபராக இருந்தால், கண்ணன் அவனை யுவராஜாவாக மட்டுமல்ல, இந்த ராஜ்யத்தின் அரசனாகக் கூட முடிசூட்டுவான். அம்மா, ஏன் தாயே? ப்ருஹத்பாலன் கண்ணனின் பக்கம் நின்று தர்மத்திற்காகப்போரிடக்கூடாதா?”

“பாவி, மஹாபாவி, எவ்வளவு கொடூரமான மனம் உனக்கு?? நீ ஒரு ஏமாற்றுக்காரன், சூழ்ச்சிக்காரன், நயவஞ்சகன். உன் சொந்த சகோதரனுக்கு துரோகம் நினைக்கிறாயே?”

உத்தவன் மனவேதனை அவன் கண்களில் தெரிந்த்து. எனினும், “தாயே, ப்ருஹத்பாலன் அரசனாவதில் எனக்குத் திருப்தியே. ஆனால் அவன் அதற்குத் தகுதி உள்ளவனாய்த் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் எனவும் விரும்புகிறேன்.” அவ்வளவில் திரும்பினான் உத்தவன்.

கண்ணனிடம் வந்து நடந்தவைகளை நடந்தபடியே விவரித்தான் .
“எனக்கு ஏற்கெனவே சித்தி கம்சாவும், ப்ருஹத்பாலனும் எனக்கு எதிராகப் புகார்கள் வைத்திருக்கின்றனர் என்று புரிந்துவிட்டது. அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதும் புரிந்தது. பாவம், தாத்தா, அவரை நாம் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டோமோ? ம்ம்ம்ம்ம்?? நாம் உயிரோடு திரும்பிவிட்டதைச் சித்தி கம்சாவும், அவர்கள் மகன் ப்ருஹத்பாலனும் அவன் நண்பர்களும் விரும்பவில்லை!” கண்ணன் கண்களில் மீண்டும் குறும்பு.

அப்போது விருந்தாவனத்தில் இருந்து செய்தி வந்திருந்தது. நந்தகோபனும், யசோதையும் கண்ணன், பலராமன், உத்தவன் மூவரையும் பார்க்கவேண்டும் என ஆசைப்படுவதாய்ச் செய்தி வந்திருந்தது. மேலும் யமுனைத்தாய் கோபம் கொண்டு ஊருக்குள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்துவிட்டதாயும் கோபர்களும் கோபியர்களும் யமுனைத்தாயைக் கண்ணன் வந்து தான் சமாதானம் செய்யமுடியும் என நம்புவதாயும் ஆகவே மூவரும் வரவேண்டும் என்றும் செய்திகள் வந்திருந்தன. பலராமன் உடனே போகத் துடித்தான். ஆனால் கண்ணனோ எந்த அவசரமும் படவில்லை. பலராமன் அழைப்புக்கும் அவனைச் சென்று வருமாறும் தான் ரதப் போட்டிக்குத் தயார் செய்வதில் மும்முரமாய் இருப்பதாயும் கண்ணன் கூறினான். பலராமனோ கண்ணன் வராமல் தான் போகப் போவதில்லை என்று தீர்மானமாய்க் கூறிவிட்டான்.

“என் அருமை அண்ணாரே, நீங்களே சென்று வாருங்கள். நதித்தாயை நீங்களே சமாதானம் செய்யலாம். நான் வரவேண்டும் என்பதில்லையே, உங்களுக்கும் கோபம் கொண்ட பெண்களைச் சமாதானம் செய்வதில் பயிற்சியும் உள்ளதல்லவா?” கண்ணன் கண்கள், முகம் எல்லாம் குறும்பு வழிந்தோடியது.

“கண்ணா, நீ பெண்களை வெற்றிகொள்ளவேண்டும் என நினைக்கவில்லைதான். அதை நான் நன்கறிவேன். ஆனால் பெண்கள் அவர்களாக வந்து உன்னிடம் தோல்வியைத் தழுவுவதில் ஆநந்தம் கொள்கின்றனர். ஆகவே நீ வந்து யமுனைத்தாயை சமாதானம் செய்வாய்!”

“ஓஹோ, அண்ணாரே, எதுவுமே தெரியாதது போல் நடிக்கிறீரே? செளராஷ்டிரக் கரையில் உமக்காகக் காத்திருக்கும் இளம்பெண்ணை மறந்த்து ஏனோ?”

“கண்ணா, உனக்காகவும் மனம் உடைந்த ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதை மறவாதே! உன்னைத் தங்கள் பிள்ளை போல் வளர்த்த கோபியரை நான் கூறவில்லை என்பதையும் நன்கறிவாய், ராதை அங்கே உன்னைக் காணவேண்டும் என்ற எண்ணத்திலேயே உயிரை வைத்துக்கொண்டிருக்கிறாள். அதை மறவாதே!”

கண்ணன் மனம் கனிந்திருந்ததை அவன் குரலே கூறியது. குரலிலும் இனம் தெரியாத்தொரு பவித்திரமான பக்தி பூர்வமான உணர்வு:”அதனால் தான் நான் வரவில்லை என்கிறேன்.”

"ஏனெனில் நான் இப்போது கிருஷ்ணவாசுதேவன், அவர்கள் பார்த்த ராதையின் கண்ணனோ, ராதையின் கண்மணியான கோவிந்தனோ அல்ல."

3 comments:

priya.r said...

நல்ல பதிவு !
கண்ணன் செய்யும் லீலைகள்.,அவனின் பேச்சுக்கள் தான் எவ்வளோ ரசிக்கும் படியா இருக்கு ............

இராஜராஜேஸ்வரி said...

மிகவும் விரிவாகவும், அழகாகவும் இருக்கிறது.நேரில் அருகில் இருந்து பார்ப்பது போல் எழுத்து ந்டை அருமையாக அமைந்திருக்கிறது. நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ப்ரியா, ரசனைக்கு நன்றிம்மா.

வாங்க ராஜராஜேஸ்வரி, முதல் வரவுக்கு நன்றி. உங்க பின்னூட்டங்கள் எல்லாமும் படிச்சேன்.. பதிலளிக்கக் கொஞ்சம் தாமதம் ஆகும், மன்னிக்கவும், இணைய இணைப்பு விட்டு விட்டு வருவதால் எதுவும் செய்ய முடியலை! :( இந்தப் பின்னூட்டமே போகணும்!