Monday, July 15, 2013

உத்தவன் பிழைப்பானா????

மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது. ராக்ஷசர்கள் தங்களுக்குள்ளாக மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.  தற்சமயத்துக்கு அவர்கள் உத்தவனைப்பயமுறுத்தும் எண்ணத்தை விட்டுவிட்டார்கள் என்றே தோன்றியது.  நான்கு ராக்ஷசர்கள் அந்த மரத்தினடியில் காவலுக்கு அமர்ந்து கொள்ள மற்றவர்கள் தாங்கள் சிறைப் பிடித்துக் கொண்டு வந்திருந்த கைதிகளை, காட்டில் சற்று தூரத்தில் காணப்பட்டிருந்த வெட்டவெளிக்கு அழைத்துச் சென்றனர்.  அந்த அரைகுறையான விடியல் வெளிச்சத்தில் உத்தவன் ராக்ஷசர்களை நன்கு கவனித்தான்.  முன் பக்கம் நீட்டிக் கொண்டிருந்த பற்களும், செக்கச் சிவந்த  மரச்சில்லுகள் உதடுகளில் செருகப்பட்டிருப்பதையும் அந்தச் சிவந்த நிறத்தின் மூலம் அவர்கள் ரத்ததைக் குடித்துவிடுவார்களோ என்னும் அச்சம் தோன்றுவதையும் அவனால் மறைக்க முடியவில்லை.  மூக்கின் இருபக்கங்களிலும், முகத்திலும் காணப்பட்ட இறகுகள் அவர்களுக்கு ஒரு அமாநுஷ்யமான்ன தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.  தலையைச் சுற்றிலும் இந்த இறகுகளே கிரீடத்தைப் போல் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் முகத்திலும் சிவப்பும், வெள்ளயுமாக வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தனர். கன்னங்கறுக்கக் காணப்பட்ட நகங்கள் மிகக் கூர்மையாகக் காணப்பட்டன.  நிகும்பனுக்கும் நகங்கள் கூர்மையாக இருந்தாலும் இவை இன்னமும் அதிகமாத் தீட்டப்பட்டவையாகத் தோன்றின.  அவர்கள் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தனர்.  எலும்புகளை மாலையாகக் கோர்த்து உடலில் ஆங்காங்கே அணிந்திருந்தனர். அவர்களின் ஈட்டிகளும், கோடரிகளும் கூரிய கல்முனை கொண்டவையாகத் தோன்றின.


சில ராக்ஷசர்கள் சிறைப்பிடித்து வந்த அந்தக் கைதிகளை மரத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டு ஏதோ உணவை அளித்து அவர்களை வற்புறுத்திச் சாப்பிடச் செய்தனர்.  அவர்கள் பயத்திலேயே அதை உண்டதும் நன்கு புரிந்தது.  மற்றவர்கள் ஆங்காங்கே சுள்ளிகளையும், மரக்கிளைகளையும் கொண்டு வந்து ஒரு பெரிய நெருப்பு மூட்டினார்கள்.  எரியும் நெருப்பில் கற்களைத் தூக்கிப்போட்டுவிட்டு அதைச் சுற்றி வந்து நடனம் ஆடினார்கள்.  கற்கள் நெருப்பில் சூடு ஏறி செக்கச் சிவந்த நிறத்தைப் பெற்று ஒளி வீசிற்று. அதைக் கண்டதும், அந்தக் கைதிகளைக் கட்டவிழ்த்துவிட்டு, ஈட்டி முனையில் அவர்களைப் பயமுறுத்தி, கீழே அமர வைத்து மரக்கிளைகளினால் கயிறு போல் தயாரித்து அவர்களின் கை, கால்களைக் கட்டினார்கள்.  பின்னர் அந்த ராக்ஷசர்கள் போர்க் கூக்குரல் இட்டுக் கொண்டு அந்தக் கைதிகளைச் சுற்றி வந்து நாட்டியம் ஆடிக் கொண்டே, சூடாக இருக்கும் அந்தக் கற்களின் மேல் கைதிகளை அமரச் செய்தனர்.  கைதிகள் பரிதாபமாகக் கத்திக் கொண்டு அழுது கொண்டு இருக்கையில் அவர்கள் அதைக் கவனிக்காமலே தங்கள் காரியத்திலேயே கண்ணாக அவர்கள் மேல் மணலை வாரி இறைத்தனர். கைதிகளின் கூக்குரல் காற்றிலே கலந்தன.  சற்று நேரத்தில் அவர்களின் கூக்குரலின் ஒலி வேகம் குறைய ஆரம்பித்துப் பின்னர் மெல்ல மெல்ல முனகலாக மாறி, அதுவும் ஈனமாகக் கேட்டு வந்தது  சற்று நேரத்தில் சுத்தமாக நின்றே போனது.  தன்னையும் அறியாமல் உத்தவன் அவர்கள் செய்வதை ஓர் ஆர்வத்தோடு பார்த்து வந்தவனுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது.


நெருப்பை மூட்டி அவர்கள் செய்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உத்தவனுக்குப் பசியோ, தாகமோ எடுக்கவே இல்லை.  நேரம் சென்றதே தெரியவில்லை அவனுக்கு.  ராக்ஷசர்கள் அந்த இரு கைதிகளும் வறுக்கப்பட்ட நெருப்பைச் சுற்றி ஆடிக் கொண்டே இருந்தனர்.  அவ்வப்போது கூக்குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் யாரையோ திட்டிக் கொண்டிருப்பதாக உத்தவனுக்குத் தோன்றும்.  சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டது.  உத்தவன் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டான். அவனால் இன்னும் அதிக நேரம் அதே நிலையில் இருக்க இயலாது.  கீழே இறங்கவில்லை என்றாலும் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  கீழே விழுந்தான் எனில் அந்த இருவரைப் போல அவனும் நெருப்பில் வாட்டப் படவேண்டியவன் தான்.  அந்த உடல்கள் நெருப்பில் நன்கு வெந்து விட்டது என்பது தெரிந்ததும் அனைவரும் நெருப்பைச் சுற்றி அமர்ந்த வண்ணம் அந்த உடல்களை வெளியே எடுத்தனர்.  அந்த நெருப்பிலிருந்து கிடைத்த சாம்பலை நெற்றியில் மிகவும் பக்தியோடு பூசிக் கொண்டனர்..  உடல்களுக்கும் நெற்றியில் சாம்பலைப் பூசிவிட்டுச் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு கற்கோயிலுக்கு எதிரே அந்த உடல்களை வைத்து அவர்களின் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்தனர்.  அவர்களில் தலைவர் போல் காணப்பட்ட இருவர் இந்தச் சடங்கை முன்னின்று செய்தனர்.

படையல் முடிந்ததும், மீண்டும் உற்சாக நடனம் ஆரம்பித்தது.  இம்முறை பறைகளும், பேரிகைகளும் கூடச் சேர்ந்து முழங்கின.  தங்கள் ஈட்டிகளையும், கோடரிகளையும் உற்சாகமாய் ஆட்டிக் கொண்டு ஆனந்த நடனம் செய்தனர்.  அந்த இரு ராக்ஷச ஆசாரியர்களும் உடலை வெட்டிப் பங்கு போடுவதில் முனைந்திருந்தனர்.  கத்திக்குப் பதிலாகக் கூர்மையான மூங்கில் கொம்புகளையே பயன்படுத்தினார்கள்.  பின்னர் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு உற்சாகம் கொப்பளிக்க உண்டனர்.  மூச்சுவிடக் கூட மறந்த உத்தவன் பயத்துடன் இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவர்களின் இந்தப்பயங்கரமான  விருந்து  முடிய நள்ளிரவாகி விட்டது. அதன் பின்னர் ஒவ்வொருவராக அவர்கள் கீழே அப்படியே படுத்துத் தூங்க ஆரம்பித்தனர்.  அவர்கள் அனைவரும் நன்கு ஆழ்ந்து உறங்க கிட்டத்தட்ட விடியும் நேரம் ஆகிவிட்டது.  அவர்கள் உண்ட பெரு விருந்தின் மயக்கம் விடிந்த பிறகும் நீடித்தது.


இந்த மாபெரும் விருந்தின் காரணமாகவும், விடாமல் நடனம் ஆடிய களைப்பிலும் அனைவரும் அயர்ந்து உறங்கினார்கள். சிலரின் குறட்டைச் சப்தம் இடியோசை போல் கேட்டது.  வாயைத் திறந்து கொண்டு தூங்கிய சிலர் பார்க்கவே பயங்கரமாக இருந்தனர்.  ஒரு சிலர் நல்ல தூக்கமில்லாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டும் இருந்தனர்.  மேலே மரக்கிளையில் அமர்ந்திருந்த உத்தவன் தன்னைத் தானே ஏற்கெனவே கட்டிக் கொண்டிருந்தான்.  என்றாலும் இப்போது தலை சுற்றிக் கீழே விழுந்துவிடுவான் போல் பயந்தான்.  பசி, தாகம், அவன் பார்த்த பயங்கரக் காட்சிகள், மனித உடல் எரிந்த வாசனை, மனித உடலின் மாமிசத்தின் வாசனை அனைத்தும் சேர்ந்து அவன் தைரியத்தைச் சுக்குச் சுக்காக ஆக்கி விட்டிருந்தது.  அத்தனை நேரமாய் அவனுள்ளே இருந்த அவன் மன உறுதியை இந்நிகழ்ச்சிகள் குலைக்க ஆரம்பித்துவிட்டன. அனைத்து நம்பிக்கைகளையும் அவன் இழந்துவிட்டான்.  அவன் மனம் உடைந்து விட்டது.  மரக்கிளைகளைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் கைகள் தளர்ந்துவிட்டன போல் தோன்றியது.  கால்கள் நடுங்கின.  கண்கள் கண்ணீரைப் பெருக்கின.  தன்னையும் அறியாமல் கீழே விழுந்துவிடுவோம்.  உயிருக்கு உத்தரவாதமில்லை என்றே எண்ணினான் உத்தவன். அப்போது அவனையும் அறியாமல் அவன் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன.

“ஹே கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே
ஹே நாதா, நாராயணா, வாசுதேவா!”



6 comments:

ஸ்ரீராம். said...

பயங்கரக் காட்சிகள். திகில் வர்ணனை.

திண்டுக்கல் தனபாலன் said...

அபாயத்திற்கு அபயம் உண்டு...?!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய பகுதியை வாசிக்கவே படு பயங்கரமாக உள்ளதே. ;(

//உயிருக்கு உத்தரவாதமில்லை என்றே எண்ணினான் உத்தவன். அப்போது அவனையும் அறியாமல் அவன் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன.

“ஹே கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே; ஹே நாதா, நாராயணா, வாசுதேவா!”//

ஸ்ரீ கிருஷ்ணன் சீக்கரமாக வரட்டும். உத்தவனைக் காக்கட்டும்.

பகிர்வு நன்றிகள்.


sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், முந்தின பதிவில் காணோமேனு நினைச்சேன். :)))

sambasivam6geetha said...

வாங்க டிடி, அபயம் நிச்சயம் உண்டு.

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், கிருஷ்ணன் தான் காப்பாத்தணும். :)))