Tuesday, July 16, 2013

தன்னிரக்கத்தில் உத்தவன்!

சற்று நேரம் உச்சரித்த உத்தவனுக்குச் சற்று நேரத்திற்குப் பின்னர் தேவகி அம்மாவால் தினம் தினம் பாடப்பட்ட அந்த இனிமையான பக்திப்பாடலைச் சொல்ல முடியவில்லை.  காலை இளங்காற்று சுகமாக வீசத் தன்னையும் அறியாமல் உறங்கி விட்டான்.  திடீர் திடீர் எனத் தூக்கி வாரிப் போட்டு எழுந்து தான் கீழே விழுந்துவிடவில்லையே என நிச்சயம் செய்து கொள்வான். இம்மாதிரி அரைத் தூக்கத்திலும், அரை விழிப்பிலும் மாறி மாறிச் சென்று தன்னிலையறியாது இருந்த உத்தவன் கண்களில் பல்வேறு விதமான காட்சிகள் தோன்றி மறைந்தன. கிருஷ்ணன் தன் புல்லாங்குழலை ஊதிக் கொண்டு இனியகீதம் இசைத்த வண்ணம் ராதையுடன் தோன்றினான்.  அவனும் ராதையும் விளையாடுவதும் தெரிகிறதே!  ஆஹா, இதென்ன, அதற்குள் ராதை மறைந்து இது யார்?  ஷாயிப்யா! இவ்வளவு கோபத்துடன் யாரைத் திட்டுகிறாள்?  ஆஹா, என்னைத் தான்!  அம்மா! அம்மா! தன்னையும் அறியாமல் அழுத உத்தவன் முன் இதோ அவன் தாய்! கம்சா!  ஆனால் இது என்ன?  வெறுப்புடனும் இகழ்ச்சியுடனும் முகத்தை அன்றோ திருப்பிக் கொள்கிறாள்!  உத்தவன் மனதைச் சமாதானம் செய்யவென வந்தவர்கள் போல் நாக கன்னியர் இரட்டையர் அங்கே வந்தனர்..  இனிமையாகச் சிரித்துக் கொண்டு அவர்கள் அன்பையெல்லாம் கண் வழியே கொட்டியவண்ணம் ஒரு நிமிடம் நிஜமோ என உத்தவன் எண்ணிவிட்டான்!  மீண்டும் தூக்கி வாரிப் போட எழுந்து தான் அமர்ந்திருக்கும் நிலையைச் சரி பார்த்துக் கொண்டு விழுந்துவிடாமல் இருக்கப் பாதுகாப்புச் செய்து கொண்டான். ஒரு முறை கீழேயும் பார்த்துக் கொண்டான்.  ராக்ஷசர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  அவன் மனக்கண் முன்னர் நெருப்பில் வாட்டப்பட்ட அந்த இரு மனிதர்களும் தோன்றினர்.  விரைவில் களைப்பு மிகுந்து அவன் கீழே விழுந்துவிடுவான்.  அவனையும் அப்படித் தான் நெருப்பில் வாட்டுவார்கள்.

நான் ராக்ஷசர்களிடம் மாட்டி இறந்த செய்தி கிருஷ்ணனைப் போய் எட்டும்.  நான் இல்லாமல் கிருஷ்ணன் தனிமையாக உணர்வானோ! ம்ம்ம்ம்ம் அவன் மனதில் நினைப்பதை அப்படியே முடித்துத் தருபவர்கள், அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் எவரும் அவன் அருகில் இல்லை. ம்ம்ம்ம்ம் உத்தவன் இப்போது அந்த இரு பெண்கள் குறித்தும் யோசித்தான்.  என்ன செய்வார்கள் இருவரும்? அதுவும் நான் ராக்ஷசர்களால் நெருப்பில் இடப்பட்டு இறந்தேன் என்பது தெரிய வந்தால்??? எனக்காக வருந்துவார்களா?  ஒருவேளை,,,, ஒரு வேளை,,,,, கங்கையில் விழுந்து தங்களையும் முடித்துக் கொண்டுவிட்டால்???? தன்னைச் சுற்றிலும் காணப்பட்ட பிரகாசமான சூரிய ஒளியால் உத்தவன் உற்சாகம் அடைய முயன்றான்.  வாயை நன்கு திறந்து காற்றை உள்ளிழுத்து சுத்தமான காற்றால் தன்னைப் புதுப்பித்துக் கொண்டான். மரத்திலிருந்து துளிராக இருந்த பச்சை இலைகளை மென்று தின்றான்.  ஆனால் அவை அவனுக்குப் புத்துணர்ச்சி தருவதற்கு பதிலாக மயக்கத்தையே தந்தது.  வயிறு சங்கடமாக உணர்ந்தான்.  ஆயிற்று.  இந்த மரத்தில் அவன் ஏறி அமர்ந்து இரு இரவுகளும், ஒரு பகலும் கழிந்துவிட்டன. பொறுக்க முடியாத அளவுக்குக் களைத்து விட்டான் உத்தவன். அட, இதுவே ஏதேனும் போர்க்களமாக இருந்திருந்தால்?? நம் திறமையைக் காட்டிவிட்டு வீர மரணம் அடையலாமே!

ஒரு நல்ல உயர்ந்த நோக்கத்துக்காக உயிரை விட்டிருக்கலாமே!  ஆனால் இப்போதோ அவன் எந்த நேரம் மரத்திலிருந்து அதன் பழுத்த பழம் உதிர்வது போல் கீழே விழுவானோ தெரியாது! விழுந்த உடனே அவனுக்குக் காத்திருப்பது நெருப்பு தான். நெருப்பில் வாட்டப்பட்டு அந்த ராக்ஷசர்கள் அவனைப் பக்ஷணம் செய்யப் போகின்றனர்.  அவனுடைய உயர்ந்த அபிலாஷைகள் அனைத்துக்கும் ஒரு அவமானகரமான முடிவு ஏற்படப் போகிறது. அவ்வப்போது பசியிலும், தாகத்திலும் களைத்த உத்தவன் ஒரு மயக்கமான நிலைக்குத் தள்ளப் பட்டு மயக்கமா, தூக்கமா, விழிப்பா என அறிய முடியாததொரு நிலையில் இருந்தான்.  நம்பிக்கைகள் அனைத்தும் போய்விட்டன.  பொய்த்துவிட்டன.  மூட்டுக்கு மூட்டு வலி தாங்கவில்லை.  நாமே கீழே விழுந்து இது அனைத்துக்கும் ஒரு முடிவு கட்டிவிடலாமா என உத்தவன் யோசித்தான்.  அவனால் இந்தக் காத்திருத்தலைத் தாங்க முடியவில்லை.  எந்த நேரம் எது நடக்குமோ என ஒவ்வொரு கணமும் பயந்து கொண்டு மேலே அமர்ந்திருப்பதை விட ஒரு வழியாகக் கீழே இறங்கினால் இவை அனைத்துக்கும் ஒரு முடிவு ஏற்படும்.  தெரிந்த முடிவு தானே!  நண்பகல் ஆகி விட்டது.  மரக்கிளைகளின் இலைகள் வழியே ஊடுருவிய சூரியக் கிரணங்கள் சுட்டுப்பொசுக்கின. உத்தவன் வாய் வெப்பத்தாலும், இரண்டு நாட்களாகத் தண்ணீர் குடிக்காததாலும் உலர்ந்து போய் விட்டது. அவன் நாக்கு ஒட்டி உலர்ந்து போய் மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது.  உடலெல்லாம் நெருப்பாக எரிந்தது.  தண்ணீர், தண்ணீர், ஒரு சொட்டு நீர் கிடைத்தால் கூடப் போதும்.  நாக்குக்குக் கொஞ்சமானும் இதமாக இருக்கும்.  நீர்! எங்கே கிடைக்கும்!

கண்ணா, வாசுதேவ கிருஷ்ணா, என்னைக் கைவிட்டுவிட்டாயா?  இல்லை, நீ கைவிட மாட்டாய்! இது என் விதி! இதோ என் கடைசிப் பிரார்த்தனை! கடைசியாக உன்னிடம் விடைபெற்றுக் கொள்கிறேன் அப்பா.
“ஹே கிருஷ்ணா கோவிந்தா ஹரே முராரே
ஹே நாதா நாராயணா வாசுதேவா
கிருஷ்ணா, என் கிருஷ்ணா, என் இனிய நண்பா, என் அருமைச் சகோதரா,  நீ எனக்கு இட்ட முக்கியமான பணியின் நிமித்தமாக வந்த நான் அதை முடிக்காமல் இறந்தாலும், தைரியமாக இறப்பை எதிர்கொண்டேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது அப்பா.  ஆம், உன் விருப்பம் எனக்கு நீ இட்ட கட்டளையாக எண்ணியே நான் செயல்படுகிறேன். என் வாழ்நாளில் நீ எப்போதெல்லாம் உன் விருப்பத்தை என்னிடம் சொல்கிறாயோ அவற்றை உன் கட்டளையாகச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருவதை என் கடமையாகவே கொண்டிருந்தேன்.  இப்போதும் அப்படியே நினைத்தேன்.  ஆனால் கிருஷ்ணா, இப்போது என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லையே! கிருஷ்ணா, கிருஷ்ணா, என் வாழ்நாள் முழுதும், நான் உன்னைத் தவிர வேறு எவரையும் எப்போதும் ஒரு கணம் கூட நினைத்தது இல்லை.  அப்படியே இந்தக் கடைசிக் கணங்களிலும் உன்னைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் கிருஷ்ணா, உனக்கு இது தெரியுமா?  நீ அறிவாயா? நான் என்னுடைய கடைசிக் கணங்களில் இருக்கிறேன் என்பதை நீ உணர்வாயா?

உத்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.  விழித்தெழுந்த உத்தவன் மாலை ஆகி இருப்பதை உணர்ந்தான்.  ஓரிரு ராக்ஷசர்களைத் தவிர மற்றவர் அனைவரும் இன்னும் விழிக்கவில்லை தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கண்டான். அவர்களும் அருகிலிருந்த ஒரு ஊற்றுக்குச் சென்று நீர் அருந்திவிட்டு மீண்டும் தூங்கக் கண்டான்.  காடும் இரவுக்குத் தயாரானது போல் சற்று நேரம் சுறுசுறுப்பாக மிருகங்கள் அங்குமிங்கும் நடமாடுவதும், பறவைகள் கூடுகளுக்குத் திரும்பும் கீச் கீச் சப்தங்களோடும் காணப்பட்டது.  விரைவில் எங்கும் நிசப்தம்.  சந்திரன் உதயம் ஆக அதன் இனிமையான குளுமையான கிரணங்கள் பால் போல் ஒளியைப் பொழிந்தது.  உத்தவனையும் நிலவொளி குளிப்பாட்டியது.  ராக்ஷசர்கள் எழுந்து கொண்டாலும் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டனர். பசியாலும், தாகத்தாலும் களைத்த உத்தவனுக்கு உடலின் சக்தியெல்லாம் போய்விட்டதுபோல் உணர்ந்தான்.  முடியாது;  இனி தன்னால் தாக்குப் பிடிக்க இயலாது. தலை சுற்றியது அவனுக்கு.  பின்னந்தலை பயங்கரமாக வலித்தது. மூட்டுக்கள் மரத்துப் போய் உணர்வற்றுவிட்டதோ என்னும்படி விறைப்பாக ஆகிவிட்டன. கீழே இறங்க வேண்டியது தான்.  நான் இறந்து போகும் நேரம் நெருங்கிவிட்டது.  இனி என்ன?



6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, உத்தவன் படும் கஷ்டங்கள் இன்னும் தொடர்கின்றனவே!

பயங்கரமாக எழுதித்தள்ளுகிறீர்கள்.

என்ன ஆகுமோ ? ஒரே கவலையில் உத்தவன் போன்றே நானும்.

திண்டுக்கல் தனபாலன் said...

'ஏதோ' ஒரு முடிவு செய்து விட்டான்... அடுத்தது என்ன...?

ஆவலுடன்...

ஸ்ரீராம். said...

உத்தவனை கீழே தள்ளி விட்டுடலாமான்னு பார்க்கறேன்... சட்டுன்னு ஒரு முடிவு எடுக்க மாட்டானோ! :)

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், உத்தவன் எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டான்னு தெரிய வேண்டாமா? :)))

sambasivam6geetha said...

வாங்க டிடி, உங்கள் ஆவல் பூர்த்தி அடைந்திருக்கும். :)))

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் சட்டுனு முடிவு எடுக்க முடியாது. எவ்வளவு அபாயகரமான ஆட்களிடம் மாட்டி இருக்கான். தந்திரமாகவே தப்பணும். :)))