Saturday, July 19, 2014

திரௌபதி மாலையிட்டாள்!

அர்ஜுனனின் நடவடிக்கையால் கவரப்பட்ட அந்த சபையின் அனைத்து அரசர்கள், இளவரசர்கள் அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அர்ஜுனன் அங்கே நின்று கொண்டிருந்த திரௌபதிக்கும், த்ருஷ்டத்யும்னனுக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்தான். குரு சாந்தீபனியைப் பார்த்துத் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டான்.  சாந்தீபனியும், “ஜெய விஜயீ பவ!” என அவனை ஆசீர்வதித்தார்.  சுறுசுறுப்பைக் காட்டிய வண்ணம் நடந்தவன் செயற்கைக் குளத்தருகே சென்றதும் ஒரே பார்வையில் தான் தாக்க வேண்டிய குறியின் தூரத்தைக் கணித்துக் கொண்டான். அதன் பிரதிபலிப்புக் குளத்தில் விழுந்திருக்கும் கோணத்தையும் பார்த்துக் கொண்டான். மின்னலைப் போன்ற வேகத்துடன் தன் இடக்கையால் வில்லின் நடுத்தண்டைச் சரியான இடத்தில் பிடித்தான்.  அர்ஜுனன் இடக்கைப் பழக்கம் உள்ளவனாக இருப்பானோ என அனைவரும் நினைத்தனர். அவன் அந்த வில்லை எடுத்த விதமே மிக அழகாகவும் நளினமாகவும் இருந்தது. அர்ஜுனனுக்கு உள்ளூர சந்தோஷம்.  இத்தனை நாட்கள் கழித்துத் தன் அருமை வில்லாயுதத்தை, (அது யாருடையதானால் என்ன) தொட ஒரு சந்தர்ப்பம் கிட்டியதில் மிகவும் மகிழ்ந்தான்.

கீழே சுருட்டி வைக்கப்பட்டிருந்த நாணை எடுத்து வில்லின் மற்றொரு நுனியில் பொருத்தி நாணேற்றினான் அர்ஜுனன்.  அவ்வளவு தான் தெரியும் அவனுக்கு.  இனி அவனுக்கு எவரும் லக்ஷியமில்லை.  எதுவும் பிரச்னை இல்லை.  அவன்;  அந்த வில்;  அதில் பொருத்திய அம்பு;  அவன் பார்க்க வேண்டிய குறி!  இதைத் தவிர வேறெதுவும் அவன் சிந்தனையில் இல்லை. அவனுக்கு  மிகவும் பிடித்த அருமையான ஆயுதம் அவன் கைகளில்.  அவன் ஊனக் கண்கள் பார்ப்பதை விடக் கூர்மையாக அவன் மனக் கண்களில் அவன் தாக்கி வீழ்த்த வேண்டிய குறி மட்டுமே தெரிந்தது.  அவன் ஒரே முனைப்போடு இருந்தான்.  மூச்சு விடக் கூட மறந்து சபையே அமைதியில் ஆழ்ந்தது. திரௌபதியும் பார்த்துக் கொண்டிருந்தாள்.  இந்த இளம் துறவியை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.  அவன் கண்ணியத்தோடு நடந்து கொண்ட முறையும், அவன் தன்னம்பிக்கையும்  அவன் குளத்தருகே வந்தபோதே அவளுக்குப் புலப்பட்டு விட்டது.  அவன் கண்கள் அவளைக் காந்தம் போல் ஈர்த்தன.  அந்தக் கண்களில் தெரிந்த ஒளியும் அவளைக் கவர்ந்தது. அவளும் மூச்சு விடக் கூட மறந்தவளாய் அர்ஜுனன் அடுத்துச் செய்யப் போவதற்குக் காத்திருந்தாள்.  அதற்கு ஏன் இத்தனை நேரம் ஆகிறது என்றே அவளுக்குத் தோன்றியது.

அர்ஜுனன் குளத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான்.  அதில் தெரிந்த பிரதிபிம்பத்தை ஒரு முறை பார்த்தான். விரைப்பான வில்லின் நாணைத் தன் இடது காதின் ஓரம் வரை இழுத்தான்.  கண்களை மூடி குரு துரோணாசாரியாரையும், கிருஷ்ண வாசுதேவனையும் வணங்கிக் கொண்டான். அவ்வளவு தான் அவன் அறிவான்.  அவன் கைகள் அம்பை விடுவித்தன. சபையில் அனைவரும் கண்கொட்டாமல் பார்த்திருக்க, அம்பு அங்கே மேலுள்ள கம்பத்தில் வளையத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்த மீனின் கண்ணைச் சரியாகப் போய்த் தாக்கியது.  மீன் அந்த வளையத்திலிருந்து விடுபட்டுக் குளத்திற்குள் “தொப்” என்னும் சப்தத்துடன் விழுந்தது.  சபையில் அனைவருக்கும் இந்த ஒரே தாக்குதலில் மீனை வீழ்த்திய இளைஞனைப் பார்த்து மூச்சுத் திணறியது.  எவருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.  குரு சாந்தீபனி மட்டுமே அப்போது தன் வசத்தில் இருந்தார்.  அவர் தன் கைகளைத் தூக்கி ஜெய கோஷம் செய்துவிட்டு, “சாது!  சாது!” என்றும் கோஷித்தார்.  அதன் பின்னரே தூக்கத்திலிருந்து விழித்தாற்போல் சபையினர் அனைவரும் “சாது, சாது” என எதிரொலித்தனர்.  பேரிகைகள் முழங்கின.  சங்குகள் ஊதப்பட்டன.  எக்காளங்கள் ஊதப்பட்டன. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் மிக மிக உற்சாகம் ஏற்பட்டது.

அங்கே அமர்ந்திருந்த பிராமணர்கள் அனைவரும் எழுந்திருந்து அர்ஜுனனை நோக்கி விரைந்து நடை போட்டனர்.  அர்ஜுனன் வில்லை மீண்டும் எடுத்த இடத்தில் வைக்கையில் திரௌபதி  தன் கண்களிலேயே உற்சாகத்தைக் காட்டியவண்ணம் வந்து அவன் கழுத்தில் தன் கையிலிருந்த மணமாலையைப் போட்டாள்.  அரசர்கள் சிலர் மிகுந்த மனக்கிளர்ச்சி கொண்டு எழுந்தனர்.  தங்கள் கைகளை உயர்த்திய வண்ணம், “இது மிகப் பெரிய அவமானம்!  மோசடி!” என்று கூச்சலிட்டனர்.  அரசர்களில் ஒருவர், “இளவரசியை ஒரு பிராமணனுக்கு மணம் செய்து வைக்கக் கூடாது.  சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கு மட்டுமே!” என்று கூச்சல் போட்டார்.   இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷகுனி, துரியோதனனைப் பார்த்தான். அவன் அப்படியே திகைத்து அமர்ந்திருந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.  அவன் காதுகளில் ஷகுனி மெல்லக் கிசுகிசுத்தான். “இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அர்ஜுனனை ஒரேயடியாக அகற்றிவிடலாம்.  விரைந்து செயல்படுவோம்!” என்றான். அப்போது அங்கே அருகில் அமர்ந்திருந்த சோமதத்தன் என்னும் அரசனின் மகன் பூரிஷ்ரவஸ் எழுந்தான்.  தன் கைகளை அழுத்தமாக துரியோதனன் தோள்களில் வைத்து அழுத்தினான்.  “இப்போது இம்மாதிரி எதையும் நாம் எவரும் செய்ய இயலாது;  அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல!  அதோ, அங்கே பார்!  யாதவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர்.  சேதி நாட்டவர்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அர்ஜுனனின் சகோதர முறையானவர்கள்.  தெரியும் அல்லவா?”  என்று கூறினான்.  இதைக் கேட்ட துரியோதனன் செய்வதறியாமல் தன்னிடத்திலேயே அமர்ந்துவிட்டான்.

சில இளவரசர்கள் துருபதனை நோக்கிச் செல்வதை பீமன் பார்த்தான்.  அந்தக் கூட்டத்தைத் தன் கைகளால் தள்ளிக் கொண்டு அர்ஜுனனைச் சுற்றி இருந்த பிராமணர்களையும் விலக்கிக் கொண்டு சென்றான்.  அந்த அரங்கமே அதிரும்படியான உறுமிக் கொண்டு சென்றான்.  அங்கே அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த மரம் ஒன்றைப் பிடுங்கித் தன் கைகளில் தண்டாயுதம் போல்  ஏந்திக் கொண்டான்.  அர்ஜுனனைச் சூழ வந்த அரசர்கள், இளவரசர்களைப் புறம் தள்ள ஆரம்பித்தான். அனைவரும் திகைப்போடு பின்னடைந்தனர்.  இவன் யார் ராக்ஷசன் போல் உள்ளானே? கண்களானால் நெருப்பாய் எரிகிறது!  திரௌபதிக்கும் அர்ஜுனனுக்கும் அருகிலோ, அல்லது துருபதன் அருகிலோ துணிச்சலாக வரப் போகும் முதல் மனிதனின் மண்டையை உடைத்துவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பான் போலிருக்கிறது.  அர்ஜுனனும் சும்மா இருக்கவில்லை.  வில்லை மீண்டும் கைகளில் எடுத்து நாணில் அம்பைப் பூட்டிக் குறி பார்த்து எய்வதற்குத் தயார் ஆனான்.  பீமனோ அர்ஜுனனைப் பார்த்து, “அர்ஜுனா, வில்லையும் அம்பையும் திரும்ப வை!  நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொன்னான். இதைச் சொல்லிய வண்ணம் திரௌபதியின் கரங்களைப் பிடித்து அர்ஜுனன் கைகளில் ஒப்படைத்துப் பின்னர் இருவரையும் துருபதன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றான்.

மணமகனும், மணமகளும் துருபதனுக்கு நமஸ்கரிக்கையில் மின்னல் வேகத்தில் செயல்படும் அர்ஜுனனின் வீர, தீரத்தில் மயங்கிய கூட்டம், “சாது, சாது!” என உற்சாக கோஷம் எழுப்பியது.  விராடனும் மற்ற நட்பு நாட்டு அரசர்களும் புடை சூழ, கிருஷ்ணனும், பலராமனும், மற்ற யாதவ அதிரதிகளும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கி விரைந்தனர்.  அர்ஜுனன் திரும்பியபோது கிருஷ்ணனின் சிரிக்கும் கண்களைப் பார்த்தான்.  திரௌபதியின் கரங்களைப் பிடித்த வண்ணம் நின்றிருந்த அவன், தன்னோடு அவளையும் குனிந்து கிருஷ்ணனையும், பலராமனையும் வணங்க வைத்தான். இருவரையும் சேர்த்து அன்போடு தூக்கிய கிருஷ்ணன் அர்ஜுனனைத் தன் நெஞ்சாரத் தழுவிக் கொண்டான்.  அதன் பின்னர் நடந்தது தான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.  கிருஷ்ணன் தன்னை அர்ஜுனனிடமிருந்து விடுவித்துக்கொண்டு அர்ஜுனன் அருகே அவனுக்குக் காவலாக நின்றிருந்த ராக்ஷசன் போல் இருந்த பீமனைக் குனிந்து வணங்கினான்.  பீமன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன் அல்லவா!  அங்கிருந்த அனைவரும் இதைக் கண்டு மிகவும் அதிசயித்தனர்.  என்ன?  அனைவரும் கடவுளென மதித்து வணங்கும் கிருஷ்ண வாசுதேவன், இந்த ராக்ஷசன் கால்களில் வீழ்ந்து வணங்குகிறான். அந்த ராக்ஷசனும் சற்றும் சம்பிரதாயத்தைக் குறித்து நினைத்தே பார்க்காமல்  கிருஷ்ணனின் முதுகில் ஓங்கி அடிக்கிறானே!  விளையாட்டாகத் தான் என்றாலும்  அனைவரும் பார்த்து பிரமிக்கும் கிருஷ்ணனிடமா இந்த விளையாட்டு?

ஆனால் துருபதன் வேறு விதமாக எண்ணினான்!  இந்த பிராமண இளைஞன் என்ன இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறான்!  பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வதா?  இது என்ன புதுமை!  துருபதனுக்கு அதை விட அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது அடுத்துக் கிருஷ்ணன் பேசிய சொற்களே!  அந்த ராக்ஷச பிராமணனைக் குனிந்து வணங்கியவன் போட்டியில் ஜெயித்த இந்த இளம் பிராமணனைப் பார்த்து,”என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு, குந்தியின் மகனே!” என்கிறானே! அப்போது……அப்போது….. துருபதனின் கண்கள் ஆச்சரியம் தாங்க முடியாமல் விரிந்தன.  விளங்காத பல விஷயங்கள் விளங்கின. இவர்கள் இருவரும் பாண்டவர்கள் ஐவரில் இருவர்.  துருபதனுக்குத் தன் வயது மறந்து போனதோடல்லாமல், இவ்வளவு நேரமும் ஆக்கிரமித்திருந்த பலவீனம் அனைத்தும் போய்ப் புத்துணர்ச்சி உண்டாயிற்று.  ஒரு இளைஞனைப் போல் குதித்து எழுந்தான்.   தன் சிம்மாதனத்தில் இருந்து கீழே இறங்கினான்.  கிருஷ்ணனைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.  அவனால் பேசவே முடியவில்லை.  “வாசுதேவா, வாசுதேவா, உன் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டாய்!” திரும்பத் திரும்ப இதையே முணுமுணுத்தான்.  துக்கத்தினால் ஏற்பட்ட மனக்கிலேசம், உடல் கோளாறு ஆகியவற்றால் மெலிந்திருந்த துருபதன் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவாகம் எடுத்தது.



3 comments:

ஸ்ரீராம். said...

ஒரு மூச்சில் படித்தேன். கண்கள் படித்துக் கொண்டு வரியை, அதைவிட வேகமாக மனம் தாண்டிப் பறந்தது. அருமை. அருமை. அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா....!

இனி....

பித்தனின் வாக்கு said...

nanru mika aurmai