Saturday, July 26, 2014

வியாசரின் ஆலோசனைகள்!

“உண்மைதான் மன்னா!  நீ சொல்வது சரியே!   கிருஷ்ண வாசுதேவன் இவற்றைச் சரியாகவே சொல்லி இருக்கிறான்.  இது ஓர் பேரழிவு தான். இவ்வளவு நாட்கள் ஒளிந்து வாழ்ந்த சகோதரர்கள் ஐவரும் இப்போது தான் உலக வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கின்றனர்.  அவர்களுக்குப் பரம்பரையாகக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்கள் இன்னமும் அடைந்தாக வேண்டும்.  சமரசம் செய்து கொண்டு ஒத்து வாழ்வதற்குச் சற்றும் இடம் தரமாட்டான் துரியோதனன்.  அவன் விரோதத்தை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.  அது மட்டுமா? அவர்களின் தாய் மாமன் ஷகுனியின் தந்திரங்களையும் எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை முழு ஹஸ்தினாபுரமுமே இவர்கள் வரவை எதிர்த்தால்?  அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.  இப்போது நாம் சுயம்வரத்தினால் விளைந்திருக்கும் பலன்களை எல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டு திரௌபதிக்கு இன்னொரு கணவனைத் தேடித் தர முடியுமா?” வியாசர் கேட்டார்.

“அந்தக் கஷ்டம் எனக்கும் புரிகிறது, ஆசாரியரே!  ஆசாரியரே, எனக்கு என்ன செய்வது என ஒன்றுமே புரியவில்லை.  தயவு செய்து எங்களுக்குச் சரியான வழியைக் காட்டுங்கள்.  நீங்கள் தர்மத்தின் ஊற்று. உங்களால் தான் சரியாகச் சொல்ல முடியும்.” என்று இறைஞ்சினான் துருபதன்.

“மன்னா, மாட்சிமை பொருந்திய மன்னா! நீ என்னைக் கேட்பதன் மூலம் தவறு செய்கிறாய்.  கிருஷ்ணை திரௌபதி தனக்குத் தானே ஒரு வழியைக் கண்டுபிடிப்பாள்.  அவளால் முடியும்.  இது அவள் திருமணம்;  அவள் வாழ்க்கை.  ஆகவே அவள் விருப்பமே இங்கு முக்கியம்.  என்ன செய்யலாம் என அவளே தேர்ந்தெடுக்கட்டும்!” என்று சொன்னவண்ணம் ஆசாரியர் வேத வியாசர் திரௌபதியின் பக்கம் திரும்பிக் கனிவுடனும், பாசத்துடனும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“அவள் ஒருக்காலும் ஐந்து கணவர்களைத் தேர்ந்தெடுக்க மாட்டாள்!  நான் நிச்சயமாக அறிவேன்.” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  அவனைப் பார்த்துச் சிரித்த வியாசர், “நீ சற்றும் பொறுமையற்று இருக்கிறாய், மகனே!” எனக் கூறினார்.  “நாம் அனைவரும் இவ்வளவு விவாதித்தும், நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.  திரௌபதியால் மட்டும் எப்படி முடியும்?” என்றான் த்ருஷ்டத்யும்னன்.

உடனே துருபதனும், “ஆசாரியரே!  துரதிர்ஷ்டம் படைத்த என் மகளிடம் தயவு செய்து இந்தக் கஷ்டமான கேள்விக்குப் பதிலைத் தேடச் சொல்லாதீர்கள்.  இந்த மாபெரும் பொறுப்பு அவளுக்கு வேண்டாம்.  அவள் போதும், போதும் என்னும் அளவுக்கு அழுது தீர்த்து விட்டாள்.  அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. “ என்றான்.

“மன்னா, மாட்சிமை பொருந்திய மன்னா!  அவள் உனக்குத் தான் குழந்தை!  ஒரு பெண் தன் பிறந்த வீட்டில் மட்டுமே குழந்தையாக நடத்தப்படுவாள்.  அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைக்கப்படுகிறாளோ, அந்த நிமிடத்தில் இருந்தே எல்லாப் பிரச்னைகளையும் தன்னந்தனியாகத் தீர்க்கும் அறிவையும், முடிவெடுக்கும் திறனையும் பெற்று விடுகிறாள். உனக்குப் பெண்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை, மன்னா!  இதோ, பீமன் இருக்கிறானே, அவனைக் கேட்டுப் பார்! ஹிடும்பி அவனை எப்படிச் சமாளித்து வந்தாள் என்பதைக் கதையாகச் சொல்லுவான். “ என்ற வண்ணம் மீண்டும் இறுக்கமாக ஆரம்பித்த சூழ்நிலையைத் தன் கேலிப் பேச்சால் மாற்ற முனைந்தார் வியாசர்.

பீமனால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.  அதோடு ஆசாரியரைப் பார்த்து ஒரு நண்பனிடம் கண்ணடிப்பது போல் கண்ணடித்துக் கொண்டு, “ஆசாரியரே, பெண்களைப் பற்றி நீங்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பது எவ்வாறோ?” என்று கேலியாகவும் கேட்டான்.  “உன்னைப் போன்ற பொல்லாத  பயல்களின் மூலமே நான் பெண்களைப் பற்றித் தெரிந்து கொண்டேனாக்கும்.” என்று திருப்பினார் வியாசர்.  பின்னர் மனம் விட்டுச் சிரித்த வண்ணம் திரௌபதியின் பக்கம் திரும்பினார்.  “குழந்தாய்!  அழாதே!  உதவிக்கு யாரும் இல்லை என நினையாதே! நீ எவ்வளவு தைரியமான பெண் என்பதை நான் நன்கறிவேன். “  இதைச் சொன்னவர் துருபதனிடம் திரும்பி, “துருபதா, உன் மகள் சாதாரணமானவள் என நினையாதே!  இவள் சாக்ஷாத் அந்த அம்பிகையே ஆவாள்!” என்றார்.

“நான் என்ன செய்யட்டும் ஆசாரியரே!  என்ன சொல்லட்டும்?” திரௌபதி வியாசரைக் கேட்டாள். “நீ ஒருத்தி மட்டுமே இதற்கான சரியான முடிவை எடுக்க முடியும் மகளே! உனக்கெதிரே மூன்று வழிகள் இருக்கின்றன.  “

வியாசர் இப்போது யஜர், உபயஜர் ஆகியோரைப் பார்த்த வண்ணம், “மதிப்புக்குரிய முனிவர்கள் இருவரும் நான் பேசப் போவதைப் பொறுத்துக்கொள்வார்கள் என எண்ணுகிறேன்.” என்று அனுமதி வேண்டினார். முனிவர்கள் இருவரும், “துறவிகளில் சிறந்தவரே!  நீர் சொல்லக் காத்திருக்கிறோம்.”  என்றனர். அனைவருமே மிகவும் மரியாதையுடனும், ஆவலுடனும் காத்திருந்தனர்.

“முதலில் நான் சொல்லப் போவது முதலாவதான வழியை.  குழந்தாய் கேள்!   இப்போது ஏற்பட்டிருக்கும் துன்பங்களையும், கஷ்ட, நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் சுயம்வரத்தின் முடிவை ஏற்றுக்கொள் மகளே! நீ அர்ஜுனனை உன் மணமகனாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறாய்.  அவனும் உன்னை மணந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறான்.  நீ அவனை மணந்து கொண்டால் மிகவும் சந்தோஷமாக இருப்பாய்!  எனக்கு அதில் சந்தேகமே இல்லை.  அர்ஜுனன் ஒரு நல்ல, விசுவாசமுள்ள, அர்ப்பணிப்பு உணர்வுள்ள கணவனாய்த் திகழ்வான்.  நீ அவன் அருகில் இருப்பதன் மூலம் அவன் வாழ்க்கையில் வெற்றி பெற்று மிகச் சிறந்ததொரு உன்னதமான இடத்துக்கு வருவான்.  அவன் இங்கேயே உன் தந்தையுடன் வாழலாம், அல்லது கிருஷ்ண வாசுதேவனுடன் செல்லலாம்.  அவன் எங்கிருந்தாலும் ஒரு நல்ல கணவனாக, ஒரு திறமையான போர் வீரனாக, நேர்மையான மனிதனாக வாழ்வான்.”

“ஆனால் ஒன்றை நினைவில் கொள், மகளே!  இதன் மூலம் அவன் தன் மற்ற சகோதரர்களோடு சேர்ந்து எடுத்திருக்கும் உறுதிமொழியை உடைத்தாக வேண்டும்.  வாழ்நாள் முழுவதும் தாயின் விருப்பங்களை நிறைவேற்றுகிறேன் என சகோதரர்கள் ஐவரும் எடுத்திருக்கும் உறுதிமொழியில் இருந்து அவன் மட்டும் தனியாக விலகி வந்தாக வேண்டும்.  திரௌபதி, உனக்குக் குந்தியைப் பற்றி அதிகம் தெரியாது.  நீ அறிய மாட்டாய்!”  சற்றே நிறுத்திய வியாசர் குந்தியின் பக்கம் திரும்பினார்.


பின்னர் கனிவோடு அவளைப் பார்த்துக் கொண்டே, “ இவளைப் போன்றதொரு அற்புதமான தாய் கிடைப்பது அரிது.  இவ்வுலகிலேயே இவளைப் போன்றதொரு தாயைக் காண முடியாது.  தன் ஐந்து மகன்களுக்காக மட்டுமே அவள் வாழ்கிறாள்.  தன்னுடைய அன்பெனும் பாசக் கயிற்றால் ஐந்து சகோதரர்களையும் பிணைத்திருக்கிறாள்.  அவளுடைய விருப்பத்திலிருந்து விலகுவதன் மூலம் அர்ஜுனன் இந்த அழகான ஒற்றுமையான பிணைப்பைக் குலைத்துவிடுவான்.  அது மட்டுமல்ல மகளே, இவர்கள் ஐவரும் ஒன்றாக இருந்தால் தான் துரியோதனனின் கொடுங்கோன்மையை வெல்ல முடியும். பிரிந்து விட்டார்களானால் இவர்களால் அவனை எதிர்கொள்ள முடியாது.  இது நாள் வரை அப்படித் தான் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். துரியோதனனை எதிர்கொள்ளவில்லை எனில், இவர்களால் தங்கள் பரம்பரை ஆட்சியைப் பெற முடியாது.  என்பதோடு சக்கரவர்த்தியாகவும் ஆக முடியாது.  இவர்கள் ஒற்றுமையாக இணைந்திருந்தால் என்றேனும் ஓர் நாள் பரம்பரை ஆட்சியைப் பிடித்து அதன் மூலம் மாபெரும் சக்கரவர்த்தியாக ஆவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அதற்கு அவர்கள் ஒற்றுமை தேவை!”

“இவர்களைப் பிரிந்து வாழ்வதன் மூலம் அர்ஜுனன் தன் வாழ்நாள் முழுதும் ஆற்ற முடியாத மனக் காயத்தோடு தான் வாழ்ந்து வருவான்.  வெளியே தெரியாவிட்டாலும் உள்ளூரப் புழுங்கி மனம் வெந்து துடிப்பான். உனக்காக, உன்னை மனைவியாக அடைவதற்காகத் தன் சகோதரர்களுக்கும், தன்னைப்பெற்ற தாய்க்கும் உண்மையாக நடந்து கொள்ள முடியவில்லையே என வேதனைப் படுவான்.  நீ அவன் ஒருவனோடு கட்டாயமாய் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை நடத்துவாய்.  ஆனால் அவன் மனதுக்குள்ளே சொல்ல முடியாத துக்கத்தால் மனம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும்.  உடைந்த மனதோடு தான் உன்னுடன் வாழ்க்கை நடத்துவான்.  ஒன்றை நினைவில் கொள், திரௌபதி, எந்த மனிதனுக்கும் தன் மனைவி தன்னைத் தன் பெற்றோர், சகோதரர்களிடமிருந்து தனியே பிரித்துக் கூட்டி வந்தால் அந்த மனைவியிடம் சொல்லொணா வெறுப்பு ஏற்படும்.”

அனைவரும் இதை மிகுந்த கவனத்துடன் கேட்டு வந்தனர்.  யஜரும், உபயஜரும் வியாசர் சொல்வதை எல்லாம் அவ்வப்போது ஆமோதித்ததோடு அல்லாமல், தங்களுக்குள்ளாக, “சாது, சாது” என முணுமுணுத்துக் கொண்டனர்.  தன்னுடைய கண்ணீரை அடக்க முடியாத திரௌபதி தொடர்ந்த விம்மல்களை எப்பாடுபட்டேனும் அடக்க எண்ணினாள்.  விம்மல்களை அடக்கிய வண்ணம் ஆசாரியர் வியாசர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.  வியாசர் மேலும் பேச ஆரம்பித்தார்.

“இப்போது நாம் இரண்டாம் வழியைக் குறித்து ஆராய்வோம்.  இப்படிப்பட்டதொரு பேராபத்தை நீயாக விலைக்கு வாங்கவில்லை.  அதை இங்கே அனைவரும் அறிவோம்.  இதைக் குறித்து உனக்கோ, உன் தந்தைக்கோ, உன் சகோதரனுக்கோ மாறுபட்ட எண்ணம் இருந்தால், இது சரியில்லை என்னும் வலுவான கருத்து இருந்தால், அந்த நிமிடமே அர்ஜுனனை மறுத்துவிடு.  இது தான் தைரியமான அதே சமயம் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.  ஆனால் இங்கே வேறொரு உறுதிமொழி உடைக்கப்படும்;  அது தான் உன் தந்தை கொடுத்த உறுதிமொழி. சுயம்வரத்தில் வில் வித்தைப் போட்டியில் வெல்பவனுக்குத் தன் மகளைக் கொடுப்பேன் என அனைத்து அரசர்களுக்கும் முன்னால் உன் தந்தை அளித்த வாக்குறுதியைப் பொய்யாக்கியாக வேண்டும். "


 இது அனைத்து அரசர், பேரரசர்களுக்கு நடுவே உன் தந்தை அடையும் மிகப் பெரிய அவமானமாக இருக்கும்.  உன் தந்தையின் வாழ்நாள் நோக்கம் துரோணரை வெல்வது.  அதை வெறுத்து ஒதுக்கவேண்டி இருக்கும்.  அர்ஜுனனும், மற்ற சகோதர்களுமே சகஜமான  வாழ்க்கைப் பாதையில் இருந்து விலகி விடுவார்கள்.  உன்னால் ஒதுக்கப்பட்டது அவர்களுக்கும் அவமானமான ஒன்றே. இனி நேர்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்வது எப்படி? அதோடு இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை எதிர்த்துப் போராட உன் தந்தையின் உதவியும் கிட்டாது.   துரியோதனன் மிகச் சுலபமாக இவர்களை எதிர்கொண்டு இம்முறை நிச்சயம் அழித்துவிடுவான்.  பின்னர் உனக்கு நடக்கப் போவது என்ன? சுயம்வரத்தின் மூலம் நீ தெய்வீகத் தன்மை வாய்ந்தவளாக இருப்பாய் தான்.  ஆனால் துராசை வசப்பட்ட மன்னர்களுக்கோ? நீ ஒரு மறுக்கப்பட்ட மணமகளாக  இருப்பதோடு அல்லாமல், வெகு சிலரே உன்னை வெல்ல ஆசைப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.  ஒருமுறை உன்னை மறுத்துவிட்டதால் மற்ற மன்னர்கள் உன்னை மீண்டும் வென்று ஏற்க மிகவும் யோசிப்பார்கள்.”


4 comments:

ஸ்ரீராம். said...

வியாசர் திரௌபதியிடம் உண்மை நிலையை எடுத்துரைப்பதுபோல லேசாக மிரட்டுகிறார். மறைமுகமாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்!

திண்டுக்கல் தனபாலன் said...

சமாளிப்பு...?!!!

sambasivam6geetha said...

அதெல்லாம் இல்லை ஶ்ரீராம், வியாசருக்கு திரௌபதியின் முன் பிறவியும், அவள் வாங்கி வந்த வரமும் தெரியும். மிரட்டவெல்லாம் இல்லை. அவளை வற்புறுத்தவும் இல்லை. சாதக, பாதகங்களை அலசுகிறார்.

sambasivam6geetha said...

இல்லை டிடி, இது இப்படித் தான் நடக்கும் என்பது வியாசர் அறிந்ததே! :)