Saturday, January 23, 2016

ஊரி சொல்லப் போகும் செய்தி!

மெல்ல மெல்ல இரவு கழிந்து விடிவெள்ளி தெரிய ஆரம்பித்தது. சற்று நேரத்தில் விடியப் போவதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. பறவைகள் விதவிதமான கூச்சலிட்டன. சிர்ப், கீகீகீ, குக்கும், கும், என்றெல்லாம் சப்தங்கள் வர ஆரம்பித்தன. கண்ணன் மற்றொரு நாளை ஆவலுடன் வரவேற்றான். சூரியன் உதிக்கும் சமயம் மரத்திலிருந்து கீழே இறங்கினான் கண்ணன். காட்டில் அப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. அவன் சென்ற, செல்லப் போகும் பாதையை ஒட்டி இருந்த ஒரு சின்ன ஓடையில் குளித்துக் காலைக் கடன்களையும் நித்திய அனுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டான். பின்னர் தான் துவாரகையில் இருந்து கொண்டு வந்திருந்த உணவில் சிறிது எடுத்துத் தன் பசியை ஆற்றிக் கொண்டான். அங்கிருந்த மரங்களில் பழுத்திருந்த பழங்களும் கண்ணனின் பசிக்கு உதவியது. பின்னர் அங்கே தெரிந்த கரடியின் காலடித் தடத்தைப் பின் தொடர்ந்து செல்லலாம் எனத் தீர்மானித்தான். சற்று தூரம் சென்றதும் அந்தப்பாதையோடு ஓர் விளையாட்டுத் திடலுக்குச் செல்லும் பாதையும் இணைந்து வந்தது.

அந்தப் பாதையைக் கூர்ந்து கவனித்த கிருஷ்ணன் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. அங்கே ஒரு ஆணின் காலடித் தடமும், ஓர் பெண்ணின் காலடித் தடமும் தெரிந்தது. சற்றுத் தூரம் அந்தப் பாதையில் போய்ப் பின்னர் அங்கே இருந்த முக்கியப் பாதையில் அந்தக் காலடித் தடங்கள் தொடர்ந்தன. அந்தக் காலடித் தடங்கள் சத்யபாமாவுடையதும், சாத்யகியுடையதுமாக இருக்கக் கூடும் என்று கண்ணன் நம்பினான். ஆகவே இந்தப் பாதைதான் அந்தப் புனிதமான குகைக்குச் செல்லும் பாதையாகவும் இருக்கக் கூடும். இன்னும் கொஞ்சம் மேலே சென்றான் கிருஷ்ணன். சற்றுத் தூரத்தில் ஒரு ஓநாயின் ஆங்காரமான குரலும், ஒரு பூனையின் மியாவ், மியாவ் என்னும் மெல்லிய குரலும் கேட்டது. வேகமாகக் கிருஷ்ணன் அந்த இடம் நோக்கிச் சென்றான். அங்கே ஒரு பூனை தன் சின்னஞ்சிறிய குட்டியை வாயில் கவ்விக் கொண்டு ஓர் மரத்தின் மேல் ஏற முயன்று கொண்டிருந்தது. அந்த ஓநாயின் முகம் அங்கே மரத்தின் அடியில் இருந்த ஓர் பள்ளத்தில் புதைந்து போயிருந்தது. அந்தப் பள்ளத்தில் மற்றக் குட்டிகள் இருக்க வேண்டும். ஓநாய் அதைப் பட்சணம் செய்யப் பார்க்கிறது. கிருஷ்ணன் நினைத்தது சரியே! அந்தப் பள்ளத்திலிருந்து சின்னஞ்சிறிய மியூவ் சப்தம் மிகவும் பலவீனமான குரலில் கேட்டது. ஆஹா, குட்டிகளுக்கு ஆபத்து!

அந்த ஓநாய் பள்ளத்திலிருந்து தன் முகத்தை வெளியே எடுத்தபோது அதன் வாயில் ஒரு பூனைக்குட்டியைக் கவ்விக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் விரைவாக ஓர் அம்பை எடுத்து அதன் மேல் விட்டான். ஓநாய் தப்பி ஓடப் பார்த்துவிட்டுப் பின்னர் செத்து விழுந்தது. ஆனால் குட்டி பிழைக்கவில்லை. கிருஷ்ணன் மன வருத்தத்தோடு அந்த ஓநாயின் அருகே சென்றான். அதன் வாயிலிருந்து குட்டி கீழே விழுந்திருந்தது. ஓநாய் செத்துவிட்டதை உறுதிப் படுத்திக் கொண்டு அதன் உடலில் இருந்து அம்புகளை எடுத்து அங்கே கீழே கிடந்த இலைகளை வைத்து அந்த அம்புகளைத் துடைத்துச் சுத்தம் செய்தான். மீண்டும் அந்தப் பள்ளத்தைப் பார்த்தான் கிருஷ்ணன். அங்கே இன்னொரு குட்டி உடல் முழுவதும் காயங்களோடு முக்கி, முனகிக் கொண்டு இருந்தது. அதன் உடலிலும் ஓநாய் தன் பற்களால் கடித்துக் குதறி இருந்தது. அதுவும் இறக்கும் நிலையில் இருந்தது. கிருஷ்ணன் மனம் மிக வருந்தியது. பின்னர் கிருஷ்ணன் அந்தப் பூனையை நோக்கித் திரும்பினான். அது ஆபத்து தன்னை விட்டு விலகுவதற்காகக் காத்துக் கொண்டு இருந்ததைக் கவனித்தான். “வா, வா, உனக்கு இப்போது ஆபத்து ஏதுமில்லை!” என்று அதைத் தன்னிடம் அழைத்தான். பின்னர் கிருஷ்ணன் தன் பிரயாணத்தைத் தொடங்கலாம் என நினைத்தான். அதற்குள்ளாக அந்தப்பூனை மரத்திலிருந்து இறங்கிக் கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டே தன் வாயில் இருந்த குட்டியை அவன் காலடியில் வைத்தது. அவன் உடலின் மேல் தன் உடலை உரசிக் கொண்டு சந்தோஷமாய்க் கூச்சலிட்டது. கிருஷ்ணன் அதிசயத்துடன் குனிந்து பார்த்தான். அவனுக்கு அதிர்ச்சி!

“ஆஹா, நீ அந்தப்பொல்லாத ஊரிப் பூனை அன்றோ! பாமாவின் தோழி இல்லையா?” என்றான். “இங்கே எப்படி வந்தாய் நீ?” என்று அதனிடம் கேட்டான். ஊரி இங்கே இருக்கிறாள் எனில் கட்டாயம் அவள் யஜமானி சத்யபாமாவும் இங்கே தான் இருப்பாள். அதே போல் தான் நடந்திருக்கிறது. ஊரி தன் யஜமானியைத் தொடர்ந்து வந்தாள். ஆனால் இந்த இடம் வந்ததும் யஜமானியைப் பிரிந்து விட்டாள். ஊரிக்குப் பிரசவ நேரம் நெருங்கி விட்டது. ஆகவே இந்த மரத்தடியைத் தன் பிரசவத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அங்கே இலைகளையும், தழைகளையும் பரப்பி மெத்தை போல் ஆக்கிக் கொண்டு அங்கே தன் குழந்தைகளை வெளிக்கொணர்ந்தாள். கிருஷ்ணன் ஊரியைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அணைத்துக் கொண்டான். அதைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான். ஒரு காலத்தில் அதன் உடல் எவ்வளவு சுத்தமாகவும், வெல்வெட் போன்ற மிருதுத் தன்மையுடனும் இருந்தது! இப்போது அதன் வெண்மை நிறம் அழுக்காகி மிருதுத் தன்மையும் நீங்கி இருந்தது. மனம் வருந்திய கிருஷ்ணன் மெல்ல அதைக் கீழே இறக்கி விட்டான். இறந்தவை போக மீதம் இருந்த ஒரே ஒரு குட்டியைக் கையில் எடுத்த கிருஷ்ணன் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அதையும் தடவிக் கொடுத்தான். அது இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. மெல்ல பலவீனமான குரலில் மியாவ் என்றது.

ஊரி சந்தோஷத்துடன் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றி வந்தது. சந்தோஷக் குரல் கொடுத்தது. ஊரியையும் அதன் குட்டியையும் ஓடைக்கு எடுத்துச் சென்ற கிருஷ்ணன் இரண்டையும் நன்றாக அழுக்கு நீங்கக் குளிப்பாட்டி விட்டான். பின்னர் தன் மதிய நேர அனுஷ்டானங்களைச் செய்தான். அவன் அதைச் செய்யும்போதே அந்த ஓடையில் இருந்த ஒரு மீனைப் பிடித்து உண்ட ஊரி தன் உணவை முடித்துக் கொண்டது. பின்னர் தன் ஒரே ஒரு குட்டிக்குப் பாலைக் கொடுத்த வண்ணம் அங்கிருந்த புல் தரையில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டது. பசி தீர்ந்த குட்டியும் விரைவில் தூங்கிப் போனது. கிருஷ்ணன் பின்னர் தன் வழியில் போக ஆயத்தம் ஆனான். அந்தக் குறுகிய வழிக்கு மீண்டும் சென்றான். ஆனால் ஊரி அவனை மேலே நடக்கவிடவில்லை. பெரும் குரல் எடுத்துக் கத்திய வண்ணம் அவனிடம் ஏதோ செய்தியைச் சொன்னது. அவன் நடக்கும் பாதையில் வழியை மறித்துக் கொண்டு நின்றது. அவன் கால்களுக்கிடையே புகுந்து கொண்டு அவனை நடக்கவிடாமல் செய்தது. மியாவ், மியாவ் என்று பெரும் குரலில் கத்தியது.

2 comments:

ஸ்ரீராம். said...

ஆஹா.... பூனை எனும் சஹாயள்!

Pulari [புலரி] said...

Unggalathu Kannan Varuvaan Kathai Solluvaan Pagam 1 enge theduvathu?