Friday, January 8, 2016

பாமாவின் பிரியாவிடை!

கண்ணனுடன் ஹஸ்தினாபுரம் சென்றிருந்த அதிரதர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கலந்தாலோசனை செய்வதாகத் தகவல்கள் கசிந்தன. அவர்கள் அனைவருக்கும் சத்ராஜித் தலைமைப் பதவியை அடைய ரகசியமாகச் சூழ்ச்சிகளும், சதிவேலையும் செய்கிறான் என்னும் சந்தேகம் இருந்தது. இவை எல்லாம் சத்யபாமாவின் காதுகளை அரண்மனை ஊழியர்கள் வழியாகவும், உறவினர் மூலமாகவும் எட்டின. அவள் மனம் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்தது. தன் சகோதரன் பங்ககராவை அழைத்து அவன் பக்கத்து நியாயத்தைச் சொல்லும்படி கேட்டாள். அவள் தந்தை சொல்வதை ஆங்காங்கே ஆமோதித்தாலும் மொத்தத்தில் பங்ககராவின் வர்ணனை கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தது. பங்ககரா சொன்னது என்னவெனில்: பெரியோர்கள் எவருக்கும் கிருஷ்ணன் மேல் திருட்டுக் குற்றம் சுமத்தியதில் நம்பிக்கை இல்லை. அவர்கள் அதைத் துளியும் நம்பவில்லை. இவ்வளவு தீவிரக் குற்றம் சுமத்திய பின்னரும் உக்ரசேன மஹாராஜா கிருஷ்ணனிடம் தனி அபிமானத்தைக் காட்டிய வண்ணம் இருந்தார். சாதாரணமாக எப்போதும் ப்ருஹத்பாலனையே தான் நடக்கையில் உதவிக்கு அழைத்துச் செல்லும் அவர் இன்று வித்தியாசமாகக் கிருஷ்ணனின் தோள்களைப் பற்றிக் கொண்டு அவன் உதவியோடு தாழ்வரைக்கு வந்தார். இதன் மூலம் கிருஷ்ணன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தான் அடியோடு நம்பவில்லை என்பதை அவர் நிரூபித்தார் என்பது பங்ககராவின் எண்ணம்.

சாத்யகரோ தன் வழக்கம்போல் அழுத்தம் திருத்தமாகவும் அப்பட்டமாகவும் பேசினார். அவர் அனைவரிடமும் சத்ராஜித் கிருஷ்ணன் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களே இல்லை எனவும், தவறான குற்றச்சாட்டு எனவும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். அதோடு இல்லாமல் கிருஷ்ணன் போட்ட சபதங்களால் மக்கள் மனம் எவ்வளவு இளகி அவன் பால் திரும்பியது என்பதையும் பங்ககரா எடுத்துரைத்தான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமாவின் மனக்கண்ணில் கிருஷ்ணன் தன்னைத் தானே எரித்துக் கொள்ளுவது போன்ற கோரமான காட்சி தோன்றியது. அந்தக் கண்கள்! கிருஷ்ணனின் கண்கள் பேசும் கண்கள்! மனதின் அன்பையும், பாசத்தையும் கண்கள் வழியாகவே காட்டுவானே! அவன் கண்களே சிரிக்குமே! அவற்றை இனி பார்க்க முடியாதவாறு நிரந்தரமாக மூடிவிடுமோ? பாமா மனம் துடித்தாள். அவன் முகம் மட்டும் என்ன?

எப்போதும் நிரந்தரமாக அப்போது தான் பூத்த தாமரை போல ஒரு சிரிப்பு அவன் முகத்தில் இருக்கும். அதைப் பார்க்கையிலேயே பார்ப்பவர்கள் மனமும் ஆனந்திக்கும். பாமாவின் மனமோ ஆனந்தத்தில் துள்ளிக் கூத்தாடும். அந்த அழகிய முகம் அப்படியே எரிந்து போய் முகமூடி போட்டாற்போல் உறைந்து எவ்விதமான உணர்வுகளும் இல்லாமல் போய்விடுமே! அவனுடைய அழகிய கட்டான உடல் அமைப்பு, மெல்லிய உடலாக இருந்தாலும் அதில் எஃகைப் போன்ற உறுதி இருக்கும் என அனைவரும் சொல்கின்றனர். நீண்ட மெல்லிய கரங்கள், உறுதியான நீளமான விரல்கள், மெல்லிய ஆனால் உறுதியான நீண்ட கால்கள், அதில் குவிந்திருக்கும் அல்லி மொட்டுப் போன்ற பாதங்கள்! அவனுடைய மாறா இளமை!கம்பீரம்! ஆஹா! இத்தனையும் அவன் தன்னைத் தானே எரித்துக் கொள்வதால் நிரந்தரமாக ஒரு கட்டையைப் போல் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமே! ஹே! சர்வேஸ்வரா! தேவி, பரமேஸ்வரி!

துவாரகையின் ஒவ்வொரு மக்களுக்கும் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் முக்கியமாக தேவகி அம்மா, ருக்மிணி, ஷாய்ப்யா, சுபத்ரா, என அனைவர் நெஞ்சிலும் கிருஷ்ணனின் இந்த முடிவு பெருமளவில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கும். அனைவரும் பயத்தில் விதிர்விதிர்த்துப் போயிருப்பார்கள். ச்யமந்தகம் கிடைத்துவிட வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைத்துவிடுமா?அவள் தந்தை அவ்வளவு முட்டாள் இல்லை! ச்யமந்தகம் விரைவில் கிடைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் இதற்கு முன்னரே செய்து முடித்திருப்பார். ச்யமந்தகத்தை அவர் விருப்பம் இல்லாமலோ அல்லது அவருக்குத் தெரியாமலோ எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் கிருஷ்ணனால் முடியுமா? தந்தை நிச்சயமாக ச்யமந்தகத்தை சித்தப்பா ப்ரசேனரிடம் தான் கொடுத்து மறைவாக வைக்கச் சொல்லி அனுப்பி இருக்க வேண்டும். அதிலும் தந்தை மாதா மாதம் வழிபாடு நடத்தச் செல்லும் காட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அங்கே சென்று ச்யமந்தகத்தை எவருக்கும் தெரியாமல் வழிபட்டு எப்போதும் செய்வது போல்  சூரிய பகவானைத் திருப்தி செய்து மீண்டும் தங்கத்தைப் பெற்றும் வரலாம். அவளால் இதை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. சுட்டு விரலைக்கூட உயர்த்தி தந்தையை “நீர் தான் திருடர்” என்று சொல்ல முடியவில்லை. அவள் இரவும், பகலும் விழித்திருக்கையிலும், தூங்கும்போதும் தன்னுடைய பிரபுவாக தன்னுடைய நாயகனாக, மணாளனாகக் கனவு காணும் கிருஷ்ணனை இந்தப் பேராபத்திலிருந்து அவளால் காப்பாற்ற முடியவில்லை! அவளைப் போன்ற துரதிர்ஷ்டக்காரியும் உண்டோ!

துயரத்தில் வெதும்பிக் கொண்டிருந்த பாமாவுக்கு அப்போது ஆறுதலை அளிக்கும் செய்தி ஏதேனும் கிடைக்காதா என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவள் செவிலித்தாயான முகி சுபத்ராவைப் பார்க்கச் சென்றவள் பாமாவின் மனம் மேலும் வருந்தும் வண்ணம் ஓர் செய்தியைக் கொண்டு வந்திருந்தாள். அவளை சுபத்ரா சொன்னதை அப்படியே ஒரு வார்த்தை பிசகாமல் சொல்லச் சொன்னாள் பாமா! அவள் சொன்னது இது தான்! “ என் சகோதரனைத் திருடன் என வாய் கூசாமல் பொய்ப்பழி சுமத்திய அந்த துஷ்டன் ஆன சத்ராஜித்தின் மகள் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. நான் அதை விரும்பவும் இல்லை.” இவ்வளவு தான் சுபத்ரா சொன்னவை. பாமா அனலில் இட்ட புழுப்போல் துடித்துப் போனாள். மாலை மங்கும் வரை காத்திருந்த பாமா கிருதவர்மாவின் வீட்டை நோக்கிச் சென்றாள். அங்கே சாத்யகி வந்திருந்தால் அவனுடன் பேசியாவது உள்ள நிலையைத் தெரிந்து கொள்ளலாம் என்னும் ஆவல் அவளுக்கு!

அவள் வீடே அவளுக்கு நரகத்தை விட மோசமாகத் தெரிந்தது. அவள் தந்தையை அவள் ஆழ் மனதிலிருந்து வெறுத்தாள். இவ்வளவு மோசமானவரா தந்தை! ஒரு பொய்யர், சூழ்ச்சிக்காரர்! பொய்ப்பழி சுமத்துபவர்! ஹூம், அவருக்கு ஒத்துப்பாடும் சிற்றன்னைமார், தங்கைகள் மேலும் சகோதரர்கள். ஆனால் கொஞ்சம் ஆறுதலாக பங்ககரா தந்தை சொல்வதை முழுவதும் நம்பவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் பங்ககரா ஒரு விசுவாசமான மகனாகத் தந்தை வார்த்தைக்கு மறுவார்த்தை பேச முடியாதவனாக இருந்தான். கிருஷ்ணனுக்கு ஆதரவாக அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அவள் நினைத்திருந்தால் கிருஷ்ணனைக் காப்பாற்றி இருக்கலாம்; ஆனால் அவளும் ஒரு கோழையாக இருந்துவிட்டாள்!

சாத்யகியிடம் பேசிய பின்னர் வீட்டுக்குத் திரும்பிய சத்யபாமா அவள் இறுதி முடிவு எடுக்கும் முன்னர் தன் அருமைப் பிரபுவான கண்ணனைப் பார்த்து இறுதி விடை பெற விரும்பினாள். அவள் கண்கள் கண்ணீரை மழையாகப்பொழிந்தன. விம்மல்கள் தொண்டையை அடைத்துக் கொண்டன. அதை அடக்கிக் கொண்டு அவள் இறுதி விடை பெறும் அந்த கீதத்தைப் பாடினாள். நடுநடுவே விம்மல்கள் தடுத்தாலும் அவளால் பாடாமல் இருக்கமுடியவில்லை. அவள் மனதின் ஆழத்திலிருந்த சோகம் அனைத்தும் தொனிக்க அந்தப்பாடலைப்பாடிய அவள், அவளையும் அறியாமலேயே புதிதாகப் பல வரிகளைச் சேர்த்துப் பண் அமைத்துப் பாடிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் இப்போது இருக்கும் நிலைமையில் அவன் மனைவியாகத் தன்னை நினைத்துக் கொண்டு ஒரு க்ஷத்திரிய வீரனின் மனைவி அவள் கணவனை விட்டுப் பிரியும்போது என்ன என்ன வார்த்தைகளை எல்லாம் கூறுவாள் என்பது இயல்பாக அவள் மனதின் ஆழத்திலிருந்து வந்தன. அந்த வரிகள் அவள் மனதிலேயே மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வந்து எதிரொலித்துக் கொண்டிருந்தன.

அன்றிரவு படுக்கப் போகும் முன்னர் பாமா தன் செவிலித்தாயை அழைத்தாள்.. அவளைப் பார்த்தாள்! அவளும் தான் வளர்த்த குழந்தையான பாமாவின் துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்தாள். பாமா முகியைப் பார்த்து, “முகி, உடனே சுபத்ராவிடம் செல்வாய்! அவளிடம் என்னுடைய செய்தியை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் சொல்! எந்த ஒரு வார்த்தையையும் மறந்துவிடாதே! அல்லது நீயாகச் சேர்க்காதே! மாற்றவும் மாற்றாதே! இதோ என் செய்தி!

அதற்குள் முகி சொன்னாள், “நான் அப்படியே சொல்கிறேன், குழந்தாய்!” என்று கூறிய வண்ணம் வாய் விட்டு அழுதாள்.

“முகி! சுபத்ராவிடம் சொல்! “ நீ சரியாகச் சொல்கிறாய் சுபத்ரா! நீ என்னை வந்து பார்க்கும்படி நான் அவ்வளவு தகுதியானவள் இல்லைதான்! ஆனாலும் நாம் இருவரும் கொண்டிருந்த இத்தனை வருட நட்புக்காக, நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இதை மட்டும் உன் சகோதரனிடம் சொல்வாய்! இந்த வரிகள் நீ எனக்குச் சொல்லிக் கொடுத்த பிரியாவிடைப்பாடலில் விடுபட்டுப் போன பகுதி!  உன் சகோதரனிடம் சொல்!

“அப்படி ஒரு வேளை, என் பிரபுவே, அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால்,
உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வண்ணம் தீண்டினால், ஆஹா, நீங்கள் எனக்கு மிகவும் அருமையானவர் பிரபுவே! அப்படிப்பட்ட உங்களை அக்னி தீண்டினால், உங்கள் நற்பெயர் களங்கம் அடைந்தால்! உங்கள் உயிரைவிட உங்களுக்கு உங்கள் நற்பெயரன்றோ மிகவும் அரிதானது! அதற்குக் களங்கம் விளைந்தால்!

அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே, நான் உங்களுக்கு முன்னரே அங்கே சென்றுவிடுவேன். என் உடலை அக்னி தீண்டும் வண்ணம் அதை வரவேற்பேன். உங்களுக்கு முன்னால் என்னை அக்னி தீண்டட்டும் என் பிரபுவே!

உங்கள் கண்ணெதிரே நான் ஓர் எரியும் தூணைப்போல் எரிந்து அரணாக உங்களைக் காப்பேன்! என்னை அக்னி முற்றிலும் எரித்துச் சாம்பலாக்கும்வரை அங்கேயே நிற்பேன்! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால் என் பிரபுவே!

என் உடல் எரிந்த நான் சாம்பல் ஆன பின்னராவது நீங்கள் அந்தச் சாம்பலை எடுத்து உங்கள் மார்போடு அணைப்பீர்களா? என் காதல் கனவுகளில் நீங்கள் என்னை அணைத்திருந்தீர்கள் என் பிரபுவே! இப்போது என் சாம்பலையாவது நீங்கள் அணைத்துக் கொள்வீர்களா!

என் பிரபுவே, என் சாம்பல் கூட உங்களை விடாமல் அழுந்தப் பற்றி அணைத்திருக்கும். இப்போது நான் அதைத் தான் செய்ய நினைத்திருந்தாலும், என் பிரபுவே, கொடிய விதி என்னை உங்களிடமிருந்து பிரித்திருக்கிறது! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே!

உங்களுக்கு முன்னால் நான் அங்கே நின்றிருப்பேன்!

இந்தச் செய்தியை சுபத்ராவுக்கு அனுப்பிய பாமா இரவு உணவுக்காக அனைவருடனும் சேர்ந்து உணவருந்தச் சென்றாள். இப்போதும் அவளால் உணவு உண்ண முடியவில்லை. உண்டதாகப் பெயர் பண்ணிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பினாள். ஆனால் தூங்கவில்லை. இரவு மெல்ல மெல்லக் கழிந்தது. நடு இரவு என்பதை அறிவுக்கும் மணி ஓசை ஒலித்தது. மாளிகையில் அனைவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பாமா மெல்லப் படுக்கையை விட்டு எழுந்தாள். தன் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டுச் சேடிப் பெண்ணின் உடை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். ஊரியைத் தூக்கிக் கொண்டாள். அது கத்தாமல் இருக்க அதன் வாயைத் தன் கரங்களால் பொத்தினாள். அப்படியே தாழ்வரைக்குச் சென்று அங்கிருந்து மைதானத்தின் இருளில் மறைந்தாள்.