Friday, July 1, 2016

மஹா அதர்வரிடம் மரணத்தை யாசிக்கும் த்வைபாயனர்!

தன்னுடைய ஆசிரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருந்த ஓர் குகையில் அமர்ந்து தியானம் செய்வதற்காக வந்திருந்த மஹா அதர்வர் தன்னைத் துணிகளால் போர்த்திய வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தார். தன்னுடைய வலிமையும் மன உறுதியும் தீர்க்கமான பார்வையும் காணாமல் போய்விட்டதோ என்று உணரும் தினங்களில் எல்லாம் அவர் இப்படி வந்து தவம் செய்ய அமர்வது உண்டு. பல வாரங்களாக அவர் ஓநாய்களின் சாம்ராஜ்யம் எனக் கருதப்பட்ட இடத்தில் நடைபெற்று வந்த விசித்திரமான சம்பவங்களில் ஆச்சரியம் அடைந்திருந்தார். தன்னுடைய தவ வலிமையால் அதைக் குறித்த உண்மையையும் முக்கியத்துவத்தையும் கண்டறிய விரும்பினார். வேட்டைக்காரர்கள் பலர் குழுக்களாக வந்து அங்கிருந்த ஓநாய்களையும் மற்ற துஷ்ட மிருகங்களையும் அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர காட்டிலேயே வாசம் செய்து காட்டை நிர்வகிக்கும் ஊழியர்களில் பலரும் அங்கே வந்து ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் புதர்களையும், தாறுமாறாக வளர்ந்திருக்கும் காட்டுக் கொடிகளையும்,  பாதை இல்லாமல் முளைத்துக்கிடக்கும் முட்செடிகளையும், மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்திப் பாதையை ஏற்படுத்தினர். முக்கியமாக ஐந்து ச்யமந்தக ஏரிகளைச் சுற்றியும் உள்ள இடங்கள் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டன.

அந்த ஆசிரமத்திற்கு அக்கம்பக்கம் உள்ள கிராமங்களிலிருந்து காட்டுவாசிகளிடமிருந்தும் பல மக்கள் வந்து தங்கள் வியாதிகளுக்கு மருந்து வாங்கிச் செல்வார்கள். தங்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து யது வித்யை என்னும் மந்திர சக்தி மூலம் பாதுகாப்புத் தேடி வருபவர்கள் பலர் இருந்தனர். கிரஹங்களின் சேர்க்கைகளால் மோசமாக அவதிப்பட்டவர்கள், குடும்பத்தில் சண்டை இருந்தால் அதைத் தீர்க்க வேண்டி வந்தவர்கள், அங்கிருந்த பழங்குடியினரின் சண்டைகள் எனப் பல விஷயங்கள் அந்த ஆசிரமத்தில் விவாதிக்கப் பட்டுத் தீர்வு காண முடிந்தது. அவர்களுடைய தேவைகளை எல்லாம் மஹா அதர்வரின் சீடர்களாலேயே நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் மஹா அக்னிக் குண்டத்துக்கு அருகே வந்து மஹா அதர்வரின் தரிசனமும் ஆசிகளும் பெற்றுச் செல்ல வருவார்கள். அவரைப் பார்த்தாலே கடவுள் அமர்ந்திருப்பது போல் தோன்றும். தவிர்க்க முடியாததொரு மாபெரும் சக்தி அவரிடம் இருப்பதை அனைவரும் உணர்வார்கள். அவருடைய அந்த சக்தியால் செத்தவன் உயிர் பிழைப்பான் என்றும் உயிருள்ளவன் சாவான் என்றும் அவர்கள் அறிந்து கொண்டிருந்தனர்.

சமீப காலமாக அந்தக் கிராமத்து மனிதர்கள் பல்வேறு விதமான வதந்திகளை அங்கே சொன்னார்கள். வியந்து சொன்னவர்கள் பலர்! கொஞ்சம் கூடப் பிடிக்காமல் சொன்னவர்கள் சிலர்! ஆனால் அனைவரும் ஒருமுகமாகச் சொன்னது என்னவெனில் இளம் துறவி ஒருவன் அனைத்து அதிசயங்களையும் நிகழ்த்தி வருகிறான் என்பதே! பல்வேறு விதமான சாதனைகளை அவன் எளிதாக நிறைவேற்றி வருவதாகவும் பேசிக் கொண்டனர். ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தி ஷாந்தனு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவனை ஒன்பது நாட்கள் மந்திர வித்தையில் இந்த இளம் முனிவன் பூரணமாய்க் குணப்படுத்தி விட்டானாம். யமனைக் கூட விரட்டி விட்டானாம். அந்த முனிவன் மரணத்தின் கடவுளான யமனை ஓட ஓட விரட்டி விட்டானாம். யமனை முறியடிக்கும் வல்லமை படைத்த அவன் யாரோ! அத்தோடு மட்டுமல்லாமல் ராஜரிகமான முடிவுகள் எடுக்கவும் நடைபெறவும் அவன் காரணமாக இருந்தானாம்.

ஆம், ஹஸ்தினாபுரத்தில் கூடிய ராஜசபையில் யுவராஜா காங்கேயன் தான் சபதங்கள் எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். அவர் ஹஸ்தினாபுரத்தின் அரியணையின் உரிமையும் வேண்டாம்; தன் சந்ததியினருக்கும் வேண்டாம் என்று சபதம் செய்திருக்கிறாராம். அதற்காக அவர் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையாம்! அவர் உயிருடன் இருக்கும் வரை ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் யார் வீற்றிருந்தாலும் அவர்கள் நன்மைக்காக மட்டுமே உழைப்பாராம். அவர் உடல், உயிர் இரண்டும் இனி ஹஸ்தினாபுரத்தின் மேன்மைக்காகவே தானாம். அது மட்டுமா? அவரின் சிற்றன்னை சத்யவதியின் மூத்த மகன் ஆன சித்திராங்கதனை யுவராஜா ஆக்குவதற்கு முழுச் சம்மதம் தெரிவித்து அவனும் அப்படியே யுவராஜாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறானாம். அதன் பின்னர் அந்த இளம் துறவி எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லையாம். ஒரு சிலர் அவன் விண்ணில் பறந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறுகின்றனர். உண்மையாக இருக்குமா?

மஹா அதர்வரின் சீடர்கள் இதை ஒரு சவாலாக, ம்ஹூம், அப்படியும் சொல்ல முடியாது! தெய்வக் குற்றமாகக் கருதினார்கள். அவர்களைப்பொறுத்தவரை மஹா அதர்வர் ஒருவரே வாழ்வுக்கும், சாவுக்கும் முழு முதல் தலைவர். அவர் ஒருவரால் மட்டுமே ஒருத்தரை வாழ வைக்கவும் முடியும். இறக்க வைக்கவும் முடியும். மஹா அதர்வரின் முக்கியச் சீடர்களாலும், அவரின் மகன் சுமாந்துவாலும் இந்த விஷயங்கள் அனைத்தும் அவர் காதுகளுக்கு எட்ட வைக்கப்பட்டன. அவரையே எப்போதும் கவனித்துக் கொண்டு அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக வளைய வரும் அவர் அருமை மகள் வாடிகாவும் இதை உறுதிப் படுத்தினாள். இவை வெறும் வதந்திகள் என்று தள்ளுவதற்கு மஹா அதர்வரால் முடியவில்லை. அவற்றிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள இயலவில்லை. அவர் இப்போது தன் முழு சக்தியையும் தவ வலிமையையும் பிரயோகப்படுத்தி அவர் விரும்பாத விதத்தில் மாற்றங்கள் ஓநாய்களின் சாம்ராஜ்யத்தில் ஏன் ஏற்பட்டு வருகிறது என்பதை அறிந்தாக வேண்டும். ஏன் இப்படி நடக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மர்மத்தை அவிழ்க்க அவர் நினைத்தபோது அனைத்து முயற்சிகளும் ஒரே ஒரு திசையை நோக்கியே பயணித்தன. அது தான் அந்த இளம் துறவி, இளைஞன், பிரமசாரி த்வைபாயனன் அவர் கண்காணிப்பிலிருந்து தப்பியவன், அவரால் மரணம் அடைந்திருக்க வேண்டியவன்! அவனையே அனைத்துத் தேடுதல்களும் சுட்டிக் காட்டின.

மஹா அதர்வரின் தியானம் கலைந்தது. ஏதோ குறுக்கிட்டாற்போல் உணர்ந்தார். அந்த ஆசிரமத்துக்கு வரும் மலைப்பாதையில் தன்னந்தனியாக ஓர் உருவம் மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்தது. அவர் புருவங்கள் நெரிந்தன. அது யாராக இருக்கும்? த்வைபாயனனா? இத்தனைக்கும் பிறகு த்வைபாயனன் தன்னுடைய வெற்றியைக் கொண்டாட வேண்டி இங்கே வந்து என்னை அவமதிக்கும் துணிகரமான செயலைச் செய்யப் போகிறானா? வரட்டும்! இம்முறை அவர் ஒருபோதும் தவறு செய்யப் போவதில்லை! அவன் ஆசிரமத்தினுள் நுழையட்டும். அவனுக்கு உடனே மரணம் சம்பவிக்கும்படியான வசிய ஆற்றலை முறைப்படி மந்திர உச்சாடனங்களோடு செய்து முடிக்கிறேன். அவன் இறந்துவிடுவான். அது தான் சரி. அவரால் மேலே தொடர்ந்து தன்னுடைய தவத்தைத் தொடர முடியவில்லை. இந்த இளம் துறவியோடு சரியான முறையில் உரையாடி அவனை மரணத்தின் பிடியினுள் தள்ளியாக வேண்டும். அவருக்குப் பொறுமை இல்லை! அவன் வரட்டும், சீக்கிரம் வரட்டும்!

அப்போது அவர் மகன் சுமாந்து அங்கே வந்து குகையின் வாயிலில் நின்றான். உள்ளே நுழைய அனுமதி கேட்டுக் காத்திருந்தான். மஹா அதர்வருக்குள் எரிச்சல் மூண்டது. அவர் தவம் செய்கையில் யாரும் வந்து தொந்திரவு செய்வதை விரும்பவே மாட்டார். மேலும் இப்போது மிக முக்கியமான தருணம். அவர் தம் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு அந்த இளைஞனை எதிர்கொள்ள வேண்டும். அவன் மேல் மரணத்துக்கான வசிய மந்திரப் பிரயோகத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்போது பார்த்து இடையூறு! எரிச்சலுடன் மகனைப் பார்த்தார்.

“என்ன வேண்டும் உனக்கு?” கடுமையாகக் கேட்டார். அப்போது சுமாந்து, “தந்தையே, த்வைபாயனன் திரும்பி விட்டான்!” என்று பணிவுடன் சொன்னான். தன் தந்தையின் கால்களில் விழுந்து வணங்கவும் செய்தான். “எனக்குத் தெரியும்! அந்த அற்பன் திருட்டுத்தனமாக எவரும் அறியாமல் இந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். அவனுக்கு நம் மூதாதையரான பழமை வாய்ந்த மூத்த ரிஷிகளின் சாபம் கிடைத்துள்ளது. பிருகுவின் சாபமும், ஆங்கிரஸின் சாபமும் அவனுக்குக் கிடைத்துவிட்டது! அவனை நான் பார்க்க விரும்பவில்லை! போகச் சொல் இங்கிருந்து!” என்றார். “இல்லை தந்தையே! அவன் உங்களிடம் ஓர் உதவி கேட்டு வந்திருப்பதாகச் சொல்கிறான்!” என்று சுமாந்து கூறினான்.

“என்னிடம் உதவியா? என்னிடமிருந்து அவனுக்கு ஒரே ஒரு உதவி தான்கிடைக்கும்!” என்று கூறிய மஹா அதர்வர் ஜாடையின் மூலம் அவன் மேல் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்ய இருப்பதை உணர்த்தினார். “நான் அவனிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன், தந்தையே! அவன் தங்கள் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டு விட்டான் என்பதையும் நீங்கள் அவனைப் பார்க்க விரும்ப மாட்டீர்கள் என்றும் சொல்லிவிட்டேன். அவனை போகவும் சொன்னேன்!” என்று சுமாந்து கூறினான். “அதற்கு அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டார் மஹா அதர்வர்!

“தந்தையே! அவன் சொல்வது மிக விசித்திரமாக இருக்கிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அவனை என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதையே அவனும் விரும்புகிறான். அவனுக்கும் அதுவே விருப்பமாம்! நீங்கள் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்து அவனை மெல்ல மெல்ல இறக்கும்படி செய்யலாம் என்று அவன் கூறுகிறான். அவனைப் போன்ற கீழ்ப்படியாத மாணவர்களுக்கு இது ஓர் பாடமாக இருக்கும் என்றும் சொல்கிறான்.” என்று சுமாந்து கூறினான். மஹா அதர்வரால் தன் காதுகளை நம்ப முடியவில்லை! “என்ன!” என்று அதிர்ந்து போனார். “அவன் மேல் நான் வசியப் பிரயோகம் செய்து அவனை இறக்க வைக்க அவன் ஒத்துக் கொள்கிறானா? உண்மையாக அவன் இதைத் தான் சொன்னானா? நீ உன் காதுகளால் இதைக் கேட்டாயா?”

“ஆம், தந்தையே! அவன் மேலும் சொன்னான். அவன் உங்கள் சீடனாம். ஆகவே தன் குருவின் ஆசை பூர்த்தியடைய வேண்டுமாம். குருவின் ஆசை பூர்த்தி அடையாமல் இருந்தால் அதை அவன் அனுமதிக்க மாட்டானாம். அவன் ஏதோ வேடிக்கைக்குச் சொல்கிறான் என்றே நினைத்தேன். ஆனால் அவன் உண்மையாகவே சொல்கிறான். மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறான்.”

1 comment:

ஸ்ரீராம். said...

வியக்கிறேன்.