Saturday, July 9, 2016

வாடிகாவின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!

மூன்றாவது ஏரியின் கரையோரத்தில் சரஸ்வதியின் வாய்க்கால் அகலமாகவும் ஆழமாகவும் பிரவாகம் எடுத்திருக்கும் இடத்தில் கரையோரமாக ஆசிரமம் அமைக்க முடிவாயிற்று. அங்கே புனிதமான அக்னி வளர்க்கப்பட்டு பூமி பூஜையும் முறைப்படி நடந்து முடிந்தது. மஹா அதர்வரும் அவருடைய சீடர்களும் பூமித்தாயை வழிபாடு செய்யும் அதர்வ வேத மந்திரங்களை ஓதினார்கள்.

“சத்தியமே என்றும் நிலைத்திருக்கும், உண்மையானதும் கூட!
ரிடா எனப்படும் விண்ணுலக ஒழுங்குமுறை தனக்குத் தானே கடுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. அது ஒரு மாபெரும் தவம்!
தன்னைத் தானே அறிதல் பிரம்மம் எனப்படுகிறது. இந்தப் புனிதமான வேள்விகளில் முதன்மை வகிக்கும் அனைத்துக் கடவுளராலும் பூமி தேவியை வழிபட்டுக் கொண்டாடுகிறார்கள். அவளுக்கு ஆதரவு தருகின்றனர்.
ஏ பூமித்தாயே!
என்றும் உள்ளதற்கும்,என்றும் இல்லாமல் போனதற்கும் துணையாய் இருப்பவளே!
எங்களுக்கு ஒரு மாபெரும் பகுதியை அன்பு கூர்ந்து கொடுப்பாய்!
ஏ, பூமித் தாயே! எங்களை ஒரு நல்ல இடத்தில் தங்கி இருந்து சேவை செய்ய அருள் புரிவாய்!
உன் நாயகனுடனும் விண்ணும், மண்ணும் சேர்ந்து ஒருங்கிணைத்து ஒத்துழைத்து என்றென்றும் நீடித்து இருக்க அருள் புரிவாய்!
ஏ, ஞானத்தின் நாயகியே! ஞான சரஸ்வதியே!
நாங்கள் எப்போதும் இங்கே முன்னேற்றம் கண்டு சந்தோஷத்துடன் வாழ அருள் புரிவாய்!

பூமியில் ஒரு பள்ளம் தோண்டி அது சுத்தம் செய்யப்பட்டது. இரண்டு சீடர்கள் உயிருள்ள ஓர் ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தனர். ஆமை அம்பிகையின் வாகனமாகக் கருதப்படும். இங்கே அது ஸ்திரத்தன்மைக்கு ஓர் சின்னமாகக் கருதப்பட்டது. பூமித் தாய் வரலாற்றுக்காலத்துக்கும் முந்தைய தொன்மையான புராதன காலத்தில் ஆமையின் முதுகில் அமர்ந்த வண்ணம் வந்ததாகச் சொல்லுவார்கள். மஹாவிஷ்ணு கூர்ம அவதாரத்தில் பூமியைத் தன் மேல் தாங்கி வருவார் அல்லவா! அதை நினைவுறுத்தும் வண்ணமாக ஆமையை அந்தப் பள்ளத்தில் வைத்தனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வாடிகாவின் நெஞ்சம் ஆனந்தத்தில் தத்தளித்தது. எல்லை மீறிய சந்தோஷத்தில் அவள் இருந்தாள். ஏனெனில் இது தான் அவள் இல்லமாகப் பரிணமிக்கப் போகிறது. வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக  அவளும் த்வைபாயனரும் சேர்ந்து உருவாக்கும் சந்ததிகள் இங்கே தான் தங்கி தங்கள் வாழ்க்கையை வாழ்வார்கள். பல தலைமுறைகளுக்கு இது நீடிக்கும். இந்த இடம் அனைத்துக் கடவுளராலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிகள் கிடைக்கும். இங்கே தான் பராசர முனிவரின் நினைவால் ஆசிரமம் ஏற்படப் போகிறது. மென்மையான அதே சமயம் ஸ்வரம் பிசகாமல் அனைத்துச் சீடர்களும் வேதங்களைக் கற்றுக் கொண்டு ஓதப் போகின்றனர்.

வாடிகா த்வைபாயனரின்  மனோ வசியத்தில் முழுக்க முழுக்க ஆழ்ந்து போனாள். த்வைபாயனர் அவளை அறியாதவர் போல் நடந்து கொள்ளவே இல்லை! மாறாகப் பல்லாண்டுகள், ஏன், ஜென்ம ஜென்மாந்திரத்துப் பந்தம் இருப்பது போலவே நடந்து கொண்டார். அவர் பேசும்போதெல்லாம் இனம் தெரியாத மகிழ்ச்சியை அடைந்தாள். அவருடைய சிறுபிள்ளைத் தனமான சிரிப்பு அவளை மிகக் கவர்ந்தது. அதன் மூலம் அவருடைய பாரம்பரியக் குடும்பப் பண்பு வெளியாயிற்று! விரைவில் அவருடைய படிப்பும், ஞானம் பரந்து பட்டது என்றும் எல்லையற்றது என்பதையும் கண்டு கொண்டாள். மூன்று வேதங்களையும் முற்றிலும் கற்றுத் தேர்ந்திருந்தார். அவற்றின் முக்கியமான சாராம்சங்கள் குறித்த ஞானம் அவரிடம் அதிகம் இருந்தது. சற்றும் ஸ்வரம் பிசகாமல் உச்சரிப்பு மாறாமல் அவர் வேதம் ஓதுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுத்தமாக இருந்தது. மேலும் அவருக்கு அதர்வ வேதமந்திரங்கள் பலவும் தெரிந்திருந்தன என்பதோடு மூலிகைகளைப் பயன்படுத்தும் விதமும் மூலிகைகளைப் பயன்படுத்துகையில் உச்சரிக்கும் மந்திரங்களும், உச்சரிக்கும் விதமும் நன்கு தெரிந்திருந்தது. அதன் மூலம் அவர் பல வியாதிகளைக் குணப்படுத்தினார். அதோடு இல்லாமல் விண்வெளியைக் கண்காணித்து கிரஹங்களின் போக்குவரத்தைக் கண்காணித்து அதன் மூலம் மக்களுக்கு வரக்கூடிய துன்பத்தைக் கண்டு பிடித்துக் குணமாக்குவதிலும் வல்லவராக இருந்தார்.

இத்தனை இருந்தும் அவளை ஆச்சரியப்படுத்தியது என்னவெனில் அவர் வாயிலிருந்து ஏதும் குறையோ, யாரைக் குறித்தும் புகாரான சொற்களோ ஏதும் வந்ததில்லை என்பதுவே! அனைவரையும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி வந்தார். யாரையும் எதற்கும் குறை கூறியதில்லை. விடிகாலையில் எழுந்தால் ஆசிரமத்துப் பெண்மணிகளோடு பால் கறக்கும்போது அங்கே கூட இருந்து வேண்டிய உதவிகளைச் செய்வார். அதன் பின்னர் மற்ற ஸ்ரோத்திரியர்களும், பிரமசாரிகளும் அங்கே உள்ள அக்னிகுண்டத்தில் அக்னி உண்டாக்குவதில் அவருடன் ஈடுபடுவார்கள். பின்னர் அவர் கண்டத்திலிருந்து எழுந்திருக்கும் ஓங்கார நாதத்தோடு ஆரம்பிக்கும் வேத கோஷத்தில் மற்றவர்களும் கலந்து கொண்டு அந்த இடத்தையே புனிதப்படுத்தும்.

அங்கிருந்த எவரையும் சுடுசொற்களால் கடுமையாகப் பேசியதே இல்லை! மாறாக யாரேனும் எப்போதேனும் தவறு செய்தால் அவர்களுக்கு அதைத் திருத்திக் கொள்ள உதவிகள் செய்வார். அதன் மூலம் அவர்கள் செய்த தவறை நினைத்து வெட்கமடைய வைத்தார். அவர்களை இன்னும் மேலும் கடுமையாக உழைக்கச் செய்தார். எவ்வளவு சோம்பேறிகளாக இருந்தாலும் அவர்களை மாற்றி அவர்களின் சோம்பேறித் தனத்துக்காக வெட்கம் கொள்ளச் செய்தார். மற்ற வயதான ஸ்ரோத்திரியர்களில் பலரும் பராசர முனிவரின் ஆசிரமத்தில் அவருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்ததால் அவருடைய கண்டிப்பான நடைமுறைகளையும், பாடங்களையும் அப்படியே சிறிதும் மாறாமல் கடைப்பிடித்தனர். விரைவில் பராசர முனிவரின் காலத்தில் இருந்த கண்டிப்பான ஒழுங்கான நடைமுறை அந்த ஆசிரமத்தில் பழக்கத்துக்கு வந்துவிட்டது. நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து வைத்தியம் செய்வதற்கு த்வைபாயனர் தயங்கியதும் இல்லை; மறந்ததும் இல்லை. தவறாமல் நோயாளிகளைக் கவனித்து அவர்கள் நோய்க்குத் தீர்வு கண்டதோடு தன் வழக்கப்படி சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உணவு கொடுத்து முடித்ததுமே தானும் உண்ணும் வழக்கத்தை மாற்றாமல் அப்படியே கடைப்பிடித்து வந்தார். அவருடைய உற்சாகமான ஊக்கமூட்டும் வார்த்தைகளாலும், இனிய அன்பான உபசரிப்பாலும் மகிழ்ச்சியான புன்னகையாலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். அங்கு நாளுக்கு நாள் கூட்டம் அலை மோதியது! அனைவரும் த்வைபாயனர் தங்களைத் தனியே கவனிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அவர்களின் திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய நாட்களில் வாடிகா த்வைபாயனரின் சாகசக் கதைகளைக் கேட்க நேர்ந்தது. ஷார்மி அவற்றைக் குறித்து விரிவாகச் சொல்லிக் கொண்டிருப்பாள். ஷார்மி பொதுவாகவே அதிகம் பேசும் சுபாவம் படைத்த பெண்மணி. இப்போது த்வைபாயனரின் சிறு வயது சாகசங்கள் அவளை மிகவும் கவர்ந்ததால் அதைக் குறித்து அதிகம் பேசி வந்தாள். நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தாள். த்வைபாயனர் சிறு வயதில் கல்பியில் இருந்தது; அங்கிருந்து பராசர முனிவருடன் வந்தது; அவளுடைய “ஆரிய புத்திரர்” ஆன கௌதம முனிவரின் உதவியுடன் பராசர முனிவர் த்வைபாயனருக்கு உபநயனம் செய்வித்தது. கௌதமரைக் குருவாக ஏற்று அவருடைய பயிற்சியில் பிரமசரிய விரதம் பூண்டது, என்றெல்லாம் எடுத்துக் கூறுவாள். அதோடு இல்லாமல் இந்த பால முனிவர் தினந்தோறும் ஆசிரமத்தில் காலை வேளையில் பால் கறக்கும் பெண்களுடன் இதமாகப் பேசி அவர்களுக்கு எப்படி எல்லாம் உதவுவார் என்பதையும், தன் கணவனுடைய பயிற்சியினாலேயே த்வைபாயனர் இத்தனை சிறந்து விளங்குவதாகவும் கூறுவாள். மேலும் பாங்கு முனி என்றும் நொண்டி முனி என்றும் அழைக்கப்பட்ட பராசர முனிவரின் இறந்த உடலை த்வைபாயனர் தனியே சுமந்து கொண்டு வந்து சேர்த்ததைக் கதை கதையாகக் கூறுவாள்.

எல்லாவற்றிலும் அவளுக்கு இன்னமும் வியப்பு ஊட்டும் விஷயம் ஒன்று உண்டென்றால் அது அவர்களுடைய நடமாடும் ஆசிரமம் ஹஸ்தினாபுரம் வழியாக தர்மக்ஷேத்திரத்துக்குப் பயணப்படும்போது ஹஸ்தினாபுரத்தில் தங்கியதும், அங்கே மஹாராணி சத்யவதியைப் பார்த்ததும் தான்! அவள் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒளிபொருந்திய நாட்களாக அவற்றை அவள் கருதினாள். ஒரு மஹாராணி அவள் இன்னமும் மஹாராணியாகப் பதவியில் இருக்கையிலேயே அவளைக் கண்டு பேசுவது என்பது எத்தனை பெரிய விஷயம்! ஷார்மிக்கு அது நடந்து விட்டது!

“ஓ,ஓ, அந்த மஹாராணியின் உடல் தான் எத்தனை மெல்லியது! மெல்லிய உடல்வாகைக் கொண்டிருந்தாலும் அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! அத்தனை அழகானவள்! மிகவும் பகட்டான பட்டாடைகளை உடுத்திக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் ஒரு சாம்ராஜ்யத்தின் மஹாராணி அல்லவா?” என்று சொன்னவள் மேலும் தொடர்ந்து, “நாங்கள் அங்கே தங்கி இருந்த நாட்களில் மஹாராணி தினமும் எங்களைக் காணவேண்டி அங்கே வருவாள். பிரதிபேஸ்வரர் கோயிலில் தான் நாங்கள் தங்கி இருந்தோம். அங்கே தினமும் வந்து தன் கையாலேயே பாலமுனிக்கும் என் கணவர் ஆர்யபுத்திரருக்கும் உணவு பரிமாறுவாள்!”

இம்மாதிரி விஷயங்களைக் கேட்கையில் வாடிகாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியாது. ஒன்றும் புரியாமல் வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொள்வாள். ஆனாலும் அவள் உள்மனம் இவற்றால் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனென்று தெரியவில்லை!  விரைவில் ஒரு நல்ல முஹூர்த்த நாளில் வாடிகாவுக்கும் த்வைபாயனருக்கும் திருமணம் நடந்தேறியது. ஆசாரிய கௌதமர் த்வைபாயனரின் தந்தை ஸ்தானத்தில் இருந்தபடியால் மஹா அதர்வர் தாரை வார்த்துக் கொடுத்த அவர் மகள் வாடிகாவை முறைப்படி பெற்றுக் கொண்டார். பின்னர் மணமகனும், மணமகளும் அக்னியைச் சுற்றி சப்தபதி வலம் வந்தனர். ஏழடி எடுத்து வைத்துத் தங்கள் உறவை உறுதி செய்து கொண்டார்கள். காதல் பரிமாற்றங்கள் நடந்தேறின. அதுவரை பிரமசாரிணியாக இருந்த வாடிகாவும் த்வைபாயனருக்கும் சேர்த்து மான் தோல்கள் பரிசளிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் மட்டும் தனித்திருக்கப் போகும் அந்த இரவை எதிர்நோக்கிய வாடிகாவின் மனதில் உள்ளூர அச்சமும் இருந்தது. ஏனெனில் ஆசிரமத்துப் பெண்மணிகளிடம் பேசித் தெரிந்து கொண்ட வகையில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியை முதல்முறை சந்திக்கும்போது மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்வார்களாம். கொஞ்சமும் மென்மையே இருக்காதாம். ஆகவே தன் கணவனும் தன்னைக் காயப்படுத்தி விட்டால் என்னும் அச்சம் அவளை விட்டுப்போகவில்லை. இந்த மாதிரி ஒரு மோசமான கொடூரமான நிலைமை தனக்கு ஏற்படுகையில் தன்னால் அதிலிருந்து மீண்டு வர முடியுமா? தன்னால் அதைத் தாங்க முடியுமா? ஒரு மனைவியாக த்வைபாயனரைத் தன்னால் சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா?

இரவும் வந்தது, இருவரும் தனித்தும் விடப்பட்டனர். வாடிகாவுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். ஏனெனில் த்வைபாயனர் நடந்து கொண்ட முறையே முற்றிலும் வேறாக இருந்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

//இத்தனை இருந்தும் அவளை ஆச்சரியப்படுத்தியது என்னவெனில் அவர் வாயிலிருந்து ஏதும் குறையோ, யாரைக் குறித்தும் புகாரான சொற்களோ ஏதும் வந்ததில்லை என்பதுவே!//

உயர்ந்த உள்ளம்.

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்..