Monday, October 24, 2016

கிரிவ்ரஜத்தில் அந்நியர்கள் வருகை!

மத்ராவை எரிக்கையில் தான் அவன் முன்னே ருத்ர பகவான் தோன்றினார். அவனுடைய அளவிலா பக்தியில் மனம் மகிழ்ந்தார். ஜராசந்தன் அவரிடம் தான் எப்போது இந்த பூவுலகுக்கே சக்கரவர்த்தியாக அரசாள முடியும் என்று கேட்டான். அதற்கு அவர் அவனை ஓர் யாகம் வளர்த்து நூறு அரசர்களை அதில் பலியிடும்படி கூறினார். அதன்படி தான் அவன் ஒவ்வொரு அரசனாகப் போரிட்டுச் சிறைப்பிடித்து அவர்களைத் தன் யாகத்தில் பலியிட்டு வருகிறான். இந்தச் சமயத்தில் தான் அவன் மத்ராவில் இருந்த அரச குடும்பத்தின் மல்யுத்த வீரர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களை அவன் கிரிவ்ரஜத்துக்கு வரவழைத்துப் பரவலான அதிகாரத்தை அளித்துத் தன்னை எதிர்ப்பவர்கள் இருந்தாலும் தன் பேச்சை மறுப்பவர்களையும் நசுக்கச் செய்தான்.  அவன் தன்னுடைய ருத்ர ஜபங்கள் அனைத்தையும் முடித்துக் கோண்டு தினந்தோறும் இந்த மல்லர்களுடன் மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபடுவதை ஓர் வழக்கமாக வைத்திருந்தான். அதையும் ஓர் சமயச் சடங்கைப் போலச் செய்து வந்தான்.

கிரிவ்ரஜக் கோட்டையில் அமைந்திருந்த ஈசனின் கோயில், ருத்ரன், சங்கரன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார். ஆலயம் ஓர் திறந்த வெளியில் அமைந்திருந்தது. ஜராசந்தா சிங்கத்தோலை அணிந்து கொண்டு அதன் முற்றத்தில் அமர்ந்து தன் வழிபாடுகளை நடத்துவான். அவனைப் பாதுகாக்க அங்கே வேலையில் இருக்கும் மல்லர்கள் இருப்பார்கள். ஜராசந்தன் உண்மையில் பார்க்கவும் பெரிய உடலோடும் நீளமான கைகள், கால்களோடும் காணப்படுவான். அவனுடைய வயதுக்கு அவன் பார்க்க இளமையோடும் திடகாத்திரமான உடலோடும் காணப்பட்டான். அவனுடைய தாடி நீளமாக வெண்மையாகப் பரவிப் படர்ந்திருந்தது. வலிமையான தோள்களோடும் இறுக்கமான தசைப்பிடிப்பான உடலோடும், அகன்ற மார்புடனும் காணப்பட்டான். அவன் கண்கள் நெருக்கமான வெண்மையான நரைத்த புருவத்தின் கீழ் காணப்பட்டன.

இப்போது ஜராசந்தன் என்ன செய்கிறான் என்பதைப் பார்ப்போம். தன்னுடைய இளைய பேரன் மேகசந்தியின் முகத்தையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். மேகசந்தி இளமையுடனும், வலுவான தேகத்துடனும் அழகாகவும் காணப்பட்டான். ஆனாலும் அவன் கொஞ்சம் பயத்துடனேயே ஜராசந்தன் எதிரில் காத்திருந்தான். எந்த நேரம் ஜராசந்தன் வெடித்துச் சிதறுவான் என்று காத்திருந்தான். ஜராசந்தன் கிரிவ்ரஜத்தின் பொறுப்பை முழுதும் மேகசந்தியிடம் கொடுத்திருந்தான். ஆகவே அவன் ஒருவன் மட்டுமே ஜராசந்தன் எதிரில் ஆயுதங்களைத் தரிக்கும் உரிமை பெற்றிருந்தான். இப்போது ஜராசந்தன் கடும் கோபத்தில் இருக்கிறான் என்று தெரிந்தது.

“முட்டாள்!” என்று கத்தினான் ஜராசந்தன் கோபத்துடன். அவன் குரல் ஓங்கி ஒலித்தது. “எப்படி நீ மூன்று அந்நியர்களை இந்த நகரத்துக்குள் வர அனுமதித்தாய்? யார் அவர்கள்? எப்படிப்பட்டவர்கள்?” என்று கேட்டான். “பிரபுவே!” என்ன தான் மேகசந்தி ஜராசந்தனின் பேரனாக இருந்தாலும் ஜராசந்தனுக்கு இப்படி மரியாதையுடன் அழைப்பதே பிடித்தமானது என்பதை மேகசந்தி அறிந்திருந்தான். “அவர்கள் மூன்று பேர்கள். ஒருவன் மிகப் பெரியவனாக பலவானாக, தேர்ந்த மல்யுத்த வீரனாகக் காணப்படுகிறான். அவன் மார்பு அகன்று விரிந்து காணப்படுகிறது. அவன் தோள்களிலிருந்து தொங்கும் கரங்களும் நீண்டு மிகவும் வலிமை பெற்றதாகத் தெரிகிறது. யானைத் துதிக்கையைப் போன்ற நீண்ட கரங்களைக் கொண்டிருக்கிறான்.”

“மற்ற இருவர்?” ஜராசந்தன் கேட்டான்.

“மற்ற இருவரும் சாமானியராகத் தெரிகின்றனர். அவர்களில் உயரமானவன் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் அவனும் வலிமையானவனே! மூன்றாமவன் மிக அழகான இளமை பொருந்திய முகத்துடனும் ஒளிவீசும் கண்களும் முகத்தில் எப்போதும் புன்னகையுடனும் காணப்படுகிறான்.”

“அவர்கள் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள்?”

“அவர்கள் ஸ்ரோத்திரியர்கள்  என்று அவர்களே சொன்னார்கள். இங்கே கிரிவ்ரஜத்தில் நீங்கள் இருப்பது தெரிந்து உங்களைச் சந்தித்து மரியாதை செலுத்தி விட்டுப் போக வந்திருக்கிறார்கள்.” என்றான் மேகசந்தி. மேகசந்திக்குத் தன் தாத்தாவுக்கு மட்டும் கோபம் வந்து விட்டால் அவர் கோபத்தைத் தணிக்க யாராக இருந்தாலும் கொல்லாமல் விடமாட்டார் என்பதை நன்கறிந்திருந்தான். எல்லாவற்றையும் விட மோசமானது என்னவெனில் இந்த யாகத்தில் நூறு அரசர்கள் என்ற கணக்கைச் சரிக்கட்டுவதற்காக மேகசந்தியின் தகப்பன் சகாதேவனும், மேகசந்தியின் சகோதரர்களையும் கூட ஜராசந்தன் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் அவனிடம் விசுவாசமாக இல்லை என்பது ஜராசந்தனின் கருத்து. ஆகவே இது நடக்கும் முன்னரே இங்கே கிருஷ்ண வாசுதேவன் வந்தாக வேண்டும். இதுவே மேகசந்தியின் விருப்பமாக இருந்தது.

“ம்ம்ம்ம்ம், அவர்களை மக்கள் கவனித்தார்களா? மக்களுக்கு இவர்களிடம் ஏதேனும் ஆர்வம் காணப்பட்டதா?”
“ஆம், ஐயா!” என்றான் மேகசந்தி.

“உனக்கு எப்படித் தெரியும்?”

“அவர்கள் பார்க்க விசித்திரமாகத் தெரிந்ததால் நான் என் நேரத்தை முழுதும் அவர்களுடன் செலவழித்தேன். அவர்கள் தங்கள் உடலில் சந்தனத்தை அரைத்துப் பூசி இருந்தார்கள், மலர் மாலைகளை அணிந்திருந்தார்கள். உள்ளே நுழையும் நுழை வாயிலில் நேரத்தை அறிவிக்க வைத்திருந்த இரு பேரிகைகளையும் அவர்கள் உடைத்து விட்டார்கள். அவர்கள் வீதிகளில் நடந்து வருகையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆண்களும், பெண்களும் வெளியே வந்து அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். நம்முடைய ஓர் அதிரதி அவர்களை இரவு உணவுக்குத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தான்.”

“நீயும் அந்த விருந்துக்குச் சென்றிருந்தாயா?”

“ஆமாம், இல்லை எனில் அவர்கள் ஏதேனும் சதி செய்தால்? தெரியாமல் போய்விடுமே!”

“என்ன நடந்தது? விருந்துக்குப் பின்னர்?”

“உணவு உண்டு முடித்ததும் அவர்கள் கிரிவ்ரஜத்தின் வாயிலருகே வந்தனர். குடியிருப்பின் அருகே போக நினைத்த போது அங்கே இருந்த மல்லர்களால் மேலே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர்.”

“அவர்களை உடனடியாக வெளியேறச் சொல்லி உத்தரவிடு! அவர்க்ள் அப்படிச் செய்யாமல் சொன்னதைக் கேட்கவில்லை எனில் கிரிவ்ரஜ மலையின் உச்சியிலிருந்து அவர்களைக் கீழே உருட்டி விட்டு விடு! அல்லது தூக்கி எறிந்து விடு!” கத்தினான் ஜராசந்தன். அப்போது மேகசந்தியுடன் அங்கே வந்திருந்த மல்லர்களில் ஒருவன் வாய் திறந்தான். “மஹாப்ரபு! அவர்களில் ஒருவன் மல் வித்தையில் சிறந்த பயிற்சி பெற்றவனாகத் தெரிகிறான், அவன் உடலமைப்பு அப்படிச் சொல்கிறது. அவன் என்ன சொன்னான் எனில் இங்குள்ள அனைத்து தெய்விக மல்லர்களுக்கும் கடவுளைப் போன்ற நீங்கள் உத்தரவு கொடுத்தால் இங்கே நடைபெறும் மல்யுத்தச் சடங்குகளில் உங்களுடன் பொருத அவனும் பங்கு பெறுவதாகச் சொல்கிறான்.” என்றான்.

ஜராசந்தன் புன்னகைத்தான்; அவன் எப்போதுமே அவனுடைய பிரியமான கடவுள் ருத்திரனுக்கு இப்படி ஓர் வழிபாட்டை நடத்துவதில் ஆவல் அதிகம். அதிலும் நான் மல்யுத்தத்தில் பிரபலமானவன் என்று சொல்லிக் கொண்டு வருபர்களோடு மோதித் தோற்கடித்து ருத்திரனுக்கு பலியாக்குவது ஜராசந்தனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த மனிதன் மட்டும் அவனருகே வந்து அவனைத் தொடட்டும். ஜராசந்தனின் வலிமையான கைகள் இரண்டும் அவன் தலையைப் பிடித்து மோது மோதி நசுக்கி அவனைக் கொன்று விடும். இந்த விஷயத்தில் மல்யுத்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளெல்லாம் ஜராசந்தனுக்கு முக்கியமல்ல. எதிராளியை அழிப்பது ஒன்றே அவனுக்கு முன்னர் தோன்றும். இப்போது அப்படி ஓர் சந்தர்ப்பம் தேடிக் கொண்டு வந்திருக்கிறது.

“நல்லது! மிக நல்லது!” என்றான் ஜராசந்தன். “அவர்களிடம் சொல்லி வை. அவர்களைக் கோட்டைக்குள் தங்க வைப்பதாகச் சொல்! நாளைக்காலை வரை அவர்கள் அங்கேயே தங்கட்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடு. நல்ல உணவு கொடு! நாளைக் காலை ருத்ரனுக்கு வழிபாடு முடிந்ததும் எனக்கும் அவனுக்குமான மல்யுத்தப் போட்டி நடைபெறும். ஆனால் ஒன்று! அவர்கள் மூவரிடமுமே சொல்லி வை இதை! அவர்கள் ஏதேனும் சூழ்ச்சி செய்தாலோ தந்திரமாக என்னை ஏமாற்ற நினைத்தாலோ அவர்கள் எலும்பை நொறுக்கி விடுவேன். அதற்கென உள்ள ஆலிங்கனத்தைச் செய்து உடல் எலும்புகளை நொறுங்கிப் போகும்படி செய்வேன். அவன் இறந்ததும் அவன் உடலை மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுவேன்.” என்றான் ஜராசந்தன்.

அப்போது கோட்டைக்கு வெளியே ஏதோ களேபரம் நடப்பதன் அறிகுறியாக சத்தமாக இருந்தது. யாரோ எதற்கோ சத்தம் போட, பதிலுக்கு சத்தம் கேட்க ஒரே குழப்பமாகப் பல்வேறு குரல்களில் த்வனி கேட்டது. அவனருகே அமர்ந்திருந்த மல்லர் தலைவனைத் திரும்பிப் பார்த்தான் ஜராசந்தன். “அங்கே என்ன சப்தம்? ஏன் இவ்வளவு கூக்குரல்கள்?” என்று கேட்டான். “அங்கே போய் விசாரித்து வா! அந்தப் புதிய மனிதர்கள் ஏதேனும் தொந்திரவு செய்திருந்தால் அவர்களைக் கைகளையும், கால்களையும் கட்டி இங்கே இழுத்து வா!” என்றான்.

மல்லர் தலைவன் அந்தக் கோட்டையின் வெளிவாசல் கதவுக்கு அருகே செல்வதற்கு முன்னரே, அந்த அந்நியர்கள் மூவரும் சுவர் ஏறிக் குதித்துச் சுவரின் மேலே கைப்பிடிச்சுவரில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வெற்றி முழக்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் மிக உயரமானவன் அனைவரையும் தன்னுடன் பொருத அழைத்துக் கொண்டிருந்தான். தன் தோள்களில் தட்டியும், தொடைகளில் தட்டியும் அனைவரையும் அழைத்துத் தன்னுடன் பொருத வருமாறு அறைகூவல் விடுத்தான். அவனுடைய எதிர்ப்பும் அறைகூவலும் ஜராசந்தனுக்கு மிக அதிகமாகத் தெரிந்தது. வந்தவன் ஏதோ ஜம்பம் அடிக்கிறான் என்று நினைத்தான். அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து கொண்டு நான்கு மல்லர்களைத் தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு அழைத்தான். அவன் அந்த அந்நியர்கள் மூவரும் குதித்து இறங்கிய அந்தக் குறிப்பிட்ட வாயில் கதவருகே சென்றான்.

அங்கே அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை நோக்கிச் சென்ற ஜராசந்தன், “நீங்கள் மூவரும் யார்? என்ன காரணத்திற்காக இங்கே வந்தீர்கள்? ஏன் என் மல்லர்களை எதிர்க்கிறீர்கள்? என் கட்டளைகளை அவமதித்து எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“நாங்கள் இந்தக் கோட்டைக்குள் இப்படி ஏறிக் குதித்துத் தான் நுழைந்தோம். ஏனெனில் உனக்கு இதன் மூலம் சர்வ நிச்சயமாக நாங்கள் தெரிவிக்க விரும்பியது நாங்கள் மூவரும் உன் எதிரிகள்! நண்பர்களாக இருந்திருந்தால் கோட்டை வாயில் வழியாக அனைவரும் வரவேற்க உள்ளே நுழைந்திருப்போம். நாங்கள் எதிரிகள் என்பதைக் காட்டவே இப்படி ஏறிக் குதித்து வந்தோம்!”

ஜராசந்தன் மிகப் பெரிய குரலில் சிரித்தான். “ஆஹா, நீங்கள்? என் எதிரிகளா? ஹூம், சிறுவர்களே! உங்களை நான் ஈயை நசுக்குவது போல் என் வெறும் கைகளாலேயே நசுக்கிக் கொன்று விடுவேன். ஆனால் நீங்கள் மூவரும் என்னுடன் பஹுவித்தையில் நுழைந்து போரிடத் தகுதி வாய்ந்தவர்களா? அப்படித் தெரியவில்லையே! அவ்வளவு தகுதி உங்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். ஆகையால் நீங்கள் மூவரும் என்னுடைய மல்லர்களுடனேயே பொருதுங்கள்! உங்கள் தகுதிக்கு அதுவே அதிகம்!” என்றான் ஜராசந்தன்.

“ஓ, அதுவும் அப்படியா? ஜராசந்தா! உனக்கு என்ன தெரிய வேண்டும்? நான் உன்னுடன் மல்யுத்தத்தில் மோத முடியுமா என்று தானே? விசித்திரமாக இருக்கிறதே! என்னை நீ அறியவில்லையா? நிச்சயமாக நீ என்னை அறிந்திருப்பாய்! புரிந்து கொள்வாய்! உன் வாழ்நாள் முழுவதும் நீ என்னைத் தேடுவதிலும் என்னைக் கொல்வதிலும் அன்றோ செலவு செய்திருக்கிறாய்! அது தான் இப்போது நானே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்.” என்றான் கிருஷ்ண வாசுதேவன்.


2 comments:

Unknown said...

கீதாமாவுக்கு வணக்கம். என் பெயர் சுரேஷ். கடந்த ஒரு மாதமாக இந்த தளத்தில் கதைகளை படித்துக்கொன்டிருக்கின்றேன். மிகவும் நன்றி. இந்த பதிவு வரை படித்து முடித்துவிட்டேன்.

ஸ்ரீராம். said...

ஆஹா.....

தொடர்கிறேன்.