Wednesday, February 22, 2017

வஜ்ரநப் மனம் விட்டுப் பேசுகிறான்!

அதன் பின்னர் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் தொடர்ந்தான். “ ஒருவேளை பிரத்யும்னன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தான் எனில் உடனே அவனைக் கொன்று விடுவான். அவன் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் இந்த இளம் யாதவனை அவன் இங்கேயே ஒரு பிணைக்கைதியாக உன்னுடன் இருத்திக் கொள்வான். இதன் மூலம் யாதவர்களை அவன் பழி வாங்க இயலும்!” என்றான் வஜ்ரநப். அதற்குள்ளாக அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கண்ணீரைத் துடைத்துக் கொண்ட வஜ்ரநப் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டான்.  பின் மேலும் தொடர்ந்தான்.

“அவர் உங்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபடும்படி கட்டாயப் படுத்துகிறார். ஆனால் அதோடு மட்டும் அவர் விடப் போவதில்லை. பிரத்யும்னா, வீரனே! நீ மட்டும் எங்களிடமிருந்து தப்பினாய் எனில் நாங்கள் அனைவரும் எங்கள் மன்னர் மன்னரால் கொல்லப்படுவோம். உனக்கு உதவி செய்ததற்காகவும் இந்தக் கோட்டையிலிருந்து உன்னைத் தப்புவித்ததற்காகவும் மட்டுமில்லாமல் அவருடைய திட்டத்தை நாங்கள் தோற்கடிக்க நேர்ந்ததற்காகவும் சேர்த்துக் கொல்லப் படுவோம். அவருடைய திட்டம் மட்டும் தோல்வி அடைந்தால் அவர் என் கழுத்தை அறுத்து விடுவார். தொண்டையை அறுப்பார்1” என்றான் வஜ்ரநப்.

மிகவும் அவமதிப்பும், இகழ்ச்சியும் கலந்து பார்த்தான் பிரத்யும்னன். “அவர் கட்டளை நம்மை என்ன செய்ய முடியும்? நாங்கள் ஏற்கெனவே ஒருவருக்கொருவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டு விட்டோம்!” என்றான். வஜ்ரநப் குறுக்கிட்டான். “பிரத்யும்னா, வாசுதேவக் கிருஷ்ணனின் மகனே! உனக்கு நன்றாகத் தெரியும். ஓர் மௌன யுத்தம் யாதவர்களுக்கும் சௌபநாட்டு அரசன் ஷால்வனுக்கும் இடையில் வெகுகாலமாக நடந்து வருகிறது என்பதை நீ அறிய மாட்டாயா?”

“இந்த மௌன யுத்தம் எப்போது ஆரம்பித்தது?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“ஓ, அது பல வருடங்கள் ஆகின்றன. காசி தேசத்து இளவரசிகள்  மூவருக்கும் வெகு காலம் முன்னர் ஓர் சுயம்வரம் ஏற்பாடாகி இருந்தது.  அந்த சுயம்வரத்தில் உங்கள் அருமைப் பிதாமகர் பீஷ்மர் இளவரசிகள் மூவரையும் தன்னுடைய பேரனுக்காகக் கடத்திச் சென்று விட்டார். ஆனால் அவர்களில் மூத்தவளான அம்பா எங்கள் மன்னாதி மன்னரான ஷால்வனை மனதாரக் காதலித்து வந்தாள். ஆகவே அவள் பீஷ்மரிடம் குரு வம்சத்து இளவரசனைத் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்தாள். அதன் பேரில் பீஷ்மர் எங்கள் மன்னரிடம் அம்பையைத் திரும்ப அனுப்பித் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். ஆனால் எங்கள் மன்னர் வேறொருவனால் கடத்தித் தூக்கிச் செல்லப்பட்ட அம்பையைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டார்.  அதோடு இல்லாமல் அம்பையை வெல்வதற்காக அவர் பீஷ்மரோடு நடத்திய போரில் பீஷ்மரால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். அதனாலும் அவமானம் அடைந்து அவர் அம்பையை ஏற்கவில்லை!”

நான் அப்போது மிகவும் இளைஞன். எங்கள் மன்னரோடு போர்க்களத்திற்குச் சென்று அங்கே ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் போரில் ஈடுபட்டேன். பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டேன். ஆகவே என்னுடைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கண்டு தனக்கு இவ்வளவு அருமையாக சேவை செய்து வரும் என்னைத் தனக்குப் பிரியமானவனாக ஆக்கிக் கொண்டார்.”

“அப்படியா? தாத்தா வேகாவன் அவர்களால் இதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லையா?”

“மாட்சிமை பொருந்திய தந்தை வேகாவன் அவர்கள் ஆரிய வர்த்தம் முழுமையையும் எங்கள் மன்னரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்னும் எங்கள் மன்னரின் விருப்பத்திற்கு முழு ஆதரவு அளித்தார். அதற்காக ஒத்துழைத்தார். எங்கள் மன்னருக்கு எப்போதுமே ஆரியவர்த்தத்தின் மேலே ஒரு கண் உண்டு. எப்படியேனும் அதைத் தன் குடைக்கீழ் கொண்டு வந்து அரசாள வேண்டும் என்றே நினைத்தார். இது அவருடைய வாழ்க்கை லட்சியமாக வாழ்க்கையின் மாபெரும் கனவாக இருந்து வருகிறது!”

சற்று நேரம் மீண்டும் நிறுத்திய வஜ்ரநப் மீண்டும் தொடர்ந்தான். “எங்கள் மன்னரும் மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தனும் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி இருவரும் சேர்ந்து ஆரியவர்த்தத்து அரசர்கள் அனைவரையும் அடியோடு அழித்து விடவே எண்ணினார்கள்.  ஏனெனில் இத்தகைய மாபெரும் ஒப்பந்தம் மூலமே ஆரியர்களின் ஆக்கிரமிப்பையும் அடக்குமுறையையும் ஒழிக்கலாம் என எண்ணினார்கள்.”

“எங்களோடு, ஜராசந்தனின் மாப்பிள்ளையான கம்சனும் சேர்ந்து கொண்டான். ஆனால் அவனை யாதவர்களின் பெரும் அன்புக்குப் பாத்திரமான இளைஞன் கிருஷ்ணன், அவன் தானே உன் தந்தை! கொன்று விட்டான். அந்தக் கிருஷ்ணன் ஓர் மாட்டிடையன் தான்! என்னை மன்னித்துக் கொள்! அப்படித் தான் எங்கள் மன்னர் உன் தந்தையைக் குறிப்பிடுவார்.”

“ஜராசந்தனோடு சேர்ந்து எங்கள் மன்னர் உன் தந்தையை கோமந்தகத்திலும் எதிர்த்தார். கிருஷ்ணனும், பலராமனும் அங்கே தான் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தாக்குதல் தோல்வி அடைந்தது. ஜராசந்தனோடு சேர்ந்து எங்கள் மன்னர் ஒவ்வொரு முறையும் போரிட்டார். ஆனால் எல்லாப் போரிலும் அவர்களுக்குத் தோல்வியே கிட்டியது.  ஏனெனில் கிருஷ்ணன் ஆரியர்களை மட்டும் பாதுகாக்கவில்லை. மொத்த க்ஷத்திரிய தர்மத்தையே அரச தர்மத்தையே உலக தர்மத்தையே பாதுகாத்தான். தர்மத்தை ரக்ஷிப்பதற்காகவே பிறந்தவன் என அனைவரும் நம்பினார்கள்!"

“மத்ராவை எங்கள் மன்னர் ஜராசந்தனோடு சேர்த்து எரித்தபோதும் நான் உடனிருந்தேன். ஆனால் உன் தந்தை வாசுதேவக் கிருஷ்ணன் மிகவும் கெட்டிக்காரன். தந்திரக் காரன். தன் மக்கள் அனைவரையும் ஒருவருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டு சௌராஷ்டிரம் நோக்கிச் சென்று விட்டான். மத்ராவில் ஈ, காக்கை கூட இல்லை!”

“அதோடு நிறுத்தவில்லை உன் தந்தை! திரௌபதியின் சுயம்வரத்தில் ஜராசந்தனைப் பின்வாங்கிச் செல்ல வைத்தான். அதன் பின்னர் தன்னிடமிருக்கும் சிறந்த யாதவ வீரர்களோடும் வீரர் தலைவர்களோடும் சேர்ந்து இந்திரப் பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்துக்குச் சென்று விட்டான். ஆகவே எங்கள் மன்னர் இப்போது சௌராஷ்டிரத்தில் கிருஷ்ணன் இல்லாதிருக்கும் இந்த நேரமே அதைத் தாக்கச் சரியான நேரம் என முடிவெடுத்தார்! இதன் மூலம் யாதவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைத்தார்!”

“உனக்குத் தான் நன்றாகத் தெரியுமே! துவாரகையில் நடந்த போரில் அரசர்க்கரசர் ஷால்வனை நீ எவ்வாறெல்லாம் எதிர்கொண்டாய்! போர்க்களத்தை விட்டே எங்கள் மன்னரை ஓடும்படி செய்துவிட்டாய்! அதன் மூலம் அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தாய்!  ஆகவே போர்க்களத்தில் காயம் அடைந்த வீரனான பிரத்யும்னன் ஆகிய உன்னை நாங்கள் உயிருடன் பிடிக்கவேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.  போரில் உன்னுடைய சகோதரன் சாருதேசனன் கொல்லப்பட்டதோடு இன்னொரு சகோதரன் சாம்பன் பலத்த காயம் அடைந்தான்.”

“எங்கள் தானவ வீரர்கள் போர்க்களத்தை விட்டு அகன்றதும் நாங்கள் அங்கே இறந்து கிடந்த எங்கள் தானவ வீரர்களின் பிணங்களை அகற்றி அப்புறப்படுத்தி எரியூட்டினோம். “ என்ற வஜ்ரநப் தன்நீண்ட பேச்சைச் சற்றே நிறுத்திவிட்டுப் பிரத்யும்னன் தோளில் தட்டிக் கொடுத்தான். “பிரத்யும்னா, நீ எங்கள் மன்னருடன் சரிக்குச் சரியாகப் போர் புரிந்தாய்! நீ மிகவும் தைரியசாலியும் வீரனுமாவாய்!” என்றான்.

“நாங்கள் இங்கே திரும்பி வருவதற்கு முன்னரே நாங்கள் தோல்வி அடைந்த செய்தி எங்கும் பரவி விட்டது! ஆனால் இங்கே தான் எங்கள் மன்னாதி மன்னரால் ரசவாதம் செய்யப்பட்டது. அவர் தான் தோல்வி அடைந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் ஓர் வெற்றி வீரனாகவே தன்னைக் காட்டிக் கொண்டார். எங்கள் நகரின் எல்லா வீடுகளும் சீரழிந்து கிடந்தன. அவற்றை எல்லாம் சரி செய்து என் மூலம் அவர் தானவ வீரர்களையும் ஒழுங்கு முறைக்குக் கொண்டுவரச் செய்தார்.  என் தந்தை வேகாவன், போரில் இறந்ததோடு அல்லாமல் விவிந்தனும் கொல்லப்பட்டான். எங்கள் மந்திரியான க்ஷேமவிருத்தி போர்க்களத்திலிருந்து ஓடி விட்டார். சாம்பனை எதிர்கொள்ள முடியாமல் அவர் ஓடித் தப்பித்துக் கொண்டார். ஆனால் நான் இத்தனையும் உன்னிடம் சொல்வது சரியா என்றே தெரியவில்லை. இது சரியல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.  நடந்தவை அனைத்தையும் சொன்னதோடு அல்லாமல் போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றையும் சொல்லி விட்டேன். இதனால் நீ சந்தோஷம் அடையப் போவதில்லை! நீ இப்போது இருப்பதை விடவும் மோசமாக வருந்தப் போகிறாய்!” என்றான் வஜ்ரநப்!

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.