Friday, September 27, 2013

ஷிகண்டின் ஆணா, பெண்ணா? துரோணரின் சந்தேகம்!

“வேத பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டனவா?”

“ஆம், ஆசாரியரே!”

“வில் வித்தை?”

“ஆம், ஆசாரியரே!”

“தண்டாயுதப் பயிற்சி?”


“ நான் இதை உங்கள் காலடியில் வீழ்ந்து கிடந்து உங்கள் மூலம் கற்க விரும்புகிறேன்.”  சிறுவன் மரியாதை நிமித்தம் தலை குனிந்தவண்ணம் கண்களையும் கீழே தாழ்த்திக் கொண்டு கூறினான்.  “உனக்கு என்ன வயசு?” துரோணருக்கு இவனிடம் ஏதோ ஈர்ப்பு இருப்பதாகத் தெரிந்தது.  “பதினாறு வயது, குருதேவரே!” என்றான் இளைஞன்.  “ஆனால் உன்னைப் பார்த்தால் பனிரண்டு வயதுப் பையன் போல் இருக்கிறாயே?”  துரோணர் கேட்க, “அது தான் என் துரதிருஷ்டம் குருதேவரே!” என்றான் ஷிகண்டின். “ம்ம்ம்ம்ம், மற்போர் பற்றிய அறிவும், அதன் நுணுக்கங்களையும் உனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதா?” “இல்லை, ஆசாரியரே, எனக்கு யாரும் கற்பிக்கவில்லை.  எந்த ஆசிரியரும் அது குறித்துக் கூறியதில்லை.” குழப்பத்தினால் சிவந்த முகத்தோடு பதிலளித்த ஷிகண்டின் கடைசி வாக்கியத்தைக் கிட்டத்தட்டத் தனக்குள்ளே கூறிக் கொண்டான். “ஏன்?” துரோணர் கேட்டார்.


மீண்டும் ஷிகண்டினின் முகம் சிவந்தது.  கொஞ்சம் தயங்கினான்.  பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “என் ஆசிரியர்கள் நான் ஒரு பெண் என நினைத்தனர். “ என்று கூறினான்.   அதைச் சொல்கையில் குருமார்களிடம் குற்றம் கண்டுபிடிக்கும் தோரணை இல்லாமல் வெகு நிதானமாகவும் அடக்கத்துடனும் அவன் சொன்ன விதம் துரோணரின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. “நானும் பெண்களுக்குப் போர்ப்பயிற்சியைக் கற்றுக் கொடுப்பதில்லை!” என்று கூறினார்.  தொண்டை அடைக்க ஷிகண்டின், “கட்டாயம் எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் குருவே, நிச்சயமாய்க் கற்றுக் கொடுப்பீர்கள்.  நான் அதை அறிவேன்.  அதிலும் நான் எவ்வளவு துரதிர்ஷ்டக்காரன் எனத் தெரிந்தால் மறுக்க முடியாது உங்களால்!” என்றான்.


“நீ எங்கிருந்து வருகிறாய் இளைஞனே, உன் பெற்றோர் யார்?” துரோணர் கேட்டார்.


குருவம்சத்தினரின் ஈடு இணையற்ற தளபதியான துரோணரின் முகம் பொதுவாகக் கடுமையையும், வீரத்தையும் பெளருஷத்தையும் காட்டும்.  அத்தகைய முகத்தில் இப்போது இந்தச் சிறுவனுக்காகக் கொஞ்சம் கருணையும், தயையும் தோன்றியது.  மிக லேசாகப் புன்முறுவலித்த வண்ணம் அவனைப் பார்த்தார் துரோணர்.  “என் தாய், காசி தேசத்து இளவரசியாவாள்.” இதைச் சொன்ன ஷிகண்டினுக்கு அடுத்த வார்த்தை பேச வராமல் தொண்டையை அடைத்தது.  ஏதோ தொண்டையை அடைக்கிறதே என எண்ணியவன் போல், தன் தொண்டையைச் சரிப்படுத்திய வண்ணம், முழு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்ட ஷிகண்டின், “என் தகப்பனார், உங்கள் பரம வைரி, பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்.” என்று முடித்தான்.  துரோணருக்குத் தூக்கி வாரிப் போட்டது.  


அவர் புன்சிரிப்பு மறைந்தது.  “ என்றால் அனைவரும் சொன்னது பொய்யல்ல என்றாகி விட்டது.   உன்னைத் தான் உன் தாய் தன் தந்தையான காசி தேசத்து அரசனின் மாளிகையில் ஒரு ஆணைப் போல் வளர்த்தாள் இல்லையா?  நீ துருபதனின் பெண், அல்லவா?” என்று கேட்டார். “ஆம் குருதேவரே, என் தாய் இறந்ததும், நான் தந்தையிடம் எனக்குப் பத்து வயதாக இருக்கையில் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்று மீண்டும் அடக்கத்துடன் கண்களைத் தாழ்த்திய வண்ணம் கூறினான்.   “நீ ஒரு ஆணைப் போலவே இது வரை நடந்து கொண்டிருக்கிறாய்?” என்று துரோணர் கேட்க, அதை ஆமோதித்தான் ஷிகண்டின்.  மேலும் தொடர்ந்து, “தந்தையார் என்னை அப்படி எல்லாம் இருக்க வேண்டாம், நீ உண்மையில் எவ்வாறு உள்ளாயோ அவ்வாறே இரு என்று தான் கூறினார்.  ஆனால் நான் கடுமையாக மறுத்துவிட்டேன்.   நான் ஒரு ஆணாக இருக்கவே விரும்புகிறேன்.  தைரியமும், வலுவும் உள்ள இளவரசனாக, போர்ப்பயிற்சிகளை நன்கு கற்றுத் தேர்ந்து எனக்கு உரிமையுள்ள அரண்மனையில், த்ருஷ்டத்யும்னனுக்கும், சத்யஜித்துக்கும் ஒரு சகோதரனாக அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.  ஆனால் தந்தைக்குக் கோபம் வருகிறது. ஆத்திரப்படுகிறார்.”  என்றான்.


திடீரென இப்படி சந்தேகப்படும்படியான சூழ்நிலையில் ஷிகண்டின் இங்கே வருவானேன்?  துரோணருக்குள் சந்தேகம் வளர்ந்தது.  இந்த விஷயத்தின் ஆணிவேர் வரை சென்று பார்க்க விரும்பினார்.  ஆகவே, “ஏன்?” என்று ஷிகண்டினைக் கேட்டார்.  ஷிகண்டின் நேரடியான, வெளிப்படையான ஒரு பதிலைத் தந்தான். “ நான் ஒரு ஆண்மகன் என்று சொல்லிக் கொள்வது வஞ்சகமான ஒன்று எனத் தந்தை நினைத்தார்.  அவரால் அதை  ஒப்புக்கொள்ள முடியவில்லை.  ஆனால் என்னுள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பங்கள் ஏற்பட்டன.  என்னுடைய விருப்பங்கள் அனைத்துமே ஒரு ஆணுடையதாகவே இருந்தது.  நான் வளர்க்கப்பட்டதும் ஒரு ஆணாகவே.   எனக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளும் ஒரு ஆணுக்குரியதாகவே இருந்தது.   என் தந்தையையும், சகோதரர்களையும் போல நானும் ஒரு ஆணாகவே விரும்பினேன். "


“ஒரு பெண்ணாக உன்னை நீ எப்போதுமே உணரவில்லையா?”
“சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.  துஷ்டத்தனங்களையும், கொடூரங்களையும், கரடுமுரடாக நடப்பவர்களையும் பார்க்கையில் மனம் வருந்தி இருக்கிறது.  இதயம் கொந்தளிக்கும்.  ஆண்களிடம் ஈர்ப்பு இருந்ததும் உண்மை தான்;  எனினும் அது ஒரு பெண்ணாக அல்ல.  சிறு பையன்களுக்கு வலிமையும், கம்பீரமும் நிறைந்த  ஆண்களிடம் ஏற்படும் சிறுபிள்ளைத்தனமான ஈர்ப்பு.   உணர்ச்சி வசப்பட்டவனாகவும் இருந்திருக்கிறேன்.   ஆனால் அவற்றை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாகத் தூக்கி நசுக்கி எறிந்துவிட்டேன்.   நான் ஒரு முழு ஆணாகவே இருக்க விரும்புகிறேன்.”


“நீ ஒரு பெண் என எப்போது கண்டுபிடித்தார்கள்? அல்லது கண்டுபிடிக்கப்பட்டது?”


“யாருக்கும் நான் ஒரு பெண் எனத் தெரியாது.  என் தந்தை மற்றும்  என் சகோதரர்களுக்கும் கொஞ்சம் தெரியும்.  என் சகோதரி திரெளபதிக்கும், முதல் அமைச்சர் உத்போதனருக்கும் தெரிந்தாலும் அவர்கள் அனைவருமே இதை ஒரு ரகசியமாகவே காப்பாற்றி வருகின்றனர்.   ஒரு சில மக்கள் நான் ஒரு ஆணாக இருக்க முடியாது என சந்தேகப்பட்டனர். என் குருமார்களோ, ஏதோ உணர்ந்திருந்தார்கள்.  ஆகவே பாதுகாப்பு உணர்வோடு எனக்கு தண்டாயுதப் பயிற்சியோ அல்லது மற்போரோ கற்றுக் கொடுக்கவில்லை.   ஒரு வேளை நான் வற்புறுத்தி இருந்தால் நான் யார் எனக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பேன் என நினைத்தார்கள் போல!” என்றான் ஷிகண்டின். 


“ஆனால் உனக்கும் தஷார்னாவின் இளவரசிக்கும் உன் தந்தையிடம் நீ வரும் முன்னரே திருமணம் நடந்ததாகக் கேள்விப்பட்டேனே?” என்று துரோணர் கேட்டார்.  “ஆம், அவர்கள் இந்த விருப்பத்தைத் தெரிவித்தனர்.  தந்தையும் ஏற்றுக் கொண்டார்.  நாங்கள் திருமணம் செய்து கொள்கையில் அந்த இளவரசிக்கு ஆறு வயது தான் ஆகி இருந்தது.  இப்போது அரசன் ஹிரண்யவர்மன் தன் மகள் இளவரசியைக் காம்பில்யத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  அதனால் தான் நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.” என்று இன்னும் வெளிப்படையாகச் சொன்னான் ஷிகண்டின்.


“ம்ம்ம்ம்? அப்படியா?  அல்லது இதற்கு மாறாக உன் தந்தையே உன்னை இவ்விடம் அனுப்பி இருந்தால்?” துரோணரின் சந்தேகம் தீரவில்லை.  துருபதன் தன் மகளை இங்கே தன்னை  உளவறிய வேண்டி அனுப்பி இருப்பானோ என்னும் சந்தேகம் துரோணருக்கு இருந்தது.   “இல்லை, நிச்சயமாய் இல்லை, “என்ற ஷிகண்டின், “நான் இங்கே வந்திருப்பது கூட என் தந்தைக்குத் தெரியாது!” என்று சொல்லிக் கொண்டே துரோணரின் முகத்தை தைரியமாக நேருக்கு நேர் பார்த்தான்.





5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை நன்கு சூடி பிடித்துள்ளது. சுவையும் அதிகமாக உள்ளது.

துரோணரின் சந்தேகங்கள் + ஷிகண்டியின் பதில்கள் ஜோராக உள்ளன.

இவன்[ள்] தான் யாராலுமே வெல்ல முடியாத பீஷ்மப்பிதாமஹரை எதிர்த்துப் போர் செய்யப்போகிறவரா ! ;)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா,
அம்பா உன் சோகம்தான் என்ன.

எவ்வளவு தெளிவாக இந்தச் சிறுவன் பேசுகிறான்.
அவனுடைய வாழ்க்கை லட்சியம் ஆரம்பமாகிறது.

கதம்ப உணர்வுகள் said...

ஷிகண்டினோட நேர்மையான பதில் எனக்கு வாசிக்க பிரமிப்பாகிறது.

ஷிகண்டின் ஒர் பெண். ஆனால் ஆணாக வளர்க்கப்படுகிறாள், இயல்பிலேயே ஒரு பெண் தான் என்று அறியமுடிகிறது..

துரோணரின் சந்தேகமும் நியாயமானதே. வைரியின் மகள் இங்கு குருவிடம் கல்வி பயில வந்தால் உளவு பார்க்க ஏவப்பட்டிருப்பாளோ என்ற சந்தேகம் வராதா என்ன?

ஷிகண்டியின் இந்தப்போக்கு எனக்கு பிடித்திருக்கிறது.

அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் கீதா.. தொடருங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

ஸ்ரீராம். said...

ஷிகண்டின் நேர்மையாக பதிலளிப்பது சிறப்பு. பீஷ்மருக்கே ஷிகண்டினின் பிறப்பின் நோக்கம் தெரிந்திருக்குபோது துரோணருக்குத் தெரிந்திருக்காதா என்ன?