Sunday, September 22, 2013

ஆர்யகனின் கடைசி விருப்பம்!

“பாட்டனாரே, உங்கள் மக்களை வெளி உலகைக் கண்களையும், மனதையும் திறந்து வைத்துக் கொண்டு பார்க்கச் சொல்லுங்கள்.  அவர்களுக்கு வெளி உலகில் நடப்பவை பற்றிய அறிவு வேண்டும்.  “  என்றான் கண்ணன்.
“ஓஹோ, அது என்றும் இயலாத ஒன்று என்பதை நான் அறிவேன் கண்ணா!” என்றான் ஆர்யகன்.

“முடியவேண்டும் பாட்டனாரே!  கட்டாயம் நடக்க வேண்டும்.  யாரேனும் ஒரு ரிஷியை உங்கள் நாகர்கள் நாட்டில் ஆஸ்ரமம் அமைக்க வேண்டி அழையுங்கள்.  அந்த ஆஸ்ரமத்தின் மூலம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம்.  உலகத்து மக்களிடம் அன்பு காட்டுவதற்கும், அவர்களின் சுபிக்ஷமான வாழ்க்கைக்குப் பாடுபடவும், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் விரும்பும் ஆயுதப் பயிற்சி,  அரசாட்சி குறித்த அறிவு, தர்மம் என்றால் என்ன?  அவரவர் சுயதர்மம் எப்படி ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு அமையும், தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியம், இவை அனைத்துக்கும் மேலே இன்னும் உயர்ந்து செல்லும் வழியான தவம் செய்தல் அதன் மூலம் பிரம்ம ஞானம் அடைதல் என அனைத்தையும் பெறமுடியும்.”

“ஆனால், குழந்தாய், நாங்கள் வலுவுள்ளவர்களாக, வலிமை மிக்கவர்களாக ஆவது பற்றி?? அதைக் குறித்து என்ன சொல்கிறாய்?   ஆரியர்கள் எங்களை அடக்கி எங்களுக்கு மேலே வந்துவிடாதபடி தடுக்கும் வலிமை!  அது குறித்து?” ஆர்யகன் ஆவலோடு கேட்டான்.

“ஆஹா, அப்படியா, பாட்டனாரே, அப்படி என்றால் நாகர்கள் தங்கள் இந்த எளிமையான எளிதான வாழ்க்கைமுறையைக் கைவிட வேண்டும்.  ஆரியர்களைப் போலக் கடுமையான தவங்கள் செய்ய வேண்டும்.  ஆசாரியன் ஷ்வேதகேது உங்கள் மக்களைப் போர்த்தந்திரங்களில் பயிற்சி கொடுத்து உதவுவான்.  எல்லாவற்றுக்கும் மேலே குதிரைகளைப் பழக்கவும், குதிரை ஏற்றத்திலும் உங்கள் மக்களைப் பழக்குங்கள்.  ஆரியர்களின் பலமே அவர்கள் குதிரைகளையும் தெய்வமாக ஏற்றுக் கொண்டாடுவதில் தான்.  எல்லாப் போர்களிலும் அவர்களுக்கு வெற்றித் திருமகளைத் தேடித்தரும் தெய்வீக நண்பர்கள் குதிரைகளே.  அவற்றைப் பழக்குவதன் மூலம் அவர்களின் வலிமை இன்னும் அதிகம் ஆகிறது.  பாட்டனாரே, நாகர்கள் ஒரு போரை எப்படி நடத்துவது எனக் கற்றால் மட்டும் போதுமானது அல்ல; போரில் வெற்றியை அடையவும் கற்கவேண்டும்.  வெறும் ரத்தம் சிந்திப் போரிடுவது போரே அல்ல.  அவ்வகையான போர் எனக்குப் பிடிப்பதில்லை.  அப்படியான யுத்தங்களைத் தற்காப்புக்காகவன்றி மற்றசமயங்களில் நான் ஒருபோதும் கடைப்பிடித்தது இல்லை.  ஆனால் பாட்டனாரே, ஒவ்வொரு மனிதனும் தர்மத்தைக் காக்க வேண்டும்.  அதற்காக உழைக்க வேண்டும்.  அதைக் காப்பதற்காக அவன் உயிரையே இழப்பான் என்றாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.”

“நான் என்ன தான் செய்யவேண்டும்  என்கிறாய் கிருஷ்ணா? புதிர் போடுவது போல் அல்லவோ பேசுகிறாய்?” ஆர்யகனால் கிருஷ்ணன் சொல்வதின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  “ சரி பாட்டா, நான் நேரடியாகவே  சொல்கிறேன்.  சாத்யகி போய் செகிதானாவைச் சந்திப்பான்.  நான் தெளம்ய ரிஷியிடம் பேசி, உங்கள் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாக இளைஞர்களை அவருக்கு மாணவர்களாக ஏற்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன்.  அவர் ஆசிரமம் உத்கோசக தீர்த்தத்தில் உள்ளது.  அங்கே  இந்த நாக இளைஞர்கள் செல்ல வேண்டும்.  உங்களுக்காக 25 ஆண் குதிரைகளையும், 10 பெண் குதிரைகளையும் இங்கே விட்டுச் செல்கிறேன்.  இவை பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்டவை. மேலும் பாஞ்சால நாட்டு மன்னனுக்கு, நூறு பசுக்களை உங்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  அனைத்துப் பசுக்களும் பால் சுரப்பில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஏனெனில் ஆஸ்ரமத்திற்கு அவை தேவைப்படும்.  ஆசாரியர் சாந்தீபனியிடம் போர்ப்பயிற்சிகளில் சிறந்ததொரு சீடனை இங்கே அனுப்பக் கோருகிறேன்.  உங்கள் மக்களுக்கு அவன் தற்கால நடைமுறைகளில் இருக்கும் ஆயுதங்களில் பயிற்சி அளிப்பான்.” கிருஷ்ணன் கூறினான்.

“ஆனால் கிருஷ்ணா, நீ?? நீ இல்லாமல் இப்படிப்பட்ட புதிய வழிகளை என் மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே!  அவர்களுக்கு இதிலெல்லாம் விருப்பமே  இல்லை என்பதும் எனக்கு நன்கு தெரியும்.”

“காலவரையின்றி இங்கே இருக்க என்னால் இயலாது பாட்டனாரே!  அவந்தியில் ஆசாரியர் சாந்தீபனி எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.  நான் அங்கே செல்ல வேண்டும்.  ஆனால் உத்தவனுக்கும், உங்கள் பேத்திகள் இருவருக்கும் திருமணம் முடிந்ததும் அவன் இங்கே ஓராண்டு முழுதும் தங்கி இருப்பான்.  அடுத்த வருடம் பெளஷ மாதத்தில் நான் திரும்ப வரும் வரைக்கும் உத்தவன் இங்கிருப்பான்.” என்றான் கண்ணன்.  “அடுத்த பெளஷ மாதம் நீ திரும்ப இங்கே வருவாயா?” ஆர்யகன் கேட்டான்.

“ஆம், பாட்டனாரே, நான் சில யாதவப் படைத்தலைவர்களையும் என்னுடன் அழைத்து வருகிறேன்.   பாஞ்சால அரசன் துருபதனின் மகளுக்குச் சுயம்வரம் நடைபெறப் போகிறது.  அதில் கலந்து கொள்ள வருவேன்.  துருபதனிடம் பேசி மணிமானையும் சுயம்வரத்திற்கு அழைக்கச் சொல்கிறேன்.  உத்தவனை மணிமான் மிகவும் விரும்புகிறான்.  அலாதியான பாசம் காட்டுகிறான்.”  பின்னர் கார்க்கோடகன், மற்ற நாகத் தலைவர்கள், ஷ்வேதகேது, சாத்யகி, உத்தவன் ஆகியோர் ஆர்யகன் முன்னிலையில் தருவிக்கப்பட்டனர்.  ஆர்யகன் சற்று நேரம் தன் கண்களை மூடியவண்ணம் எதுவுமே பேசாமல் இருந்தான்.  அனைவரும் அவன் கண் திறந்து பேசக் காத்துக் கொண்டிருந்தனர்.  ஆர்யகன் ஒருவழியாகக் கண்களைத் திறந்தான்.  அவற்றில் மின்வெட்டுப் போன்றதொரு அபூர்வ ஒளி தெரிந்தது.

“தலைவர்களே, கார்க்கோடகா, பசுபதிநாதர் சொன்னதாக நம் மதகுரு சொன்னவை அனைத்தும் உண்மையாகும் நேரம் வந்துவிட்டது.  கண்ணன் நம்மை ஆதரிக்கச் சம்மதம் கூறியதோடு உறுதியும் கொண்டிருக்கிறான்.  “ புன்னகை எனச் சொல்லும் வண்ணம் ஆர்யகனின் உதடுகள் கோணிக்கொண்டன.  “வெற்றித்திருமகளிடம் கிருஷ்ணன் உங்களை அழைத்துச் செல்வான்.  அவனுடைய தலைமையை நீங்கள் அனைவரும் எவ்விதமான மறுப்புமின்றி ஏற்பதாக எனக்குச் சத்தியம் செய்து கொடுங்கள்.  எங்கே, உங்கள் கரங்களைக் கொண்டு வாருங்கள்.”

ஒவ்வொருவராக கிழ மன்னனின் கைகளில் தங்கள் கைகளை வைத்துச் சத்தியம் செய்தனர்.  தன் பலவீனமான கரங்களால் மெல்லக் கிருஷ்ணனைத் தொட்டான் ஆர்யகன்.  அவன் கண்கள் ஏற்கெனவே பெரியதாக இருந்தது இன்னும் பெரிதாக மாறியது.  “கண்ணா, வாசுதேவா, என் அருமை மரிஷாவின் பேரனே, உன் சத்தியத்தை நீ காப்பாற்றுவாயாக.  என் மக்களை என்றென்றும் ஆதரித்து வருவாயாக!”

கண்ணன் தன் விசாலமான நேத்திரங்களில் கருணை, அன்பு, பாசம் அனைத்தையும் ஒருசேரத் தேக்கியதால்  ஏற்பட்டதோ என்னும் வண்ணம் உணர்வுகள் பொங்கிக் கண்களின் வழியாகப் பாய்ந்து வரத் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு கார்க்கோடகனும், மற்ற நாகர்கள் தலைவர்களும் வைத்த கரங்களின் மேல் படும்படி வைத்துத் தன் உறுதியை மீண்டும் மெளனமாக அளித்தான்.  அங்கே ஒருவருக்கும் அப்போது பேச முடியவில்லை.  உணர்வுகள் பிரவாகமாகப் பொங்கிக் கொண்டிருந்தது.  ஆர்யகனின் வயதான கண்களில் இருந்தும் அருவிபோல் கண்ணீர் கொட்டியது.  “இனி நான் சந்தோஷமாக இறப்பேன்.” என்று சொன்ன ஆர்யகன், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு புன்னகை செய்தான்.  அது நிரந்தரமாக அவன் உதடுகளில் உறைந்தது.


3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“கண்ணா, வாசுதேவா, என் அருமை மரிஷாவின் பேரனே, உன் சத்தியத்தை நீ காப்பாற்றுவாயாக. என் மக்களை என்றென்றும் ஆதரித்து வருவாயாக!”//

பகவானிடமே உன் சத்தியத்தைக் காப்பாற்று என்கிறாரே !

// “இனி நான் சந்தோஷமாக இறப்பேன்.” என்று சொன்ன ஆர்யகன், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு புன்னகை செய்தான். அது நிரந்தரமாக அவன் உதடுகளில் உறைந்தது.//

ஆஹா, ஆர்யகன் அவ்ளோ தானா?

தொடரட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு மனிதனும் தர்மத்தைக் காக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அதைக் காப்பதற்காக அவன் உயிரையே இழப்பான் என்றாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

அருமையான ஆலோசனை..!

ஸ்ரீராம். said...

கண்ணனின் துணை இருக்கிறது என்ற ஒரு நிம்மதியுடன் ஆர்யாகனின் முடிவு.