Thursday, September 26, 2013

வந்தான் ஷிகண்டின்!

“அப்படியா?  சரி, மற்றவர்கள்?  முதலில் அவர்களை அழை!” என்றார் துரோணர்.  பனிரண்டிலிருந்து பதினான்கு வயதுக்கு உட்பட்ட இரு சிறுவர்களை ஷங்கன் அங்கே அழைத்து வந்தான்.  “இவர்கள் இருவரும் உத்தரகுருவிலிருந்து வந்திருக்கின்றனர்.  குரு வம்சத் தலைவர்களில் ஒருவனான சுபாஹுவின் மகன்கள் ஆவார்கள்.  சுபாஹுவும் வந்திருக்கிறான்.” என்று சொல்லியவண்ணம் சிறுவர்களுக்கு அருகே நின்று கொண்டிருக்கும் சுபாஹுவைச் சுட்டிக் காட்டினான் ஷங்கன்.  “தகப்பனைக் குறித்த அக்கறை ஏதும் எனக்கில்லை.  இளைஞர்களிடம் மட்டுமே என் தனிப்பட்ட கவனம்!” பட்டென்று கூறிய துரோணர் அந்தச் சிறுவர்களின் ஒருவனைப் பார்த்து, “உனக்குப் பனிரண்டு வயதிருக்கும் இல்லையா?  உனக்கு?  உனக்குப் பதினான்கு இருக்குமா?” எனக் கேட்டார்.  அந்தச் சிறுவன் தலையை ஆட்டிக் கொண்டே, துரோணரின் கோபமான வார்த்தைகள் ஏற்படுத்திய பயத்தில், “ஆம், ஐயா!” என்று வேகமாக ஆமோதித்தான்.   தன் புருவங்களை நெரித்த வண்ணம், “இத்தனை காலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இருவரும்?   சாஸ்திரங்கள் கூறியுள்ளபடி குருகுலம் வருவதற்கான வயது எட்டுக்குள்ளாக என்பதை உங்கள் தகப்பன் அறியவில்லையா?”  மீண்டும் கோபத்துடன் கேட்டார் துரோணர்.  சிறுவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே தங்களை நட்டுவிட்டது போல் மரம் போல அசையாமல் நின்றார்கள்.  அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலையையும் குனிந்து கொண்டனர்.  அவர்கள் தகப்பன் தான் சற்று முன்னால் வந்தான்.  துரோணரின் கோபத்தையும், அவரின் கேள்வியையும் கண்டு சற்றுத் தடுமாறியவனாய் பயத்தோடு, “இவர்களின் தாய், அவ்வளவு சிறிய வயதில் இவர்களைப் பிரிய மறுத்துவிட்டாள்.”  என்று கூறினான்.

“ஹூம், நான்கு வருடங்களை வீணாக்கியாயிற்றா? சரி, தொலைந்து போகட்டும், சிறுவர்களே, நான் உங்கள் இருவரையும் என் மாணாக்கர்களாக ஏற்றுக் கொள்ளுகிறேன்.  ஆனால் நீங்கள் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   வீணாக்கிய நான்கு வருடங்களுக்கும் சேர்த்துக் கடுமையான உழைப்புக்கு நீங்கள் இருவரும் தயாரா?” இதைக் கேட்கும்போதே துரோணரின் முகபாவம் மாறி மிகவும் மென்மையானது.  ஒரு தந்தையின் அன்பு அதிலே தெரிந்தது.  அவர் கண்களில் தெரிந்த அன்பைக் கண்டு தைரியம்  கொண்ட சிறுவன் ஒருவன் தன் நடுங்கும் கரங்களைக் கூப்பிய வண்ணம், “ அப்படியே குருதேவரே!” என்று வணங்கினான்.  துரோணர் அன்புடன் இருவரையும் தன்னருகே அழைத்தார்.  இருவரையும் கட்டி அணைத்து உச்சி மோந்தவண்ணம், “நீங்கள் இருவரும் கடுமையாக உழைத்துக் கற்றுக் கொண்டால் நீங்கள் கற்கவேண்டியது அனைத்தையும் கற்றுக்கொடுக்க நான் தயாராக உள்ளேன். “ என்று கூறினார்.  இதைக் கேட்ட சிறுவர்கள் மனம் நிறைந்து கண்கள் பொங்கி வழிந்தன.  துரோணரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அதன் பின்னர் வந்தான் ஒரு திடகாத்திரமான வாலிபன்.  அவன் முகத்தில் மிகக் கஷ்டப்பட்டு மறைக்க முயற்சி செய்த குடும்பப் பாரம்பரியப் பெருமை தொக்கி நின்றது.  துரோணரைப் பார்த்த வண்ணம் வந்தான்.  “இவன் பெயர் அங்காரகன் ஆசாரியரே!  காம்போஜத்திலிருந்து வந்துள்ளான்.  யுவராஜா துரியோதனனின் மனைவி இளவரசி பானுமதிக்குச் சொந்தம்.” என்றான்.  “உன் வயது என்ன?” துரோணர் கேட்டார்.  “பதினாறு” என்றான் அங்காரகன்.  அவன் முகம் பெருமையுடன் புன்னகையால் மலர்ந்தது.  “இவ்வளவு வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?  “  அவனுடைய இந்த தாமதமான வரவில் தன் அதிருப்தியை அந்தக் கேள்வியிலேயே தெரிவித்தார் துரோணர்.  “மல்யுத்தம் செய்தேன்; குதிரை ஏற்றம் பழகினேன்; வேட்டையாடினேன்.” அங்காரகன் தன்  தகுதிகளை மிகப் பெருமையுடன் சொல்லிக் கொண்டான்.  அவன் குரலில் மிகுந்த தன்னம்பிக்கையும் காணப்பட்டது.  “பின்னர் எதற்காக நீ குருகுலத்துக்கு வருகிறாய்? “துரோணர் கேட்டார்.  “தந்தையின் விருப்பம் அது குருதேவரே.  ஒரு சிறந்த போர் வீரனாக நான் பயிற்சி பெற நீங்களே தக்க குரு எனத் தந்தையின் விருப்பம்.  அவரின் முடிவான தீர்மானம்.”  என்றான் அங்காரகன்.  “உன் மனதில் சிறந்த போர்வீரனாக மாற வேண்டும் என்ற விருப்பம் உனக்குள்ளே உள்ளதா?” இகழ்ச்சியுடன் கேட்டார் துரோணர்.  துரோணரின் இந்த நடவடிக்கை அந்த இளைஞனைச் சிறிதும் பாதிக்கவில்லை.  அவன் சிரித்துக் கொண்டே, “  நான் ஏற்கெனவே ஒரு சிறந்த போர்வீரனாக உருமாறி வருவதாகத் தந்தை நினைக்கிறார்.” என்றான்.

“நீ என்ன நினைக்கிறாய்?  அதைச் சொல்!” என்றார் துரோணர்.  மீண்டும் புன்முறுவலோடு அவன், “நான் எல்லாப் போர்வீரர்களையும் போல அவர்களையும் விட சிறந்த வீரன் என நினைக்கிறேன்.” என்றான்.  கடுமையாகக் காணப்பட்ட துரோணரின் முகத்திலும் புன்முறுவல் கீற்றுப் போல் தெரிந்து மறைந்தது.  “அப்படியா? சரி, போகப் போகப் பார்க்கலாம்!” என்றவர், ஷங்கனை அழைத்தார்.  “ஷங்கா,  இவனுக்காக ஒரு தேர்வுப் போட்டியை ஏற்பாடு செய்!  மல்யுத்தம், வேட்டையாடுதல், குதிரை ஏற்றம், தண்டங்களை வைத்துப் போர் புரிதல் ஆகியவற்றில் போட்டிகள் ஏற்பாடு செய்! இவனுக்கெதிராக, சுகர்ணனைத் தயார் செய். “ என்று சொல்லிக் கொண்டே அங்காரகனிடம் திரும்பி, “சுகர்ணனுக்குப் பதின்மூன்று வயதே ஆகிறது.  உன்னால் முடிந்தால் அவனைத் தோற்கடித்துப் பார்!” என்றார்.  அங்காரகன் சிரித்த வண்ணம், “அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறேன்.” என்றான்.  “அப்படியா சொல்கிறாய்?  அப்படி என்றால், உனக்கு இங்கே பயிற்சி எதுவும் தேவை இருக்காது.” என்று நிதானமாகச் சொன்னார்.

“ஒருவேளை அவன் என்னைத் தோற்கடித்துவிட்டால்?” அங்காரகன் கேட்டான்.   அதைக் கேட்ட துரோணர் கலகலவென வெளிப்படையாகச் சிரித்தார்.  “தம்பி, அவன் உன்னைத் தோற்கடித்துவிட்டால் என் குருகுலத்தில் அதாவது யுத்தசாலையில் உனக்கு இடம் இல்லை!” என்றார்.  “என்ன, இடம் இல்லையா? ஏன்?” என்றான் அங்காரகன்.  “ஏன் எனில், ஒரு நல்ல மாணாக்கனுக்கு இருக்க வேண்டிய பணிவோ, விநயமோ உன்னிடம் இல்லை.” மீண்டும் அலட்சியமாகப் பேசிய துரோணர் அதே அலட்சியத்துடனும், தான் அங்கே தலைவன், தன் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை  எனப் புரியும் வண்ணம் கம்பீரம் குறையாமலும் தன் கைகளின் அசைவின் மூலமே அவனை அங்கிருந்து வெளியேற்றினார்.  அங்காரகன் அங்கிருந்து சென்றதும்,  காத்திருந்த நான்காவது இளைஞனை அங்கே அழைத்து வந்தான் ஷங்கன்.  ஒரு துறவியைப் போல் உடை தரித்திருந்தான் அந்த இளைஞன்.  இவனைத் தான் ஒரு இளைஞன் என்று சொல்வதை விட இளம்பெண் எனச் சொல்லலாம் என்று ஷங்கன் கூறி இருந்தான்.   அவன் பார்க்கவும் அப்படியே மிக அழகாக இருந்தான்.  பட்டுப் போன்ற மென்மையான உடலுடன், அழகான வடிவமைப்புடன் கூடிய திருத்தமான முகமும், நீண்ட விசாலமான நயனங்களும்,  தீர்க்கமான மூக்கும், முகத்தில் அழகாகப்பொருந்தி இருந்த  செக்கச் சிவந்த உதடுகளோடும், அதன் வளைவுகளும் கண்ணைக் கவரும்படி இருந்ததும் பார்க்க அவன் ஒரு பெண்ணைப் போலவே இருந்தான்.

அவன் மெதுவாக மிக மெதுவாக நடந்து வந்தான்.  கொஞ்சம் தயங்கிய வண்ணம் வந்த அவன் நடையில் கண்ணுக்குப் புலப்படாத பெண்மையின் நளினம் நிறைந்திருந்தது.  பட்டுப் போன்ற அவன் கேசம் உச்சியில் முடியப்பட்டிருந்தது.  நீண்ட கேசம் என்பதும் புரிந்தது.  அவன் உடுத்தி இருந்த மான் தோலால் ஆன உடைக்குக் கீழே தெரிந்த அவன் இடை ஒரு பெண்ணின் இடையைப் போல் வளைந்து சிறுத்து நெளிவுகளைக் காட்டியது.  இப்படி எல்லாம் இருந்தும், அவன் வலுவானவாகவும், பலம் மிகுந்தும், தன்னைத் தானே ஆண் என்று சொல்லும்படியான உறுதியோடும் காணப்பட்டான்.  உள்ளே வந்தவன் துரோணரை வணங்கினான்.   அவன் வணங்கிய முறையிலிருந்தே நல்ல குடும்பப் பாரம்பரியம் உள்ளவன் என்பதைப் புரிந்து கொண்டார் துரோணர்.  இவனுடைய தனித்தன்மை நிறைந்த இந்தத் தோற்றம் துரோணரைக் கவர்ந்தது.  இவன் விசித்திரமான ஆணும், பெண்ணும் கலந்த கலவையாக இருக்கிறான் என நினைத்துக் கொண்டார் துரோணர்.  அவனிடம் அவருக்கு ஆவல் மிகுந்தது. அனைவரின் கவனத்தையும் கவரும் அந்த இளைஞன் தன் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் இயல்பான பணிவோடும், விநயத்தோடும்  துரோணர் பேசுவதைக் கேட்கத் தயாராக இருக்கும் நிலையில் நின்றான்.  “ நீ தான் இரு நாட்களுக்கு முன்னர் யுத்தசாலைக்குக் கல்வி கற்க வந்தவனா?” துரோணர் எப்போதேனும் வெளி மனிதர்களிடம் அபூர்வமாய்க் காட்டும் கருணையை அந்த இளைஞனிடம் காட்டிக் கேட்டார்.  “ஆம், குருதேவா!”  என்றான் அவன்.  “உன் பெயர் என்ன?” துரோணர் கேட்டார்.

“என் பெயர் ஷிகண்டின் குருதேவரே!  இரண்டு நாட்கள் முன்னர் படகு வழியே நான் இந்த யுத்தசாலைக்குக் கல்வி கற்க வந்து சேர்ந்தேன். “ அவன் என்னதான் முயன்று ஆணைப் போல் திடமாகவும், பலத்தைக் காட்டியும் பேச முயன்றாலும் அந்தக் குரல் பெண்மை மிகுந்து இனிமையாகவே தொனித்தது.  “நான் உன்னைப் பார்த்துப் பேசும்வரை உணவு எடுத்துக் கொள்ளவும் மறுத்துவிட்டாயாமே?” துரோணர் கேட்டார்.  கைகளைக் கூப்பியவண்ணமே தலை குனிந்து, “ஆம், ஐயா!” என்றான் ஷிகண்டின்.

“ஏன்?”

“உங்கள் மாணாக்கனாக வேண்டும் என்பதே என் லக்ஷியம்.  வாழ்க்கையின் அந்த லக்ஷியம் பூர்த்தி அடையவில்லை எனில், உயிர் வாழ்வதில் என்ன பயன்?”

“உன் கோத்திரம் என்ன, பிரமசாரி?”

“நான் பிராமணன் அல்ல ஆசாரியரே, க்ஷத்திரியன்.  கெளசிக கோத்திரத்தைச் சேர்ந்த க்ஷத்திரியன்.”




4 comments:

கதம்ப உணர்வுகள் said...

துரோணர் பிள்ளைகளை குருகுலத்தில் சேர்க்கும் விதம் படிக்கும்போது ஏனோ எனக்கு இந்தக்காலத்து பிள்ளைகள் ஸ்கூலில் சேர்வது நினைவுக்கு வந்தது.


அந்தக்காலத்தில் குருகுலம் என்றால் எத்தனை கட்டுப்பாடு... இரண்டு பிள்ளைகளும் 4 ஆண்டுகள் வீண் செய்ததைச்சொல்லி காரணம் அறிந்தப்பின் மென்மையான குரலுடன் அதிகமாக உழைக்கச்சொல்லி இப்ப இருக்கும் அநேக ஆசிரியர்கள் இந்த பத்தி படிக்கவேண்டும்...

கண்டிப்பான குருவாக துரோணர்...

தற்பெருமைக்காரனக அங்காரகன்....

ஷிகண்டின்.... ம்ம் சுவாரஸ்யம் கூடுகிறது...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கீதா.. தொடருங்கள், தொடர்கிறோம்பா...

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பகுதிக்கு வந்திருக்கிறோம். தொடரக் காத்திருக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“நான் உன்னைப் பார்த்துப் பேசும்வரை உணவு எடுத்துக் கொள்ளவும் மறுத்துவிட்டாயாமே?” துரோணர் கேட்டார்.

கைகளைக் கூப்பியவண்ணமே தலை குனிந்து, “ஆம், ஐயா!” என்றான் ஷிகண்டின்.//

சுவாரஸ்யமான பதிவு. தொடரட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

துரோணரின் குருகுலம் சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது..!