Wednesday, May 28, 2014

என் தர்மம் எது எனக் காட்டு கோவிந்தா!

“ஆம், வாசுதேவா, ஆம். உண்மை.  நீ சொல்வது முற்றிலும் உண்மை.  ஒரு மட்டமான விஷயத்தில் நான் மிகப் பெருமை கொண்டிருந்தேன்.  அதோடு என் தந்தையின் சபதமும், ஆசையும் பூர்த்தி அடைய வேண்டும் என்னும் ஆவலும், ஆர்வமும் கொண்டிருந்தேன்.  அவர் பழி வாங்குவதைக் காணவும் ஆவலொடு காத்திருந்தேன்.  ஆகவே நான் நானாக இருக்காமல் என் தந்தையின் பெண்ணாகவே இருந்து வந்திருக்கிறேன்.  என் சுயத்தை இழந்திருக்கிறேன். ஆனால் அந்த விலையை அவரின் பிரியத்துக்கும்,விசுவாசத்துக்கும் உகந்த மகளாக நிறைவேற்றியே கொடுத்திருக்கிறேன்.  இப்போது தோன்றுகிறது, நான் ஓர் அரச குடும்பத்திலேயே பிறந்திருக்கக் கூடாது.  சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்.” மிகவும் வருத்தத்துடன் இந்த வார்த்தைகளைக் கூறிய வண்ணம் திரௌபதி நிமிர்ந்து கண்ணனைப் பார்த்தாள்.  அவனோ சிரித்துக் கொண்டிருந்தான்.  அவளையே பாசத்துடனும், கருணையுடனும் பார்த்துச் சிரித்தான் வாசுதேவக் கிருஷ்ணன்.  திரௌபதிக்கு வெட்கம் மிகுந்து விட்டது.

“கிருஷ்ணா!” என அவளை அவளுடைய தனிப்பட்ட பெயரைக் குறித்து முதல்முறையாக அழைத்தான் வாசுதேவ கிருஷ்ணன்.  மிகவும் பாசத்துடனும், பிரியத்துடனும், அவளிடம் சொன்னான்;  “உன் குடும்பத்தையும், தந்தையையும் குறித்து நீ கொண்டிருக்கும் பெருமை சரியானதே.  அதில் தவறில்லை. தர்மத்தோடு, அரச தர்மத்தோடு பின்னிப் பிணைந்த ராஜாங்கமும் அதன் அரசனும் சாமானியமானவர்கள் அல்ல.  மிகப் பெரியவர்கள்.   மிகப் பெரிய விஷயமும் கூட.  தர்மத்தை அடைய நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் போராடி வருகிறேன் என்பது எனக்குத் தான் தெரியும்.  எவ்வளவு போராடி இருக்கிறேன் தெரியுமா?” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால் நீ சந்தோஷமாகவே இருக்கிறாய் வாசுதேவா!”

“ஆம், கிருஷ்ணா, நான் சந்தோஷமாக இருக்கிறேன் தான்.  ஏனெனில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் தர்மத்தின் பாதையிலேயே வாழவும், அதற்காகவே போராடவும் செலவழித்து வருகிறேன்.  அதிலிருந்து பிறழ்ந்து வாழ நான் விரும்பியதில்லை.”

“ஆனால் நான் சந்தோஷமாக இல்லை வாசுதேவா!  ஒருவேளை நான் சுய தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் வாழ்வதாலோ!  தெரியவில்லை.   தர்மத்தின் பாதையில் வாழ்வது எப்படி என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை வாசுதேவா.  என் சுய தர்மம் தான் என்ன? அதை எனக்குக் காட்டுவாயா?  கோவிந்தா, காட்டுவாயா?” திரௌபதிக்கே தெரியாமல் அவள் கண்ணனுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கும் கோவிந்தன் என்னும் பெயர் அவள் வாயில் அந்நேரம் வந்தது.  அப்போது தான் அவளுக்குச் சட்டெனத் தான் கண்ணனுடன் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டுவிட்டோம் எனப் புரியவும் வந்தது.  அவள் உடல் சிலிர்த்தது.

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு திரௌபதி.  அதை அவரவரே கண்டு பிடிக்க வேண்டும்.  தர்மத்தின் பாதைகளும் பலவகைப்படும்.  அதில் உன் பாதையை நீ தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

“அது சரி வாசுதேவா!  இந்த நிமிஷத்தில் என்னுடைய சுய தர்மம் தான் என்ன?” திரௌபதி கேட்டாள்.

“நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் இந்த சுயம்வரத்தை எதிர்கொள், கிருஷ்ணா!  ஆர்யவர்த்தத்தின் தலை சிறந்த வில் வீரனை உன் மணமகனாய்த் தேர்ந்தெடுப்பாய்!  அவனை உன் மணாளனாக ஏற்றுக் கொண்டு அவன் காலடிகளை ஒட்டி நீயும் நட.  அவன் எங்கே சென்றாலும் உடன் செல்.  அவனுக்கு நீ அளிக்கப் போகும் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் உன்னை அர்ப்பணிப்பதன் மூலமும் ஒரு மாபெரும் தர்ம சாம்ராஜ்யத்தை உருவாக்கு!”

“என் தந்தை என்ன ஆவார்?”

“நீ தர்மத்தைக் கடைப்பிடித்து அதன் பாதையில் சென்றாலே உன் தந்தை வெற்றியை அடைவார் கிருஷ்ணா!  அது தான் அவர் வெற்றியே.  துரோணர் தோல்வியைத் தான் அடைவார்.  அது எப்படி எனக் கேட்கிறாயா?  நீ நினைக்கும் யுத்தங்களில் அல்ல.  அது வாழ்க்கையைத் தான் முடிக்கிறது.  உயிரைத் தான் எடுக்கிறது.  ஆனால் தர்மத்தின் பாதையில் செல்பவர்களுக்குக் கொடுங்கோன்மை, கர்வம், வெறுப்புப் போன்றவற்றை வெல்வதில் வெற்றி கிட்டும். இது சாமானிய வெற்றி அல்ல.” கிருஷ்ணன் சொன்னான்.

“நீ என் தகப்பனாக இருந்திருந்தால் இப்போது எப்படி நடந்து கொள்வாய்?”திரௌபதி கேட்டாள்.

“நான் உன் தகப்பனாக இருந்தால்---- துரோணருக்கு அவர் வாழ்நாள் முழுதும் மறக்க முடியா வண்ணம் ஒரு பாடம் புகட்டுவேன்.  அவருடைய பிராமணத்துவம் என்னும் உயர்ந்த நிலையில் இருந்து அவர் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் என்பதை உணர்த்துவேன்.  அதுவும் எப்படி?  உன் தந்தையை அவர் அவமானம் செய்தாரே அன்றே அவர் தன் மங்காப் புகழின் உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுவேன். “ என்றான் வாசுதேவன்.

“ஓஹோ, வாசுதேவா,   துரோணராவது, தன் தோல்வியை ஒப்புக்கொள்வதாவது!  ஒரு நாளும் நடவாத காரியம்.” திரௌபதி சொன்னாள்.

 “ஓஹோ, நீ மிகவும் நிச்சயமாய்ச் சொல்கிறாயே?  ஏன் அப்படி?” சிரித்தவண்ணம் கேட்ட கிருஷ்ண வாசுதேவன் பேச்சை மாற்றினான்.  “போகட்டும், இப்போது நம்மை எதிர்கொள்ளும் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது எனப் பார்க்கலாம்.  திரௌபதி, நான் திரும்பவும் உன்னைக் கேட்கிறேன்.  உன் மனதில் எந்த வீரனாவது இருக்கிறானா? யாரையாவது நீ மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாயா?”

‘எனக்கு அப்படி எல்லாம் யாரும் இல்லை.  விருப்பு, வெறுப்பே இல்லை.  நீ யாரைச் சுட்டிக் காட்டுகிறாயோ அவரைத் தேர்ந்தெடுப்பேன்.” மிகப் பணிவோடும், உண்மையான நம்பிக்கையுடனும் சொன்னாள் திரௌபதி.  “அப்போது நான் சொல்வதைக் கேள் கிருஷ்ணா!  நான் ஏற்கெனவே சொன்னது போல் என் பாரத்தை, என் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்.” என்றான் வாசுதேவன்.  “நான் எப்படி உனக்கு உதவி செய்ய முடியும்?” என்றாள் திரௌபதி.  “ஜராசந்தனைக் கண்டு கலங்காதே. பயப்படாதே.  அவனால் போட்டியிலும் வெல்ல முடியாது.  உன்னைத் தூக்கிச் செல்லவும் முடியாது.” என்றான் கிருஷ்ணன் திட்டவட்டமாக.

“உனக்கு எப்படித் தெரியும்?” திரௌபதி கேட்டாள்.

“அவன் வயது, முதுமை, வளைந்த உடல்!  அவனால் ஒரு போதும் போட்டியில் வெல்ல முடியாது.”

“ஆனால் அவனால் என்னைக் கடத்திச் செல்ல முடியும்!’ திரௌபதி கூறினாள்.

 “நிச்சயமாக உன்னைக் கடத்த முடியாது.  அப்படி அவன் உன்னைக் கடத்தினால் என் பிணத்தைத் தாண்டித் தான் செல்ல முடியும்.  நான் மட்டுமல்ல. என்னுடன் வந்திருக்கும் யாதவ மஹாரதர்கள், அதிரதர்கள் அனைவரின் பிணங்களையும் தாண்டியே அவன் உன்னைக் கடத்திச் செல்ல வேண்டும். “ கண்ணன் உறுதிபடக் கூறினான்.


1 comment:

ஸ்ரீராம். said...

தர்மம் மிகவும் சூட்சுமமானது. தர்மத்தின் வழியில் நடக்கிறோம் என்ற உணர்வே கவலையில்லாத சந்தோஷத்தைத் தருகிறது. ஜராசந்தன் விஷயத்தில் கண்ணனின் உறுதி!