Thursday, June 12, 2014

அஸ்வத்தாமா சத்தியம் செய்கிறான்!

இருவரில் அனுபவம் மிக்க ஷகுனி உடனடியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டான்.   தான் இதைக் கேட்டுப் பாதிப்பு அடையாதவன் போல் காட்டிக்கொள்ளப் பிரயாசைப் பட்டான்.  சோகம் ஒன்றையும் வரவழைத்துக் கொண்டான். மிகுந்த சோகத்துடன் இருப்பவன் போல் காட்டிக்கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டு! “ஆஹா, ஆஹா, என்ன சொல்ல, என்ன சொல்ல!  ஐந்து சகோதரர்களும் இறந்துவிட்டனரே!  ஒருவர் கூடத் தப்பிக்கவில்லையே!  மனிதர்களில் மிகவும் சிறந்த உயர்குடிப் பிறப்பில் பிறந்த உயர்வான மனிதர்கள்!  அதிலும் அந்த அர்ஜுனன் இருந்தானே!  அவன் மிகச் சிறந்த வில்லாளி!  சிறந்த வில்லாளி!  நம் யுவராஜாவைப் போலவே!  நம் யுவராஜாவின் மென்மையான இதயம் ஐந்து சகோதரர்களின் துர்ப்பாக்கியமான முடிவைக் கேட்டதும் சுக்கு நூறாக உடைந்து விட்டது. அவரால் இதைத் தாங்க முடியவில்லை.  ஆனால் விதியை எவரால் வெல்ல முடியும்?”

ஷகுனியின் இந்திரியங்களும் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டாற்போலக் காணப்பட்டன.  அவன் கண்கள் கண்ணீரை மழையென வர்ஷிக்கத் தயாராக இருந்தன.  அவனுக்கு எப்போது தேவையோ அப்போது கண்ணீர் வரும்படியாக அவன் கண்களைப் பழக்கி இருந்தானோ?  அஸ்வத்தாமாவுக்கோ இந்தப் பேச்சைத் தொடருவதில் சற்றும் பொறுமை இல்லை.  எனினும் ஏதேனும் சொல்லவேண்டுமே!

“மாட்சிமை பொருந்திய அரசே, கர்ணன் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.  அவன் ஒரு தேரோட்டியால் வளர்க்கப்பட்ட மகன். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் கர்ணனை விட நான் மிகச் சிறந்த வில்லாளியாவேன்!” இதைப் பணிவுடனே சொல்ல நினைத்த அஸ்வத்தாமா அதில் தோற்றுவிட்டானோ என்னும்படி இருந்தது.

“ம்ம்ம்ம் ..அப்படி என்றால் உங்கள் யுவராஜா இந்தப் போட்டியில் வென்றுவிடுவது நிச்சயமாகி விட்டது!” என்றான் துருபதன்.  அனைவர் மனதிலும் நல்லெண்ணத்தை உண்டாக்கும்படியாக நிரந்தரமாக ஒரு சிரிப்பை முகத்திலேயே தேக்கி வைத்திருக்கும் ஷகுனி இப்போது குறுக்கிட்டான். “எனக்கு அதில் சந்தேகமே இல்லை அரசர்க்கு அரசே!  உங்கள் அழகான மகளை மணக்க வீரம் நிறைந்த துரியோதனனை விட்டால் வேறு எவருமே இல்லை என்பதே உண்மை! இப்படி ஒரு மருமகன் கிடைக்க நான் தவம் செய்திருக்க வேண்டும் மன்னா!  ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவர் இந்த குரு வம்சத்து ராஜ்யத்துக்கு மட்டுமின்றி ஆர்யவர்த்தத்துக்கே மாபெரும் சக்கரவர்த்தியாக ஆகப்போகிறான்.”

துருபதனுக்கு எரிச்சல் மூண்டது.  என்றாலும் மௌனம் காத்தான்.  அப்போது ஷகுனி துருபதனிடம்  “நாம் பழசை எல்லாம் மறந்து விடுவோம்.  அதன் மூலம் ஏற்பட்ட மனக்கசப்பை மறப்போம். அதற்காகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்!  என்ன அஸ்வத்தமா, நான் சொல்வது சரிதானே?” என்றான்.  துணைக்கு அஸ்வத்தாமாவையும் அழைத்துக் கொண்டான்.

“ஆம், நான் இங்கே ஒரு புனிதமான வாக்குறுதியை அளிக்கவே வந்துள்ளேன், அரசே!” என்றான் அஸ்வத்தாமா.  “அப்படி என்ன வாக்குறுதியை நீ எனக்கு அளிக்கப்போகிறாய்?” துருபதன் கேட்டான். அஸ்வத்தாமா கூறினான்:  “சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.  ம்ம்ம்ம்ம், வாசுதேவ கிருஷ்ணன் தான் கூறினான்.  யுவராஜா இளவரசி திரௌபதியைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும்போது என் தந்தை ஆசாரியர் துரோணர் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லக் கூடாது என!  அதற்கு நான் பாடுபட வேண்டும்.  ஆகவே நான் இங்கே உங்களுக்கு அதற்காகவே ஒரு சத்தியம் செய்து கொடுக்க வந்தேன்.  இது உறுதியான சத்தியம்.   உங்கள் குமாரி திரௌபதி யுவராஜாவை மணந்து கொண்டால் என் தந்தை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லாமல் நான் பார்த்துக்கொள்வேன்.  இதற்காக என் உயிரைக் கொடுக்க நேர்ந்தாலும் கொடுப்பேன்.”

வாய் திறந்து எதுவும் பேசாமலும், தன் முகத்திலும் எவ்வித உணர்வுகளையும் காட்டாமலும் துருபதன் மௌனமாகவே இருந்தான்.  ஆனால் அப்போது ஒரு கரகரப்பான நடுங்கும் குரல் பேசியது: “ எங்கள் சகோதரி குரு வம்சத்து யுவராஜாவுக்கு பட்டமகிஷியாக ஆவதற்கு ஆசாரியர் துரோணர் ஒத்துக்கொள்வாரா?  அது பற்றி உனக்கு நிச்சயமாகத் தெரியுமா அஸ்வத்தாமா?  உறுதியாக உன்னால் சொல்ல முடியுமா?”  இதைக் கேட்ட துருபதனுக்கு மனதில் கோபம் வந்தது.  புருவங்கள் நெரிய முகச் சுளிப்புடன் தன் குழந்தைகள் நின்றிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான்.  தான் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து  விருந்தாளிகளோடு விவாதிக்கையில் எப்படி நம் குழந்தைகளில் ஒருவர் சற்றும் நாகரிகம் இல்லாமல் அதில் தலையிட்டுத் தன் கருத்தைக் கூற முடியும்?  அதிலும் அவர்களை யாரும் கேட்கவும் இல்லை;  வந்திருக்கும் புதியவர்கள் முன்னால் இப்படியா நடந்து கொள்வது?

அந்த விசித்திரமான குரல் வந்த திக்கை நோக்கி  அனைவரின் விழிகளும் திரும்பின. த்ருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் விலகி வழிவிட, மெல்ல மெல்ல நடந்து முன்னால் வந்தான் ஷிகண்டின்.  மிகக் களைத்திருந்த அவனுடைய முகம் உணர்ச்சிவசப்பட்டு சிவந்து காணப்பட்டது.  ஷகுனிக்குத் தூக்கிவாரிப் போட அஸ்வத்தாமாவோ தன் பார்வையாலேயே அவனை எரித்துவிடுவது போல் பார்த்தான்.  முதலில் கோபம் கொண்ட துருபதனோ அந்தக் கேள்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதோடு அல்லாமல் ஷிகண்டினை அந்த க்ஷணத்துக்கு மன்னிக்கவும் செய்தான்.  இந்த நேரிடையான, வெளிப்படையான கேள்விக்கு அதே மாதிரி நேரிடையான, வெளிப்படையான பதிலையும் எதிர்பார்த்து அஸ்வத்தாமா பக்கம் திரும்பிப் பார்த்தான்.  அஸ்வத்தாமாவுக்கு எரிச்சல் வந்தாலும் ஷிகண்டினை அடையாளம் கண்டு கொண்டான்.  தந்தையிடம் சீடனாக வந்து சேர்ந்தவன்.

ஆனால் இவன் ஒரு புதிராகவன்றோ இருக்கிறான்!  அங்கே ஒரு துறவியைப் போன்று அல்லவோ  காணப்பட்டான்.  இங்கே ஓர் இளவரசனுக்குரிய உடைகளை அணிந்து காணப்படுகிறானே!இந்த இளைஞனின் மடத்தனமான துணிச்சலைக் கண்டு வியந்தான் அஸ்வத்தாமா! “நீ…நீ… ஓஹோ, யுத்தசாலையில் காணப்பட்ட துறவி அன்றோ!” எனத் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

“இவன் என் மகன், ஷிகண்டின்!” என்றான் துருபதன்.  அஸ்வத்தாமாவின் திமிரான பேச்சினால் அதிருப்தி அடைந்த துருபதன் அவனுடைய தன்னம்பிக்கை ஆட்டம் கண்டதையும் லக்ஷியம் செய்யவில்லை.  ஆனால் ஷகுனியோ நிலைமையைச் சரிவரப் புரிந்து கொண்டு தன்னை உடனடியாகச் சமாளித்துக் கொண்டுவிட்டான்.  உடனேயே பேச ஆரம்பித்தான். “இளவரசே, தாங்கள் தவறாகப் புரிந்து கோண்டுள்ளீர்கள்.  ஆசாரியர் துரோணர் தன் உயிரை விட, உங்களை விட, அவர்களின் சீடர்கள் அனைவரையும் விடத் தன் மகன் அஸ்வத்தாமாவை மிகவும் நேசிக்கிறார்.  அந்த அஸ்வத்தாமா தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் சத்தியம் உடைந்து போக அவர் விரும்ப மாட்டார். “

துருபதனுக்கு இந்தச் சந்திப்பை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் எனத் தோன்றியது.  அஸ்வத்தாமாவைப் பார்த்து, “நீ மிகவும் உயர்ந்த மனிதன் அஸ்வத்தாமா!  இப்படி ஒரு சத்தியம் செய்து கொடுக்க மிக உயர்ந்த மனம் வேண்டும்.  அதோடு இல்லாமல் நீ யுவராஜாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பனும் கூட.   சந்தர்ப்பம் வந்ததெனில் உன்னுடைய சத்தியத்தை நான் நினைவில் கொள்கிறேன்.  உன் வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் கவனம் கொள்கிறேன்.”  என்று சொன்னவண்ணம் தன் ஆசனத்திலிருந்து எழுந்துவிட்டான் துருபதன்.

“என்ன நடந்தாலும், எதுவானாலும் நான் நிச்சயமாக என் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன்.” என்ற வண்ணம் அஸ்வத்தாமாவும் எழுந்தான்.  “நாங்கள் உங்களிடம் விடை பெறுகிறோம், மன்னர் மன்னா! நாளை மாலை இளவரசி திரௌபதி எங்கள் கூடாரத்துக்கு யுவராஜாவின் மணமகளாக வரும்போது வரவேற்புக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை நான் கவனிக்க வேண்டும். “ என்று பெருமிதமாகச் சொன்னான் ஷகுனி.   துருபதன் அவர்களின் வணக்கத்தை மிக அலக்ஷியமாகப் பெற்றுக்கொண்டு தலை அசைத்து விடை கொடுத்தான்.  அவர்கள் அனைவரும் சென்றதும் துருபதன் தன் மக்கள் பின் தொடரத் தன் படுக்கை அறை நோக்கிச் சென்றான்.  சத்யஜித்திடம் தன் கிரீடத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு அங்கே கூடவே வந்திருந்த ஷிகண்டினையே உற்றுப் பார்த்த வண்ணம் படுக்கையில் அமர்ந்தான்.  பின்னர் அவனிடம்,”ஷிகண்டின், எதற்காக அப்படி ஒரு கேள்வியைக் கேட்டாய்?  அதன் மூலம் நீ என்ன நினைக்கிறாய்?” என்றான் துருபதன்.

“தந்தையே, நான் முரட்டுத்தனமாக/அல்ல மூடத்தனமாக உங்கள் பேச்சு வார்த்தையின் போது குறுக்கிட்டதற்கு என்னை மன்னிக்கவும்.  காப்பாற்ற முடியாததொரு கஷ்டமான சத்தியத்தை அஸ்வத்தாமா கொடுக்கையில் என்னால் சும்மா இருக்க இயலவில்லை.  அஸ்வத்தாமா செய்திருக்கும் சத்தியத்தை அவனால் காப்பாற்ற முடியாது. “



1 comment:

ஸ்ரீராம். said...

வாரே வாஹ்... கமான் ஷிகண்டின்!