Sunday, June 22, 2014

ஜராசந்தா! நூறு அரசர்களின் தலையைக் கொண்டுவா!

ஜராசந்தன் மிகவும் புத்திசாலி.  அவனுக்கு எதையும் உடனே கிரஹித்துக் கொள்ளும் சக்தி இருந்தது.  ஆகவே தான் எத்தகையதொரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொள்வோம் என்பது அவனுக்குப் புரிந்தே இருந்தது. இந்தச் சுயம்வரத்தின் போட்டியில் அவன் மட்டும் பங்கெடுத்துக் கொண்டால் நடக்கப்போகும் விளைவுகள் அனைத்தும் அவன் கண்ணெதிரே தோன்றின. கிருஷ்ணன் மீண்டும் புன்னகைத்தான்.

“ஒருவேளை உனக்குள் இந்தப் போட்டியைக் குறித்தும் சுயம்வரம் குறித்தும் வியந்து போற்றும் எண்ணம் தோன்றலாம்;  அது இயற்கையான ஒன்று. அப்போது நீ போட்டியைக் குறித்த உன் வியப்பைத் தெரிவித்துவிட்டு, மணமகளான திரௌபதியையும் வாழ்த்தி ஆசி கூறிவிட்டுப் பின்னர் பின் வாங்கிச் செல்வாய்! உனக்கு என்னுடைய ஆலோசனைகள் பிடிக்கவில்லை எனில்  போட்டியில் இறங்கி அதன் விளைவுகளையும் சந்திப்பாய்!  ஆனால் நான் உனக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என்று மட்டும் சொல்லாதே!”

ஜராசந்தனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அவன் தலை சுழன்றது.  அவனுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்த கோபாக்னியானது வெளியேறத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தது.  ஒரு சிறு இடைவெளி கிடைத்தால் கூடப் போதும்.  அவனுடைய கோபம் எல்லாம் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போல் பொங்கி வருவதோடு இல்லாமல் அவன் தன் வெறும் கைகளாலேயே கிருஷ்ணனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவான்.   ஆனால்…..ஆனால்…. அது தானே இயலாத ஒன்றாகிவிட்டது. இந்தக் கிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை, முழு உண்மை.  இப்படித் தான் நடக்கும்.  இப்போது இந்த நட்ட நடு இரவில் அவனைச் சந்திக்க வந்திருக்கும் விருந்தாளியை அவனால் ஏதும் செய்ய இயலாது என்பதோடு அவன் போட்டியில் கலந்து கொண்டாலோ, திரௌபதியைக் கடத்த நினைத்தாலோ ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்த்தால் மாபெரும் பயங்கரம் காத்திருக்கிறது என்பது புரிகிறது.   இந்த ஆரியர்களும், அவர்களின் நெறிமுறைகளும்!  ஹூம், யாருக்கு வேண்டும் இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம்! ஒவ்வொரு முறையும் அவன் இந்த ஆரியர்களின் உலகில் நுழைந்து அவர்களை வெற்றி கொண்டு மாபெரும் சக்கரவர்த்தியாகத் தன்னை நிலை நாட்டிக்கொள்ள முயலும் போதெல்லாம், ஏதேனும் தடைகள் வருகின்றன.  அவனுடைய ஆசைகள் நிராசைகளாகி விடுகின்றன.

கொஞ்ச நேரத்துக்கு இருவருமே ஏதும் பேசவில்லை.  கிருஷ்ணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து தன் உத்தரீயத்தை எடுத்துத் தோள்களில் போர்த்திக் கொண்டான்.  ஜராசந்தனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மாமன்னா,  நான் எதற்காக தூது வந்தேனோ அந்த வேலை முடிவடைந்து விட்டது.  ஆனால் நான் ஏன் தூது வந்தேன் என்பதை நீ தெரிந்து கொள்ள விரும்புகிறாயா?” என்று கேட்டான்.  ஜராசந்தன் ஏதும் பேசவில்லை;  ஆனால் அவன் கிருஷ்ணனையே பாராதது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.  இந்த இளைஞனை, ம்ஹூம், சிறுவனை நேருக்கு நேர் பார்க்கக் கூடிய அளவுக்கு எனக்கு தைரியம் இல்லாது போனது ஏன்? என்றும் யோசித்துக் கொண்டிருந்தான்.

“நான் எனக்கு நானே சுயம்வரம் நன்கு நடைபெற வேண்டும் என உறுதி மொழி எடுத்துள்ளேன்.  யாராக இருந்தாலும் இந்த சுயம்வரம் நடப்பதற்கு பங்கம் விளைவிக்க முற்படுவதை என்னால் அனுமதிக்க இயலாது.  நான் சொல்வதை எல்லாம் மீண்டும் சிந்தித்துப் பார்!”  என்றான் கிருஷ்ணன்.

அவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமலேயே கிருஷ்ணன் அந்தக் கூடாரத்தை விட்டு வெளியேறினான்.  வெளியே காத்திருந்த உத்தவனுடன் ஆயிரக்கணக்கான மகத வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தப் படைத்தளத்தை விட்டும் வெளியேறினான்.  வெளியே காத்திருந்த மகத வீரர்கள் கிருஷ்ணனை நசுக்கிக் கொன்றுவிடத் தயாராகக் காத்திருந்தனர்.  அவர்களுக்குத் தங்கள் கண்ணெதிரே கிருஷ்ணன் எந்தவிதமான சிறு காயமும் இல்லாமல் வெளியேறிச் சென்றது ஏமாற்றத்தையே கொடுத்தது.  அவர்களையும் அறியாமல் அனைவரும் விலகி வழிவிட உத்தவனை அணைத்துக் கொண்ட வண்ணமே கிருஷ்ணன் மாறாத புன்முறுவலுடன் அங்கிருந்து வெளியேறினான்.

ஜராசந்தன் பிரமிப்போடு கிருஷ்ணன் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.  அவன் மனம் பெரும்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.  தன்னிடம் இவ்வளவு அதிகாரம் இருந்தும், தானும் வலிமை மிக்கதொரு சக்கரவர்த்தியாக இருந்தும், இந்த இளைஞனை ஒன்றும் செய்ய முடியவில்லையே!  அது தான் ஏனென்று ஜராசந்தனுக்குப் புரியவில்லை.  ஒவ்வொரு முறையும் ஏதேனும் தந்திர உபாயங்களை மேற்கொண்டு அவன் கோபமோ, அல்லது அவன் அதிகாரமோ செல்லுபடியாகா வண்ணம் செய்து விடுகிறான்.  இந்த இடையன் யாதவத் தலைவனா?  அற்பன்! அற்பன்!  திடீரென முன்னுக்கு வந்துவிட்டான்.  அவன் கழுத்தை நெரித்து மூச்சுக்கூட விடமுடியாமல் திணற அடித்திருக்க வேண்டும்.  அதைத் தான் ஜராசந்தன் விரும்பினான்.  ஆனால் நடந்தது என்ன!  இந்த அற்பனையும் நசுக்கிக் கொல்ல முடியவில்லை;  ஆரியர்களின் அற்பத்தனமான நெறிமுறைகளையும் மாற்ற முடியவில்லை.  இவற்றை எல்லாம் என் குடைக்குக் கீழ் கொண்டு வந்தால் அடுத்த நிமிடமே உடைத்து ஒன்றுமில்லாமல் பண்ணி விட மாட்டேனா! அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேன் என்கிறதே!

தன் கரங்களால் கண்களை மூடிக்கொண்டான்.  அவன் தலை மீண்டும் சுழன்றது.  அவன் கால்களும், கைகளும் விறைத்துப் போயின.  அவன் வாயைத் திறந்து கொண்டு வேகமாக மூச்சு விட ஆரம்பித்தான். அவன் மூளை வேலை செய்யவில்லை.  எங்கெங்கு நோக்கினும் கருமையான இருட்டே தெரிந்தது.  அவ்வளவு கருமையில் அவனால் யோசிக்கவே முடியவில்லை. ஆனால் அந்தக் கருமையிலும் எலும்புகளால் ஆன மாலையை அணிந்த வண்ணம் ருத்ரன் தோன்றினார்.  அழிவின் கடவுள்!  அப்போது அவனுக்கு அதே வார்த்தைகள், ஏற்கெனவே முன்னொரு முறை அவன் கேட்ட அதே வார்த்தைகள் இப்போதும் கேட்டன! “ ஜராசந்தா, உன்னால் ஆரிய வர்த்தத்தை ஒருக்காலும் வெல்ல முடியாது. குறைந்தது நூறு அரசர்களின் தலைகளைக் கொய்து கொண்டு வந்து எனக்குச் சமர்ப்பணம் செய்!  பின் ஒருக்கால் முடியலாம்.  நினைவில் வைத்துக் கொள்! நூறு அரசர்களின் தலைகள்! “


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தர்ப்பம் கிடைக்காது...

ஸ்ரீராம். said...

சுயம்வரத்துக்கு வராத அரசர்களா? நூறைத் தாண்டுமே!!!!

எதிரியை அவர்கள் இருப்பிடத்திலேயே சந்திக்கும் த்ரில் தனிதான்! என் இளவயதில் இதுபோன்றதொரு ( ! ) சிறு சாகசமொன்று செய்துள்ளேன்! அது நினைவுக்கு வருகிறது!