Thursday, June 5, 2014

மனம் மாறிய துருபதன்!

“தந்தையே, அவனும் தன்னைக்குறித்து இப்படித் தான் கூறிக் கொள்கிறான்.  தான் ஒரு புதிர் எனத் தானே சொல்லிக் கொள்கிறான்.” திரௌபதியின் இந்தப் பதிலைக் கேட்ட துருபதனுக்குச் சட்டென அவன் அதுவரை இருந்த மனநிலை மாறிக் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது.  முகத்தில் புன்னகையுடன் திரௌபதியைப் பார்த்துச் சிரித்தவன், “ சரி, மகளே, இந்த இரவில் என்னால் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க இயலவில்லை.  நான் அதை விரும்பவும் இல்லை;  நீ உன் இஷ்டப்படியே செய்!  ஆனால் ஒன்று எதற்கும் த்ருஷ்டத்யும்னனைக் கலந்து ஆலோசித்துக் கொள்!  நீ சரியான வழியில் தான் செல்வாய் என்றும், சரியானதைத் தான் செய்வாய் என்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”


தந்தையைக் குறும்புடன் பார்த்த திரௌபதி, “தந்தையே, நான் ஷிகண்டினைத் திரும்பவும் அரண்மனைக்கு அழைத்து வருவதைக் கூட வரவேற்பீர்களா?” என்று கேட்டாள்.  “ஏன் அப்படிக் கேட்கிறாய் மகளே?” என துருபதன் கேட்க, திரௌபதி, “தந்தையே, அவன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவிருந்ததை கோவிந்தன் தான் தடுத்து அவனைக் காப்பாற்றி இருக்கிறான்.   அவனை ஓர் முழுமையான ஆண்மகனாக மாற உதவி செய்திருக்கிறான்.  இதன் மூலம் நம் குடும்பத்திற்கு நேரவிருந்த அபகீர்த்தியிலிருந்து நம்மைக் காத்துள்ளான்.  ஷிகண்டின் இப்போது மீண்டும் புதிதாய்ப் பிறந்துள்ளான் தந்தையே!  மறுபிறவி எடுத்து வந்திருக்கும் அவனை நாம் நிராகரித்துவிட்டோமே!” என்றாள் திரௌபதி.


“அவனை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.” என்றான் துருபதன் மீண்டும் சினம் பொங்க!.  “தந்தையே, சாந்தி, சாந்தி!  கொஞ்சம் யோசியுங்கள் தந்தையே, ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.  உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கவும், சந்தோஷப்படுத்தவும் அவன் எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான் என்பதை யோசியுங்கள், தந்தையே! அவன் நாம் இதை வரவேற்போம் என்றே நம்பி இருப்பான்.  அவன் நம்பிக்கையை நாம் நாசம் செய்துவிட்டு அவனை மீண்டும் அந்தப் பழைய நரக நிலைக்கே திருப்பி அனுப்ப நினைக்கிறோம்; அல்ல, அனுப்பிவிட்டோம். “


“எல்லாம் சரிதான் மகளே, இப்போது பார்த்து அவன் திரும்பி வந்திருப்பதன் காரணம் என்ன?”


“எனக்குத் தெரிந்திருந்தால் நான் சொல்வேன் தந்தையே!  நானும் அறியத் தான் முயல்கிறேன்.  ஒருவேளை சுயம்வரம் நடக்கும் இந்தச் சமயத்துக் கொண்டாட்டங்களில் குடும்பத்தோடு தானும் பங்கு பெற வேண்டும் என அவன் நினைத்திருக்கலாம்.  என்னை விட்டுப் பிரிந்து செல்கையில் காணப்பட்ட அவனுடைய நம்பிக்கை இழந்த வருத்தமான அந்தப் பரிதாபகரமான தோற்றமும், அவன் முகத்தில் அப்பிக் கிடந்த கவலையையும் என்னால் மறக்கவே முடியாது.  அவன் இங்கிருந்து திரும்பி வாசுதேவன் இருக்குமிடம் போனதும் அவனிடம் ஒரு குழந்தையைப் போல் அழுது தீர்த்திருக்கிறான்.  வாசுதேவன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.”  என்றாள் திரௌபதி.


தன்னுள்ளேயே நடக்கும்  மனப்போராட்டத்தை அடக்கமுடியாத துருபதன் அங்கிருந்த விளக்கையே இலக்கின்றிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்.  அவன் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.  திரௌபதி மீண்டும் பேசினாள்: “தந்தையே, அவனை இறக்கவிட்டிருக்கலாம் துரோணர் இல்லையா?  அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கக் கூடாது.   தன் ஜன்ம வைரியின் மகன்;  எப்படி வேண்டுமானாலும் இறந்து போகட்டும் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா?  ஆனால் துரோணர் இவ்விஷயத்தில் எதிரியின் மகன் என்பதை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவனை முழுக்க முழுக்கத் தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டு அவனைக் கண்ணும், கருத்துமாய்க் கவனித்து சிகிச்சை அளித்து அவனை ஒரு முழுமையான ஆண்மகனாக ஆக்கியதோடு அல்லாமல் சிறந்த வீரனாகவும் ஆக்கி இருக்கிறார்.   அவனுக்குப் புதிய வாழ்க்கையை அளித்துள்ளார்.  ஒருவேளை இந்த சுயம்வரத்தில் அவனும் கலந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும் என எண்ணி இருக்கலாம்.  தயவு செய்யுங்கள் தந்தையே,  அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.  இல்லை எனில் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது.  அவன் திரும்பி வரும் வரையிலும் என் மனம் தவித்துக் கொண்டிருக்கும்.”


துருபதனுக்குள்ளாக ஒரு சந்தேகம் எழுந்தது;  அவன் அருமை மகள் கிருஷ்ணா மாறிவிட்டாள்.  அவன் மிகவும் வெறுத்த ஷிகண்டின், அவன் மகன் மாறிவிட்டான்.  அவ்வளவு ஏன்?  அவன் ஜன்ம வைரியான துரோணர் கூட அனைத்தையும் மறந்து ஷிகண்டினுக்கு உதவி செய்திருக்கிறார்.  இப்போது பழைய வன்மத்துடன் இருப்பது அவன் மட்டுமே தானோ?  அவன் தான் இன்னமும் துவேஷத்தையும் வெறுப்பையும் காட்டி வருகிறானோ?  துருபதனுக்குள்ளே நடந்து கொண்டிருந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.  பலஹீனமான ஒரு குழந்தையைப் போல் உணர்ந்தான்.  மகளிடம், “கிருஷ்ணா, உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்!” என்று உத்தரவு கொடுத்தான்.   மீண்டும் மீண்டும் அதையே சொன்னவன் மேல் நோக்கிப் பார்த்த வண்ணம் சற்று அமர்ந்திருந்தான்.  பின்னர் சட்டெனத் திரும்பியவன் எழுந்தபடியே திரௌபதியிடம், “ ஷகுனியும் அஷ்வத்தாமாவும் எப்போது வருகிறார்கள் என்பதை எனக்குத் தெரிவிப்பாய்.  நான் அவர்களைக் கட்டாயம் சந்திக்கிறேன்.  யக்ஞசேனன் துருபதனுக்குத் தன் பரம வைரியின் மகனைச் சந்திக்கத் துணிவில்லை என்னும் பெயரை நான் எடுக்க விரும்பவில்லை. “


ஷிகண்டின் குறித்தத் தந்தையின் சிந்தனை மாறியதில் மகிழ்வடைந்த திரௌபதி அங்கிருந்து வெளியே வந்தாள்.  சுயம்வர மண்டபத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த த்ருஷ்டத்யும்னனை வழியிலேயே சந்தித்தாள்.  தந்தையைச் சந்தித்தபோது நடந்தவற்றை அவனிடம் விவரித்தாள்.   தன் சகோதரனிடம், “சகோதரா, தந்தை ஷிகண்டினைத் திரும்பக் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளச் சம்மதம் கொடுத்துவிட்டார்.  இன்றிரவே அவன் திரும்ப வரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.  சுயம்வர மண்டபத்துக்குள் நுழைகையில் என் மனதில் அதிருப்தியோடு நுழைய நான் விரும்பவில்லை.  சத்யஜித்திடம் சொல்லி அவனைத் திரும்பக் கொண்டு விடுமாறு சொல்கிறேன்.”  என்றாள்.


அவளை ஏற இறங்கப் பார்த்த  த்ருஷ்டத்யும்னன் ஆச்சரியம் அடைந்தான்.  “ கிருஷ்ணா, இது என்ன மாற்றம் உன்னிடம்?  தந்தையும் எப்படி இவ்வாறு மாறினார்?  என்ன காரணம் இந்த மாற்றத்திற்கு?” என ஆச்சரியத்துடன் கேட்டான்.


“எனக்குத் தெரியவில்லை, மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது!  ஆனால் மாறிவிட்டது புரிகிறது.  சகோதரா, அந்தப் பழைய பகையை அதன் விளைவுகளை,   நாம் இன்னமும் அனுமதிக்கத் தான் வேண்டுமா?  அந்தப் பழைய அவமானம் நம் மனதைப் பாதித்துக் கொண்டிருப்பதை இன்னமும் நாம் நீட்டிக்க வேண்டுமா?”  முறையிடும் தொனியில் அவனிடம் கேட்டாள் திரௌபதி.   “ஏன் கேட்கிறாய்?” என்று த்ருஷ்டத்யும்னன் கேட்க, “தந்தையும் இப்போது அதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.  அதாவது நான் அவரை விட்டுப் பிரியும்போது!” என்றாள் திரௌபதி.  த்ருஷ்டத்யும்னனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.


“ஆஹா, வாசுதேவக் கிருஷ்ணன் ஏதோ மாயம் செய்துவிட்டான்.  உன்னைச் சந்தித்தபோது ஏதோ அற்புதம் நிகழ்த்தி உன் மனதை மாற்றிவிட்டான். “ என்றான்.  திரௌபதி சந்தோஷமாகச் சிரித்தாள்.”வாசுதேவனால் முடியுமென்றால் நம்மாலும் முடியாதா?  நாமும் அதிசயங்களை நிகழ்த்தலாம். மன்னர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வளர்த்துக்கொள்ளும் வெறுப்பை எல்லாம் அவன் நட்பாக மாற்றுவது தர்மம் என நினைக்கிறான்.  அப்படி அவனால் மாற்ற முடியுமெனில் நம்மாலும் முடியாதா?”

2 comments:

ஸ்ரீராம். said...

மோடி வித்தைகள் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கும் போல! :)))

திண்டுக்கல் தனபாலன் said...

திரௌபதிக்கு என்னவொரு நம்பிக்கை...!