Saturday, May 28, 2016

த்வைபாயனரின் சாந்தம்! ஜாபாலியின் கோபம்!

“ஐயா, நான் எப்போதும் உண்மையையே பேசி வந்திருக்கிறேன்; இனியும் அவ்வாறே உண்மையையே பேசுவேன்!” என அடக்கத்துடன் சொன்னார் த்வைபாயனர். மேலும், “ஐயா, நான் என் மறுபிறப்புக்கான உபநயனத்தின்போது இதற்காக உறுதி மொழியும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வசிஷ்டர்களின் சபதத்தை நானும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் எப்போது உண்மைக்காக உறுதியாக நிற்பேன் என்றும் கூறுகிறேன். என் பிரதிக்ஞையை நான் காப்பாற்றுவேன்.”

வசிஷ்டரின் பெயரைக் கேட்டதுமே ஜாபாலி முனி தலையை மிக இகழ்ச்சியாக அசைத்துக் கொண்டார். அவமதிப்பாகவும் தொனித்தது அது. “வருணனை எழுப்பி அழைக்கும் இந்த மந்திரங்களை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?” என்று அதிகாரமாகக் கேட்டார்.

“என் தந்தை” த்வைபாயனர் சொன்னார்.

“உன் தந்தை?” வில்லிலிருந்து வேகமாகக் கிளம்பும் அம்புகளைப் போல் அடுத்தடுத்துக் கேள்விகள் பிறந்தன மஹா அதர்வ ரிஷியிடமிருந்து. “உன் குடும்பப் பெயர் என்ன?”

“என் குடும்பப் பெயர் பராசரர்!”

“உன் தந்தையின் பெயர் என்ன?

“பராசர முனிவர்!”

ஜாபாலி முனிவரின் கண்களில் தெரிந்த வெறுப்புணர்ச்சி த்வைபாயனரை நடுங்க வைத்தது என்றால் மிகை அல்ல; அவர் குரல் இப்போது வெட்டி விடுவதைப் போன்ற வேகத்துடன் கிளம்பி வந்தது!” உன் தந்தை யாருடைய மகன்?”

த்வைபாயனருக்கு ஜாபாலி முனிவரின் கோபம் மெல்ல மெல்ல அதிகமாகி வருவதும், தன்னிடம் அவர் கொண்டுள்ள ஈர்ப்பு மறைந்து வெறுப்புக் கிளம்புவதையும் புரிந்து கொள்ள முடிந்தது. நிலைமை மெல்ல மெல்ல மோசமாகி வருவதையும் உணர்ந்தார். “என் தந்தை முனிவர் சக்தியின் மகன். சக்தி மஹாமுனிவர் வசிஷ்டரின் மகன்.”

“உன் தந்தைக்கு இந்த பிரம்ம வித்யா மந்திரங்கள் எல்லாம் இவ்வளவு தெளிவாகவும் அட்சர சுத்தமாகவும் எப்படித் தெரிய வந்தது?”

“எப்படி என எனக்குத் தெரியாது ஐயா! ஆனால் அவர் எனக்கு அதர்வ வேதத்தின் மந்திரங்கள் பலவற்றையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.”

“அவன் யாரிடமிருந்து அதர்வ வேதத்தைக் கற்றான்?”

“என்னிடம் சொன்னது இல்லை ஐயா. யாரிடமிருந்து கற்றார் என்பது தெரியாது. அவர் என்னிடம் சொன்னது எல்லாம் இவ்வளவே! அவர்கள் வேதத்தின் நான்காம் பகுதியைத் தொகுக்க முயன்று கொண்டிருந்தார்கள்.”

“இந்த பிரம்ம வித்யை அனைத்தும் எவரிடம் உள்ளது என்றும் யார் அவற்றைப் பாதுகாக்கின்றனர் என்பதையும் உன்னிடம் அவன் சொல்லி இருக்கிறானா?”

“எப்போவோ ஒரு முறை அல்லது இருமுறை அவர் உங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். நீங்களே அதர்வ வேதத்தின் ஆசாரியர் என்றும் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் நீங்களே தலைவர் என்றும் உங்களால் உயிர்ப்பிக்கவும் முடியும் என்றும் அழிக்கவும் முடியும் என்றும் சொல்லி இருக்கிறார். இந்த நிமிடம் இப்போது உங்களிடம் என்னைக் கொண்டு வந்து சேர்த்ததற்காக எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

ஜாபாலியின் உள் மனதில் என்ன நினைக்கிறார் என்பது தெரியாவண்ணம் அவர் முகம் கல்லைப் போல் இருந்தது. “இதோ பார் பிரமசாரி! உன் கொள்ளுப் பாட்டன் வசிஷ்டன் என்னுடைய எதிரி என்பதை நீ அறிவாயா? அதிலும் பிரம்ம வித்யை, வேதங்களிலேயே மிக மிக மிக உயர்ந்த பிரம்ம வித்யையை அவன் வெறுத்தான் என்பதும் உனக்குத் தெரியுமா?”

“இல்லை,…..”

“…….ம்ம்ம்ம்,….. அவன் கருத்துப்படி வேதங்கள் மூன்று தான் என்பதும் அவை ரிக், யஜுர், சாமம் என்பதும் உனக்குத் தெரியுமா?”

“இல்லை…..”

“அவன் இந்த அதர்வ வேதத்தின் ஆஹூதிகள் கொடுக்கும் பகுதிகளையும் அவற்றின் முதன்மைத் தனத்தையும் முழுவதும் ஏற்றுக் கொண்டதே இல்லை என்பதை அறிவாயா?” கேள்விகள் ஒவ்வொன்றும் கத்தியை விடக் கூர்மையாக அடுத்தடுத்துக் கேட்கப்பட்டன.

“இல்லை……”

“பின்னர் நான் தர்மக்ஷேத்திரத்துக்கு என்னுடைய சாபத்தை அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். என்னுடைய சாபத்தினால் தான் ஹைஹேயர்கள் உன் கொள்ளுப்பாட்டனின் ஆசிரமத்தை முற்றுகையிட்டு அழித்து அவரையும் கொன்றார்கள்! அதை அறிவாயா, இல்லையா?”

“இல்லை…”

“ஒரு வேளை,,,, உன் தகப்பன் எவரும் அறியாமல் திருட்டுத் தனமாக என் மகனிடமிருந்து அதர்வ வேதத்தைக் கற்றானா?”

“இல்லை..”

“ம்ம்ம்ம்ம்ம்….இது வசிஷ்டருக்குத் தெரிந்த பின்னர் அவர் உன் தந்தையை இவற்றை ஓதக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்ததை அறிவாயா? அதனால் தான் உன் தந்தை தர்மக்ஷேத்திரத்தை விட்டு அகன்றார் என்பதையும் அறிவாயா?”

“இல்லை….”

த்வைபாயனருக்கு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிய ஆரம்பித்தது. அவர் தந்தை தன் வாழ்க்கையின் பிரதான கட்டத்தில் தர்மக்ஷேத்திரத்தை விட்டு ஏன் சென்றார் என்பதையும் யமுனை நதிக்கரையில் தனக்கென ஒரு தனி ஆசிரமத்தை ஏன் ஸ்தாபித்தார் என்பதும் புரிந்தது.

“அவன் எங்கே சென்றான்?” என்று விடாமல் ஜாபாலி கேட்டார்.

“”என் தந்தை யமுனை நதிக்கரையில் ஒரு புதிய ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.” என்றார் த்வைபாயனர்.

“உன் தந்தையின் ஆசிரமத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்!”

“என் தந்தையின் ஆசிரமம் வளத்துடனும், செல்வத்துடனும் நன்றாகவே இருந்தது. ஆனால் இதைப் பொறுக்காத அந்தப் பொல்லாத அரசன் சஹஸ்ரார்ஜுனன், அந்த ஆசிரமத்தின் குடிமக்களையும் என் தந்தையின் பல சீடர்களையும் கொன்று ஒழித்துவிட்டு ஆசிரமத்தை முற்றிலும் அழித்து எரித்துச் சாம்பலாக்கி விட்டான்.”

“ஹூம், என் சாபம் உன் தந்தையையும் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது. சஹஸ்ரார்ஜுனனிடமிருந்து அவன் தப்பினானா?”

“ஆம். ஆசிரமம் எரிக்கப்பட்டு அதில் உள்ள பலரும் கொல்லப்பட்டனர். பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். அவர், என் தந்தை ஆர்யவர்த்தத்தின் ராஜாக்கள் அனைவரிடமும் சென்று அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக சஹஸ்ரார்ஜுனனை எதிர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவர் தன் ஆசிரமம் திரும்பினால் அழிக்கப்பட்ட ஆசிரமத்தையே கண்டார். மேலும் சஹஸ்ரார்ஜுனனும் அவன் வீரர்களும் என் தந்தையின் காலை வெட்டி விட்டார்கள். காலை உடைத்துவிட்டார்கள்.”

“ம்ம்ம்ம். எப்போது இறந்தான் உன் தந்தை?”

“சில மாதங்களுக்கு முன்னர்!”

“‘நீ ஏன் இங்கே வந்தாய்?”

“என் தந்தையும் நானும் தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுத்துப் பழைய வளமும் வல்லமையையும் பெறச் செய்ய வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறோம். இப்போது அவர் இல்லை என்பதால் அதைப் பூர்த்தி செய்ய நான் வந்தேன்!”

“ஏன்?” என்று கேட்ட முனிவரின் குரலில் வெறுப்பு அதிகமாகவே தெரிந்தது.
இங்குள்ள அதிகார மையங்கள் மூலம் இங்கே மீண்டும் ஆசிரமங்களைத் தோற்றுவித்துக் கறை படிந்திருக்கும் தர்மத்தின் பாதையை, சத்திய லோகத்தை மீட்டுக் கொண்டுவருவதே என் நோக்கம். தர்மக்ஷேத்திரத்தை மீட்கவில்லை எனில், அங்கே மீண்டும் தர்மத்தைப் போதிப்பவர்கள் இல்லை எனில் இவ்வுலகில் தர்மத்தின் வழி செல்பவர்களே அரிதாகிவிடுவார்கள். தர்மமே அழிந்து விடும்!”

“அது உன்னால் முடியாது. தர்மக்ஷேத்திரத்தை உன்னால் மீட்டு எடுக்கவே இயலாது. என் சாபத்தின் தாக்கம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது!”

த்வைபாயனர் மிக அழகாக, வசீகரமாகப் புன்னகைத்தார். “உங்கள் சாபம் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கியது; ஆனால் உங்கள் ஆசிகளால் அது புத்துயிர் பெறும்.”

“அதெல்லாம் நடக்காத ஒன்று! நான் என் ஆசிகளை ஒரு போதும் தரப் போவதில்லை!”

“ஆனால்….ஆனால்….எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் உங்களைச் சம்மதிக்க வைப்பார் ஆசாரியரே!”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஏனெனில் ராக்ஷசர்களிடமிருந்து நீங்கள் என்னையும் பைலரையும் காப்பாற்றி உள்ளீர்கள். இது ஒன்றே போதுமே! நல்ல சகுனத்துக்கு அடையாளம் என்றும் கடவுளரின் கருணை இது தான் என்பதற்கும் இது ஒன்றே போதுமே!” த்வைபாயனரின் குரலில் உறுதி தெரிந்தது.

ஆனால் அந்த வயதான முனிவரின் கண்கள் அடுப்பில் எரியும் நெருப்பைப் போல் கனன்று ஒளிர்ந்தன. மிக மிக மெதுவாக அவர் பேசினாலும் குரலில் பயங்கரம் தொனித்தது. “தர்ம க்ஷேத்திரம்! ஹூம்! அதை ஒரு நாளும் மீட்டெடுக்க முடியாது! அது இயலாது! முன் காலத்தில் வாழ்ந்து வந்த மூத்த பழமையான ரிஷிகளான ஆங்கிரஸும், பிருகுவும் அப்படித் தான் திட்டம் செய்திருக்கின்றனர்.”

“ஆசாரியரே! எல்லாப் பழமையான ரிஷிகளுக்கும் பித்ருலோகத்திலிருந்து பார்க்கும் அனைவருக்கும் தர்ம க்ஷேத்திரம் மீட்கப்படுவது சந்தோஷத்தையே அளிக்கும்.” திடமாகச் சொன்னார் த்வைபாயனர்.

ஆனால் ஜாபாலி முனிவரோ, “நீ ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறாய், பிரமசாரி! அது சரி, உனக்கு தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுப்பதில் இவ்வளவு உத்வேகம் ஏன்? அதில் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது?”

1 comment:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான கட்டம்.