Monday, May 9, 2016

த்வைபாயனன் நிகழ்த்திய அதிசயம்!

“உன் குருவிற்கு நீ கீழ்ப்படிந்து நடந்து கொள்வாயா?”

“ஆம், குருவே!” என்றான் த்வைபாயனன். த்வைபாயனனுக்கு ஒரு கௌபீனம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஒரு தண்டம், ஒரு கோல் அவன் வயதுக்கேற்பவும் உடல் பலத்துக்கு ஏற்பவும் கொடுத்தனர். பின்னர் ஒரு சுரைக்குடுக்கை நீர் அருந்தவும், மற்றச் சமயங்களில் உணவருந்தவும் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கௌதமர் த்வைபாயனனையும், அவன் தகப்பனார் பராசரரையும் சேர்த்து ஒரு ஒரு பட்டுத் துணியால் மூடிக் கொண்டு மிகவும் ரகசியமாக அற்புத சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். த்வைபாயனனின் இளம் இதயம் அளவற்ற மகிழ்ச்சியில் கூத்தாடியது. அந்த மந்திரத்தை கௌதமர் சொல்லிக் கொடுத்தபடி அதே உச்சரிப்போடு திரும்பக் கூறினான்.

அவன் இப்போது தன் தந்தையோடு இருப்பது மட்டுமல்லாமல் மீண்டும் பிறந்து விட்டான். இனி வேதங்களை அவன் உச்சரிக்கலாம். பாராயணம் செய்யலாம். வேத கோஷமிடுவோருடன் சேர்ந்து ஓதலாம். என்றேனும் ஒரு நாள் அவன் கொள்ளுப் பாட்டனார் வசிஷ்ட்ரைப் போலக் கடவுளருடன் பேசவும் நேரலாம். ஆம், நிச்சயம் பேசுவான். அவன் கொள்ளுப் பாட்டனார் வசிஷ்டரைப் போல அவனும் மஹரிஷியாக ஆவான். அதுவும் நிச்சயம். அவனும் அவன் தந்தையும் தர்மக்ஷேத்திரத்துக்குப் போகப் போகின்றனர். அதை மீண்டும் புநர் நிர்மாணம் செய்யப் போகிறார்கள்.

த்வைபாயனன் ஆசாரியருக்குக் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கித் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொண்டான். தந்தையையும் வணங்கினான். அங்கே இருந்த மூத்தோர் அனைவருக்கும் மற்றும் ஆசிரமப் பெண்மணிகள், ஆசாரியர்களின் பத்னிகள் என அனைவரையும் வணங்கி எழுந்தான். அதன் பின்னர் அனைவருமாகச் சேர்ந்து வேத கோஷமிட்டனர். சர்வ ஜனங்களின் சுகத்துக்காகவும், க்ஷேமத்துக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டனர்.

“தேவலோகத்தின் அரசனான அனைவரும் அறிந்த இந்திரனால் இங்குள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்! விண்ணில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் சூரிய பகவனால் இங்குள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்! மஹாவிஷ்ணுவின் வாஹனமும், தீமைகளையும் மங்களமல்லாதவற்றை ஒழிப்பவனும் தெய்விக சக்தி பொருந்தியவனும் ஆன கருடனால் இங்குள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும். தேவலோகத்தின் தேவகுருவான பிரஹஸ்பதியால் இங்குள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும். அனைவருக்கும் நன்மையே நிகழட்டும். அனைத்து மக்களும் சுபிக்ஷமாக வாழட்டும்!”

என்று பிரார்த்திக்கப்பட்டது. த்வைபாயனன் ஏற்கெனவே தன் தந்தை இதைச் சொல்லி ஆசீர்வதிக்கையில் கேட்டுக் கேட்டு மனதில் பதிய வைத்திருந்தான். ஆகவே இப்போது சிறிதும் உச்சரிப்பு மாறாமல் அனைவருடனும் சேர்ந்து அவனும் இந்தப் பிரார்த்தனை மந்திரங்களைச் சொன்னான். இதைக் கண்ட அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆறே வயது ஆன இந்தச் சிறுவன் இத்தனை அழகாகச் சிறிதும் உச்சரிப்பு மாறாமல், ஏற்ற இறக்கங்களையும் சரியான இடத்தில் கொடுத்துச் சொல்வதைக் கண்டு அவர்கள் வியந்தனர். பராசரர் தன் மகனை அருகே இழுத்து அணைத்துக் கொண்டார்.

“த்வைபாயனா, நீ வசிஷ்டரின் வம்சாவளியில் வருகிறாய். தெய்விக சக்தி வாய்ந்த மஹரிஷியின் கொள்ளுப் பேரன் நீ! ஆகவே நீ சில சிறப்பான அதே சமயம் முக்கியமான வாக்குறுதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்று சொன்னவண்ணம் அவற்றை த்வைபாயனனுக்குச் சொன்னார். அவன் திரும்ப அவற்றைக் கூறி உறுதிமொழி எடுத்தான்.

“என் மேல் வலுக்கட்டாயமாகச் சுமத்தப்படும் காயங்களைத் தவிர்ப்பேன்! இன்னொருவனுடைய சொத்தை எனதாக்கிக் கொள்ள மாட்டேன்; அதற்கு ஆசையும் படமாட்டேன். உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்! என்னிடமுள்ள விலை உயர்ந்த பொருளோ, அல்லது எந்தவிதமான பொருளும் யாருக்கேனும் தகுதியுள்ள மனிதருக்குத் தேவை என்றால் உடனே அதைக் கொடுத்துவிடுவேன். அதற்கென சரியான சமயத்தைத் தேடிச் செல்வேன். இளம்பெண்களைக் குறித்துப் பேசுவதைத் தவிர்ப்பேன். பேராசையும் பொருட்களின் மேல் இச்சையும் கொள்ளாமல் தவிர்ப்பேன். அந்த எண்ணங்களே என் மனதில் ஏற்படாமல் இருக்கும்படி செய்வேன். எல்லாக் கடவுளரையும் மற்றும் என் குலத்து முன்னோர்களையும் தவறாமல் வணங்கி வருவேன். இந்த வேதங்களைப் புனருத்தாரணம் செய்வதற்கே அன்றி வேறே எதற்காகவும் உயிர் வாழ மாட்டேன்! வேதங்களை அறிந்த அனைத்துக் கடவுளரினருக்கும் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரனாக விளங்குவேன்..”


நிகழ்ச்சி முடியும் நேரம் நெருங்கியது. அனைவருமாகச் சேர்ந்து மீண்டும் உலத்தினருடைய சௌக்கியத்திற்காகப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

“இங்குள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்கவேண்டும். அனைவரும் புனிதமானவர்களாகவும் இருக்க வேண்டும். அனைவரும் அனைவருக்கும் நன்மையைத் தவிர வேறே எவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது. அனைவரும் மன வருத்தம் சிறிதேனும் இல்லாமல் அவற்றிலிருந்து வெளிப்பட்டு சந்தோஷமாக வாழ வேண்டும்.”

வந்திருந்த அனைவரும் ஆடிப்பாடி நிகழ்ச்சி முடிவைக் கொண்டாடப் பின்னர் வந்திருந்தோருக்கு ஒரு பெரிய விருந்துடன் மங்கள நிகழ்ச்சியான உபநயனம் முடிந்தது. அதன் பின்னர் மத்தியானத்திற்குச் சற்றே பின்னர், த்வைபாயனன், பைலரின் துணையோடு கிராமத்துக்குள் சென்று பிக்ஷை எடுக்கச் சென்றான். நொண்டி முனி என அழைக்கப்பட்ட பராசரரின் தவ வலிமை அங்கிருந்த அனைவரும் நன்கு அறிந்திருந்தனர். அதோடு த்வைபாயனனைக் கண்டதுமே கிராமத்து மக்களுக்கு இயல்பாகவே அன்பு ஊற்றெடுத்துப் பெருகியது. ஆகவே அந்த கிராமத்தில் த்வைபாயனன் பிக்ஷை எடுக்கையில் இல்லை என்னும் சொல்லே எந்த வீட்டிலிருந்து வரவில்லை. ஒவ்வொரு பெண்ணும் தான் சமைத்திருந்த உணவின் ஒரு பகுதியை த்வைபாயனனுக்கு இட்டாள். த்வைபாயனனின் திறந்த மனதும், சிரித்த முகமும், அன்பான புன்சிரிப்பும், கருணை வாய்ந்த கண்களும் அவனைச் சுற்றி ஓர் புனிதமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தது. அதோடு பிக்ஷை இட்ட பெண்களை மனமார வாழ்த்தவும் செய்த த்வைபாயனனைக் கண்ட அனைவரும் அவனை, “குட்டி முனிவன்” என்றே செல்லப் பெயரிட்டு அழைத்தனர்.

த்வைபாயனன் பிக்ஷைக்கு என்று கிராமத்துக்குள் நுழைந்ததுமே கிராமத்துச் சிறுவர்கள் இந்த வேடிக்கையை அனுபவிக்க எண்ணி த்வைபாயனனைத் தொடர்ந்தனர். த்வைபாயனனுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டது. அதோடு அவனுடைய சுரைக்குடுக்கையும் உணவால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஏனெனில் அவன் பிக்ஷை என்று கேட்கும் முன்னரே உணவைத் தயாராக வைத்துக்கொண்டு கிராமத்துப் பெண்டிர் அவரவர் வீட்டு வாயிலில் த்வைபாயனனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனர். ஆகவே அவர்களை ஏமாற்றவேண்டாம் என நினைத்த த்வைபாயனன் தன் உணவின் பெரும்பகுதியைத் தன்னைத் தொடர்ந்த சிறுவர்களுக்கு அளித்துவிட்டுக் காத்திருந்த பெண்மணிகளின் பிக்ஷையை ஏற்றான். அவன் ஒவ்வொரு வீடாகச் செல்லச் செல்ல உணவும் கிடைத்தது. கிராமத்துச் சிறுவர்களும் பின் தொடர்ந்தனர். த்வைபாயனனும் உணவைப் பங்கிட்டு அவர்களுக்கு அளித்து வந்தான். கடைசியில் ஆசிரமத்துக்கு த்வைபாயனன் திரும்புகையில் சுரைக்குடுக்கை காலியாக இருந்தது. பராசரருக்கு மட்டுமில்லாமல் கௌதமருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.

“யாருமே உனக்கு உணவு அளிக்கவில்லையா?” என்று பராசரர் கேட்டார்.

“எனக்குத் தேவையானவற்றை விட அதிகமாகவே அளித்தனர்!” என்றான் த்வைபாயனன்.

“பின் அந்த உணவெல்லாம் எங்கே போயிற்று?”

“ஓ, கிராமத்துச் சிறுவர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அந்த உணவை எல்லாம் அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டேன்.”

“நீ இப்போது என்ன சாப்பிடுவாய்?”

“அதனால் என்ன தந்தையே! நான் ஒரு நாள் உணவருந்தாமல் இருந்துவிட்டுப் போகிறேன். அதில் கஷ்டம் ஒன்றுமில்லை!” என்றான் த்வைபாயனன். பின்னர் தொடர்ந்து, “அம்மா பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை விரதம் இருப்பாள். அந்த ஏழைக்குழந்தைகள் பாவம்! மிகவும் பசியோடு இருந்தார்கள். அவர்களுக்கு உணவளிக்க மாட்டேன் என என்னால் சொல்ல முடியவில்லை!: என்றான்.

அவன் இதைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பசியோடிருந்த ஒரு சில ஏழைக்குழந்தைகள் த்வைபாயனனை நோக்கி ஓடி வந்து தங்களுக்கும் உணவளிக்கும்படி யாசித்தனர். அவர்கள் கைகளை உணவுக்காக நீட்டி நின்ற நிலையினையும், அவர்கள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பையும் கண்டான் த்வைபாயனன். த்வைபாயனனுக்கு மனம் வருந்தியது. அவனிடம் இப்போது அந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்க ஒன்றுமே இல்லை. அவன் சுரைக்குடுக்கையும் காலி. அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியது; ஆனால் அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். அவன் சவிதா என்னும் சூரியக் கடவுளை முழு மனதோடு வேண்டிக் கொண்டான். இப்போது அவன் அவருடைய பாதுகாப்பில் இருக்கிறான்.  ஆகவே என்னால் முடிந்தவரையிலும் அவரை வேண்டிக் கொள்கிறேன். என்றவன் பிரார்த்தனைகள் செய்தான்.

“சவிதா, சூரியக்கடவுளே, எனக்கு உணவில்லாமல் போனால் போகட்டும். ஆனால் இந்தச் சின்னஞ்சிறு சிறுவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான உணவை நான் கொடுக்கும்படி எனக்கு அருள் செய்வாய்! நீ என்னைப் பார்த்துச் சிரித்து எனக்கு அருள் புரிந்தாய் அல்லவா?அப்போது நீ எனக்கு வேண்டியதைச் செய்வாய் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டாகி விட்டது. தயவு செய்து எனக்கு இப்போது உதவி செய்!” என்று பிரார்த்தித்துக் கொண்டான். அவன் உள் மனதின் ஆழத்திலிருந்து முழு மனதோடு எழும்பிற்று இந்தப் பிரார்த்தனை. “என்ன கொடுப்பேன், இந்தக் குழந்தைகளுக்கு? என்னிடம் எதுவுமே இல்லையே!” என்று மனம் உருகினான்.

அப்போது திடீரென அவனுடைய சுரைக்குடுக்கையில் கனமாக உணர்ந்தான். சுரைக்குடுக்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்று பார்க்கக் குனிந்து தன் கையிலிருந்த சுரைக்குடுக்கையைப் பார்த்த த்வைபாயனனுக்கு அதிர்ச்சி மேலிட்டது! அப்படியே திகைத்து நின்றான். கடவுள் அவன் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து விட்டார். இதோ நிற்கும் இந்தக் குழந்தைகளின் பசியை ஆற்றத் தேவையான உணவு அவனுக்கு இப்போது கிடைத்து விட்டது.
த்வைபாயனன் பயம் கலந்த பக்தியுடனும் உள்ளார்ந்த திகைப்புடனும், பிரமிப்புடனும் அந்த உணவைக் குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான்.

பின் தந்தையைப் பார்த்து, “தந்தையே, என் சுரைக்குடுக்கைக்கு என்ன ஆயிற்று? அதில் திடீரென உணவு எப்படி நிரம்பியது? யார் போட்டார்கள்?” என்று கேட்டான். பராசரர் நடந்த அனைத்தையும் தம்மிரு கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தது. இப்படி ஓர் அதிசயம் நடந்ததை நினைத்து நினைத்து ஆச்சரியம் அடைந்தார். அவர் கடவுளரிடமிருந்து த்வைபாயனனின் உபநயனத்துக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்திருந்தார். இப்போது சந்தேகமே இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் அந்த அங்கீகாரம் கிடைத்தே விட்டது. அவருடைய வாழ்க்கையில் அவர் சந்தித்த தோல்விகள், ஏமாற்றங்கள், துரதிருஷ்டமான நிகழ்வுகள் அனைத்தும் இனி அவர் மகனால் மாற்றப்பட்டு அவர் வாழ்க்கையும் மாறப் போகிறது. த்வைபாயனனை அருகே இழுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்த பராசரர் அவன் காதுகளில் கிசுகிசுப்பாகச் சொன்னார்:”என் மகனே, அருமை மகனே! உன்னிடம் இருப்பதை எல்லாம் கொடு! கடவுளர் உனக்குத் தேவையானவற்றை ஏராளமாகக் கொடுத்துக் கொண்டே இருப்பார். ஆகவே நீ உன்னிடம் இருப்பதை எல்லாம் எப்போதும் கொடுத்துக் கொண்டே இரு!” என்றார்.

1 comment:

ஸ்ரீராம். said...

கொடுத்தால்தான் சுரக்கும் என்பார்கள். ஆச்சர்யம்.