Thursday, July 7, 2016

குருதேவரின் வசிய மந்திரப் பிரயோகத்தில் த்வைபாயனர்!

"மக்கள் கூட்டம் மிகவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும்.  என்னிடம் அவர்கள் மிகவும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். ஆகையால் எப்போது என்ன   செய்வார்கள் என்றே கூற முடியாது! என்னை அமைதியாக இருக்கவும் விட மாட்டார்கள்.  ஐயா, இந்த வாஜ்பேய யக்ஞம் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டால் தான் அங்கே பராசர முனிவரின் பெயரால் ஓர் ஆசிரமம் தர்மக்ஷேத்திரத்தில் நிலை பெற்று இருக்க முடியும்! அதற்கு உதவுங்கள்!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் ஜாபாலியோ விடாமல், “வேறு என்னவெல்லாம் நீ சாதித்திருக்கிறாய் இளைஞனே!” என்று கேட்டார். த்வைபாயனரோ, “ஏதோ ஒன்றிரண்டு நடந்துள்ளது ஐயா! ஆனால் உங்கள் ஆசிகள் இல்லாமல் அவை எல்லாம் வீணே! நான் எதையும் சாதித்ததாகக் கூற முடியாது. ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பரதனுடைய வம்சத்தில் பிறந்த குரு குலத்து சிரேஷ்டமான சக்கரவர்த்தி ஷாந்தனுவிடமும், அவரின் மூத்த மகன் இளவரசன் காங்கேயனிடமும் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்று தான். பிரம தேஜஸும் க்ஷத்திரிய தேஜஸும் ஒன்று சேர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவை இரண்டும் எப்போதும் இணைந்து இருந்தால் தான் உலகுக்கு நன்மை! தர்மம் நிலைபெற்றிருக்கும்.”

“அவர்கள் அதற்கு என்ன சொன்னார்கள்?”

“இருவரும் நான் சொல்வதை அங்கீகரித்தார்கள். அப்படி ஓர் இணைப்பு இருந்தால் தான் தர்மம் நிலைபெற்றிருக்கும் என்பதையும் தர்ம சாம்ராஜ்யம் ஏற்படும் என்பதையும், ராஜ்ஜியங்கள் நிலைத்து நின்று புகழைப் பரப்பும் என்பதையும் ஒத்துக் கொண்டாரகள். ஆகவே அதற்காக உழைப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.”

மஹா அதர்வருக்கு இந்த விஷயத்தில் ருசி ஏற்பட்டது. ஆர்வம் அதிகரித்தது. “ஆனால் நீ இதற்கு பதில் சொல்லவே இல்லையே! பிரமசாரி, நீ நிஜமாகவே இந்தக் காற்றில் கரைந்து போகும் வித்தையைக் கற்றிருக்கிறாயா? அப்படிக் கரைந்து போய்விடுகிறாயா?”

“ஐயா, நான் அப்படி எல்லாம் காற்றில் கரைந்து போவதில்லை. ஆனால் எவரும் எழுந்திருக்கும் முன்னரே அதிகாலையில் எழுந்து ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறிவிட்டேன். நேரம் ஆயிற்றென்றால் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொள்ளும். பின்னர் நான் நினைத்தபடி செய்ய முடியாது. பின்னர் நான் கோதுலியில் இருக்கும் என் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்றேன். அங்கே தான் அவருக்கான ஈமச்சடங்குகளும் செய்யப்பட்டன. அதன் பின்னர் யமுனைக்கரையில் என் தந்தையால் ஸ்தாபிக்கப்பட்ட சில ஆசிரமங்களுக்கும் அவரின் சீடர்கள் நடத்தி வரும் ஆசிரமங்களுக்கும் சென்றேன். அங்குள்ள ஸ்ரோத்திரியர்களில் சுமார் நாற்பது நபர்கள், அவர்களில் சிலர் ஆசாரியர்கள், தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள். மற்றும் மற்ற ஸ்ரோத்திரியர்களைச் சார்ந்திருப்பவர்கள் என்று பலரும் இங்கே என்னுடன் இப்போது வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தர்மக்ஷேத்திரத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இருக்க ஆசை தான்!. மேலும் ஐயா, மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தினி சத்யவதி சுமார் 300 பசுக்களை எங்கள் ஆசிரமத்துக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார்கள்!” என்றார் த்வைபாயனர்.

“அவர்களெல்லாம் எப்போது வருகின்றனர்?”

“அனைவரும் வந்து மலையடிவாரத்தில் உங்கள் ஆசிகளுக்காகக் காத்திருக்கின்றனர் ஐயா!”

“இது என்ன முட்டாள் தனம்? நீ அந்த ஓநாய்களின் ராஜ்ஜியத்தில் முற்றிலும் சபிக்கப்பட்ட இடத்திலா ஆசிரமங்களை அமைக்க வேண்டும் என்கிறாய்? முட்டாள்தனம்!”

“நான் மட்டுமல்ல, குருதேவரே! நானில்லை! உங்கள் மரண வசிய மந்திரம் என்னிடம் பலித்துவிட்டால், நானும் என் முன்னோர்களின் இடத்துக்குப் பித்ருலோகத்துக்குச் சென்றுவிட்டால், என் தந்தையின் முக்கியச் சீடர்கள் அனைவரும் என்னிடம் சத்தியம் செய்து தந்திருக்கின்றனர். என்னவென்று தெரியுமா? தர்மக்ஷேத்திரத்தில் ஆசிரமங்கள் அமைக்கையில் நான் உயிருடன் இல்லாவிட்டால் சுமாந்துவைத் தங்கள் தலைவராக ஏற்கச் சம்மதித்திருக்கிறார்கள்.”

மஹா அதர்வர் ஜாபாலியின் கண்களில் குறுநகை ஒளிர்ந்தது. “உன்னை மாதிரி ஒரு அயோக்கியனைக் கடைந்தெடுத்த அயோக்கியனை நான் பார்த்ததே இல்லை!நீ என் மாணாக்கன் என்று சொல்லிக் கொள்கிறாய்! ஆனால் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. இந்த ஆசிரமத்தை விட்டு என் அனுமதி இன்றி நீ வெளியேறி இருக்கிறாய். அதோடு இல்லாமல் சஞ்சீவனி மூலிகைகளையும் எனக்குத் தெரியாமல் என்னிடம் சொல்லாமல் எடுத்துச் சென்று இருக்கிறாய்! என் அனுமதி இன்றி சக்கரவர்த்தி ஷாந்தனுவை அதர்வ மந்திரங்களின் உதவியால் மரணத்திலிருந்து மீட்டிருக்கிறாய். நீ எப்படி இந்த மாதிரியெல்லாம் செய்தாய் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இதோ இங்கே இருக்கும் என் சீடர்களில் எவருக்கும் அதர்வ மந்திரங்களும் அவற்றின் உச்சாடனங்களும் தெரிந்திருந்தும், சஞ்சீவனி மூலிகையைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தும் இன்று வரை எவரும் மரணத்தின் பிடியிலுள்ள ஒருவரையேனும் உயிர் பிழைக்க வைத்ததில்லை. அதற்கான முயற்சிகளைச் செய்ததில்லை.”

ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தார் த்வைபாயனர். “மன்னியுங்கள் குருதேவரே! நான் உங்கள் மற்ற சீடர்கள் போல் எல்லாம் நடந்து கொள்ளவில்லைதான்! மன்னியுங்கள்! எனக்கே தெரியவில்லை! என்னால் எப்படி இதைச் செய்ய முடிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! சக்கரவர்த்திக்கு நான் வைத்தியம் செய்தபோது நானே அங்கே உடலோடு இல்லை என்ற உணர்வு தோன்றியது. முற்றிலும் மந்திர உச்சாடனங்களில் ஆழ்ந்து போனேன். வேறு நினைவே இல்லை!  வேதத்தின் அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு சக்கரவர்த்தியின் உடலுக்குள் புகுந்துவிட்டாற்போன்ற தோற்றம்! அவ்வளவே நான் அறிவேன்! நடந்தது எப்படி என்று எனக்கும் தான் புரியவில்லை!”

மஹா அதர்வர் மௌனத்தில் ஆழ்ந்தார். “ம்ம்ம்ம்ம், அது தான், அதுதான் உன்னுடைய வெற்றிக்கு ஓர் காரணமாக இருந்திருக்க வேண்டும்,”என்று தனக்குள்ளே பேசிக் கொள்பவர் போலச் சொன்னார். இப்போது மீண்டும் அவருக்குள் அந்தக் கோபமான உணர்வு திரும்பி விட்டாற்போல் இருந்தது. “த்வைபாயனா! நீ என் சீடனாக இருக்கத் தகுதி வாய்ந்தவனே அல்ல!அதோடு இல்லாமல் நீ என் சீடன் எனச் சொல்லிக் கொண்டு என்னை ஆலோசிக்காமல் என்னிடம் கலந்து கொள்ளாமல் நீயே ஒரு ஆசிரமத்தை ஸ்தாபிக்கவேண்டும் என்று நினைக்கிறாய்! இது எனக்கு உவப்பாக இல்லை. ஹூம்! உன்னால் என்ன செய்ய முடியும்? நூற்றுக்கணக்கில் பசுக்களையும் மாணாக்கர்களையும் என்னிடம் கொண்டு வந்து நிறுத்துவாய்! எனக்கு இப்படி எல்லாம் தேவையே இல்லை! மேலும் என்னிடம் கேட்கவே இல்லை. நீ சுமாந்துவை உன் ஆசிரமத்தலைவனாக நியமிக்கிறாய்! இத்தனைக்கும் மேலே நீ என்னை குரு வம்சத்தினரின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு செயல்படச் சொல்கிறாய்! நான் அவர்களை ஒருக்காலும் நம்பப் போவதில்லை. அவர்களால் தர்மத்தைக் கடைப்பிடித்து தர்மத்தின் வழியில் நிற்க முடியும் என்றே தோன்றவில்லை!”

முனிவர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். “இப்போது நீ என்னை உன் மேல் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்யச் சொல்கிறாய்! ஆகவே நீ இறந்துவிடுவாய்! நீ இறந்த பின்னர் தர்மக்ஷேத்திரத்தின் நிர்மாணங்களை ஏற்படுத்தும் மாபெரும் பொறுப்பிலிருந்து தப்பிவிடுவாய்! இப்போது என் மேல் அந்தப் பொறுப்பு சுமத்தப்படும்! எனக்கு இந்த வயதில் இது தேவையா?” என்றவண்ணம் த்வைபாயனரைக் கடுமையாகப் பார்த்தார் ஆசாரியர். “எனக்கு இது தேவை இல்லை! நான் உன் ஆசிரமத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கப் போவதில்லை. நீ கொடுக்கும் சீடர்களோ அல்லது பசுக்களோ எனக்குத் தேவையும் இல்லை!” கோபமாகவும் ஏளனமாகவும் சீறினார் ரிஷி.

“மதிப்புக்குரிய ஆசாரியரே! எனக்கு ஓர் உதவி மட்டும் செய்ய முடியுமா? சுமாந்துவை என் தந்தையின் சீடர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா?”

“முடியாது! என்னால் அது முடியாது!” திட்டவட்டமாகக் கூறினார் ஜாபாலி ரிஷி! பின்னர் அவர் குரலில் இருந்த கடுமை கொஞ்சம் குறைந்தாற்போல் தோன்றியது! “நான் உன் மேல் இன்னும் கடுமையானதொரு மந்திரப் பிரயோகம் செய்கிறேன்! செய்யப் போகிறேன்! பார்த்துக்கொண்டே இரு!” என்றார். அவர் கண்கள் கிண்டலாகச் சிரித்தன. த்வைபாயனரோ எதற்கும் கலங்காமல், “ஆம் ஆசாரியரே! நீங்கள் விரும்புவது எதுவானாலும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்! என்னாலும் நிறைவேற்றப்படும்!” என்றார். இப்போது கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது முனிவரின் முகத்தில்!

“நான் உன் மேல் மிகக் கடுமையான மோசமானதொரு வசியத்தை ஏவப் போகிறேன். அது மரண வசிய மந்திரத்தை விடக் கொடுமையானது. உன்னால் தாங்க முடியாது!”மீண்டும் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்ட முனிவர், “நான் வாடிகாவை உன் மேல் பற்று வரும்படி செய்யப் போகிறேன். உன் நினைவில் அவள் பைத்தியமாகும்படி செய்யப் போகிறேன். அந்தப் பெண்ணின் தொந்திரவை நான் வேறு எப்படி நீக்குவது? என்னுடைய பேச்சையே அவள் கேட்கவில்லை; கேட்பதும் இல்லை. என் வேலைகளில் உள் புகுந்து குழப்பம் செய்கிறாள். அந்த சஞ்சீவனி மூலிகையை உன்னிடம் கொடுத்ததன் மூலம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள்!” என்ற முனிவர் சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம், “எனக்குத் தெரியும், அவள் இங்கே தான் எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறாள். நாம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏதோ ஓர் மூலையில் ஒளிந்திருக்கிறாள். அனைத்தையும் கவனிக்கிறாள்.” ஒரு நிமிடம் சந்நியாசிக்கு உரிய பாவனைகள் அவர் முகத்திலிருந்து மறைந்தது. பின்னர் மீண்டும் புன்னகை செய்தார்.

த்வைபாயனரோ, “நீங்கள் என் குருநாதர்! உங்களால் என்னிடம் எவ்வித வசியப் பிரயோகம் செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளலாம்.நான் காத்திருக்கிறேன்.” என்ற த்வைபாயனரின் முகத்தில் ஒரு கணம் வெற்றியினால் விளையும் சந்தோஷம் தெரிந்தது. முனிவர் தன் கைகளைத் தட்டவே ஓர் ஊழியன் அங்கே வந்தான். அவனிடம், “உடனே சென்று வாடிகா எங்கிருந்தாலும் அழைத்துவா! இந்தக் குகைக்கு அருகிலேயே அவள் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்!” என்று உத்தரவு போட்டார். ஊழியன் சென்றான். சற்று நேரத்தில் வாடிகா அங்கே ஓடோடி வந்தாள். “நான் என்ன சொன்னேன் த்வைபாயனா! அவள் இங்கே தான் சுற்றிக் கொண்டிருப்பாள் என்பதை உன்னிடம் சொன்னேன் அல்லவா? இதோ பார், அவள் வந்துவிட்டாள்!” என்றார். முனிவரின் நடத்தை, பாவனைகள் எல்லாமும் இப்போது மிக மென்மையாக மாறிவிட்டது. வாடிகா அவருடைய கண்ணின் கருமணி!

“என்னிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள், தந்தையே?” என்று வாடிகா கேட்டாள். தன் தலையை இரண்டாகப் பிரித்துப் பின்னலிட்டிருந்தாள். அவை முன்னால் வந்து விழுந்தன. அலட்சியமாக அதைப் பின்னால் தள்ளிக் கொண்டாள். “நீ எங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா?” என்று வினவினார் முனிவர். “இல்லை, தந்தையே!” என்று ஒரு சிரிப்புடன் சொன்னாள் வாடிகா. “நான் பக்கவாட்டுக் கதவின் அருகே சும்மா நின்று கொண்டிருந்தேன். உங்களுக்கு எப்போது நான் தேவை என்றாலும் உடனே உள்ளே நுழைய ஆயத்தமாகக் காத்திருந்தேன்! அதோடு நீங்கள் மிகச் சத்தமாகவன்றோ பேசிக் கொண்டிருந்தீர்கள்! எனக்கு அவை காதில் விழுந்தே தீர்ந்தன!” என்றாள்.

“பொய் சொல்லாதே! நான் இப்போது த்வைபாயனன் மீது மிகக் கடுமையானதொரு வசிய மந்திரத்தை ஏவப் போகிறேன். அவன் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. உன் மேலும் வசிய மந்திரப் பிரயோகம் செய்யப் போகிறேன். நீ என் அனுமதி இல்லாமல் சஞ்சீவனியைத் திருடி த்வைபாயனனிடம் கொடுத்ததற்காக உன் மேல் வசியப் பிரயோகம் செய்யப் போகிறேன்.” என்ற வண்ணம் மஹா அதர்வர் தன் கண்களை மூடிக் கொண்டார். அதன் பின்னர் த்வைபாயனரின் மேல் தன் கண்களை ஈட்டி போல் நாட்டியவண்ணம், “த்வைபாயனா! இதோ பார் வாடிகாவை! இவள் மேல் நீ காதல் கொள்வாய்!” என்றார்.

“அப்படியே குருதேவா! உங்கள் ஆணைப்படியே!” என்றார் த்வைபாயனர். அவரையும் அறியாமலேயே அவருடைய உள்ளுணர்வு வாடிகா மீது சென்றது. அவள் மேல் ஆழ்ந்த விருப்பம் கொண்டு அவளுக்காக ஏங்கத் தொடங்கினார். இப்போது முனிவர் வாடிகா பக்கம் திரும்பினார். “வாடிகா, த்வைபாயனன் மேல் அன்பு செலுத்து! மாறாத அன்பு செலுத்து!” என்றார். வாடிகா மிகுந்த நாணத்துடன் த்வைபாயனரைப் பார்த்தாள், அவளுக்கு அவர் ஏற்கெனவே அவள் இதயத்தில் கொலு வீற்றிருப்பதாகத் தோன்றியது. “சரி, தந்தையே! நான் இவர் மேல் அன்பு செலுத்துகிறேன்.” என்றாள். “ ம்ம்ம்ம்ம், இவ்வாறுதான் என் முன்னோர்களான பிருகு மற்றும் ஆங்கிரஸ் ஆகியோரின் மனோ வசிய மந்திர சக்தி பூர்த்தி அடைந்தது!” என்றார் மஹா அதர்வர். வாடிகா தன் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த த்வைபாயனரை ஓரக்கண்ணால் பார்க்க த்வைபாயனர் புன்னகை புரிந்தார்.

“இருவரும் இங்கிருந்து செல்லுங்கள்!” என்ற மஹா அதர்வர், “ இங்கே உட்கார்ந்து கொண்டு முட்டாள்களைப் போ விழிக்காதீர்கள். பராசர முனிவரின் சீடர்கள் அனைவரும் இந்த மலை அடிவாரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இங்கே இந்த ஆசிரமத்திற்கு அழைத்து வந்து அனைத்து சௌகரியங்களோடும் தங்க வையுங்கள். த்வைபாயனர் தன்னுடைய ஆசிரமத்தை முழுதும் நிர்மாணிக்கும் வரை அவர்கள் இங்கேயே தங்கட்டும். சுமாந்து, அடுத்த நல்ல நாள் எப்போது வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்! இந்த வாடிகாவை இங்கிருந்து அழைத்துச் செல்! என்னிடமிருந்து அவள் விடுபடட்டும்!” என்றார்.                                            

2 comments:

ஸ்ரீராம். said...

அட!

பித்தனின் வாக்கு said...

இவ்வளவு ஈஸியா கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டாரு, நகை நட்டு சீர் சிறப்பல்லாம் இல்லியா?. அட்லீஸ்ட் எனக்கு அவியலேட கல்யாண சாப்பாடாவது போட்டுருக்கலாம்.