Thursday, November 3, 2016

சஹாதேவனுடன் வந்த விருந்தாளி!

திட்டங்கள் அனைத்தும் முழுமையாகப் போடப்பட்டன. எல்லாம் தயார் நிலையில் இருந்தன. அப்போது கிருஷ்ணன் பாண்டவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு துவாரகை திரும்பினான். ஜராசந்தன் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட்ட செய்தியை யாதவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்னும் ஆவல் அவனிடம் மிகுந்திருந்தது. ஜராசந்தனை ஒழித்த பின்னர் அதிகாரத்தின் பலம் இப்போது இருக்குமிடத்தில் கொஞ்சம் வேறுபாடுகள் இருந்தன. முன்னிருந்ததைப் போல் இல்லை. அதிலும் ஜராசந்தனை உதவிக்கு எதிர்பார்த்திருந்தவர்கள் இப்போது உதவிக்கு ஆளின்றி என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தனர். ஆரியவர்த்தத்திலேயே பாண்டவர்களின் நிலையும் அதிகாரமும் ஆட்சி செலுத்தும் பாங்கும் எவராலும் போட்டியிட முடியாத அளவுக்கு வலிமை பெற்றிருந்தது. அதோடு அவர்கள் ஏற்கெனவே வல்லமை பொருந்திய சக்கரவர்த்தியாக இருந்த பாஞ்சால தேசத்து துருபதனுடனும் காசி, மத்ரா போன்ற நாட்டினருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். துவாரகையின் யாதவர்களோ எப்போதுமே பாண்டவர் பக்கம் தான் என்பது தீர்மானம் ஆகிவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலே அனைவராலும் போற்றி வணங்கப்பட்ட வேத வியாசரின் ஆசிகளும் உதவியும் பாண்டவர் பக்கமே காணப்பட்டது. இது எல்லாம் போதாது என்பது போல நடமாடும் கடவுளாகவே வர்ணிக்கப்பட்ட யாதவ குல வாசுதேவக் கிருஷ்ணனோ தன்னுடைய மகிமையால் பாண்டவர்களை எவராலும் வெல்ல முடியாதவர்களாக ஆக்கி இருந்தான். யுதிஷ்டிரன் இந்திரப் பிரஸ்தத்திலேயே இருக்க மற்ற சகோதரர்கள் நால்வரும் அவரவருக்கென தனியாக உள்ள படைகளுடன் அண்டை நாடுகளுக்குச் சென்று அந்த அரசர்களின் உதவியையும் நாடி, அவரைத் தங்கள் பக்கமும் சேர்த்துக் கொண்டு, ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ளும்படியும் முறையான அழைப்பை யுதிஷ்டிரன் சார்பில் கொடுக்கக் கிளம்பினார்கள். அவர்கள் அனைவரும் நட்பு முறையிலே யுதிஷ்டிரனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு ராஜசூய யாகத்தில் கலந்து கொள்வதாகச் சொன்னால் யுதிஷ்டிரனால் அனுப்பப்பட்ட பரிசுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்படும். அப்படி ஒரு வேளை அவர்களுக்கு இவற்றை ஏற்பதில் தயக்கம் இருந்தால் அதை முறியடிக்கும் திறன் அந்தப் படைவீரர்களிடம் இருந்தது. அவர்களே முடிவெடுத்துவிடுவார்கள்.

உண்மையில் அனைத்து அண்டை நாட்டு அரசர்களும் யுதிஷ்டிரனின் நட்பு அழைப்பை ஏற்கவே செய்தார்கள். ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் போரிட்டுப் பார்த்துத் தோல்வி அடைந்து பின்னர் மனம் மாறினார்கள். இன்னும் சில அரசர்கள் காருஷ நாட்டு தந்தவக்கிரன் மற்றும் பிரகியோதிஷ நாட்டின் பகதத்தன் ஆகியோர் மிகக் கடுமையாகப் போரிட்ட பின்னரே யுதிஷ்டிரனின் நட்பை அங்கீகரித்தார்கள். அரசர்களுடன் மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்று யுதிஷ்டிரன் அஞ்சியது இப்போது ஒன்றும் இல்லை என்றாகி விட்டது. ராஜசூய யாகம் மிகவும் நல்ல முறையில் அனைத்து அரசர்களும் நட்புரீதியில் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி நடக்கும் என்பது இப்போது யுதிஷ்டிரனுக்கு நிச்சயம் ஆனது. இதில் அவன் மனம் மகிழ்ந்தான். தர்மம் சிறக்கும் என்றும் தர்மத்தின் பாதையில் தான் செல்வது அனைவருக்கும் மகிழ்வைத் தரும் என்றும் உணர்ந்தான்.

தன்னுடைய சக்தி முழுதும் செலவழித்துத் தன் மக்களை நேர்மையான பாதையில் வாழும்படி கற்றுக்கொடுக்க முயற்சித்தான் யுதிஷ்டிரன். அனைவருக்கும் சமமான நீதி, பெருந்தன்மையான போக்கு, அனைவருக்கும் கேட்டதைக் கொடுக்கும் இயல்பு இவை அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இயல்பாகவே வாய்த்திருந்தது. ஏழைகளிடமும் இல்லாதவர்களிடமும் அன்பு சுரந்தது. அவனுடைய நேர்மையான, நீதி நெறி தவறாத ஆட்சியின் விளைவாக அவன் நாடு எல்லாவிதமான வளங்களையும் பெற்றுச் செழித்தது. மாதம் மும்மாரி பெய்தது. எங்கும் வறட்சி என்பதே இல்லை. அதே போல் அதீத வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் இல்லை. இயல்பான மழைப்பொழிவால் வயல்கள் நல்ல நீர் வளம் பெற்று விளைச்சல் அதிக அளவில் காணப்பட்டது. அனைவரும் முழுமையாக அனைத்தையும் கற்றுத் தெளிதலில் ஈடுபட்டனர். குருகுலங்கள் தழைத்தோங்கின. முக்கியமாக மிருகங்களின் தாய் எனக் கருதப்படும் பசுக்களும், மனிதர்களின் தாய் எனப்படும் பெண்மக்களும் சிறந்து பாதுகாப்புடன் விளங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டன. பெண்கள் மரியாதையுடனும் கவனத்துடனும் நடத்தப்பட்டார்கள். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. யுதிஷ்டிரனின் இந்த உதார குணத்தாலும் தர்மத்தின் பாதையில் நடப்பதாலும் அனைவராலும் தர்மபுத்திரன் என்றே அழைக்கப்பட்டான். ஒரு சிலர் இவன் தான் தர்மராஜாவின் மறு அவதாரம். இவன் தர்மராஜாவே தான் என்றும் சத்தியம் செய்தனர்.

வேத வியாசரின் அறிவுரைப்படி அவரின் சீடர்களில் சிலர் யுதிஷ்டிரன் சார்பாக ராஜசூய யாகத்துக்கு அக்கம்பக்கம் உள்ள ஆசிரமங்களின் ஸ்ரோத்திரியர்களையும், மாணாக்கர்களையும் சென்று அழைத்தனர். அனைவருக்கும் வியாசர் தன் ஆசிகளைத் தெரிவிப்பதாகவும் சொல்லி இருந்தார். மேலும் இந்த யாகத்தில் “பிரமனாக” வேத வியாசரே அமர்ந்து நடத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தவிர வேறெதுவும் இந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தி வராது என்றே அனைவரும் பேசிக் கொண்டனர். ஆகவே இதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்த ஆசாரியர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். யாகம் நடைபெறுவதில் ஆர்வம் கொண்டனர். ஆசாரியர் வேத வியாசரின் மூலம் தங்கள் கஷ்டங்கள் அனைத்துக்கும் ஓர் விடிவு ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

காண்டவ வனத்தை ஆக்கிரமித்திருந்த அசுரன் மயன் அது எரிக்கப்பட்ட போது கிருஷ்ணனைச் சரண் அடைந்திருந்தான். அவன் இப்போது ராஜசூய யாகம் நடைபெறுவதற்கான சபாமண்டபத்தைக் கிருஷ்ணனின் ஆக்ஞையின் பேரில் கட்டிக் கொடுத்திருந்தான். யுதிஷ்டிரனுக்காக அவன் கட்டி இருந்த அந்த சபாமண்டபம் மூவுலகிலும் காண்பதற்கு அரியதாக மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதைக் கண்டோர் இதைப் போல் பார்த்ததே இல்லை என்றே பேசிக் கொண்டார்கள். விரைவில் மற்ற நாடுகளுக்கு திக்விஜயம் சென்றிருந்த சகோதரர்கள் நால்வரும் நாடு திரும்ப ஆரம்பித்தனர். அவர்கள் தங்களுடன் தங்கக் கட்டிகள், நவரத்தினங்கள், வெள்ளிக்கட்டிகள், பசுக்கள், யானைகள், குதிரைகள் என்று பல்வேறு விதமான பரிசுகளைத் தாங்கள் வென்று வந்த நாடுகளின் சார்பாகப் பெற்று வந்தனர். அர்ஜுனன் தன் படைகளுடன் இமயமலைப்பகுதிக்குச் சென்றிருந்தான். அங்கே அவன் மிகவும் உள்ளே சென்றுவிட்டான். வடக்கே மானசரோவர் ஏரி வரை சென்று விட்டான். நகுலன் மேற்கே சென்றிருந்தவன் அங்கே கடற்கரை ஓரம் ஆண்டு வந்த மிலேச்ச நாட்டு அரசர்களைக் கூட வென்று பரிசுகளை எடுத்து வந்தான்.

பீமன் தன் பங்கிற்குக் கிழக்கே சென்றிருந்தான் அது முற்றிலும் வெற்றியில் முடிந்திருந்தது. அவனுடைய வெற்றியில் முக்கியமான பங்கு வகித்தது அவன் சேதி அரசன் சிசுபாலனை வென்றது தான். ஜராசந்தனின் முக்கியக் கூட்டாளியாக இருந்த சிசுபாலன் இப்போது தன்னுடன் சேர்ந்து தன்னை முன்பை விட வலுவானவனாக மாற்றும் அரசர்கள் இருக்கின்றனரா என்று தேடிக் கொண்டிருந்தான். ஆகவே பீமன் இவனை எப்படியாவது வழிக்குக் கொண்டுவர நினைத்தான். சிசுபாலனை வெல்ல ஓர் வழியையும் தேடிக் கண்டறிந்தான். “சிசுபாலா, நாம் சகோதரர்கள், தாய்வழிச் சகோதரர்கள்! அதை மறவாதே! உன் அன்னை எங்கள் சிற்றன்னை! உன் தாய் மாட்சிமை பொருந்திய மகாராணி ஷ்ருதஸ்ரவாவும் என் தாய் குந்தியும் உடன் பிறந்த சகோதரிகள் அல்லவோ! ஆகவே நாம் நண்பர்களாக இருந்து நட்புப் பாராட்டுவதையே நம் தாய்மார் விரும்புவார்கள்!” என்று திரும்பத் திரும்ப சிசுபாலனிடம் சொன்னான்.

சிசுபாலனுக்குக் கிருஷ்ணன் தான் ஜன்ம வைரி. ஆகவே பாண்டவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டால் பின்னால் கிருஷ்ணனை ஆதரிப்பவர்களே இருக்கப் போவதில்லை. கிருஷ்ணனுக்கு எதிராக இவர்களைத் திருப்பி விடலாம். மேலும் ராஜசூய யாகத்திலும் அந்தக் கிருஷ்ணனுக்கு மரியாதை எதுவும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளலாம். நமக்கே முதல் மரியாதை தரவேண்டும் என்னும்படியாக சூழ்நிலையை மாற்றி விடலாம். இதன் மூலம் நாம் நமக்குக் கிடைக்கும் பெயரையும், புகழையை வைத்துப் பெருத்த அளவில் அதிகார பீடம் ஏறிவிடலாம். இதுவே சிசுபாலனின் கணக்கு. ஆகவே அவன் பீமன் வார்த்தைகளுக்கு மறுப்பேதும் சொல்லவில்லை.

தெற்கே சென்றிருந்த சகாதேவனின் அனுபவங்கள் மாறுபட்டிருந்தது. அவன் நாடு திரும்பியதுமே அனைத்து ஸ்ரோத்திரியர்களும், அரசர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என அவனைச் சூழ்ந்து கொண்டு பெரிய அளவில் வரவேற்புக் கொடுத்தார்கள். அவனுடைய ரதத்தைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அவனருகே ஒரு வித்தியாசமான இல்லை இல்லை விசித்திரமான பயங்கரமான உருவம் அமர்ந்திருந்தது. சகாதேவனுக்கு அருகே அது அவனுக்குச் சமமாக அமர்ந்திருந்தது. கருங்காலிக்கட்டையைப் போன்ற கருத்த உடல், வயதில் சிறியவன் ஆனாலும் மலை போன்ற பெருத்த மேனி, பெரிய மிகப் பெரிய வாய், உறுதியான தாடையின் இருபக்கங்களிலும் தோன்றிய இரு கோரைப்பற்கள், செம்புக்கலரில் தாடி, முடியே இல்லாத வழுக்கைத் தலையில் சூடி இருந்த தங்கக் கிரீடம். இதன் கைகளில் ஒரு மரத்தினால் ஆன ஆயுதம், அதைச் சுற்றிலும் வளையங்கள் கோர்க்கப்பட்டுக் காணப்பட்டது. கைகளில் வளையல்கள் போன்ற கங்கணங்கள், தோள்களில் சூடி இருந்த தோள் வளைகள், கழுத்தில் மாலைகள் இடுப்பில் தங்கத்தினால் ஆன அரைச்சுற்று, முகத்தில் குங்கும வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியங்கள்!

4 comments:

ஸ்ரீராம். said...

//ஜராசந்தன் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட்ட செய்தியை யாதவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்னும் ஆவல் அவனிடம் மிகுந்திருந்தது//

கண்ணனுக்குக் கூட இப்படி ஆசைகள்!

சகாதேவன் அருகில் அமர்ந்து வருவது யார் என்று அறிய ஆவல்!

sambasivam6geetha said...

ஹாஹாஹா, கொஞ்சம் யோசிச்சால் கண்டு பிடிச்சுடலாமே! வர்ணனைகளை மறுபடி படிச்சுப் பாருங்க. எளிது! :)

பித்தனின் வாக்கு said...

ஆகா நம்ம கடோத்கஜ அண்ணாச்சி வந்துட்டாரு. நான் அக்டோபர் முதல் இன்று வரையான அனைத்துப் பதிவுகளையும் படித்தேன். செப்டம்பர் இயர் எண்டிங் என்பதால் வர இயலவில்லை. மன்னிக்கவும். இனி தொடர்ந்து வருகின்றேன். நன்றி.

Unknown said...

கடோத்கஜன்?????????