Friday, November 4, 2016

கடோத்கஜனுக்கு வரவேற்பு!

அந்த உருவம் ரதத்திலிருந்து வேகமாகக் குதித்து அங்குமிங்கும் எவரையோ தேடிற்று. வேறு யார்! பீமனைத் தான்! ஆம் அவன் மகன் கடோத்கஜன் தான் சஹாதேவனுடன் வந்திருந்தது. எனினும் இங்கு எவரும் அவனைப் பார்த்தது இல்லையே! கடோத்கஜன் கீழே குதித்ததும் தன் தகப்பனைத் தான் தேடினான். அவன் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோதே அவன் தந்தை அவன் தாயையும், அவனையும் விட்டுப் பிரிந்து சென்றிருந்தார். எனினும் அவன் தாய் ஹிடும்பி அவன் தந்தை பீமனைக் குறித்து மிக அருமையாக விவரணையுடன் வர்ணனைகள் செய்திருந்தாள். ராக்ஷஸ வர்த்தத்தின் அனைத்து ராக்ஷசர்களையும் தன் வீர, தீரச் செயல்களால் வென்ற வல்லமை பொருந்திய அரசன் வ்ருகோதரன் குறித்து ஹிடும்பி தன் மகன் கடோத்கஜனுக்கு எடுத்துச் சொல்லி இருந்தாள். அவள் அன்பை அவன் எவ்வாறு பெற்றான் என்பதையும் வர்ணித்திருந்தாள். இதோ தந்தை!

ஆம், கடோத்கஜன் பீமனைக் கண்டு பிடித்து விட்டான். அங்கிருந்தவர்களிலேயே அவன் ஒருவன் தான் ஹிடும்பியின் வர்ணனையோடு ஒத்துப் போனான். தந்தையை விபரம் தெரிந்த நாளில் இருந்து இப்போது தான் முதன் முறையாகப் பார்க்கிறான் கடோத்கஜன். ஆகவே அவனுக்கு வழியில் சஹாதேவன் சொல்லிக் கொடுத்திருந்த ஆரியர்களின் சம்பிரதாயமான வரவேற்புக்களும் அதற்குத் தான் நடந்து கொள்ள வேண்டிய முறையும் சற்றும் நினைவில் வரவில்லை. இத்தனைக்கும் அன்கே கூடியிருந்த விருந்தினர்களில் பலரும் மிகப் பெரிய பதவிகளில் இருக்கிறவர்கள்! மகாப் பெரியதொரு சபையின் முன்னே அவர்கள் கூடி இருந்தனர்.  அங்கிருந்த ஸ்ரோத்திரியர்கள் தங்கள் கைகளில் பூரண கலசம் வைத்துக் கொண்டு சஹாதேவனுக்கூ வரவேற்புக் கூறும் விதமாக மந்திரங்களை ஓதிக் கொண்டு இருந்தார்கள். இவ்வளவுக்கும் நடுவில் தன் தகப்பனைக் கண்டதுமே கடோத்கஜன், வெறி பிடித்த முரட்டுக்காளையைப் போல் ஓடோடிச் சென்று தன் தந்தையின் கால்களில் விழுந்தான். விழும்போதே, “தந்தையே, தந்தையே!” என்று பெருங்குரலில் கத்தினான். அவனே பீமனின் ஒரு காலைத் தூக்கித் தன் தலையிலும் வைத்துக் கொண்டான். அப்போது ஏற்பட்ட தடுமாற்றத்தில் பீமன் கீழே விழாமல் இருந்ததே பெரிய ஆச்சரியம்.

அனைவருமே அதிர்ச்சி கலந்த அச்சத்துடன் இதைப் பார்த்தார்கள், ஓர் விசித்திரமான உருவம் வந்ததோடு அல்லாமல் சற்றும் சாஸ்திர, சம்பிரதாயங்களை மதிக்காமலும் நடந்து கொள்கிறதே! அர்ஜுனன் தன் வில்லையும் அம்பையும் எடுத்தான். கடோத்கஜனை நோக்கிக் குறி பார்த்தான். அவன் மட்டும் ஏதேனும் கொலை நோக்கத்தோடு வந்திருந்தால் அர்ஜுனனின் அம்பு குறி தவறாமல் அவன் மார்பைப் பிளக்கும்! ஆனால் இது என்ன? பீமன் வந்திருக்கும் புதிய விசித்திரமான மிருகத்தைத் தூக்கி நிறுத்தித் தன் தோள்களில் சார்த்திக் கொண்டு தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்துகிறானே! “தந்தையே, தந்தையே!” என்று புலம்பினான் கடோத்கஜன் மீண்டும். ஆனால் அவன் ஆரியர்களின் மொழியில் பேசாமல் ராக்ஷசர்களின் மொழியில் பேசியதால் மற்றவர்களுக்குப் புரியவில்லை!

“எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டாய், மகனே!” என்று வினவினான் பீமன். அவனும் ராக்ஷசர்களின் மொழியிலேயே பேசினான். “தந்தையே, என் அம்மா உங்களை வர்ணித்த மாதிரியே இருக்கிறீர்கள் நீங்கள்! ஆகவே உங்களை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை! அதோடு அவள் என்னிடம் உங்கள் காலைத் தூக்கி என் தலையின் மேல் வைத்து ஆசிகளை வாங்கும்படி சொல்லி அனுப்பி இருக்கிறாள்.” என்றும் சொன்னான் கடோத்கஜன். பீமன் அப்போது யுதிஷ்டிரனைச் சுட்டிக்காட்டி, “கடோத்கஜா! உன் பெரியப்பாவின் கால்களில் விழுந்து வணங்கு!” என்றான். கடோத்கஜனுக்கோ அதில் சம்மதம் இல்லை! “ஹூம், தந்தையே, அம்மா உங்கள் கால்களில் தான் விழுந்து வணங்கச் சொன்னாள். இவர் கால்களில் எல்லாம் விழும்படி சொல்லி அனுப்பவில்லை. அதோடு அவர் என்ன இத்தனை சிறிய உருவமாக இருக்கிறார்! ஹூம்! பூச்சியைப் போல் இருக்கிறார்!” என்றான் அரை மனதோடு.

“நீ முதலில் அவர் கால்களில் விழுந்து வணங்கி ஆசிகளைப் பெற்றுக்கொள்!” என்று கண்டிப்புடன் சொன்னான் பீமன். கடோத்கஜன் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். மீண்டும் அரை மனதாக, “சரி, சரி, அப்படியே செய்கிறேன்!” என்றான். அப்போது அந்தக் கூட்டத்தில் எங்கும் நிசப்தம். மக்கள் கீழே குனிந்து தங்கள் கைகளை மடக்கிக் கொண்டு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். சிலர் கைகளைக் கூப்பிக் கொண்டனர். அதைப் பார்த்த பீமன் கடோத்கஜனையும் தன் கைகளைக் கூப்பிக் கொள்ளும்படி கூறினான். ஆனால் அந்த இளம் ராக்ஷசனுக்கு அதெல்லாம் பழக்கமே இல்லை. எப்படிக் கைகளைக் கூப்புவது என்றே புரியவில்லை அவனுக்கு. பீமன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கூப்பிக்கொள்ளுமாறு செய்ய வைத்தான். கூட்டம் ஆரவாரித்தது. அதைக் கண்ட கடோத்கஜன், “என்ன விஷயம்?” என்று கேட்க, பீமன், “முனிவர் வருகிறார்.ஆசாரிய வேத வியாசர்! அவரை வரவேற்க வேண்டும். நீ அவருக்கு உன் மரியாதைகளைத் தெரிவிக்க வேண்டும்!” என்றான் பீமன்.

‘ஆனால், தந்தையே, அம்மா சொல்லி இருப்பது என்னவென்றால் நீங்கள் ஒருவரே இவ்வுலகத்தில் மிகப் பெரிய மனிதர், எல்லாவகையிலும் என்பதே! எனக்கு அப்படித் தான் புரிய வைத்திருக்கிறாள்!” என்றான் கடோத்கஜன். “நான் உன் அம்மாவோடு ஒத்துப் போகிறேன். ஆனால் இந்த மக்களை எல்லாம் நம்மால் அப்படி ஒத்துக்கொள்ள வைக்க முடியாது!” என்று பரிவுடன் மகனிடம் சொன்னான் பீமன். அப்போது அங்கே வந்த வியாசரைப் பார்த்ததுமே கடோத்கஜனுக்குப் புரிந்து விட்டது. இவரைத் தானே தன் தாய் சொல்லி இருந்தாள். அவன் தந்தை பீமனை ராக்ஷசவர்த்தத்திலிருந்து அழைத்துச் சென்றது இந்த முனிவர் தான் என்று அவன் தாய் ஹிடும்பி கடோத்கஜனிடம் சொல்லி இருந்தாள். ஆகவே அவர் தான் இது! என்று புரிந்து கொண்டான் கடோத்கஜன்.  அவன் எண்ணப் போக்குப் புரியாத பீமன் கடோத்கஜனை வியாசர் கால்களில் விழுந்து வணங்கும்படி சொல்ல கடோத்கஜன் மறுத்தான். “அம்மா சொன்னது சரியாகத் தான் இருக்கிறது! அம்மா எப்போதுமே தப்பாகச் சொல்ல மாட்டாள்!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

பீமனோ விடாமல் அவன் முதுகில் தட்டி, “முனிவர் கால்களில் விழுந்து வணங்கு!” என்று மீண்டும் மீண்டும் கூறினான். “சரி, சரி!” என்று அரை மனதாகக் கூறிய கடோத்கஜன், “அம்மா, இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாள். ஆனால் தந்தையோ இதைச் செய் என்கிறார்! நான் என்ன செய்வேன்? இப்போது இங்கே தந்தை மட்டுமே இருக்கிறார். அம்மா இல்லை! ஆகவே தந்தை சொல்வதைக் கேட்டே ஆக வேண்டும்.” என்று கூறிக் கொண்டான். மிக முயற்சி செய்து வியாசரின் கால்களில் விழுந்து வணங்க முற்பட்டான். இம்மாதிரியான சம்பிரதாயமான வேலைகளே சிறிதும் தெரியாத காரணத்தால் அவன் பெரிய உடலைத் தூக்கிக் கொண்டு முன்னோக்கிக் குனிந்து வணங்க முற்படுகையில் தடுமாறிக் குப்புற அப்படியே விழுந்தான். அவன் தலைக்கிரீடம் தலையிலிருந்து கீழே விழுந்து விட்டது. அதைப் பார்த்த கடோத்கஜனுக்கே சிரிப்பு வர ராக்ஷசச் சிரிப்புச் சிரித்த வண்ணம் கிரீடத்தைப் பிடிக்க முயன்றான். அவன் சிரிப்பதைப் பார்த்த அனைவருக்கும் அந்தச் சிரிப்புத் தொற்றிக் கொள்ள அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

யுதிஷ்டிரன் தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக ஓர் சிறு பிள்ளையைப் போலச் சிரித்துக் குதூகலித்தான். அந்தக் கிரீடத்தைப் பிடித்து முழுதும் வழுக்கையாகக் காட்சி தந்த கடோத்கஜனின் தலை மேல் வைக்க முயன்றான். இப்படி ஓர் விசித்திரமான உருவத்தைத் தனக்கு உறவாகக் கொடுத்திருக்கும் கடவுளின் அற்புதத்தை எண்ணி வியந்தான். சிரித்துக் கொண்டே இருந்த கடோத்கஜனோ தன் தந்தையின் பக்கம் திரும்பி ராக்ஷச மொழியில் பேச ஆரம்பித்தான். “அதோ, அந்த மனிதர்!” சகாதேவனைச் சுட்டிக் காட்டிய கடோத்கஜன், “பெரியப்பாவா, சிற்றப்பாவா? அவரை உங்கள் மொழியில் நான் என்னவென அழைப்பது? அவர் தான் இந்தக் க்ரீடத்தை அணிந்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார். ஏனெனில் நான் வ்ருகோதர அரசனின் புத்திரனாம்! இப்போது அம்மா மட்டும் இங்கே இருந்திருந்தாள் எனில் இதைத் தூக்கி எறியச் சொல்லி இருப்பாள். ஆனால் இங்கே எல்லோருமே என்னைக் “கீழ்ப்படி” என்று சொல்வதால் இந்த கடோத்கஜனும் கீழ்ப்படிகிறான்.” என்றான். பீமன் மற்றவர்களுக்காக அதை மொழி பெயர்த்துச் சொன்னான்.

யுதிஷ்டிரன் பீமனிடம் சொன்னான். “கடோத்கஜன் கிரீடத்தை அணிய வேண்டாம். நாம் அவனுக்காகப் புதியதாய் ஒன்றைச் செய்து தருவோம்.” என்றான். இதை கடோத்கஜனிடம் மொழி பெயர்த்தான் பீமன். “அதோ அந்தச் சிற்றப்பாவை விட இந்தப் பெரியப்பா சொல்லி இருப்பது மிகவும் அறிவுபூர்வமாக இருக்கிறது!” என்று சகாதேவனைச் சுட்டிக் காட்டிச் சொன்னான். யுதிஷ்டிரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

சந்தோஷக் காட்சிகள்.