Wednesday, January 4, 2012

திரெளபதிக்குத் தக்க மணாளன் யார்? துருபதனின் கவலை!

பலவிதங்களிலும் இப்போது சங்கடமான நிலைமை அவனுக்கு ஏற்பட்டிருந்தது. கிழக்கே மெல்லமெல்லத் தன் கரங்களை நீட்டிக்கொண்டிருந்த ஜராசந்தன். குருவம்சத்து அரச குடும்பத்தினருக்கு மிகவும் நெருங்கிய ஆசாரியராகத் தன் வலிமையை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டிருந்த துரோணரும், அவரின் மகன் அஸ்வத்தாமா, கூடவே எல்லாவகையிலும் அவர்களுக்குத் துணை போன கிருபர், இவர்கள் அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த பீஷ்ம பிதாமகர், துரோணரின் மாணவர்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கு எல்லாவற்றையும் நினைத்துக் கலங்கினான். அவனுக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. துருபதனின் மகன்களோ அவர்களுக்கு என்னதான் திறமை இருந்தாலும் அர்ஜுனனைப் போலவோ, கர்ணனைப் போலவோ, பீமனைப் போலவோ சிறப்பான தேர்ச்சியைப்பெறவில்லை. ஆஹா, அந்தப் பாண்டவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்களாகிவிட்டார்கள். அவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரனை இப்போது யுவராஜாவாக்கி விட்டார்களாமே! அந்த அர்ஜுனன், துரோணரின் பேச்சைக் கேட்டு என்னைக் கட்டி இழுத்துச் சென்றவன், இந்தப் பாரத பூமியிலேயே நிகரற்ற வில்லாளியாமே! ஹூம் அவனுக்கா என் பெண்ணைக் கொடுப்பது! துருபதன் மனம் குழம்பியது. அப்போதுதான் காவலன் ஒருவன் அங்கே வந்து குரு சாந்தீபனி துருபதனைக் காண வந்திருப்பதாய்க் கூறினான்.


அந்நாட்களில் நடமாடும் பல்கலைக்கழகமாய்த் திகழ்ந்த குரு சாந்தீபனி எல்லா அரசர்களின் தலைநகரங்களிலும் தன்னுடைய முக்கியமான சீடன் ஒருவனை முதன்மை ஆசாரியராகப் போட்டு குருகுலம் நடத்தி வந்தார். வருடம் முழுவதும் அவர் எல்லா நாடுகளுக்கும் சுற்றி வந்து தேவைப்பட்ட நாடுகளில் தேவைப்படும் அரசகுமாரர்களுக்கும், வீரர்களுக்கும் தன்னுடைய கலைகளைக் கற்பித்து வந்தார். அவந்தி நாட்டரசனும் அவனின் இளவல்களான விந்தனும், அனுவிந்தனும் சாந்தீபனி ஆசாரியரிடம் மிகவும் பக்தி கொண்டிருந்ததால் வருடத்தின் முக்கியமான மழைநாட்களில் வேறெங்கும் போகாமல் அவந்தியிலேயே தங்கி வந்து தன் தலைமை குருகுலத்தின் மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளிப்பார். இப்போது இங்கே துருபத நாட்டிற்கும் அவ்வாறே விஜயம் செய்திருந்தார். வந்தவுடன் மன்னனைக் கண்டு ஆசி வழங்கும் முறைப்படி அன்றும் துருபதனைக் காண வந்தார். அந்நாளைய ஆயுதப் பயிற்சியின் நவீனத் தொழில்நுட்பங்களையும், மாறுதல்களையும் அப்போதைக்கப்போதே தெரிந்து கொண்டு தன் மாணாக்கர்களுக்கு உடனடியாகக் கற்பித்து வந்தார் சாந்தீபனி.

குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது தங்கிப் பாஞ்சாலத்தின் மகா வீரர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் தனக்குத் தெரிந்த பல நுணுக்கங்களையும் கற்றுக்கொடுப்பார் சாந்தீபனி. தான் கிருஷ்ண வாசுதேவனைக் குறித்து நினைக்கவும், உடனே அங்கே சாந்தீபனி வருவது தெரிந்ததும் இது ஏதோ நன்மைக்கே எனத் தோன்றியது துருபதனுக்கு. குருவை முறைப்படி மரியாதைகளோடு முன் சென்று எதிர்கொண்டழைத்து வரவேற்று நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றபின்னர் தன் மனதில் உள்ளனவற்றை எல்லாம் அவரிடம் கொட்டினான் துருபதன். தன் மகளின் சுயம்வரம் குறித்தும் எவராலும் வெல்லமுடியாததொரு வில்லாளியையே அவள் மணக்கவேண்டும் என்னும் விருப்பத்தையும் தெரிவித்த அவன் முகம் அப்போது அதன் உள் நோக்கத்தை உணர்ந்து மறைக்க இயலாத அவன் ஆத்திரத்தை அப்படியே வெளிக்காட்டியது. சாந்தீபனியும் நிலைமையைப் புரிந்து கொண்டவரே. அவர் கூறினார்:” துருபதா, உன் மனம் எனக்குப் புரிகிறது. உன் உணர்வுகளையும் புரிந்து கொண்டேன். ஆனால் இப்போதைய இளம் வில்லாளிகளில் பாண்டவர்களில் மூன்றாமவனான அர்ஜுனன் ஒருவனே ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்லாளி எனப் பெயர் வாங்கியுள்ளான். அவன் வில் வித்தையைப் பற்றி அனைவரும் அப்படிச் சிலாகித்துப் பேசுகின்றனர். கண்ணை மூடிக்கொண்டோ, அல்லது பின் பக்கமாகவோ குறி பார்த்துத் தாக்கும்வல்லை மட்டுமில்லாமல், சப்தத்தினாலும் குறியைத் தாக்கும் வல்லமை கொண்டவனாக இருக்கிறானாம். அவன் கடவுளரால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என அனைவரும் கூறுகின்றனர்.”


துருபதனின் முகம் போன போக்கைப் பார்த்த சாந்தீபனி வேறு சில நாட்டின் அரசர்களின் பெயரையும், அரசகுமாரர்கள் பெயரையும் துருபதனுக்குப் பரிந்துரைத்தார். துருபதன் எவரையும் அங்கீகரிக்கவில்லை. “ஆசாரியரே, துரோணரின் சீடனையும் முறியடிக்கக்கூடிய ஒருவனை எனக்காகக் கண்டுபிடியுங்கள்.” என வேண்டினான். இளநகை புரிந்த சாந்தீபனி, “அர்ஜுனனுக்கு அடுத்தபடி எனில் அவனுக்குச் சரிசமமாகவே கருதப்படும் தேரோட்டி ராதேயனின் மகன் கர்ணன் ஒருவனே ஆவான். அவன் துரியோதனின் அத்யந்த நண்பன் மட்டுமல்லாமல் அவனுக்குக் கீழ்ப்படிந்தவனும் ஆவான். துரியோதனன் தயவால் அங்கநாட்டரசன் ஆனான். இவனும் துரோணரின் சீடனே ஆனாலும் பிரம்மாஸ்திரத்தை அவன் அர்ஜுனன் பேரில் பிரயோகிக்க வேண்டும் என்பதால் கற்க ஆசை கொண்டதால் துரோணர் அதை அவனுக்குக் கற்பிக்கவில்லை. பின்னர் பரசுராமரின் சீடனாக ஆகிக் கற்று வந்திருக்கிறான். ஆனால் அங்கேயும் குருவினால் சபிக்கப்பட்டான் என்று கேள்விப் பட்டேன். அவன் எந்தவிதத்திலும் உன் அருமை மகள் கிருஷ்ணாவுக்குப் பொருத்தமானவனே அல்ல.”

1 comment:

priya.r said...

குரு சாந்தீபனி வருகை அவரின் மூலமாக அர்ஜுனனின் வில்லாற்றல் இந்த அத்தியாயத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது