Friday, January 13, 2012

கண்ணன் தன்னைச் சரணென்று போவையேல் சத்தியங் கூறுவன்!

துருபதா, நீ சொன்னால் மட்டும் போதுமா? கிருஷ்ணன் அப்படி எல்லாம் நீ சொன்னதும் உடனே அதற்கு உடன்படமாட்டான். அவனுக்குப் பாண்டவர்களிடம் அபார அன்பு, பாசம். அதிலும் அர்ஜுனனிடம் தனியான பிரியம் வைத்திருக்கிறான். அவர்களுக்கு எப்படி துரோகம் செய்ய நினைப்பான்? அதிலும் அர்ஜுனன் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளி எனப் பெயர் எடுத்த பின்னரும் அவன் இதற்கு உடன்படுவானா?”

“ஆசாரியரே, கிருஷ்ண வாசுதேவனிடம் நீங்கள் எடுத்துக் கூறினால் ஒத்துக்கொள்வான். எனக்கு அப்படித் தான் தோன்றுகிறது. கிருஷ்ண வாசுதேவன் மட்டும் எனக்கு மருமகன் ஆனான் எனில்; ஆஹா! நான் எதைத் தான் தர மாட்டேன்! அவன் மனதால் நினைப்பதைச் செய்து முடிப்பேன்! என் நாட்டையும் பங்கு போடத் தயாராய் இருக்கிறேன். யாதவர்கள் இழந்த மதுராவையும் புதுப்பித்து அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறேன்.”

“எல்லாம் சரிதான் துருபதா! உன் மகள் கிருஷ்ணவாசுதேவனிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறாளா? தன்னைக் குறித்து எந்தவிதமான பெருமையும் கொள்ளாமல், கிருஷ்ண வாசுதேவனின் திறமைகளுக்காக மட்டுமின்றி, அவனுக்காக மட்டும், அவனை மட்டுமே நினைத்துத் தன் சுயப் பெருமைகளையும், கர்வத்தையும் அறவே நினையாமல், அவன் செல்லும் பாதையில் அவனோடு உடன் செல்ல, அவனுக்காக வாழத் தயாராக இருப்பாளா? கண்ணன் அப்படிப் பட்டதொரு பெண்ணையே மணக்கத் தயாராக இருப்பான். “

“திரெளபதி கண்ணனின் சாகசங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். அவனுடைய வீரத்தை நினைத்துப் பெருமையாகப் பேசி இருக்கிறாள். ஆனால் ஆசாரியரே! அவள் தன் சுயத்தில், தன்னில் நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பதோடு, தன்னுடைய தனித் தன்மையில் மிகவும் கர்வம் உடையவள்; எதற்காகவும் அதை இழக்கமாட்டாள். அவ்வளவு எளிதில் யாருக்கும் தலை வணங்க மாட்டாள். தன்னை வெற்றி கொள்ள அனுமதிக்கமாட்டாள்.” துருபதன் ஒரு மென்னகையோடு சொன்னாலும் இதற்காக அவன் உள்ளூர பெருமைப்படுவது தெரிந்தது. “ஒருவேளை தன் தகப்பனிடமிருந்து இந்த குணம் அவளுக்கு வாய்த்திருக்கலாம்.” இதைச் சொல்லும்போது தன்னுடைய போராட்ட குணமும், தன்னம்பிக்கையும் நினைத்து துருபதன் முகம் பெருமிதத்தில் ஒளிர்ந்தது.

“துருபதா, கண்ணனைச் சந்திக்கையில் தன் கர்வத்தையும் தன்மானத்தையும் மறப்பாளா உன் மகள்? அப்படி எனில் நல்லது! ஆனால் யாருக்குத் தெரியும்?? கிருஷ்ணன் திறமையான ரதசாரதி என்பது அவனைப் பொறுத்தவரை பெரியதொரு விஷயமே இல்லை.”

“ஆசாரியரே, அவன் உண்மையில் எப்படிப்பட்டவன்? குணத்தில், நடத்தையில்?”

“அவன் வெறும் போர்வீரன் மட்டுமல்ல; யுத்தத்தில் சிறந்தவன் மட்டுமல்ல; யாதவர்கள் செளராஷ்டிரக் கடற்கரைப் பட்டினங்களில் வசிக்க ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் அவர்களின் படைபலம் மட்டுமல்லாமல், செல்வ வளமும் மிகவும் உயர்ந்திருக்கிறது. பல விதங்களிலும் வலிமை படைத்தவர்களாக ஆகிவிட்டனர் யாதவர்கள். குதிரைகளும், பசுக்களும், காளைகளும் கூடப் பலமடங்கு பெருகிவிட்டன. அவர்கள் கடல் பயணத்திலும், கடல் வணிகத்திலும் கூடச் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் கப்பல் துவாரகையின் துறைமுகத்திலிருந்து கிளம்பி வெகு தூரக்க் கடல்களில் எல்லாம் சஞ்சாரம் செய்து பல நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்து அங்கிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டு சேர்க்கின்றனர்.”

“ஓஹோ, ஆசாரியரே, அதனால் தான் யாதவர்கள் அவனை ஓர் உயிருள்ள கடவுள் என்கின்றனரா?”
“யாதவர்களுக்கு அவன் ஓர் உந்துசக்தியாக விளங்குகின்றான். அவர்கள் அவனை தர்மத்தின் வடிவமாய்க் கருதுகின்றனர். சத்திய ஜோதியாக நினைக்கின்றனர். முன்னைப் போல் முரடர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் யாதவர்களைக் காண முடியாது. கிருஷ்ணனின் தலைமையின் கீழ் அவர்கள் நடவடிக்கை எல்லாம் மாறிவிட்டது. ஒழுக்கமும், ஒற்றுமையும் நிரம்பியவர்களாகி விட்டனர். அதனால் தான் ஷால்வனைத் தோற்கடித்து ஜராசந்தனின் கூட்டணியை வெற்றிகரமாக முறியடித்தனர்.”

“அத்துடன் இல்லை துருபதா! கிருஷ்ண வாசுதேவன் மிகவும் அபாயமானவனும் கூட.” குறும்புச் சிரிப்பு மிளிர ஆசாரியர் தொடர்ந்தார். அவனைச் சந்திப்பது என்பது அவனை நாம் முழுமனதோடு அன்பு செய்யவேண்டியே சந்திக்க முடியும். நம் அன்பானது அவனிடம் நாம் எவ்வகையில் காட்டவேண்டும் எனில் நம்மை நாம் மொத்தமாய் அவனிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவனிடம் சரணடையவேண்டும். நீயே கதி என நினைக்கவேண்டும். துருபதா, அவன் என் மாணவன் தான் இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் ……ஆனால் கடவுள் எப்போதேனும் மானுட ரூபம் எடுத்தாரானால், அல்லது எடுத்திருந்தாரானால்….. அது வாசுதேவ கிருஷ்ணன் ஒருவனே!

“அவன் கடவுள் தான் துருபதா!”

4 comments:

Vasishta said...

ஆம்! கண்ணன் கடவுளேதான்! ஹே கண்ணா, கிருஷ்ணா, பரம்பொருளே!!! எங்கேயடா போய் விட்டாய் இன்று? வருவாயா இங்கு தர்மம் காத்திட?? கலி தீர்த்திட!!

Vasishta said...

ஆம்! கண்ணன் கடவுளேதான்! ஹே கண்ணா, கிருஷ்ணா, பரம்பொருளே!!! எங்கேயடா போய் விட்டாய் இன்று? வருவாயா இங்கு தர்மம் காத்திட??? கலி தீர்த்திட!!

sambasivam6geetha said...

நல்வரவு வஷிஷ்ட் அவர்களே, கண்ணன் வருவான்; தக்க சமயம் வரவேண்டும் அல்லவா?

priya.r said...

கண்ணனை பற்றி மேலும் கூடுதல் தகவல்கள் ..

பதிவுக்கு நன்றி கீதாமா