Saturday, January 21, 2012

நல்லவர்க்கொரு தீங்கு நண்ணாது நயமுறக் காத்திடுவான்!

உண்மை; கிருஷ்ணன் யாதவர்களைக் குடியமர்த்துவதிலும், அவர்களுக்கு வேண்டியதைச் செய்வதிலும் மட்டும் நின்றுவிடவில்லை. வெளி உலகில் நடப்பவைகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான். முக்கியமாய் அவனுடைய அத்தையான குந்தியின் புத்திரர்களின் க்ஷேமலாபங்களில் மிகுந்த அக்கறை காட்டினான். யாதவர்களுக்கு இத்தனை மேன்மை ஏற்பட்டும் அவர்களின் செல்வம் விருத்தி அடைந்தும், தர்மத்தின் வழியிலே செல்வது ஒன்றே ஆர்யவர்த்தத்தின் மேன்மைக்கும், சிறப்புக்கும் நல்லது எனத் திடமாக இருந்தான். ஆகவே ஆர்யவர்த்தத்தின் மேன்மைக்குப் பாண்டவர்களின் நலமும், வீரமும், அவர்கள் பலம் அடைவதும் தேவை எனப் புரிந்து வைத்திருந்தான். அதோடு கூட அர்ஜுனன் கூடவும், பீமன் கூடவும் கழித்த நாட்களின் இனிமையான நினைவுகளைக் கண்ணன் மறக்கவே இல்லை. அவர்களின் வளர்ச்சியைத் தூர இருந்தாலும் தெரிந்து கொள்வதில் அக்கறையும் காட்டி வந்தான். அவந்தியின் வளர்ச்சியும், பலமும் ஆர்யவர்த்தத்தின் அனைத்து பாகங்களுக்கும் செல்ல வசதியாக அது மத்தியத்தில் அமைந்ததும், அதன் வளர்ச்சிக்கும் பலத்துக்கும் காரணமாக அமைந்த அதன் இளவரசர்களான விந்தனும், அனுவிந்தனும் அவர்களின் நட்பும் சாந்தீபனியின் குருகுல வாழ்க்கையில் இருந்தே அவை தொடர்ந்து வருவதையும் நினைவு கூர்ந்தான் கிருஷ்ணன். அவர்கள் மூலமே நாட்டின் பல பாகங்களிலும் நடக்கும் மாறுதல்களையும், மற்ற அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டான் கிருஷ்ணன்.

அதோடு ஊருக்கு ஊர் செல்லும் பிராமணர்கள், புனித யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் போன்றோர் மூலமும் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அது போலவே குரு சாந்தீபனியின் குருகுலமும் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று வருவதால் அவர்களின் மூலமும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் சாந்தீபனி பல மன்னர்களுக்கும் ஆசாரியராக இருந்தமையால் பல நாட்டு நடவடிக்கைகள் அவர் மூலம் கண்ணன் அறிய நேர்ந்தது. ருக்மிணியின் சுயம்வரம் கிருஷ்ணனின் துணிகரமானதொரு சாதனையாக முடிந்த பின்னர், ஜராசந்தன் தன் நாடான மகதத்தின் தலைநகரம் ராஜகிருஹத்திற்கு வெறுப்போடும், ஆங்காரத்தோடும், துவேஷத்தோடும் சென்றடைந்தான். அடக்க முடியாச் சீற்றம் கொண்டிருந்தான். ருக்மிணியின் சுயம்வரம் முடிந்த இந்த மூன்று வருடங்களில் ஆர்யவர்த்தத்தின் எந்த அரசனோடும் போரிட்டு அவனை அடிமையாக்கவில்லை; ஆனால் அவன் சும்மா இருப்பதும் காசி ராஜாவைத் திடீரெனத் தாக்கி முற்றுகையிட்டுக் காசி ராஜ்யத்தைத் தன் ராஜ்யத்தோடு இணைக்கவே என்றும் பேசிக்கொண்டார்கள். ஆனால் கிருஷ்ணன் தர்மத்தை நிலைநாட்டுவது என்பது இப்போது ஹஸ்தினாபுரத்து அரசர்கள் கைகளிலும், பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் கைகளிலுமே உள்ளது என்பதை உணர்ந்திருந்தான். ஆர்ய வர்த்தத்தில் இப்போது இவர்கள் இருவருமே மிகப் பெரியதொரு சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்ததோடு தனிப்பட்ட முறையில் பலமும், செல்வாக்கும் கொண்டு விளங்கினார்கள்.

கங்கைக்கரையின் வளமான நிலங்களைக் கொண்டிருந்த இரு நாடுகளும் ஆர்யவர்த்தத்தின் கண்ணின் மணிகள் போல விளங்கின. இங்கே தான் பெருமை வாய்ந்த குருக்ஷேத்திரமும், பிரம்மரிஷிதேசமும் அடங்கி இருந்ததோடு பல ரிஷி முனிவர்களின் ஆசிரமங்களும் இருந்தன. அதோடு க்ஷத்திரியர்களுக்கான பல்வேறு நியமங்களும் காங்கேயன் எனப்பட்ட பீஷ்மரால் ஏற்படுத்தப்பட்டன. ஒரு க்ஷத்திரியன் எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பீஷ்ம பிதாமகர், குரு வம்சத்தின் அஸ்திவாரமாக, அசைக்க முடியாதவராக விளங்கினார். ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக திருதராஷ்டிரன் பெயரளவுக்கே இருக்கிறான் எனவும் அதிகாரம் முழுதும் பீஷ்மர் கைகளில் என்றும் பேசிக்கொண்டார்கள். அரச தர்மத்தை நிலைநாட்டுவதையே ஒரே குறிக்கோளாய்க் கொண்ட பீஷ்மர், சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் அப்பழுக்குச் சொல்லமுடியாத ஒழுக்கத்தோடு கடும் பிரமசரியத்தை அநுஷ்டித்தார். அதே சமயம் யுத்தம் என வந்தால் அவரை எவராலும் வெல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமாகப் போரிடுவார். ஹஸ்தினாபுரத்தின் தற்போதைய சூழ்நிலை கிருஷ்ணன் மனதில் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. பிறவியிலேயே குருடான மன்னன் திருதராஷ்டிரன், தன் தம்பியான பாண்டுவின் குமாரன் யுதிஷ்டிரனுக்கு யுவராஜ பட்டாபிஷேஹம் செய்துவிட்டான். அவன் செய்த புத்திசாலித்தனமான, விவேகம் உள்ள நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று. கண்ணனின் அத்தை குமாரன் யுதிஷ்டிரன் இப்போது ஹஸ்தினாபுரத்தின் யுவராஜா. பீஷ்ம பிதாமஹரின் ஆசிகளோடும், உதவியோடும் ஹஸ்தினாபுரம் மட்டுமில்லாமல் ராஜ்யத்தின் அனைத்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தையும் யுதிஷ்டிரன் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டான். மக்கள் அனைவருமே யுதிஷ்டிரனை மிகவும் நேசித்தார்கள்.

யுதிஷ்டிரன் அடுத்துத் தங்களுக்கு அரசனாகப் போகும் நாளை மிக ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அதோடு ஹஸ்தினாபுரத்தோடு மோதிய அரசர்களை வென்றதன் மூலம் பாண்டவர்களில் மூன்றாவதான அர்ஜுனனின் திறமையும் அவன் வில் வித்தையும் நாடெங்கும் கொண்டாடப் பட்டு வந்தது. கிருஷ்ணனின் சாகசங்களைப் போலவே அர்ஜுனனின் சாகசங்களையும் கதைப்பாடல்களாக மக்கள் பாடி மகிழ்ந்தனர். நாட்டின் நாலா திசைகளிலும் அர்ஜுனனின் வில்லும், அம்பும் செய்யும் மாயாஜாலத்தைக் குறித்துப் பேசி மகிழ்ந்தனர். இத்தனை இருந்தாலும் அங்கே ஓரு இடையூறு இருக்கத்தான் செய்தது. அது…..பாண்டவர்களின் பெரியப்பாவான திருதராஷ்டிரனின் மகனான துரியோதனன் மூலம் வந்தது. அதுவும் கண்ணனுக்குத் தெரிய வந்தது, பலராமனிடம் கதாயுதப் பயிற்சி மேற்கொள்ளும் சாக்கில் துரியோதனன் துவாரகைக்கு வந்தபோது தான். அப்போது தான் யுதிஷ்டிரன் யுவராஜாவாகப் பட்டம் ஏற்றிருந்தான். துரியோதனன் சிறந்த வீரன் தான் சந்தேகமே இல்லை; வந்த சிலநாட்களிலேயே பலராமனின் மதிப்பையும், அவன் பிரியத்தையும் சம்பாதித்துக்கொண்டான். அவனின் பிரியமான சீடனாகவும் மாறிவிட்டான். கிருஷ்ணனிடமும் துரியோதனன் நண்பனாக முயன்றான். அவனுடைய பலத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன. கிருஷ்ணன் அவனைத் தூரத்திலேயே வைத்துப் பழகினான். அவன் மனதுக்குள் உள்ள கெட்ட எண்ணத்தைக் கிருஷ்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.

2 comments:

பித்தனின் வாக்கு said...

today i read all pending post. good

priya.r said...

வெளி உலகில் நடப்பவைகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான்//

ஒரு சந்தேகம்!

கண்ணன் தான் முக்காலமும் உணர்தவன் ஆயிற்றே ! அவன் வெளி உலகில் நடப்பவைகளை

மற்றவர்கள் வாயிலாக தான் தெரிந்து கொள்ள வேண்டுமா