Friday, January 6, 2012

செங்கண்மால் தான் கொண்டு போவானோ???????????

துருபதன் வாயே திறக்காமல் எங்கோ கவனமாக இருந்தது போல் காணப்பட்டவன் சட்டென்று திரும்பி ஆசாரியரிடம், “ஆசாரியரே, என்னுடைய சபதத்தை எப்பாடுபட்டேனும் நான் முடிக்கப் போகிறேன். துரோணரின் சீடர்களை விடச் சிறந்த ஒருவனுக்கே என் மகளை மணமுடிக்கப் போகிறேன். என் அருமை மகள் கிருஷ்ணாவும் என் சபதத்தை நான் நிறைவேற்றத் துணையாகவே இருப்பாள். துரோணரை எவ்வகையிலேனும் அழிக்கும் ஒருவனையே அவள் மணமுடிப்பாள். இது சத்தியம்!” என்று தீர்மானமாகச் சொன்னான். சாந்தீபனி கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் யோசனையோடு துருபதனின் இந்த ஆக்ரோஷ சுபாவத்தைப் பார்த்துத் தமக்குள் விரைவில் துருபதனின் இந்த சபதம் பழிமுடிக்கப்படாவில்லை எனில் மேலே என்ன ஆகுமோ எனக் கவலை கொண்டார். இது எல்லாம் கடைசியில் எதில் போய் முடியுமோ என யோசித்து வருந்தினார். “துருபதா, நீ உன் மகளை இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்த்து வந்தது மாபெரும் தவறு. அவளுடைய மண வாழ்க்கை முழுதும் கசப்புகளாலும், வேதனைகளாலும் நிரம்பியதாய் ஆகிவிடும். உன்னை நீயே மாற்றிக்கொள்வாய்.”

“இல்லை குருவே! என் மகள் மிக மிகச் சிறந்ததொரு பெண்மணி. திடமான மனம் படைத்தவள். திடமான முடிவுகளையும் தானே எடுப்பதில் வல்லவள். மஹா தைரியசாலி. இப்படி ஒரு அருமையான மகள் எனக்குக்கிடைத்ததில் நான் பெருமைப் படுகிறேன். அவள் அடிக்கடி என்னிடம் சொல்கிறாள்: தந்தையே , நான் பெண்ணாய்ப் பிறந்துவிட்டேனே! இல்லை எனில் இத்தனை வருடங்களில் துரோணரின் அந்தச் சீடனை அழித்துவிட்டு துரோணரைப் பழிவாங்கி உங்கள் தீராத துக்கத்தைத் துடைத்திருப்பேன்.” என்று சொல்கிறாள். இப்படி ஒரு மகள் யாருக்குக் கிடைப்பாள்?” துருபதனின் முகம் பெருமையால் ஒளிர்ந்தது.

“துருபதா, தற்காலத்தில் வில்லையும், அம்பையும் வைத்துச் சிறப்பாகச் செலுத்தும் வில்லாளிகளைக் காண்பதே அபூர்வமாக உள்ளது.” சாந்தீபனி துருபதனுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச ஆரம்பித்தார். “வில்லாளிகளே மிகவும் குறைந்துவிட்டனர். வில்லையும், அம்பையும் வைத்துக்கொண்டு அஸ்திரப் பிரயோகமும் செய்யத் தெரிந்தால் அவனால் பல அதிசயங்களை நிச்சயமாய் நிகழ்த்த முடியும். ஆனால் எனக்குத் தெரிந்த இளம் வீரர்களில் வாட்போரில் சிறந்தவர்கள், வேல் வைத்துப் பழகியவர்கள், கதை, ஈட்டி போன்றவற்றைப் பிரயோகம் செய்வதில் வல்லவர்கள், எனப் பலர் உள்ளனர். வில்லாளிகள் மிகக் குறைவாகவே உள்ளனர்.”

“உண்மைதான் ஆசாரியரே. வில்வித்தையில் சிறந்தவனே இன்றைய நாட்களில் யுத்தத்தில் ஜெயிக்க முடியும். பாதுகாப்பான தூரத்தில் இருந்து குறி வைத்துத் தாக்க வில்லையும், அம்பையும் பிரயோகம் செய்வதைத் தவிர வேறு சிறந்த வழி எது உள்ளது? அப்படிப்பட்ட வில்லாளியை எவராலும் வெல்லவும் முடியாது.”

“ஆம், துருபதா, அதனால் தான் நான் அர்ஜுனனை எவராலும் வெல்ல முடியாதவன் எனக் கூறுகிறேன். அவனால் கவிந்திருக்கும் இருளிலும், தன் பின்பக்கம் பார்க்காமலேயே கூடவும் குறி வைத்து அம்பால் தாக்க முடியும். அத்தகையதொரு வல்லவன்.” குரு சாந்தீபனியின் குரலில் அவரையும் அறியாமல் பெருமிதம் இழையோடியது.

“ஆசாரியரே, தாங்கள் வில்வித்தையில் சிறந்தவரென நாடு, நகரம் முழுதும் பிரசித்தி அடைந்தவர். உங்கள் மாணவர்களில் சிலர் வில்வித்தையில் சிறந்தவர்கள் என நானும் சிறிது அறிந்திருக்கிறேன்.” துருபதன் நிறுத்தினான்.

“ஓ, அவந்தி நகரத்து இளவரசரகள் விந்தனும், அநுவிந்தனும் சிறந்த வில்லாளிகள்.” சாந்தீபனி கூறினார். துருபதனுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். தலையை ஆட்டினான். “அவர்களில் எவரும் துரோணரின் சீடனுக்கு அருகில் கூட வரமுடியாது. ஆனால் ஆசாரியரே, ஒரே ஒரு மாணவன் இருக்கிறான். அவனும் உங்கள் மாணவனே. கடவுளரால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்ற பெயர் பெற்றவன். ஆசாரியரே, நான் யாரைச் சொல்கிறேன், தெரிகிறதா? நான் சொல்லும் அந்த மிகச் சிறந்த வில்லாளி நான்கு குதிரைகள் பூட்டிய வேகமாய் ஓடும் ரதத்தில் இருந்து அந்தக் குதிரைகளைச் சமாளித்துக்கொண்டே அதே சமயம் எங்கோ தூரத்தில் இருக்கும் குறியைத் தாக்கி வீழ்த்தும் வல்லமை உடையவன். எனக்குத் தெரிந்து அர்ஜுனனால் கூட இதைச் செய்ய முடிந்ததில்லை என எண்ணுகிறேன்.”

உள்ளார்ந்த மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் சிரித்த சாந்தீபனி, “கிருஷ்ண வாசுதேவன். துருபதா, நீ அவனைத் தானே சொல்கிறாய்? என் மாணாக்கர்களிலேயே அவன் ஒருவனே என்னையும் மிஞ்சிய வில்லாளி. வில், அம்பில் மட்டுமில்லாமல் அனைத்து ஆயுதங்களையும் சரியான சமயத்தில், சரியான முறையில் பிரயோகம் செய்வதில் வல்லவன். உண்மைதான் துருபதா, அவனுக்கு மிஞ்சிய வில்லாளி இந்த ஆர்ய வர்த்தத்திலேயே இல்லைதான். ஆனால் நீ அவனைக் கணக்கில் எடுப்பதில் பிரயோசனமே இல்லை.”

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயத்தில் உரையாடல்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன .....