Monday, January 16, 2012

சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!

குருதேவரே, பின் ஏன் தயக்கம்? என் மகளுக்கு வாசுதேவ கிருஷ்ணனே சிறந்த மணமகன் ஆவான். அவனிடம் நீங்கள் நேரில் பேசுங்கள். என்னுடைய சபதத்தையும் அவனாலேயே முடிக்க முடியும். கிருஷ்ணனை என் மாப்பிள்ளையாகப் பெறவேண்டி நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். இதன் மூலம் பாஞ்சால நாட்டிற்கும், யாதவர்களுக்கும் ஒரு நீண்ட நெடிய தொடர்பு ஏற்பட்டு உறவும் பலமடையும்.”

சாந்தீபனி சிரித்தவண்ணமே தாம் அங்கிருந்து பிரபாஸ க்ஷேத்திரத்திற்கே அடுத்துச் செல்லவிருப்பதால் கிருஷ்ண வாசுதேவனிடம் துருபதனின் விருப்பத்தைத் தெரிவிப்பதாய்க் கூறினார். ஆனால் கிருஷ்ண வாசுதேவனுக்கு ஆலோசனைகள் கூறும் அளவுக்குத் தகுதியான மனிதர்கள் இந்த ஆர்யவர்த்தத்திலேயே இல்லை என்றும் கூறினார். சில நாட்களில் பாஞ்சாலத்திலிருந்து பிரபாஸ க்ஷேத்திரத்துக்குப் பயணம் ஆன சாந்தீபனி முனிவரும் அவரின் முக்கியச் சீடர்களும் பிருகு தீர்த்தத்திலிருந்து சகல வசதிகளும் நிரம்பிய பெரிய கப்பல் போன்ற படகுகளில் பிரபாஸ க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தனர். அப்போது நடுப்பகல் நேரமாக இருந்தது.

கிருஷ்ண வாசுதேவனின் அரண்மனையில் கிருஷ்ணன் அன்று அதிகாலையிலேயே எழுந்தான். அவனின் இரு மனைவியரும் பணிவிடைகள் செய்ய அவன் தன்னை வெளியே செல்லத் தயார் படுத்திக்கொண்டான். குருதேவர் அன்று வருவதால் சீக்கிரம் கிளம்பவேண்டி இருந்தது. அவரை வரவேற்க வேண்டும். அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்ய வேண்டும். இரு மனைவியரையும் பார்த்துக் கிருஷ்ணன், “குருதேவர் உங்கள் இருவரையும், கணவனை சந்தோஷமாக வைத்திருக்கிறீர்களா எனக் கேட்கப் போகிறார்.” என்றான் குறும்புடன். அதற்கு ருக்மிணி, :என் கணவர் இந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களையும் என் கணவர் சந்தோஷமாக வைத்திருக்கிறார்; எங்கள் இருவரைத் தவிர எனச் சொல்வேன்.” என்றாள்.
“உங்கள் இருவரின் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்வார்.”எனக் கிருஷ்ணனும் விஷமமாகப் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினான். பலராமன், யுயுதானா என்ற பெயர் உள்ள ஆனால் சாத்யகனின் மகன் என்பதால் சாத்யகி என அழைக்கப்பட்ட சாத்யகி ஆகியோரும் கிருஷ்ணனோடு சேர்ந்து கொண்டனர். சாத்யகி கிருஷ்ணனோடு சேர்ந்தது முதல் அவனை நிழல் போலத் தொடர்ந்தான். தன்னுடைய முழு விசுவாசத்தையும் காட்டிக் கிருஷ்ணனின் சாகசங்கள் அனைத்திலும் தானும் பங்கு பெற்றான். மூவரும் கடற்கரையில் உடல்பயிற்சி, ஆயுதப் பயிற்சி, வில் வித்தை, மல்யுத்தம், வாள் சண்டை, கதைப் பயிற்சி போன்றவற்றில் அன்றாடப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த யாதவ இளைஞர்களையும், வீரர்களையும் பார்த்து உற்சாகப் படுத்தினார்கள். அனைவரும் கூடி இருந்தாலும் கிருஷ்ணன் அனைவரையும் தனித்தனியாக விசாரித்து ஊக்கம் கொடுத்தான். அனைவரும் சேர்ந்து, “ஜெயஶ்ரீ கிருஷ்ணா” என கோஷம் போட்டார்கள். “வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்” என்ற கோஷம் இங்கே துவாரகை வந்ததில் இருந்து கிருஷ்ணனிடம் கொண்ட அபார பக்தியால் “ஜெயஶ்ரீ கிருஷ்ணா” என்றாகி இருந்தது.

தன்னுடைய தண்டாயுதத்திற்குக் கிருஷ்ணன் கெளமோதகி என்ற பெயரும், தன்னுடைய வில்லிற்கு சார்ங்கம் என்ற பெயரும் வைத்திருந்தான். சார்ங்கத்தைத் தூக்கி நிறுத்தி நாணேற்றி அம்பு விடக்கூடிய திறமை கண்ணன் ஒருவனுக்கே உண்டு. அன்று அவன் எந்தப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அனைவரின் பயிற்சியையும் மேற்பார்வை பார்த்துவிட்டுக் கடலில் நீந்தச் சென்றனர். பின்னர் அன்றாட நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு குரு கர்கர் தொடர, பலராமன், சாத்யகி ஆகியோருடன் கண்ணன் தன் ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்கச் சென்றான். குருநாதர் வரப் போவதை அறிந்த யாதவர்களில் பெரும்பாலோர் அந்தக் கடற்கரையில் அந்தக் குளிர்காலத்து இளங்காலையில் கூடி இருந்தார்கள். முதலில் சீடர்கள் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். பின்னர் வந்த படகில் சாந்தீபனியும் வந்து சேர்ந்தார். மான் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டு, வெண்மையான நீண்ட தாடியுடன் காட்சி அளித்த சாந்தீபனியின் தோற்றம் அவருடைய இடைவிடாத தவத்தின் காரணமாய் ஒரு பிரகாசமான ஜோதியைப் போல் காட்சி அளித்தது. சூரியன் தான் உதயமாகிவிட்டானோ என எண்ணும்படி ஜோதிர்மயமாய்க் காட்சி அளித்தார் சாந்தீபனி.

கண்ணனைப் பார்த்ததுமே நீண்ட நாட்கள் பிரிந்திருந்த குழந்தையைத் தந்தை பார்த்ததும் எப்படிக் கட்டி அணைப்பாரோ அவ்வாறு கட்டி அணைத்தார் சாந்தீபனி. தன்னுடைய அருமைச் சீடனை அன்போடும், பாசத்தோடும், உள்ளார்ந்த பெருமையோடும் பார்த்தார். விடாமுயற்சியோடு போராடும் ஒரு வாழ்க்கையை அதன் தீவிரம் குறையாமலே வாழ்ந்தவனைப் போல் காணமுடியவில்லை. கிருஷ்ணனைப் பார்த்தால் சொகுசு வாழ்க்கை வாழ்பவனைப் போலவே காணப்பட்டான். அவன் உடல் மெலிதாக இருந்தாலும் உறுதி உண்டு என்பதை அவர் அறிவார். பெண்ணிற்கு இருப்பது போல் வளைந்த புருவங்களும், அதன் கீழே தெரிந்த ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தைக் காட்டும் ஒளிமயமான கண்கள், இயல்பாகத் தானாகவே வரும் இளநகை கொண்ட முகம், இந்த உடல் மெலிதாக இருந்தாலும் தேவைப்படும்போது தன் உறுதியைக் காட்டும், எஃகு போல் மாறும் என்பதைக் காட்டிய திண்ணிய தோள்கள், நீண்ட கைகள், ஒரு காலத்தில் யமுனைக்கரையில் கோபிகைகளோடு நடனமாடிய கால்கள், தேவைப்படும்போது ரதத்தை வேகமாக ஓட்டியவண்ணமே வில்லையும், அம்பையும் குறிபார்த்துத் தாக்க உதவும் என்பதையும், இடையில் காணப்பட்ட மஞ்சள் பட்டாடை, தலையில் சூடிய கிரீடமும், அதில் பொருத்திய மயிலிறகும், கழுத்தில் சூடிய வாசனை மிகுந்த சண்பக மலர்களால் கட்டப்பட்ட மாலையுமாகக் கண்ணன் தரிசனத்தில் தன்னை மறந்தார் சாந்தீபனி. அவனைப் பார்த்தால் செயற்கரிய சாகசங்களைச் செய்தவன் போலல்லாமல் எளிமையாகவும், அதே சமயம் இயல்பான பணிவோடும் காட்சி கொடுப்பதையும் பார்த்தார் சாந்தீபனி.

மிகுந்த சந்தோஷத்தோடு கண்ணனைப் பார்த்த அவர் பலராமனையும் கட்டி அணைத்து ஆசி வழங்கியபடியே,”உத்தவன் எங்கே?” என்று கேட்டார். அவன் ஹஸ்தினாபுரம் போயிருப்பதாய் பலராமன் கூறினான். கண்ணன் துவாரகையில் யாதவர்களைக் குடியமர்த்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதை சாந்தீபனி புரிந்து கொண்டார்.

3 comments:

priya.r said...

அவனின் இரு மனைவியரும் பணிவிடைகள் செய்ய அவன் தன்னை வெளியே செல்லத் தயார் படுத்திக்கொண்டான்//

கண்ணன் ஷாயீபாவை மணந்ததை நீங்கள் ஏற்கனவே தெரியபடுத்தி விட்டீர்களா ?

சாந்தீபனி கண்ணன் சந்திப்பு விவரித்த விதம் அருமை

priya.r said...

அவனின் இரு மனைவியரும் பணிவிடைகள் செய்ய அவன் தன்னை வெளியே செல்லத் தயார் படுத்திக்கொண்டான்//

கண்ணன் ஷாயீபாவை மணந்ததை நீங்கள் ஏற்கனவே தெரியபடுத்தி விட்டீர்களா ?

சாந்தீபனி கண்ணன் சந்திப்பு விவரித்த விதம் அருமை

sambasivam6geetha said...

கண்ணன் ஷாயிபாவை மணந்தது குறித்து நாம் யூகமாய்த் தான் புரிந்து கொள்ளவேண்டும் ப்ரியா. இது குறித்து நான் எதுவும் தெரியப்படுத்தவில்லை. அவனே எல்லாம் என்று கண்ணனைச் சரணடைகிறாள் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அதோடு இது ஒரு கற்பனைப் பாத்திரம்.