Sunday, January 8, 2012

யாருக்கு மாப்பிள்ளை யாரோ! அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ!

“ஏன் கூடாது? ஆசாரியரே, கிருஷ்ண வாசுதேவனைக் குறித்துப் பல அதிசயமான செய்திகள் கூறப்படுகின்றன. அவன் ஜராசந்தனை முறியடித்துக் கரவீரபுரத்தின் வாசுதேவன் என்றழைக்கப்பட்டவனைக் கொன்று, காலயவனன் என்னும் கொடியதொரு அரக்கனையும் கொன்றிருக்கிறான். கொடிய கடுமையான வெப்பம் தரக்கூடிய பாலைவனங்களைக் கடந்தும், அடர்ந்த காடுகளைக் கடந்தும் எப்படியோ யாதவர்களை மேலைக்கடலோரத்திற்கு அழைத்து வந்து அங்கே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்துக்கொடுத்திருக்கிறான். சமீபத்தில் ஷால்வனைக் கூடத் தோற்கடித்திருப்பதாய்ச் சொல்கின்றனர். அதோடு அவன் ரதத்தை வேகமாய்ச் செலுத்தியவண்ணம் வில் வித்தை செய்வதில் வல்லவன் என்ற பெயரும் பெற்றிருக்கிறான். இந்த ஆர்யவர்த்தம் முழுதும் அவனுடைய வீரத்தைப் போற்றி மகிழ்கிறது.”

“துருபதா, துருபதா, அவன் என் சீடன். என் மகன். அவனைப் பற்றி நீ எனக்குச் சொல்லவேண்டியதில்லை அப்பனே! “ சாந்தீபனியின் குரலில் பெருமிதம் தென்பட்டது. “அவன் கைகளில் வில்லும், அம்பும் அவன் நினைப்பதைச் செய்யும் வல்லமை கொண்டிருக்கின்றது. வேகமாய் ஓடும் ரதத்திலிருந்து குறியை நோக்கி அம்பைச் செலுத்துவது எவ்வளவு கடினம் என உனக்குப் புரியும். ரதத்திலும் தன்னைச் சமப் படுத்தி நின்றவண்ணம் வேகமாயும், சரியான நேரத்திலும் செல்லுமாறு அம்பைச் செலுத்துவது, அதுவும் வேகமாய் ஓடும் குதிரைகளின் வேகத்துக்கு ஏற்பச் செலுத்துவது என்பது; கிருஷ்ண வாசுதேவனால் மட்டுமே இயலும். குதிரைகளும் அவனுக்குக் கட்டுப்படும். இவை எல்லாம் அந்த மஹாதேவரின் அருளாலேயே கிருஷ்ண வாசுதேவனுக்குச் சாத்தியமாகிறது என்பதில் சந்தேகமே இல்லை.”

“ஆசாரியரே, வில்லில் இருந்து அம்பைப் பிரயோகம் செய்வது மட்டுமின்றிச் சக்கரத்தாலும் எதிராளியைத் தாக்கிப் பின்னர் சக்கரத்தைத் திரும்பவும் பெற்றுவிடுவானாமே? அதுவும் ஓடும் ரதத்தில் இருந்து; அவன் எதிரியும் முன்னால் ஓடும் ரதத்தில் தப்பிக்கும் சமயம் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து சக்கரத்தைப் பிரயோகம் செய்வானாமே?” மிதமிஞ்சிய ஆர்வமும், கண்ணனைக் காணும் ஆசையும் தொனித்தது துருபதன் குரலில். அதோடு இப்படி ஆர்வத்தைக் காட்டிக்கொள்வதன் மூலம் தன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துக்காட்டிக்கொள்ளவும் எண்ணினான்.

“உண்மை துருபதா, நீ சொல்வது அனைத்தும் உண்மை.” என்றார் சாந்தீபனி.

“ஆஹா, இதைவிட வேறே என்ன வேண்டும் எனக்கு? ஆசாரியரே, அவனைப் பார்த்து என் கிருஷ்ணாவை மணமுடிக்கத் தயார் செய்யுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவன் உங்கள் மாணவன்; உங்களுக்கு மிக அருமையானவன். உங்கள் பேச்சைக் கேட்பான்.”

“கிருஷ்ணனைக் குறித்து நான் நன்கறிவேன். கிருஷ்ணன் அவ்வளவு எளிதில் ஒரு பெண்ணை மணந்துவிடமாட்டான். அந்தப் பெண் அவனுக்குப் பிடித்தமானவளாக இருந்தால் மட்டும் போதாது; அவன் மனதில் அவள் இடம்பெறவேண்டும். அவன் உள்ளத்தை, அவனை அவள் தன் நடத்தைகளால் ஜெயிக்கவேண்டும். கிருஷ்ணனை வென்று அவனை அடைவது அவ்வளவு எளிதல்ல. விதர்ப்ப இளவரசி ருக்மிணியும், கரவீரபுரத்தின் இளவரசி ஷாயிபாவும் பலவிதமான சோதனைகளைக் கடந்தே கிருஷ்ணனை மணாளனாக அடைய முடிந்தது. “

“ஆசாரியரே, என் மகள்; அவள் என் மகள் என்பதற்காக நான் பெருமையாகப் பேசவில்லை. உண்மையிலேயே மிகவும் அருமையான ஒரு பெண். கிருஷ்ண வாசுதேவனை எப்படி வேண்டுமானாலும் பரிசோதிக்கச் சொல்லுங்கள். அனைத்திலும் அவள் வெல்வாள்.” துருபதன் குரலில் பெருமை தொனித்தது. “உன்னைப் பற்றியோ, உன் மகளைக் குறித்தோ நான் அறியாதவன் அல்ல, துருபதா! அவள் வீரமான பெண்மணி. இந்த ஆர்ய்வர்த்தத்திலேயே மிக உயர்ந்ததொரு க்ஷத்ரிய அரசகுமாரனை அவள் மணப்பாள்.” என்றார் சாந்தீபனி. “ஆசாரியரே, அவள் கிருஷ்ணனுக்கு ஏற்றதொரு மனைவியாக நிச்சயம் இருப்பாள். நான் உறுதியாகச் சொல்கிறேன்.” என்றான் துருபதன்.

1 comment:

priya.r said...

விதர்ப்ப இளவரசி ருக்மிணியும், கரவீரபுரத்தின் இளவரசி ஷாயிபாவும் பலவிதமான சோதனைகளைக் கடந்தே கிருஷ்ணனை மணாளனாக அடைய முடிந்தது.//

ஷாயிபாவை எப்போது கண்ணன் மணமுடித்தான் கீதாமா ?