Thursday, May 22, 2014

கிருஷ்ண வாசுதேவனும் ஒரு மனிதனே!

சட்டெனத் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு சமாளித்துக் கொண்டாள் திரெளபதி.  எழுந்து வந்து அவனை வரவேற்க ஆயத்தமானாள்.  வாசனை மிகுந்த எண்ணெயால் எரிக்கப்பட்ட தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசித்து நறுமணப் புகையை எங்கெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.  அந்த தீபங்களில் ஒளியில் அவள் அந்த மறக்க முடியாத உருவத்தைக் கண்டாள்.  ஒளி வீசும் கண்கள், அதில் தெரிந்த குறும்பு, பிரகாசிக்கும் முகம், இதழ்களில் புன்னகை, தலையில் வைத்திருந்த மயிலிறகு, அதே தன் வயப்படுத்தும் பார்வை.  மிகுந்த பிரியத்துடன் அனைவரையும் புரிந்து கொண்டிருக்கும் பாவனை.  கண்ணனைப் பார்த்ததுமே அனைவருக்கும் ஏற்படும் ஒரு நிம்மதி உணர்வு திரெளபதிக்கும் ஏற்பட்டது. ஆனால் தன்னையும் அறியாமல், ஆஹா இவை எல்லாமே இவனுடைய தந்திரமன்றோ என்ற எண்ணம் தோன்றி அந்த உணர்வை அழித்தது.

தன்னுடைய இந்த எண்ணங்களைக் கிருஷ்ணன் அறியாமல் தன்னைச் சமாளித்துக் கொள்ளப் பாடுபட்டாள் திரெளபதி.  அதில் வெற்றியும் கண்டாள்.  தன்னைத் தானே அடக்கிக் கொண்டு, கிருஷ்ணனிடம், “வர வேண்டும் வாசுதேவா, தந்தைக்குச் சிறிது உடல் நலமில்லை.  ஆகவே உன்னை நான் சந்திக்க வேண்டும் என சத்யாஜித்திடம் இப்போது தான் சொல்லி அனுப்பினார். “ என்றாள்.  அவள் உள்மனம் கொதித்துக் கொண்டிருந்தது.  எந்நேரமும் வெடித்து விடுவோமோ என அஞ்சினாள்.  தன்னை எவ்வளவு தான் சமாளித்துக் கொண்டாலும் தன்னையும் அறியாமல் வெடித்துச் சிதறி விடுவோமோ என அஞ்சினாள்.  ஆனால் கிருஷ்ணனின் சிரிப்பையும், அவன் இணக்கமான போக்கையும் கண்டு அவளுக்குள்ளாக ஆச்சரியம் ஏற்பட்டதோடு அல்லாமல், அவனிடம் இப்படி எல்லாம் தன்னால் நடக்க முடியாது  எனப் புரிந்து கொண்டாள்.  கிருஷ்ணன் உள்ளே வருகையிலேயே , “என் ஆசிகள் திரெளபதி!  இளவரசியைப்பார்க்க வேண்டி எத்தனை நாட்களாகக் காத்திருந்தேன்!” என்று கூறிய வண்ணம் சத்யாஜித் காட்டிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனோடு உள்ளே நுழைந்த உதவியாளர்கள் அங்கிருந்த சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை ஏற்றி மேலும் வெளிச்சம் உண்டாக்கினார்கள்.  மந்திரி உத்போதனரும் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டார்.  சத்யாஜித் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.  அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்னும் எதிர்பார்ப்பில் இருந்தான். தன்னுடைய ஆசனத்தில் கூட அமராமல் நின்ற வண்ணமே கிருஷ்ணனைப்பார்த்துப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். உள்ளூர திரெளபதி அவனிடம் கோபத்தைக் காட்டிச் சண்டை போடுவாளோ என்னும் எண்ணமும் வந்தது.  வந்திருக்கும் விருந்தாளியிடம் அப்படி எல்லாம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள மாட்டாள் எனவும் நம்பினான். வெளிப்படையாகக் கிருஷ்ணன் என்னதான் உற்சாகத்தைக் காட்டிக் கொண்டாலும் சொல்ல முடியாத சோர்வு அவனை ஆட்டிப் படைக்கிறது என்பதைக் கண்ட திரெளபதி ஆச்சரியமடைந்தாள்.  இது கிருஷ்ணனின் இயல்புக்கு மாறுபட்டதாக அவள் உணர்ந்தாள்.

அதற்கேற்றாற்போல் கிருஷ்ணனும் சத்யாஜித்தை அழைத்து, “ என்னைப் பிணைத்திருக்கும் இந்த ஆயுதங்களை எல்லாம் நீக்குவதற்கு உதவி செய்!  நான் மிகக் களைத்திருக்கிறேன்.” என அழைத்தான்.  சத்யாஜித்திற்குத் தூக்கி வாரிப் போட்டது.  கண்ணன் தன்னை சகோதரன் போல் கருதி உதவி செய்ய அழைத்ததில் மனம் நெகிழ்ந்திருந்த அவனுக்குக் கண்ணனின் களைப்பு அதிசயமாகப் பட்டது.  “என்ன, உங்களுக்குக் களைப்பா?” என்று அதிசயித்தான்.  அனைவரும் இவனை மனித ஆற்றலுக்கு மேம்பட்டதொரு காரியங்களைச் செய்பவன் என்று சொல்லியே வந்ததால் அவன் தெய்வீகத் தன்மை படைத்தவன் என்னும் எண்ணம் சத்யாஜித்திடம் ஆழப் பதிந்திருந்தது.  ஆகவே கிருஷ்ணனிடம், “ என்ன இது வாசுதேவா! உங்களுக்குக் களைப்பா?  களைப்பும் சோர்வும் நீங்கள் அறியாதது எனவும், இரவில் கூடத் தூங்க மாட்டீர்கள் என்றெல்லாம் அறிந்திருக்கிறேனே! இங்கே அனைவரும் இப்படித் தான் சொல்கின்றனர்!” என்றான்.

“எல்லாம் அளவுக்கு மீறிய கட்டுக் கதை சத்யாஜித்.  எந்த விதமான காரணங்களும் இல்லாமல் மனிதர்களால் கட்டி விடப்பட்ட இந்தக் கட்டுக் கதையால் என் மனம், உடல் இரண்டுமே மிகச் சோர்ந்து போகிறது. “இந்த வார்த்தைகளில் தொனித்த மறைமுகக் கண்டனத்தை உணர்ந்த திரெளபதி பொங்கி எழப் போனாள்.  அப்போது கிருஷ்ணன் அலுப்போடும், சலிப்போடும் தன்னுடைய வாளை அதன் உறையிலிருந்து எடுத்துக் கீழே போட்டான்.  சத்யாஜித் அதை எடுத்து  ஒரு பக்கமாகத் தனியாக வைத்தான்.  அப்போது திரெளபதி தான் செய்வது இன்னவென்று அறியாமலேயே,  கண்ணன் மேல் தனக்கிருந்த சினத்தையும் கூட மறந்தவளாய், கிருஷ்ணன் கைகளில் இருந்த கிரீடத்தைத் தானே வாங்கி அருகிலிருந்த மேடையின் மேல் வைத்தாள்.  கிருஷ்ணன் சிரித்த வண்ணம் தன் தோள்களில் இருந்த சக்கரத்தைத் தானே கழட்டி அதை சத்யாஜித்தின் கரங்களில் வைத்தான். கிருஷ்ணனின் இந்தப் பிரசித்தி பெற்ற ஆயுதம் தன் கைகளில் வந்ததும் சத்யாஜித் எத்தனையோ பேருக்கு எமனாக விளங்கிய அந்தச்சக்கராயுதத்தை பயபக்தியுடன் பார்த்தான்.

“தந்தைக்கு என்ன இளவரசி? ரொம்பவும்  உடல் நலம் சரியில்லாமல் உள்ளாரா?  உங்கள் தந்தையை இப்போது பார்க்க முடிந்திருந்தால் சந்தோஷம் அடைந்திருப்பேன்.  எனக்காக அவர் மனக்கதவு மூடப்பட்டு விட்டதோ?” என்றும் கேட்டான் கிருஷ்ணன்.  திரெளபதிக்கு இம்மாதிரியான நேரடிக்கேள்வி பிடிக்கவில்லை.  “அவர் உடல் நலம் சரியில்லை!” என்று வெட்டென பதில் சொன்னாள்.  கிருஷ்ணன் அதைக்  கவனிக்காதவன் போல திரெளபதியிடம், “ சொல் திரெளபதி, இந்நாட்களில் உன் மனோநிலை எப்படி உள்ளது?  நீ என்ன நினைக்கிறாய்?  சுயம்வரத்தை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாயா?  உனக்குப் பொருத்தமானவர்கள் என எத்தனை பேரை நீ தேர்ந்தெடுத்திருக்கிறாய்?” கிருஷ்ணனின் இந்தக் கேள்விகள் திரெளபதியின் உள் சீற்றத்தை அடக்குவது போல் காணப்பட்டது.  ஆனால் திரெளபதிக்கோ எரிச்சலே மிகுந்தது.  கிருஷ்ணன் தன்னையும்  தன் குடும்பத்தையும் இக்கட்டில் ஆழ்த்திவிட்டு இப்போது பொய்யான பரிவைக் காட்டிக் கேலி செய்கிறான் என்றே நினைத்தாள்.

“நான் என்ன நினைக்கிறேனா?  உனக்கு என்ன ஒன்றுமே தெரியாதா? தெரியாமல் தான் கேட்கிறாயா?” கோபம் மீதூறக் கேட்டாள் திரெளபதி.

“சொன்னால் தெரிந்து கொள்கிறேன்.  எனக்குத் தெரிய வேண்டும் என்பதே ஆசை!” என்றான் கிருஷ்ணன் தன் புன்னகை மாறாமல்.  திரெளபதி ஆத்திரம் அடங்காமலேயே, “ நீ தான் இந்த சுயம்வர யோசனையையே தந்தையிடம் சொன்னாய்.  உன் யோசனைப்படி தந்தையும் சுயம்வரத்திற்கு ஏற்பாடுகள் செய்து விட்டார்.  போட்டிக்கான தேர்வையும் தேர்ந்தெடுத்து அனைத்து அரசர்களையும் அழைத்து அவர்களும் வந்துவிட்டனர்.  எங்களை எல்லாம் சூழ்ச்சி வலையில் மாட்டி விட்டாய்!  தந்தை அப்படித் தான் நினைக்கிறார்.” திரெளபதி கொஞ்சம் சந்தேகத்துடனேயே கடைசி வரியைச் சொன்னாள்.

“ஏன்? சுயம்வரம் நடப்பதில் என்ன தவறு கண்டாய்?”

“என்ன தவறா?  எல்லாமே தவறு.  துரியோதனனோ, அஸ்வத்தாமாவோ போட்டியில் வென்றால் என்னை ஹஸ்தினாபுரம் இழுத்துச் சென்று விடுவார்கள்.  அங்கே போய் என் தகப்பனாரின் பரம வைரி துரோணரின் பாதங்களில் ஒரு அடிமையாக வீழ்த்துவார்கள்.  ஒரு வேளை அது ஜராசந்தனாக இருந்தால், போட்டியில் வெல்லும் வரை காத்திருக்காமல் என்னைக் கடத்திச் சென்று மகதத்தில் ஒரு கூண்டுக்கிளியாக, அடிமையாக வைத்திருப்பார்கள்.”

“உண்மையைத் தான் சொல்கிறாய்!” கிருஷ்ணன் அமைதியாகச் சொன்னான்.




3 comments:

பித்தனின் வாக்கு said...

aha aha arumaiyana idathil niruthi vittiteerkal. irandu naalukku oru murai thavaramalvanthu padikinren. thodarnthu eluthungal. nanri

திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்பும் அருமை அம்மா...

ஸ்ரீராம். said...

கிருஷ்ணனை நேரில் கண்டதுமே பறந்து போகும் கோபம்.