Saturday, May 24, 2014

கண்ணன் கெஞ்ச, திரெளபதி மிஞ்ச! :)

திரெளபதிக்கு மீண்டும் சீற்றம் வந்தது.  கிருஷ்ணனின் தொனி அவளுக்குள் தாங்கமுடியாத கோபத்தைக் கொடுத்தது. அவனைப் பார்த்து, “நீயோ என்னை ஏற்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டாய்! போட்டியிலும் நீ கலந்து கொள்ளப் போவதில்லை!  இது மட்டும் போதாது என நினைத்து என் சகோதரனைத் திருடி அவனை துரோணரின் அடிமையாக்கி வைத்திருக்கிறாய்! “ திரெளபதியின் உள்ளக் கசப்பெல்லாம் அவள் குரலில் தெரிந்தது.  ஆனால் கிருஷ்ணன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை.

“அட, உனக்குத் தெரிந்து விட்டதா? அவன் இங்கே வந்தானா? “ என்று சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், “ஆம், நான் சென்ற முறை இங்கே வந்த போது அவனை வழியில் பார்த்தேன். ரதத்தில் சுருண்டு அமர்ந்த வண்ணம் ஒரு குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தான்.  மிகவும் மனம் உடைந்து போயிருந்தான். அவனைக் காப்பாற்ற யாருமே இல்லை என்பதில் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தான்.  அனைவரும் அவனைக் கைவிட்டுவிட்டதாய்க் கூறினான். “  “ஓஹோ, உனக்கு அவனை அவ்வளவு பிடித்திருக்கிறதோ?” திரெளபதி சீறினாள்.

கண்ணன் கலங்காமல், “அவன் மிகவும் தைரியமான பிள்ளை.  எல்லாத் துன்பங்களையும் சிரித்துக் கொண்டே பொறுத்துக் கொண்டான்.  எதற்கு?  உன் தந்தையையும், மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவனைக் குறித்து பெருமையும் கர்வமும் அடைய வைப்பதற்காகவே அனைத்தையும் சகித்துக் கொண்டான்.  அதுவும் சிரித்த முகத்தோடு!” குற்றம் சாட்டும் தோரணையில் திரெளபதியைப் பார்த்தான் கண்ணன்.


ஆனால் திரெளபதிக்கோ இன்னும் அதிகக் கோபம் வந்தது. “நீ எங்கள் ஜன்ம வைரியை நண்பராக்கிக் கொண்டதோடு அல்லாமல், அவரிடமிருந்து ஒரு விலையையும் பெற்றிருக்கிறாய்.   அது தான் புஷ்கரம்.  ஆம், உன்னுடைய சிநேகத்துக்கு அவர் கொடுத்த விலை புஷ்கரத்தை உன் கைகளில் மீண்டும் ஒப்படைத்தது தான்.  இல்லையா?  அந்தப் பரம்பொருளுக்குத் தான் தெரியும், நீ ஏன் இப்படிச் செய்தாய் என!”  அவள் முகம் தீப்பிழம்பு போல் ஜொலித்தது. "நாடோடிப் பாடல்கள் பாடுபவர்கள், நீ கோபியருக்குத் தான் பொய்யானவனாக இருந்ததாகச் சொல்லிப் பாடிக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் நீ எங்களுக்கும் உண்மையாக நடந்து கொள்ளவில்லை!”

சத்யாஜித் மெளனமாக இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் உள் மனதில் தன் சகோதரி மிகவும் கடுமையுடன் பேசுவதாகவும் கடுமையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் எனவும் தோன்றியது. கிருஷ்ணனுக்கு இதனால் கோபம் வரப் போகிறது என நினைத்த வண்ணம் கிருஷ்ணன் பக்கம் திரும்பிப் பார்த்தான்.  கிருஷ்ணனுக்குக் கோபமே வரவில்லை. மாறாக  அவன் முகத்தில் அளவு கடந்த வருத்தம் தான் தெரிந்தது.  திரெளபதியையே தீவிரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.  திரெளபதியின் உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்ட கிருஷ்ணன் அவளையே பார்த்து கொஞ்சம் வருத்தத்துடன், மெதுவாகப் பேச ஆரம்பித்தான். “சாந்தம், சாந்தம், இளவரசி, கொஞ்சம் சாந்தமாக இரு! ஆண்கள் எவ்வளவு இகழ்ச்சியாகப் பேசினாலும் அதை கவனத்தில் கொள்ளமாட்டேன்.  ஆனால் ஒரு பெண்ணின் இகழ்ச்சியான பேச்சை என்னால் பொறுக்க முடியவில்லை.  அதுவும் நான் சகோதரியாய் மதிக்கும் ஒரு பெண்ணின் வாயிலிருந்து இப்படிப்பட்ட இகழ்ச்சிச் சொற்கள் வருவதை என்னால் சகிக்க முடியவில்லை.”

கிருஷ்ணனையே பார்த்த திரெளபதிக்கு அவன் தன்னை ஏமாற்ற வேண்டி வருத்தம் அடைந்ததாக பாவனை செய்கிறான் என்று நினைத்தாள். அவனுடைய இந்தக் கெஞ்சல்களுக்கோ, கொஞ்சல்களுக்கோ அவள் அசைந்து கொடுக்கக் கூடாது.  தன் மனதுக்குள் எஃகு போல் உறுதியை வரவழைத்துக் கொண்டாள் திரெளபதி.  சற்று நேரம் மெளனத்தில் கழிந்தது.  பின்னர் கண்ணன் அவளைப் பார்த்து, “நீ உன் தரப்பு நியாயங்களைக் கூறி விட்டாய் இளவரசி.  இப்போது நான் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேள்! “ என்றான்.  “சொல், அதை விட வேறு வழி என்ன இருக்கிறது?” சீறினாள் திரெளபதி.

கண்ணன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். கோபமோ, வருத்தமோ இல்லாத குரலில் பேசினான். “ இளவரசி, உன் தந்தையும், உன் சகோதரர்களும், நீயும் என்னிடம் நம்பிக்கை வைத்ததில் நான் மிகவும் மகிழ்ந்தேன்.  உன்னுடைய நம்பிக்கை மிக உறுதியானது என நினைத்து இந்த ஆர்ய வர்த்தத்தையே அதன் போக்கிலிருந்து மாற்றக் கடந்த ஒரு வருஷமாக முயற்சிகள் எடுத்தேன். மாற்றிவிட்டேன் என்றே நினைத்திருந்தேன்; உன்னைப் பார்க்கும் வரையிலும். ஆனால் அதில் நான் தோற்றுவிட்டேன் என்பதை இப்போது தான் அறிந்தேன். “ கண்ணன் குரலில் தெரிந்த ஏமாற்றமும், மனக்கசப்பும் திரெளபதியைத் திகைப்படைய வைத்தது.  கண்களில் தெரிந்த கேள்விகளோடு அவனைப் பார்த்தாள்.  அவன் மேலே தொடர்ந்தான்.

“இப்போது உங்கள் யாருக்குமே என்னிடம் நம்பிக்கை இல்லை என்பது புரிந்து விட்டது. நான் மிகக் களைத்துவிட்டேன்.  உண்மையை, சத்தியத்தை எங்கும் காணவில்லை.  அல்லது என் காதுகளில் அதன் இசை விழவில்லை.  இப்போது உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க நேரமும் இல்லை.  இரண்டு இரவுகளும் ஒரு பகலுமே மீதம் உள்ளது.  ஒருவருடமாக நான் பாடுபட்டதெல்லாம்—என் வாழ்நாளை இதற்கெனச் செலவிட்டதெல்லாம் வியர்த்தமாகிவிடும் போல் இருக்கிறது.  ஓ பரம்பொருளே, மஹாதேவா!  எவராலும் அழிக்க முடியா தெய்வங்களே!  ஏன் அழியக் கூடிய நாங்கள் எங்களை நாங்களே காத்துக்கொள்ள முடியவில்லை?” எல்லையற்ற கருணையுடனும் பரிதாபத்துடனும், திரெளபதியைப் பார்த்தான் கிருஷ்ணன்.

தன் சீற்றம் மெல்ல மெல்ல வடிவதை உணர்ந்தாள் திரெளபதி.  இனம் தெரியா ஆறுதலும், நிம்மதியும் அவள் மனதில் புகுந்தது.  இவன், இந்தக் கிருஷ்ண வாசுதேவன், எவ்வளவு பெரிய ஆற்றல் நிறைந்த மனிதன்!  இவன் இன்று பாஞ்சால இளவரசியான அவளிடம் வந்து அவள் நம்பிக்கையை யாசகமாகக் கேட்கிறான்.  அனைவரும் மிகவும் பெருமிதத்துடன் இவனின் வீரச் செயல்களைக் குறித்துப் பெருமையாகப் பேச இவனோ இங்கு வந்து இளவரசியின் விசுவாசத்தை யாசிக்கிறான்.  ஒரு ராஜதந்திரிக்கு உள்ள எந்தவிதத் தந்திரமான நடவடிக்கைகளோ, ஒரு மாயாவிக்கு உள்ள மந்திர சக்தியோ எதுவுமே இவனிடம் இல்லை.  அவனுடைய அந்த அழகான கண்கள் அன்பைக் காட்டுவது மட்டுமல்ல; அவளுடைய அவநம்பிக்கையையும் மெல்லக் கண்டிக்கிறது.  அவனைத் தவறாக நினைத்தது அவள் தவறே எனச் சுட்டிக் காட்டுகிறது.  இத்தனை பேசியும் அவளிடம் அன்பை மட்டுமே காட்டுகின்றன அந்தக் கண்கள்.   மீண்டும் அவனைக் கோபித்துப் பேச வேண்டும் என திரெளபதி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.  மாறாக எல்லையற்ற சோகத்துடன் அங்கே அமர்ந்திருக்கும் அந்த மெல்லிய உருவத்தின் தலையிலிருந்து கால் வரை பரவி இருக்கும் சோகத்தை மாற்றி அவனை ஆறுதல் மொழிகள் சொல்லித் தேற்ற வேண்டும் என்னும் எண்ணம் அவளுள் எழுந்ததை அவளால் தவிர்க்க முடியவில்லை.



3 comments:

Unknown said...

Please update on delay basis.

Thanks...

Unknown said...

Please update on delay basis..
Thanks.

ஸ்ரீராம். said...

என்ன ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டான் கிருஷ்ணன்..