Friday, May 30, 2014

என்றென்றும் உங்களுடன் இருப்பேன்!

கண்ணனின் இந்த உறுதியான நிலைப்பாட்டைக் கண்டதும் திரௌபதிக்கு சந்தோஷமாக இருந்தது; கிருஷ்ணனிடம் நன்றியும் ஏற்பட்டது.  இருந்தாலும் இன்னும் ஒன்று இருக்கிறதே! “துரியோதனன்?  அவன் ஜெயித்துவிட்டால் என்ன செய்வேன்? கோவிந்தா, பதில் சொல்!” என்றாள்.  “ஆம், திரௌபதி, அது தான் நான் சுமக்கவேண்டிய சுமைகளிலேயே மிகக் கடினமான ஒன்று.  என்னிடம் வேறொன்றும் கேட்காதே!” என்ற கண்ணனின் முகம் மீண்டும் இருளடைந்து போயிற்று.  சொல்லிலடங்காத துக்கம் அவனைச் சூழ்ந்தது.   அதைக் கண்ட திரௌபதிக்குக் கண்ணனின் நிலை கண்டு மனம் வேதனைப் பட்டது.  இப்போது அவள் கண்ணனைச் சமாதானம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள்.  “நீ என்னிடம் சொல்லவில்லை எனில், பரவாயில்லை, கோவிந்தா, நானும் உன்னிடம் எதுவும் கேட்க மாட்டேன்.” என்றாள்.

“என்னை நம்பு திரௌபதி! தர்மத்தின் பாதையில் செல்லும் ஒருவனுக்கே நீ மனைவியாக ஆவாய் என நான் சொல்லி இருப்பதில் நம்பிக்கை வை.  வீரம் நிறைந்த மகன்களைப் பெற்றெடுக்கப் போகும்  தாயும் ஆவாய்! மனிதர்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும் வண்ணம் தர்மத்தின் பாதையில் சென்று நல்லாட்சி புரியப் போகும்  ஒருவனின் ராணியாக நீ அனைவர் உள்ளங்களிலும் என்றென்றும் வாழ்வாய்! “

சற்று நேரம் ஒருவரும் பேசவில்லை.  திரௌபதியின் மனம் அவளையும் அறியாமல் உருகியது.  அவள் உள்ளே ஏதோ இனம் தெரியாத அன்பு சுரந்தது. அனைவரும் கடவுளெனப்போற்றும் இந்த மனிதனிடம் அவளையும் அறியாமல் இரக்கமும், பச்சாத்தாபமும் மிகுந்தது.   அவள் மனக் கதவம் திறந்தது.  அங்கே இத்தனை நாட்களாக அடைந்து கிடந்த இருள் விலகியது. அவள் மனதில் கோடி கோடி சூரியப் பிரகாசம் தோன்றியது;  அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது.   அன்பெனும் ஊற்றுப் பொங்கியது. அவள் முகம் மிகவும் மென்மையானது.  அவளே மனதளவிலும், உடலளவிலும் மென்மையாக ஆகி விட்டாள்.  வெகு நாட்களாகப்பூட்டிக் கிடந்த அறையைத் திறந்ததும் உள்ளே பரவும் சூரிய ஒளியில் தெரியும் காட்சிகளைப்  போல  அவள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்.  “கோவிந்தா, நான் உன்னைச் சரணடைந்து விட்டேன்.  என்னைப் பரிபூரணமாய் உன் காலடிகளில் கிடத்துகிறேன்.  நீயே எனக்கு அபயம் அளிப்பாய். சரணம் கோவிந்தா, சரணம்!  ஆனால் என் தந்தையை அவமானம் அடையும்படி விட்டு விடாதே!  நான் உன்னைக் கெஞ்சிக் கேட்பது அது மட்டுமே!  அவர் அவமானம் அடையக் கூடாது!”

வாசுதேவன் பேச ஆரம்பித்தான்.  மெதுவாகவும், அதே சமயம் தெளிவாகவும், உறுதியாகவும் அவன் கூறியது:” என்ன நடந்தாலும் சரி, திரௌபதி, நான் உன் பக்கமும் , உன் தகப்பன் பக்கமுமே துணை நிற்பேன்.  உங்களைத் தவிக்க விட மாட்டேன்.   இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்னால் இதற்கு மேல் அதிகம் சொல்ல முடியாது.  இதைவிடப் பெரிய வாக்குறுதிகளையும் நான் அளிக்கப் போவதில்லை.  ஆகவே என்னிடம் மேலும் மேலும் வேறெதையும் கேட்காதே! ஆனால் ஒன்று!  சுயம்வரத்தை சாதாரணமான ஒன்றாய் நினைக்காமல் அது தான் உன்னுடைய மற்றும் என்னுடைய தர்மமும் அதுவே என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பாயாக!”  என்றான் கிருஷ்ணன்.

“நிச்சயமாக, கோவிந்தா!  நான் உன்னைச் சரணடைந்துவிட்டேன்! “ அவள் குரலில் பரிபூரண சரணாகதி தெரிந்தது.

 “அப்படி எனில் நீ எனக்காக இந்த அபச்சாரத்தைப் பொறுத்துக் கொண்டே ஆகவேண்டும்.  ஷகுனியும், துரோணரின் பிள்ளையான அஸ்வத்தாமாவும் உன்னைப் பார்க்க விரும்புகின்றனர்.  அவர்களை நீ சந்திக்க வேண்டும். “ என்றான் கண்ணன்.

“ஹூம், துரோணரின் பிள்ளை!  என்னை உனக்காக விஷமா குடிக்கச் சொல்கிறாய் கோவிந்தா?” திரௌபதியின் குரலில் கசப்பு வழிந்தோடியது.  இந்த வேண்டுகோளில் அவள் திகைத்துப் போயிருப்பதும் தெரிய வந்தது.  ஆனால் கிருஷ்ணன் அதற்கெல்லாம் கலங்கவில்லை.

“ஆம், திரௌபதி, நான் பானுமதிக்கு வாக்களித்திருக்கிறேன்.  இவர்கள் இருவரையும் உன்னைச் சந்திக்க வைப்பதாக அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.  அதோடு இன்னொரு விஷயமும் கேட்டுக்கொள்; அஸ்வத்தாமா உனக்கு ஒரு உறுதி மொழி கொடுப்பான்.  அதாவது சந்தர்ப்பவசத்தால் நீ அவனையோ அல்லது குருவம்சத்து இளவல்களில் ஒருவனையோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால்,  அவன் தந்தையை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்வதிலிருந்து தன் உயிரைக் கொடுத்தாவது தடுப்பான். அந்த உறுதிமொழியை நீ ஏற்றுக் கொள். "

வியப்பில் விரிந்த கண்களோடு திரௌபதி கேட்டாள்: “ஒருவேளை நான் அவர்களில் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனில்?”

“எப்போதுமே  உன் திருமணத்தில் உன் விருப்பம் தான் முக்கியம் திரௌபதி. “ என்று கிருஷ்ணன் சொல்ல, திரௌபதியோ,”துரியோதனன் ஜெயித்துவிட்டானெனில் என்ன செய்ய முடியும்?” என்று மீண்டும் கேட்டாள். அவளை இந்த பயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் சிரித்தான்.  இப்போது அவன் முகம் பூரணமாக விகசித்துக் கிடந்தது.  அதே விளையாட்டுக் குரலில், நாட்டியம் ஆடும் கண்களோடு அவன் திரௌபதியிடம், “ நீ தான் அப்போது ஹஸ்தினாபுரத்து மஹாராணியாகிவிடுவாய் அல்லவா?  அவளுக்கு மண்டியிடாமல் பின்னர் துரோணர் வேறு யாருக்கு மண்டியிடுவார்?”  என்றான்.

 திரௌபதி நினைத்தாள்.  ஆஹா, இவன் மீண்டும் மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடும்,  மிகவும் விரும்பிப் பாராட்டும் தன் மாட்டிடையன் உருவைக் காட்டுகின்றான் போல் இருக்கிறதே!  இவன் சாமானியன் அல்ல; அல்லவே அல்ல.  திரௌபதி இப்போது இவன் சொன்னதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள விரும்பினாள்.  தன்னைக் கிருஷ்ணன் கேலி செய்கிறான் என்பது வரை புரிந்து கொண்ட அவள் மேலும் எதையும் கேட்காமல் மௌனமடைந்தாள்.

கிருஷ்ணன் இப்போது குரலை மிகவும் தழைத்துக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்; “இதன் மூலம் உனக்கு ஏதேனும் மனத் திருப்தியோ, நிம்மதியோ கிட்டும் எனில் கேள்; நான் உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்.  நான் என்னுடைய அருமையான தங்கை, சின்னத் தங்கை பானுமதிக்கு என்ன உறுதி மொழி கொடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிவாயா?  எக்காரணம் கொண்டும் நீ அவளுக்குப் போட்டியாக துரியோதனனின் மற்றொரு ராணியாக ஆகாமல் பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறேன்.  இது போதுமா உனக்கு? இன்னும் உறுதி மொழி வேண்டுமா?”

திரௌபதிக்கு முகமெல்லாம் சிவந்தது.  “கோவிந்தா, நீ தானே சொன்னாய்?  அஸ்வத்தாமா இங்கே எனக்கு உறுதிமொழி கொடுப்பான்;  அதை ஏற்றுக்கொள் என!  என்னை அதை ஏற்றுக்கொள்ளச் சொல்லி விட்டு, இப்போது பானுமதிக்கு நான் போட்டியாக இருக்காமல் பார்த்துக்கொள்வதாக அவளுக்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாய்ச் சொல்கிறாயே!  நான் என்ன செய்யட்டும், கோவிந்தா?  எது உண்மையான கிருஷ்ண வாசுதேவன்?  பானுமதிக்கு உறுதிமொழி கொடுத்தவனா?  இப்போது அஸ்வத்தாமா சொல்வதைக் கேட்டுக்கொள் என என்னிடம் சொல்பவனா?  உன்னுடைய உண்மையான சொரூபம் தான் என்ன கோவிந்தா?” தன் கரங்களைக் கட்டிக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தவண்ணம் கேட்டாள் திரௌபதி.

“எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள் திரௌபதி.  உன் இஷ்டம்;  ஆனால் ஒன்று.  என்னிடம் நம்பிக்கையை மட்டும் இழக்காதே!”

“என்றால் நான் இப்போது இந்த அவமானமான சந்திப்பை ஏற்றே ஆகவேண்டும் என்கிறாயா?  அதாவது நீ அவர்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதி அப்போது தான் பூர்த்தி ஆகும்; இல்லையா?”

“ஆமாம்,  இந்தச் சந்திப்பின் மூலம் நீயும், நானும் இன்னும் நன்கு பிணைக்கப்பட்டுவிடுவோம்.”

“நல்லது கிருஷ்ணா!  நீ விரும்பும் வண்ணமே அனைத்தும் நடக்கட்டும்.  வேறு என்ன விஷயம்?”

“வேறெதுவும் இல்லை!”

“நீ ஒரு தேர்ந்த மந்திரவாதி கோவிந்தா!  இல்லை எனில் சூனியக்காரனா?  ஆஹா, நீ மட்டும் என்னிடம் துரியோதனனை மணந்து கொண்டு விடு என்று சொன்னாயானால்??  என்னால் அதை மறுக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது!”

“ஒருவேளை என் தர்மமோ, அல்லது உன் தர்மமோ அப்படிச் செய்யச் சொல்லி இருந்தால் நான் அதையும்  உன்னிடம் யாசித்துக் கேட்டு இருப்பேன் திரௌபதி! “ கிருஷ்ணன் சிரித்தான்.  எவ்வளவு யோசித்தும் கிருஷ்ணனின் இந்தச் சாதுர்யமான வேலைகள் தன் அறிவுக்குப் புலப்படாமல் போவதைக் கண்டு திரௌபதி அதிசயித்தாள்.  அந்த ஆச்சரியத்துடனேயே அவள் அவனைத் தன் விரிந்த கண்களோடு பார்த்த வண்ணம், “ நீ பேசுவதே புதிர்களாகவும், விடுவிக்க முடியா விடுகதைகளாகவும் உள்ளது கிருஷ்ணா!” என்றாள்.

“நானே ஒரு புதிர் தான் திரௌபதி.  நீயும் தான்.  சற்றும் குறைந்தவள் அல்ல.  ஆனால் இப்போது இந்தப் புதிர்களையும், விடுகதைகளையும் புரிந்து கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ நேரமில்லை.  போகட்டும்.  ஷகுனியையும், அஸ்வத்தாமாவையும் உன்னைச் சந்திக்க இப்போது அனுப்பி வைக்கலாமா?”

“நீ மிகவும் விரும்பினாயெனில் நான் கட்டாயம் அவர்களைச் சந்திக்கிறேன் கிருஷ்ணா.  ஆனால் எதற்கும் தந்தையிடம் முதலில் தெரிவிக்க வேண்டும்.   நான் தந்தையைச் சந்தித்து அனுமதி கேட்கிறேன்.  நீ அவர் மனம் காயப்படும்படி அவரைத் துன்புறுத்தும், அல்லது அவமானப்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்யப் போவதில்லை என்னும் உறுதியை அவருக்கு நான் தெரிவிக்கலாமா?”

“அப்படியே செய்.  நினைவில் வைத்துக்கொள் திரௌபதி.  உனக்கும், உன் தகப்பனாருக்கும் நான் என்றென்றும் உதவுவேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்.  அந்த உதவியால் என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிட்டாலும் சரி!  நான் என்றும் உங்கள் பக்கமே நிற்பேன்.  இதில் மாற மாட்டேன். !”

4 comments:

ஸ்ரீராம். said...

ஒரு பெரிய திருப்பம் வரும் நேரம் அழகாக உருவாகிக் கொண்டு வருகிறது. 'அந்த' நேரத்தின் உணர்ச்சிகள் ஒவ்வொருவரிடமும் எப்படி வெளிப்படும் என்று படிக்க இப்போதே ஆவலாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

தேர்ந்த மந்திரவாதி தான்....!

பித்தனின் வாக்கு said...

mikavum arumai, piramanarkalaka pandavarkal vellum pothu ivarkal unarvu eppadi irukkum enru aavala ullen eluthungal.

பித்தனின் வாக்கு said...

mikavum arumai, piramanarkalaka pandavarkal vellum pothu ivarkal unarvu eppadi irukkum enru aavala ullen eluthungal.