Friday, May 9, 2014

துருபதன் வாக்குறுதியும், திரெளபதியின் மன உறுதியும்

“தந்தையே,போட்டி மிகக் கடுமையாக இருக்கப் போகிறது.  யார் வெல்வார்களோ எனக் கணிக்க முடியவில்லை.  யாருமே வெல்லாமலும் போகலாம்.” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  துருபதன் முகம் சுருங்கியது.  புருவங்கள் நெரிந்தன.  எதுவும் செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்துபவன் போல் இருந்தது அடுத்து அவன் பேசியது: “ என் அருமைக் குழந்தைகளே!  சுயம்வரம் ஆரம்பிக்கையில் நான் இவ்வுலகின் உச்சியில் இருப்பேன்.  அடுத்து சுயம்வரம் முடிகையில் அதலபாதாளத்துக்குப் போய்விடுவேன்.  நம் கிருஷ்ணை, அருமைக் கிருஷ்ணை, ஒரு பலி ஆட்டைப் போலத் தன்னை வெட்டக் காத்திருப்பவனின் இல்லத்துக்குச் செல்வாள்.  ஹூம், எல்லாம் என் தவறு!  அந்தக் கிருஷ்ண வாசுதேவனின் பேச்சை நான் மிகவும் நம்பினேன்.  அது தவறு.  அவன் பேச்சை நான் நம்பியிருக்கக் கூடாது. “  என்றான் துருபதன்.

“தந்தையே, இப்போது வந்து போனானே ஜராசந்தனின் மகன்!  அவன் மூலம் ஜராசந்தன் என்ன செய்தி சொல்லி அனுப்பி உள்ளான்?  அவனும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்துகிறானோ?  கிருஷ்ணையை அவன் பேரன் மேகசந்திக்குக் கொடுக்க வேண்டும் என ஜராசந்தன் வற்புறுத்துகிறானா?”  த்ருஷ்டத்யும்னன் குரலில் சஹாதேவன் வந்து என்ன பேசி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டிருந்தது.   துருபதன் இதைக் கேட்டதுமே பொரிந்து கொட்டினான்.  “ அவன் எவ்வளவு அவமதிப்பாகவும், இழிவாகவும் பேசினான் என்பது தெரியுமா உனக்கு?  அவன் கொண்டு வந்த செய்தி அதைவிட இழிவானது; ஜராசந்தன் அவன் பேரன் மேகசந்திக்குத் தான் திரெளபதியைக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறான்.  அப்படி இல்லை எனில் அவளைக் கடத்திச் செல்வான் என நான் நினைக்கிறேன்.”


துருபதன் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறான் என்பது அடுத்து அவன் பேசியவற்றிலிருந்து புரிந்தது.  “ எவ்வளவு பொல்லாத்தனம்!  துஷ்டன்!  நான் ஆர்ய வர்த்தத்தின் அரசர்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கும் வாக்குறுதியை உடைக்கவா முடியும்?  அப்படி உடைக்கவில்லை எனில் திரெளபதி கடத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டுமாம்!  மறைமுகமாக எச்சரிக்கிறான்.”  இவ்வளவு நேரமும் மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் அணையை உடைத்துக் கொண்டு கிளம்பும் வெள்ளம் போல் பீறிட்டுக் கிளம்பியது.  “பாஞ்சாலத்தின் அருமையான இளவரசியை ஒரு ராக்ஷசியைக் கடத்துவதைப் போல் கடத்துவார்களாம்.  ஹூம், எல்லாம் அவன் அதிர்ஷ்டம் தப்பி விட்டான்.  ஆம், இந்தச் சமயம் அவன் என் விருந்தாளியாகப்போய்விட்டானே!  இல்லை எனில் அவனை நசுக்கி இருப்பேன்.” இதன் பின்னர் துருபதன் வெளிக்காட்ட முடியாச் சீற்றத்தில் உள்ளூற ஆழ்ந்து போய் மெளனமானான்.

“தந்தையே, வாசுதேவன் உங்களை அவமானப் படுத்தப் போகிறான் என்றோ அல்லது அவமானம் செய்துவிட்டான் என்பது குறித்து உறுதியாக அறிவீர்களா?   அவன் ஏன் அப்படிச் செய்யவேண்டும் தந்தையே?”  த்ருஷ்டத்யும்னன் துருபதனின் கோபாவேசத்தை அறிந்து கொண்டு அவன் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான்.   ஆனால் துருபதனோ இந்தக் கேள்விக்கு ஒரு கைத்த சிரிப்பை வெளியிட்டான். அவன் பக்கம் திரும்பினான்.  “அவன் எவ்வாறு ஒத்துக்கொள்வான் மகனே!  அவன் இன்னமும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான். சுயம்வரம் என் விருப்பப்படியே நடக்கும் என்றும் எனக்கு கெளரவத்தைக் கொடுக்கும் என்றும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான்.  அவன் சொல்வதை எவ்வாறு நம்புவது?”

“ஆனால் தந்தையே, துரியோதனன் போட்டியில் வெல்லமாட்டான் என நம்பினால் தான் கிருஷ்ண வாசுதேவன் அவ்வாறு சொல்லி இருக்க வேண்டும். அப்படி அவன் ஏன் நம்புகிறான்?  அதற்குக் காரணம் என்ன?  ஒருவேளை….. ஒரு வேளை…..சாத்யகியோ, உத்தவனோ போட்டியில் வெல்லலாம் என எதிர்பார்க்கிறானோ?”

“உத்தவன் சிறந்த வில்லாளி தான்.  நான் பார்த்த பல வில்லாளிகளில் அவனும் ஒருவன்.  அவ்வளவே. சாத்யகியும் ஆர்வம் மிக்க நல்லதொரு சிறந்த வீரனே.   அதில் சந்தேகமே இல்லை.  ஆனால் வாசுதேவனுடைய மனதில் இவர்கள் இருவரும் இருந்தார்களெனில் அவன் ஏன் உத்தவனை ஹஸ்தினாபுரம் அனுப்ப வேண்டும்?  உத்தவன் எதற்காக தூது சென்றான்?  மகனே, எனக்குத் தலை சுற்றுகிறது.  எதுவுமே புரியவில்லை.  இப்படி ஏன் நடக்க வேண்டும்?”

“உத்தவன் இதற்குத் தான் தூது சென்றான் என்பது நமக்கு எப்படித் தெரியும் தந்தையே!  அவன் தூது சென்றது வேறு எதற்காக வேண்டுமானாலும் இருக்கலாமே! “ த்ருஷ்டத்யும்னன் சொன்னான்.

“இல்லை மகனே, நம்முடைய தூதுவர்கள் போய் சுயம்வர அழைப்பைக் கொடுத்ததும் கூட்டப் பட்ட  ராஜ சபையில் கெளரவர்கள் சுயம்வரத்திற்குச் செல்லலாம் என அனுமதி கொடுக்கப்பட்டது.  அப்போது  உத்தவனும் அந்த சபையில் இருந்திருக்கிறான்.  இதிலிருந்தே தெரிகிறதே, கிருஷ்ண வாசுதேவன் நம் கிருஷ்ணை துரியோதனனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்பது தான் வெட்ட வெளிச்சமாகப் புரிகிறதே!”

“ம்ம்ம்ம்ம், தந்தையே, நாம் ஒரு வேலை செய்வோமா?  வந்திருக்கும் வீரர்களான அரசர்களில் சிறந்தவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவன் மூலம் நம் திரெளபதியைத் தூக்கிச் செல்ல ஏற்பாடு செய்துவிடலாமா?  கிருஷ்ண வாசுதேவன் குண்டினாபுரத்தில் இது தானே செய்தான்.  அதே போல் நாமும் செய்து விடுவோம்.  அந்த அரசனுக்கு நாம் உதவி செய்து திரெளபதியைத் தூக்கிச் செல்லச் செய்து விடலாம்.” கொஞ்சம் தயக்கத்துடனும், யோசனையோடுமே இதைச் சொன்னான் த்ருஷ்டத்யும்னன்.

துருபதன் ஆச்சரியம் கலந்த பார்வையை மகன் மீது வீசினான்.  “மகனே, ஒரு நேர்மையான அரசனுக்குரிய கடமைகளையும் சுய தர்மத்தையும் இத்தனை வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகிறேன்.  ஒரு நல்ல வாக்குறுதி தவறாத அரசன் என்னும் பெயர் எடுத்திருக்கிறேன்.  இதற்காகவே என் வாழ்நாளை எல்லாம் அர்ப்பணித்தும் வருகிறேன்.  இன்று அதிலிருந்து என் சுய தர்மத்திலிருந்து என்னால் சிறிதும் விலக முடியாது மகனே!   என்ன நடந்தாலும் சரி!  நடப்பது நடக்கட்டும்!  இறைவன் செயல். ஆனால் அதற்காக ஒரு மோசடி செய்ய நான் உடன்பட மாட்டேன்.  ஆனால் நீ சொன்னாயே குண்டினாபுரத்தில்  வாசுதேவன் செய்தான் என.  அது கொஞ்சம் வித்தியாசமானது.  ருக்மிணி அவனைத் தான் மணம் செய்து கொள்ள விரும்பினாள்.  மனம் ஒப்பி அவனுடன் அவளாகவே சென்றாள்.  அவனுக்கு லிகிதம் எழுதி அவனை வரவழைத்து அவனுடன் சென்றாள்.  அது காந்தர்வத் திருமணம் என்பார்கள் மகனே.  பல காலமாக க்ஷத்திரியர்களுக்கு அப்படித் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திர ரீதியாகச் சொல்லப்பட்டது.  அதைத் தான் கிருஷ்ண வாசுதேவனும் செய்தான்.”

“அப்படி எனில் தந்தையே, நம் கிருஷ்ணையையும் நாம் தப்ப விட்டு விடலாம்.” என்றான் த்ருஷ்டத்யும்னன்.

“ம்ஹூம், கூடாது, கூடாது!” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் திரெளபதி.  “நான் தந்தையின் வாக்குறுதியைப் பூர்த்தி செய்வேன்.  அவர் சபதம் பூர்த்தி அடைய ஒத்துழைப்பேன்.  வில் வித்தைப் போட்டியில் வெல்பவர் எவராக இருந்தாலும் சரி; எனக்குக் கவலையில்லை;  அவரே என் கணவர். அவரைத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.” அழுத்தம் திருத்தமாக உறுதியுடன் சொன்னாள் திரெளபதி.

“எனக்குத் தெரியும், கிருஷ்ணை, நான் அறிவேன்.  நீ ஓர் அற்புதமான, அன்பு நிறைந்த மகள்.  ஆனால் அந்த நேரம் தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான பேராபத்து நிறைந்த நேரமாக இருக்கும்.  அதிலும் குரு வம்சத்து இளவரசர்கள் எவரேனும் வென்று விட்டாலோ  அல்லது அஸ்வத்தமா வென்று விட்டாலோ, என் வாழ்க்கையில் சூறாவளியே அடிக்கும்.  என் நிம்மதி, ஆனந்தம், சந்தோஷம் எல்லாம் போய்விடும். “ துருபதன் மிகவும் துக்கத்துடன் பெருமூச்சு விட்டான்.

“அப்படி எல்லாம் நினைக்காதீர்கள் தந்தையே!  நல்லதையே நினைப்போம்.  என்னை நம்புங்கள்.  தந்தையே, உங்களை ஒருக்காலும் நான் எந்நிலையிலும் கைவிடவே மாட்டேன்.  உங்களுக்குத் தோல்வி தேடித் தர மாட்டேன்.  உங்கள் சபதத்தை நான் எப்போது நினைவில் இருத்தி அதற்கு உரிய கெளரவம் தேடிக் கொடுப்பேன்.  துரோணரை ஜெயிக்க விடமாட்டேன்.”  இதைச் சொல்கையில் திரெளபதியில் அழகிய கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.  தந்தையின் மீது அவள் வைத்திருந்த அளவற்ற பாசம் அதில் வெளிப்பட்டது.  துருபதனும் மிகவும் பாசத்தோடு அவள் தலையைத் தடவிக் கொடுத்து அவளை அணைத்து உச்சி முகர்ந்து தன் ஆசிகளைத் தெரிவித்தான்.  தன் மகளின் துக்கத்தால் மனம் நெகிழ்ந்தான்.  சிவந்து போன அவள் முகத்தை ஆர்வத்தோடும் கர்வத்தோடும் பார்த்துக் கொண்டே, சற்று நேரம் அமைதியாக இருந்தான்.  பின்னர் தலையை ஆட்டிக் கொண்டே, “மகளே, நீ இன்னும் ஆண்களைச் சரியாகப்புரிந்து கொள்ளவில்லை.  நீ நினைக்கும் உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு உலகில் ஆண்கள் இருக்கின்றனர்.  உனக்கு அதைச் சொன்னால் புரியாது மகளே!” என்றான்.

“அதிலிருந்து நான் ஒரு புதிய உலகை உருவாக்குகிறேன் தந்தையே!  என் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.” என்று சொன்ன திரெளபதியின் முகத்தில் மழைக்குப் பின் பளிச்சிடும் சூரியனைப் போல் புன்னகை பளிச்சிட்டது.


2 comments:

ஸ்ரீராம். said...

துருபதனின் நேர்மை! சபாஷ் கிருஷ்ணை!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்கிறேன் அம்மா...