Saturday, June 21, 2014

கண்ணன் எச்சரிக்கிறான்!

“நான் போய்க் கொண்டே இருக்கிறேன்.  ஆனால் மீண்டும் உனக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்.  திரௌபதியை மட்டும் கடத்த நினைத்தாயெனில், உன் தலை உன்னிடம் இருக்காது;  பூமியில் விழும்!” என்று சிரித்தபடியே சொன்ன கிருஷ்ணன் எழுந்திருக்கும் பாவனையில் இருந்தான்.  அவனை முறைத்துப் பார்த்த ஜராசந்தன், “நீ மகத நாட்டு வீரர்களைக் குறித்து எதுவும் அறியவில்லை;  உன் தலையை நான் இதோ இப்படி ஒரு நிமிஷத்தில் வெட்டிச் சாய்ப்பேன்!” என்ற வண்ணம் கைகளால் சொடுக்கிக் காட்டினான்.

“செய்; முடிந்தால் உடனே என் தலையை வெட்டிவிடு!” சவால் விட்டான் கிருஷ்ணன்.  அவனைப் பார்த்துக்குறும்பாகப் புன்னகைத்தான்.  “என்னிடம் சவால் விடாதே இளைஞனே!  என் வீரர்களின் வீர ஆவேசம் குறித்து நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  அவர்களுக்கு எப்போது  என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரியும்.”  உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான் ஜராசந்தன். அதோடு  தான் இப்போது கிருஷ்ணனை ஏதும் செய்ய முடியாது என்னும் உண்மை அவனைச் சுட்டது.  அது அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.  கிருஷ்ணன் சவால் விட்டதின் காரணத்தை நினைத்ததுமே உள்ளூற நடுங்கினான்.  அவன் கை, கால்களெல்லாம் பதறின.  கிருஷ்ணனின் ஒரு தலை மயிருக்கு ஊறு விளைவித்தால் கூட இங்கே கூடி இருக்கும் அனைத்து அரசர்களும் மாபெரும் புரட்சி செய்யக் கிளம்பிவிடுவார்கள்.  மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். யாதவர்கள் மட்டுமின்றி, பாஞ்சால நாட்டுக்காரர்கள், விராடர்கள், குரு வம்சத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.  பின்னர் மகதத்தை அழிப்பது அவர்களுக்குத் தூசு மாத்திரம்.  மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் ஒன்றில் இரண்டு பார்த்துவிடுவார்கள்.  இந்த ஆரியர்களின் விழாக்களிலோ, நிகழ்வுகளிலோ பங்கெடுத்துக் கொண்டால் இப்படித் தான்.  நமக்கு நாம் தான் கட்டுப்பாடு விதித்துக்கொள்ளவேண்டும்.

“மகத மன்னா!  நீ நன்கு அறிவாய்!  இப்போது இந்த இரவில் உன்னால் என்னைக் கொல்லவும் முடியாது.  அதே போல் நாளை விடிந்தால் உன்னால் திரௌபதியைக் கடத்தவும் முடியாது. “  கிருஷ்ணன் பேச்சை நிறுத்தியதும், ஜராசந்தன் அவனையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் கண்களில் கோபம் கொண்ட சிங்கத்தின் சீற்றம் காணப்பட்டது.   இவை எதற்கும் கிருஷ்ணன் கவலைப்படவே இல்லை.  தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“அவளை நீ கடத்துவதற்குக் கிடைக்கும் முதல்  வாய்ப்பு  யக்ஞசாலையில் இருந்து அவள் சுயம்வர மண்டபம் செல்லும்போது மற்ற நாட்டு இளவரசிகளால் சூழப்பட்டு ஊர்வலமாக வருவாள்;  அந்த நேரம் நீ கடத்த நினைக்கலாம்.  ஆனால் அந்த நேரம் நான் முக்கிய ராஜபாட்டையில் உனக்காகக் காத்திருப்பேன்.  நீ உன் ரதத்தைப் பாதை மாற்றிப் பயணப்பட யத்தனித்தாய் எனில்,  அதாவது மண்டபத்திற்குச் செல்லும் நேர்வழியை விட்டுவிட்டு, மகதம் செல்லும் சாலையில் பயணப்பட ஆரம்பித்தால், திரௌபதியுடன் தான், உன் தலை உன்னிடம் இருக்காது.  என் சுதர்சனச் சக்கரம் அதை வெட்டிச் சீவி விடும். “ கிருஷ்ணன் பேசுவதை எல்லாம் கேட்ட ஜராசந்தனுக்குக் கோபம் வந்தாலும் தலையையும் சுற்றியது.  தன் விதியே அங்கே வந்து கிருஷ்ணன் குரலில் பேசுவது போல் இருந்தது அவனுக்கு.   ஆனால் கிருஷ்ணன் தொடர்ந்தான்.

“அடுத்த வாய்ப்பு உனக்கு சுயம்வர மண்டபத்தில் கிடைக்கும்.  யாருமே போட்டியில் வெல்லாமல் போனாலோ அல்லது வென்றவர் திரௌபதியைத் தூக்கிக் கொள்ளும்போதோ, அங்கிருக்கும் அரசர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருப்பார்கள். அப்போது நீ முயலலாம்.  ஆனால் பெரிய அளவில்  கலகம் பிறக்கும்.  நான் அங்கே தான் அந்த அரசர்களுக்கு மத்தியில் தான் இருப்பேன். “

“என்னிடம் ஏன் இதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?”  கோபமும், சீற்றமும் பொங்கக் கேட்ட ஜராசந்தன், இந்த இளைஞன் எவ்வளவு தூரம் யோசித்துத் தான் எப்படி எல்லாம் நடவடிக்கைகள் எடுப்போம் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறானே என வியந்தான்.   தான் திரௌபதியைக் கடத்திச் செல்லக் கூடிய வாய்ப்புக்களை எல்லாம் அலசி ஆராய்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான். ஆனால் கிருஷ்ணன் அத்தோடு அவனை விடவில்லை.

“ ஆரியவர்த்தத்தின் நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் நினைவில் வைத்துக்கொள் மகத மன்னா!ஒரு பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அடைய விரும்புவனைக் கொன்றுவிடுவார்கள்.  அவனுக்குக் கொடுக்கும் அதிக பக்ஷ தண்டனை மரணம் தான். இதை மறவாதே!” என்றான்.

ஏளனமாகச் சிரித்தான் ஜராசந்தன். “நீ மட்டும் ருக்மிணியைக் கடத்தவில்லையா?  அப்போது?” என்றும் கேட்டான்.

“ஆம், கடத்தினேன்.  ஆனால் வற்புறுத்தி அவளைத் தூக்கிச் செல்லவில்லை.  அவளாக விரும்பி என்னிடம் வந்தாள்.  என்னை மணம் செய்து கொள்ள விரும்பினாள்.  அவள் விருப்பத்தின் மேலேயே நான் அவளைத் தூக்கிச் சென்று மணம் செய்து கொண்டேன்.  ப்ருஹத்ரதனின் அருமை மகனே, ஜராசந்தனே, நீயோ அல்லது  உன் மகனோ, அல்லது உன் பேரனோ, யாராக இருந்தாலும் திரௌபதியைக் கடத்திக் கலகம் உண்டு பண்ணாமல் இருக்க வேண்டும். “

“நீ யாரடா இடைச்சிறுவன் என்னை மிரட்டி பயமுறுத்துவது? “ மிக ஆவேசமாகக் கத்தின ஜராசந்தன் கிருஷ்ணனின் மேல் தன் கைகள் பாய்ந்து அவனைக் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்று விடுமோ என்னும் பயத்தில் இருகரங்களையும் கோர்த்துக் கட்டிக் கொண்டான்.  தன்னை அடக்கிக் கொள்ள மிகவும் பாடுபட்டான்.

“நான் உன்னை மிரட்டவும் இல்லை;  பயமுறுத்தவும் இல்லை.  திரௌபதியைக் கடத்த நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதைத் தான் உனக்கு விளக்கினேன்;  ஒரே ஒரு ஆலோசனை உனக்கு இப்போது கூற விரும்புகிறேன்.   ஆசாரியர் சாந்தீபனி மிகக் கடுமையான ஒரு வில் வித்தைப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.  உன்னுடைய இளவரசர்கள் எவராலும் அந்தப் போட்டியில் வெல்ல முடியாது.  ஒருவேளை உன்னால் இயலும்.  நீயும் அதில் கலந்து கொள்ள ஆசைப்படுவாய்!  திரௌபதியை விடக் கூடாது என்று உன்னுள்ளும் எண்ணம் இருக்கும்.  ஆனால் அது சரியாக இருக்குமா?  யோசித்துப் பார்!”

“நீ, உன்னுடைய இந்த முதுமைப் பிராயத்தில், இந்த வயதில்,  உன்னுடைய சக்கரவர்த்தித் தகுதியில், இந்தப் போட்டியில் கலந்து கொண்டு, உன் பேத்தியை விடக் குறைவான வயதுள்ள ஒரு இளம்பெண்ணை வெல்வது எனில்!   ஏற்கெனவே உனக்குக் கணக்கற்ற மகன்களும், எண்ணற்றப் பேரன்களும் உள்ளனர்.  நினைத்துப் பார்!  இதெல்லாம் நீ போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தால் ஏற்படப் போகும் விளைவுகள்.  மாறாக நீ தோற்று விட்டால்? இங்குள்ள அனைத்து அரசர்கள், இளவரசர்கள் அனைவருக்கிடையேயும் நகைப்புக்கிடமானவனாக மாறிவிடுவாய்.  அப்புறம் நீ என்ன சக்கரவர்த்தி! சக்கரவர்த்தி என்னும் உன்னுடைய கௌரவம் மண்ணோடு மண்ணாக நசித்துப் போகும். நீ வேண்டுமானால் உன்னைச் சக்கரவர்த்தி என அழைத்துக்கொள்ளலாம்;  ஆனால் எந்த அரசனும் உன்னுடன் சேர்வதற்குத் தயங்குவான். உனக்கு உதவிக்கும் வரமாட்டான்.  “



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான எச்சரிக்கை...!

ஸ்ரீராம். said...

சொன்னதை எங்கே கேட்கப் போகிறான் ஜராஸ்!