Wednesday, March 2, 2016

இனிமையான கீதம் இசைக்கும் பிசாசு!

அது சரி, இந்தக் குட்டிப் பூனையை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?” பாமா கேட்டாள்.

“நீ என்ன சொல்கிறாய்?”

“இதனுடைய தாயை நான் ஊர்வசி எனப் பெயரிட்டிருந்தேன்; ஊரி என அழைத்து வந்தேன். ஆகவே இந்தக் குட்டியை நான் மேனகா என அழைக்கலாம் என நினைக்கிறேன்.” என்றாள்.

“ஓ, ஊர்வசி, மேனகா! நம்மிடம் இரு தேவலோகத்து நாட்டியகன்னிகைகள் இருக்கின்றனரா? சரி, சரி, ஆனால் நான் இவளை, “மினி” என்றே அழைக்கப் போகிறேன்.” என்றான் கண்ணன். மறு நாள் விடிந்தது. சத்யபாமா இன்று கொஞ்சம் நலமாக உணர்ந்தாள். கண்ணன் உதவியின்றித் தானாக எழுந்து நின்றாள்; அவள் உடல் வலி குறைந்திருந்ததோடு அல்லாமல், காயங்களும் வெகுவாக ஆறி வந்தன. குளக்கரைக்குத் தானே தனியாகச் சென்று தன் வேலைகளை யார் உதவியும் இல்லாமல் முடித்துக் கொண்டாள். என்றாலும் மனம் கேட்காமல் குளக்கரை வரை சத்யபாமாவுக்குத் துணையாகச் சென்றுவிட்டுத் திரும்பிய கிருஷ்ணன், தாங்கள் படுத்திருந்த இலைப்படுக்கையைச் சுத்தம் செய்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இன்னமும் கட்டைகளைப் போட்டுத் தீயை அணையாமல் பாதுகாத்தான். சுற்றுப்புறம் எங்கும் ஒரே அமைதி! பறவைகளின் க்ரீச் குரல் கூட அதிகம் கேட்கவில்லை. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சத்யபாமாவின் “ஐயோ” என்னும் அலறல் கிருஷ்ணன் செவியைக் கிழித்தது. கிருஷ்ணன் வெகு வேகமாகக் குளக்கரைக்கு ஓடினான். குளத்தின் விளிம்பில் அமர்ந்திருந்த சத்யபாமாவின் கால்கள் இரண்டும் நீருக்குள் கிடந்தன. அவள் உடல் மோசமாக நடுங்கிக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அவள் அருகே வந்ததும் அப்படியே சாய்ந்து அவன் கால்களைத் தன்னிரு கரங்களால் பிடித்துக் கொண்டாள். பீதியில் அவள் முகம் வெளுத்துக் கிடந்தது. கண்கள் சொல்லவொணா அச்சத்தைக் காட்டியது!

“அதோ, அந்தப் பேய்! பிசாசு!, பேய், பிசாசு!” என்ற வண்ணம் சத்யபாமா தன் கரங்களால் குளத்தின் மறுபக்கத்தை சுட்டிக் காட்டினாள். கிருஷ்ணன் அந்தக் குளத்தில் அமுங்கிக் கிடந்த பாறைகளை ஒவ்வொன்றாகத் தாண்டிய வண்ணம் அதைக் கடந்தான். அப்போது நீண்ட மயிருடன் கூடிய அந்த விசித்திரமான உருவத்தைக் கண்டான். அது ஓடிப் போய் அந்தக் குகையின் மேல் பாகத்தினுள் சென்று மறைந்தது. ஆனால் அது உள்ளே செல்லும் முன்னர் கிருஷ்ணன் அதன் முகத்தை உற்றுக் கவனித்தான். ஒரு கணமே பார்க்கக் கிடைத்த அந்த முகம் ஒரு பெண்ணுடையது என்பதையும் தெரிந்து கொண்டான். அந்த உருவம் பின்னர் சுரங்கப்பாதையினுள் சென்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியது. கிருஷ்ணன் தன்னைத் தொடர்ந்து வருகிறானா என்று அது பார்த்திருக்க வேண்டும். பின்னர் மீண்டும் குகையின் மேல் தளத்தில் இருந்து இனிமையான குரலில் இசைக்கும் சப்தம் கேட்டது. அது அந்தப் பெண் உருவம் தான் எனப் புரிந்து கொண்ட கிருஷ்ணன், ஏன் இந்த உருவம் இப்படி இருக்கிறது? இது என்ன மாதிரியான உருவம்? என்று வியந்தான். கிருஷ்ணன் அந்த விசித்திரமான உருவத்தைத் தொடர்ந்து தானும் செல்லலாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டுப் பின்னர் தன் மனதை மாற்றிக் கொண்டான்.

அந்தக்குகையில் இருந்து திரும்பிக் கீழே வந்த கிருஷ்ணன் ஓர் இடத்தில் தண்ணீர் கணுக்கால் வரையுமே ஓடியது என்பதைக் கண்டான். அந்த இடத்தின் மணல் முழுக்க முழுக்கத் தங்கம் போல் மஞ்சளாகவும் இருந்தது. பளபளவென மின்னவும் செய்தது! கையில் எடுத்துப் பார்த்தால் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமே மேலிட்டது. அந்த மணல் சின்னச் சின்னத்தங்கத் துகள்களால் ஆகி இருப்பதைப் புரிந்து கொண்டான். ம்ம்ம்ம், புனிதக்குகையிலும் சூரியனின் சந்நிதிக்கு நேரே இப்படி ஓர் தங்கத்தை வர்ஷித்திருப்பதைக் கண்டான். யாரோ மனிதர்கள் தங்கத்தால் அர்ச்சித்திருக்கலாம் என எண்ணி இருந்தான். ஆனால் இப்போது புரிந்தது. மேலுள்ள ஊற்றிலிருந்தோ அல்லது அருவியோ இந்தக் குளத்துக்குத் தண்ணீரை மட்டும் கொண்டு சேர்க்கவில்லை. இப்படிப்பொடிப் பொடியாகத் துகள்களாக ஆன தங்கமணிகளையும் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். திரும்பி சத்யபாமா இருக்கும் இடம் வந்த கிருஷ்ணன் அந்தப் பிசாசு ஒரு பெண் எனவும் அது நட்பாக இருக்கும் போல் தெரிவதாகவும், ச்யமந்தகத்தைக் கண்டு பிடிக்க அதன் உதவியை நாடலாம் எனவும் தெரிவித்தான்.

திரும்ப குகைக்கு வந்த சத்யபாமா அமர்வதற்காகத் தன் இலைப்படுக்கையைச் சரி செய்து கொண்டாள். அதைக் கண்ட கிருஷ்ணன் அவளிடம், “பாமா, பயப்படாதே! நான் உன்னுடைய வீங்கிய கணுக்காலுக்கு ஒத்தடம் கொடுத்து விடுகிறேன். அதன் பின்னர் நாம் உணவருந்திவிட்டு மேலுள்ள குகைக்குச் செல்வோம். இப்போது நீ சற்று ஓய்வெடுத்துக்கொள்!” என்றான். பின்னர் எரியும் நெருப்பில் மேலும் கட்டைகளை இட்டான். மூலிகைகளைப் பறித்து வந்திருந்த கிருஷ்ணன் அவற்றை எடுத்தான். ஒரு துணியில் போட்டு மூலிகைகளை எரியும் நெருப்பில் வாட்டினான். சத்யபாமாவின் கணுக்காலில் சுளுக்கு இருந்த இடத்தில் ஒத்தடம் கொடுத்தான். அதன் பின்னர் இருக்கும் உணவைப் பங்கிட்டு இருவரும் உண்டனர். ஊரி வெளியே சூரிய வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு சூரியனின் கதிர்களால் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டது. பின்னர் தான் பிடித்து வந்திருந்த ஒரு சின்ன முயல்குட்டியைத் தன் உணவாக உட்கொண்டது. அதன் குட்டி தாயின் அருகே அமர்ந்த வண்ணம் தாயிடம் பாலைத் தேடியது. சத்யபாமா தூங்கிவிட்டாள். கிருஷ்ணன் பல வருடங்கள் கழித்துத் தன் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு அந்தச் சுரங்கப்பாதையின் திறந்த வாயில் பக்கம் சென்று நின்று கொண்டான்.

அவன் அதிக நேரம் காத்திருக்காமல் மதிய நேரத்திற்குச் சற்று முன்னரே அந்த இனிமையான சங்கீதக் குரல் கேட்டது. இப்போது அந்தக் குரலின் இனிமையும், அதன் சங்கீத ஒலியும் கிருஷ்ணனுக்குப் பழகிவிட்டது. குகைக்குள்ளிருந்து அது வருகிறது என்பதைப் புரிந்து கொண்டான். தன் இடுப்பிலிருந்து புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு அதில் விளையாடினான் கிருஷ்ணன். இனிமையான கீதம் பிறந்தது. காட்டின் அனைத்து ஜீவன்களும் அதில் மயங்கி நின்றன. கண்ணனின் இனிமையான புல்லாங்குழல் கீதம் கேட்டதும், அந்தப் பிசாசு தன் கீதத்தை நிறுத்திவிட்டது. அதற்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். யாரோ நம்முடன் சேர்ந்து பாட முயற்சிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் கிருஷ்ணனோ தன் கீதத்தை நிறுத்தவில்லை. மேலும் மேலும் இசைத்தான். அந்த விசித்திர உருவம் பாடிய பறவைகளின் சங்கீத ஒலி போன்ற கீதத்தை மேலும் மேம்படுத்தித் தன் வயப்படுத்திப் பாடினான். அதன் பின்னர் சற்றே தன் புல்லாங்குழல் இசையை நிறுத்தினான். இப்போது உடனே மீண்டும் அந்தப்பிசாசைப் போன்ற உருவம் பறவைகளின் சங்கீத ஒலியைப் போல் பாட ஆரம்பித்தது. கிருஷ்ணன் தன் புல்லாங்குழலை மீண்டும் இசைத்து அதனுடன் கூடத் தயக்கமின்றி இசைத்தான். விரைவில் அங்கே கிட்டத்தட்ட இரு குரலிசை ஆரம்பித்துத் தன் முழு வேகத்தில் பயணப்பட்டது. சற்று நேரம் கண்ணன் புல்லாங்குழல் இசைக்க, அந்த விசித்திரமான பிசாசு உருவம் கேட்டுக் கொண்டிருக்கும். பின்னர் அது தன் கீதத்தை இசைக்க ஆரம்பிக்கச் சற்றுக் கேட்கும் கண்ணன் பின்னர் அதன் குரலோடு இசைந்து தன் புல்லாங்குழலை இசைக்க ஆரம்பிப்பான். இந்த கீதங்களைக் கேட்ட சத்யபாமா எழுந்து வந்தாள்.

சற்றே நொண்டிய வண்ணம் வந்த பாமா கிருஷ்ணனிடம், “அந்தப் பிசாசைப் பார்த்தீர்களா? எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள். “ஓ, அது ஒரு பிசாசு அல்ல. அப்படிப்பிசாசாக இருந்தால் அது இத்தனை நட்பாக இருக்காது. அது நட்புடன் இருக்கிறது. மேலும் இசையில் சுத்தமான இசையில் மிகப் பிரியம் வைத்துள்ளது. நன்கு இசைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறது.” என்றான் கண்ணன். பின்னர் அவளிடம், “நீ போய் நம் பொருட்களை எல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்து வா! எதையும் விட்டு விடாதே! ஊரியையும் அதன் குட்டியையும் அழைத்து வர மறக்காதே!  நாம் இந்தச் சுரங்கப்பாதையின் வழியே உட்சென்று அந்தப் பிசாசைப் பார்த்துவிடுவோம்.” என்றான். ஆனால் சத்யபாமா ஆக்ஷேபித்தாள். “ஆனால், பிரபுவே, நாம்…….” என்று இழுத்தாள் பாமா. ஆனால் கிருஷ்ணன் உறுதியுடன் அவளைப் பார்த்துக் கூறினான்.”நாம் ச்யமந்தகத்தை மட்டுமின்றி சாத்யகியையும் உயிருடன் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பதை மறக்காதே!” என்றான். அதன் பின்னர் எதுவும் பேசாமல் சத்யபாமா குகைக்குள் சென்று அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாள். அந்தப் பிசாசு உருவம் பிடிவாதமாகத் தன் இசையை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருந்தது. மேலுள்ள சுரங்கப்பாதையின் வாயிலருகே சத்யபாமா வரும் வரையில் அது பாடிக் கொண்டிருந்தது.

கண்ணன் பாமாவைப் பார்த்தான். “ உன் கையிலுள்ள கத்தியை என்னிடம் கொடு. நான் உள்ளே இந்த துவாரம் வழியே செல்கிறேன். பாதுகாப்புக்கு இந்தக் கத்தி போதும். நான் தவழ்ந்த வண்ணம் மேலே செல்வேன். என் கால்கள் கீழே இருக்கும். நீ ஏதேனும் ஆபத்தை உணர்ந்தாயானால் என்னைக் கால்களைப் பிடித்து உன்னால் இயன்ற அளவுக்கு வலிமையுடன் மேலே தள்ளு! நான் எப்படியும் அந்தக் குகைக்குள் போய் உள்ளே எதிரி இருந்தால் அவரைச் சந்திக்கலாம். ஒன்றும் நடக்கவில்லை எனில் என்னுடைய வில்லையும் அம்புகளையும், பின்னர் அரிவாளையும் கொடுத்துவிடு! அதன் பின்னர் பூனைக்குட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு நீ எப்படியாவது சமாளித்துக் கொண்டு வளைந்து, நெளிந்து இந்தக் குகையின் சுவரில் கால் வைத்துக் கொண்டு மேலே ஏறப்பார். நான் முதலில் ஏறிவிடுவேன் ஆதலால் உன்னை உள்ளே இழுத்துக் கொள்கிறேன். ஊரியை நீ கவனிக்க வேண்டியதில்லை. அது தானாகவே குகையின் துவாரத்தின் வழியாக மேலேறிவிடும்.” என்றான். இதைச் சொல்வதற்குள்ளாகக் கிருஷ்ணன் மிகச் சிரமப்பட்டான். ஏனெனில் அவன் தன் புல்லாங்குழல் இசையை நிறுத்த முடியவில்லை. ஆகவே இசைப்பதை நிறுத்தும் சில நொடிகள் தாமதத்தில் இதை மிக வேகமாகவும் கவனமாகவும் பாமாவிடம் சொல்ல வேண்டி இருந்தது. அங்கே மேலே அந்த விசித்திரமான உருவம் படைத்த பிசாசுப் பெண்ணும் தன் இசையை நிறுத்தவில்லை. பாடிக் கொண்டிருந்தது. பின்னர் மனதில் ஏதோ தோன்ற கிருஷ்ணன், பாமாவிடம், “என் புல்லாங்குழல் இசையில் குறுக்கிட்டு நிறுத்த முயலாதே! அப்படியானால் அந்த விசித்திர உருவம் என்னைத் தன் சிநேகிதன் இல்லை என நினைத்துக் கொள்ளும்.” என்றும் எச்சரித்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

வித்தியாசமான அத்தியாயம்!