Thursday, March 17, 2016

சாம்பன் மரணம்; கரடி அரசன் கோபம்!

கடைசியில் நிலவுத் திருவிழா மிகவும் சோகமாக முடிவடைந்தது. கரடி மனிதர்கள் அனைவரும் சிலையைப் போல் திகைத்து நின்றனர். அனைவரும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்டதால் அவர்கள் பயம், அதிர்ச்சி எல்லாம் மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. அவர்கள் தொண்டையிலிருந்து இன்று வரை அவர்கள் அறியாததொரு குரலில் சோகமான ஓலம் கிளம்பியது! புலம்பல் அதிகமாயிற்று! அவர்களால் கற்பனை கூடச் செய்து பார்த்திராத வகையில் அவர்களின் ஆசாரியனும், அவர்களின் குலதெய்வமான கரடிகளின் கடவுளின் மிக விருப்பமான மகனுமான சாம்பன் கிருஷ்ணனால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்து கிடக்கிறான். அவர்களைப் பொறுத்தவரை சாம்பனின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அது உடனடியாக நிறைவேற்றப்படும். அவனைப் பார்க்கையிலேயே பயம் கலந்த பக்தியுடனேயே பார்ப்பார்கள். இது வரை எவருக்கும் இல்லாததொரு சக்தியுடன் இருந்து வந்த அவன் இப்போது ஒரே நிமிடத்தில் செத்தவனைப் போல் கீழே விழுந்துவிட்டானே! உண்மையிலேயே இறந்து விட்டானா?  கடவுள் அவனுக்குக் கொடுத்த சக்தியைத் திரும்ப எடுத்துக் கொண்டு விட்டாரா? தனக்குப் பிடித்த மகனாக இருந்தவனை இப்போது  தனக்கு வேண்டாம் என்று விட்டு விட்டானா? அவனுக்குக் கொடுத்த சக்தியை இந்தப்புதிய மனிதனுக்குத் திருப்பி விட்டானா?
ஆஹா, ஆம், அவன் இறந்துவிட்டான். உண்மையாகவே இறந்து தான் விட்டான். இது என்ன? ஜாம்பவான் அதிர்ச்சி அடைந்தார். மெல்ல மெல்ல அவன் அருகே வந்து தொட்டுப் பார்த்தார். பின்னர் கிருஷ்ணன் முகத்தைப்பார்த்தார். அதிர்ச்சியும், ஆச்சரியமும் அவர் கண்களில் தென்பட்டன. கரடிகளின் நன்மைக்காகவும், கரடி உலகின் நன்மைக்காகவுமே அவர் இத்தனை நாட்கள் சாம்பனின் அதிகக் கொடுமையையும், துர் நோக்கங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தார். அவனுடைய கடுமையான சட்டதிட்டங்களை ஏற்றுக் கொண்டார். இப்போது வாசுதேவக் கிருஷ்ணன், இந்தக் கரடி உலகுக்கே புதியவன், கறுப்புக் கடவுளால் அனுப்பப் பட்டு நம் குலத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறான். ஒரு தூதனாகவா? அல்லது இவனும் கொடூரமானவனா? நல்லவனா, கெட்டவனா இவன்? ஆனால் ஜாம்பவான் மற்றவர்களைப் போல் இல்லாமல் வெகு விரைவில் தன்னைச் சமாளித்துக் கொண்டார். நிலைமைக்கு ஏற்ப முடிவெடுக்கக் கரடி அரசனாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து விரைவில் செயலாற்றினார். தன் கையில் சாம்பனின் மத்தளத்தை எடுத்துக் கொண்டு தங்கள் கடவுளை அழைக்க ஆரம்பித்தார். பாரம்பரியமாக முறையில் நடனமும் ஆடினார். உடனே எல்லாக் கரடி மனிதர்களும் தங்கள் தலையைக் குனிந்த வண்ணம் நெஞ்சில் தங்கள் கைகளைக் குறுக்காகப்போட்டுக் கொண்டனர். சீக்கிரமாக அங்கே அமைதி வந்தது. அப்போது கரடிகள் அரசனான ஜாம்பவான் தங்கள் கடவுளை எழுப்பினான். “ஏ, உலக நாயகனே! எவர்க்கும் அஞ்சாதவனே!கறுப்புக் கடவுளே! எங்களைக் காத்து ரக்ஷிப்பாயாக! எங்கள் கரடி மக்களைக் காப்பாற்று. இந்தப் புதிய மனிதன் சாம்பனை உங்களிடமிருந்து பிரித்துவிட்டான். அவன் பாதுகாப்பு எங்களுக்கு இப்போது இல்லை! நாங்கள் அனைவரும் சேர்ந்து உன்னிடம் பாதுகாப்பைக் கோருகிறோம். உங்கள் வழிகாட்டுதலும் எங்களுக்குத் தேவை!”

கூட்டத்தில் அனைவரும் கத்தினார்கள். அனைத்தும் தெரிந்தவரே! அனைவருக்கும் வல்லவரே, உலக நாயகரே, எவருக்கும் அஞ்சாதவரே! எங்களைக் காப்பாற்று. காப்பாற்று! நாங்கள் உன்னுடைய மக்கள்.” என அனைவரும் ஒரே குரலில் கத்தினார்கள். அப்போது சாம்பனின் தாயும் ஜாம்பவானின் மூத்த மகளும் ஆனவள் முன்னே வந்தாள். அவள் அழுத அழுகை நெஞ்சைப் பிளந்தது. சோகமான தொனியில் பல்வேறு புலம்பல்களைப் புலம்பிய வண்ணம் அவள் தீனமாக அழுதாள். தன் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டாள். தலையைச் சோகத்தில் ஆட்டினாள். தலையில் அடித்துக் கொண்டாள். இறந்து கிடந்த மகனின் அருகே சென்றாள். ஆனால் அவளால் தொட முடியவில்லை. அது கரடிகள் உலகுக்கு சாஸ்திர ரீதியானது அல்ல. அந்தக் கரடி உலகின் நம்பிக்கையானது இறந்து போன ஆசாரியனின் உடலைத் தொடுவதிலிருந்து தடுத்தது. ஏனெனில் அவனுக்குக் கடவுள் கொடுத்து வந்த பாதுகாப்பை நீக்கிக் கொண்டார். ஆகவே அவனைத் தொடக் கூடாது. அவன் உடலைக் கரடிகள் தின்னக் கொடுக்க வேண்டும். ஆகவே அந்தக் கூட்டத்திலிருந்த சில பெரியோர்கள் முன்னே வந்து சாம்பனின் தாயை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். அவள் அவர்கள் கைகளில் நடுங்கினாள். துள்ளினாள். துடித்தாள். விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தாள். ஆனால் அவளால் இயலாமல் அப்படியே கீழே விழுந்தாள். உடனே மற்றவர்கள் அவளைத் தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு சென்றார்கள்.

கரடி அரசனின் கட்டளையின் பேரில் ஐந்து கரடி மனிதர்கள் கிருஷ்ணனையும், சத்யபாமாவையும், சாத்யகியையும் ஒரு காலியான குகைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் கரடி மனிதர்கள் அந்த எரியும் நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். மீண்டும் மீண்டும் அவர்கள் கடவுளை அழைத்தூ மன்னிப்பும், பாதுகாப்பும் கேட்டனர். பின்னர் அங்கேயே அமர்ந்து இப்படி ஒரு எதிர்பாரா நிகழ்வு ஏற்பட்டது குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர். ஆனால் குகைக்குள்ளே சிறை வைக்கப்பட்டவர்களில் சத்யபாமா தான் இருக்கும் நிலையை நினைத்துக் கவலைப்படாமல் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். அவள் இத்தனை வருடங்களாக சாத்யகியிடம் தன்னைக் கிருஷ்ணனிடம் அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் கிருஷ்ணனை சாத்யகி இருக்குமிடம் அழைத்து வந்துவிட்டாள். இது ஓர் அதிசயம் தான். பாமாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

1 comment:

வல்லிசிம்ஹன் said...

அநீதி கண்ட இடத்தில் அழிப்பதுதான் கண்ணன் தொழில். இனி நடப்பவை நன்றாகவே இருக்கும். பாமாவின் லட்சியம் நிறைவேறட்டு,.
நினைத்துப் பார்க்க முடியாத அளவு கற்பனைத்திறன் இந்த கண்ணன் நிகழ்வுகளில் காண்கிறேன். நன்றி கீதா.