Saturday, March 19, 2016

சிறையில் கண்ணனும், தோழர்களும்!

தனிமையில் விடப்பட்ட கிருஷ்ணனும், பாமாவும் சாத்யகியைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிருஷ்ணன் சாத்யகியை அப்படியே அணைத்துக் கொண்டான். அவன் முதுகில் செல்லமாயும் அன்பாயும் ஓங்கி ஓர் அடி அடித்த கிருஷ்ணன்,”சாத்யகி, உன்னால் எனக்கு நேர்ந்திருக்கும் முடிவற்ற தொல்லையைப் பார்த்தாயா?” என்றும் வினவினான். சத்யபாமா அதற்குள் குறுக்கிட்டு, “ஆம், அவர் என்னை இந்த மலைப்பிராந்தியத்துக்குத் தூக்கி வர நேர்ந்தது. அதோடு இல்லாமல் இந்தக் கொடுமை நிறைந்த மனிதனிடமிருந்து தன் உயிரைப் பணயம் வைத்து என்னைக் காத்திருக்கிறார்.” என்றாள். இந்த நேரத்தை, இந்த நிமிடத்தை சத்யபாமா மிகவும் ரசித்து அனுபவித்தாள். கிருஷ்ணனுடனும், சாத்யகியுடனும் தனிமையில் இருக்க நேர்ந்தது அவள் வாசாலகத்தை மீட்டுக் கொணர்ந்தது.

மூவரும் நெருங்கி அமர்ந்து கொண்டனர். “அவர்கள் உன்னைக் கொல்ல நினைத்தார்களா? அதற்காக முயற்சித்தார்களா?” என்று கிருஷ்ணன் சாத்யகியிடம் கேட்டான். “இல்லை!” என்று யோசனையுடன் கூறிய சாத்யகி, “ஆனால் கரடி அரசன் ஜாம்பவானுக்கு என்னைக் கடத்துவதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது. என்னால் அதைப்புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது நம் மூவரையுமே மரணம் நெருங்குகிறது. ஏனெனில் நீ அவர்கள் ஒருவனை அதிலும் முக்கியமான ஆசாரியனைக் கொன்று விட்டாய்!” என்றான் சாத்யகி.
“நம்மை என்ன செய்வார்கள் என்று உனக்குத் தோன்றுகிறது?” என்று கிருஷ்ணன் அவனிடம் கேட்டான். “என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது கிருஷ்ணா!  நம்மை அவர்கள் கரடிகளுக்கு உணவாக்கலாம், அல்லது அவர்களின் கறுப்புக் கடவுளுக்கு ஏற்ற பலி என நினைத்து பலி கொடுக்கலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். நான் இங்கு வந்த அன்று ஒரு இளைஞன் சாம்பனை எதிர்த்தவன் முதலில் நெருப்புக்குள் தூக்கி எறியப்பட்டான். பாதி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியே எடுக்கப்பட்டுக் கரடிகளுக்கு உணவாய்க் கொடுக்கப்பட்டான்.” என்றான் சாத்யகி நடுங்கும் குரலில்.

“அது சரி, சாத்யகி, அந்தப் பெண் ஏன் மரங்களின் உச்சியிலேயே குடி இருக்கிறாள்? அதுவும் பறவைகளைப் போல் பறவைக்குரலில் ஏன் பாடுகிறாள்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “ஓ, அவள் ஜாம்பவானின் கண்ணின் கருமணியைப்போன்றவள். ஜாம்பவானுக்குத் தன் பெண்ணிடம் அதிக அன்பு, பாசம். அவள் விழித்திருக்கும் நேரம் எல்லாம் இப்படித் தான் மரத்துக்கு மரம் தாவி ஊஞ்சலாடிக் கொண்டிருப்பாள். குரங்குகளிடம் பேசுவாள். அல்லது பறவைகளைப் பார்த்து அவற்றின் குரலில் பாடுவாள். பறவைகளின் குரலைப் போல போலிக் குரலில் பாடுவாள்; பேசுவாள். “ம்ம்ம்ம்ம், எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. நான் அப்படித் தான் நினைக்கிறேன். அவள் தன் தந்தையின் உத்தரவின் பேரில் தான் நம்மை எல்லாம் இங்கே இழுத்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. “ என்றான் கிருஷ்ணன்.

சத்யபாமா கிண்டலாகவும் குறும்பாகவும் சிரித்தாள். “சாத்யகி, பிரபு கிருஷ்ணன் அவர்களுக்கு இந்தப் பெண்ணிடம் அதீதமான அபிமானம் உருவாகி விட்டது. அதன் காரணமாகவே அவளைப் பின் தொடர்ந்து இந்தக் கரடிகள் ராஜ்ஜியத்துக்கு வந்திருக்கிறார். இப்போது பாரேன், அவள் இவரைத் தன் கணவனாக ஏற்கப் போகிறாள்.” என்றாள். கிருஷ்ணனைப் பொய்க் கோபத்துடன் பார்த்து முறைத்தாள். கிருஷ்ணனோ இவை எதற்கும் கலங்காமல் சத்யபாமாவைப் பார்த்துச் சிரித்துவிட்டு சாத்யகியிடம், “சாத்யகி, ச்யமந்தக மணி எங்கே இருக்கிறதை நீ கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டான். சாத்யகி இல்லை என்று பதிலளித்தான். “ம்ம்ம்ம்ம், ஆனால் அது இங்கே தான் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. நான் அந்தச் சங்கிலியின் ஒரு பாகத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். அது பிரசேனன் கொல்லப்பட்ட இடத்தில் கிடந்தது. இன்னொரு பாகம் இந்தக் கரடிகளின் உலகுக்கு வரும் வழியில் உள்ள மேல் குகையில் கண்டெடுத்தேன். ஜாம்பவான் அதை இங்கே தான் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை நான் எப்படிக்கண்டு பிடித்தேன் எனில் கரடி அரசன் ஜாம்பவானின் மருமகனின் தோள்பட்டையின்  கரடித்தோல் அங்கே செத்துக் கிடந்த சிங்கத்தின் பாதங்களில் காணப்பட்டது. ஆகவே கரடிகள் தான் அந்த ச்யமந்தகமணியைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.”

“அப்படியா? நமக்கு இப்போது என்ன நடக்கும்?” சாத்யகி ஆவலுடன் கேட்டான். “ம்ம்ம்ம், கரடி அரசன் ஜாம்பவானின் அன்புக்குப் பாத்திரமான அவன் மருமகன் ஆன கரடிக்கு நம்மை உணவாக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவும் அந்தக் கரடி மருமகன் சத்யாவைப் போன்றதொரு இனிமையும், இளமையும் பொருந்திய சதைகள் நிரம்பிய உணவு இதுவரை கிடைத்திருக்காது. ஆகவே அனுபவித்துச் சாப்பிடுவான்.” சொல்லிவிட்டுக் கிருஷ்ணன் சிரித்தான். அதற்கு சத்யபாமா குறுக்கிட்டு, “அதனால் என்ன? நாம் மூவருமே தானே அந்த மருமகனுக்கு உணவாகப் போகிறோம்? அதில் எனக்கு சந்தோஷமே! ஆனால் அந்தப் பறவைப் பெண் உங்களை அதற்குள்ளாகக் கடத்தாமல் இருக்கவேண்டுமே, பிரபுவே!” என்று சற்றும் பயமில்லாமல் கூறிய பாமா உள்ளுக்குள் கரடியின் வயிற்றிலாவது கிருஷ்ணனும் தானும் ஒன்றாக இருக்க வாய்ப்புக் கிடைப்பதில் உள்ளூர சந்தோஷம் அடைந்தாள். “சரி, போகட்டும், எப்படியாயினும் ஊரியையும் அவள் குட்டியையும் நாம் தப்பிக்க வைத்தாகவேண்டும்!” என்றான் கிருஷ்ணன். ஊரி அப்போது அங்கு காவல் இருந்தவர்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு குகைக்குள் வந்திருந்தது. பூனைக்குட்டியும் தன் தாயைத் தொடர்ந்து வந்திருந்தது. கிருஷ்ணனைக் கண்டதும் அவன் மேல் அன்போடு உரசியது.

அவர்கள் மூவரும் அங்கிருந்த இலைப்படுக்கைகளில் படுத்தனர். அன்று பூராவும் அலைந்த அலைச்சலும், கரடி மனிதர்களோடு ஏற்பட்ட சம்பவங்களாலும் உடல், மனம் இரண்டுமே சோர்ந்திருக்க விரைவில் அவர்களை நித்திராதேவி பரிபூரணமாய் ஆட்கொண்டாள். காலை பறவைப் பெண்ணின் பறவைக்குரல் சங்கீத ஒலி கிருஷ்ணனை எழுப்பி விட்டது. உடனே அவன் தன் புல்லாங்குழலை எடுத்து அவளுக்கு அதன் மூலம் பதில் சொன்னான். இருவரும் ஒருவரை போட்டி போடும் வண்ணம் அடுத்தடுத்து இனிமையான சங்கீதத்தில் ஆழ்ந்தனர். விரைவில் சூரியன் உதயம் ஆக, காவலர்கள் மாறினார்கள். குகையில் வாயிலில் வைத்திருந்த பெரிய பாறையை அகற்றினார்கள். காவலர்கள் துணையுடன் கிருஷ்ணனும், அவன் கூட இருந்த சாத்யகியும், பாமாவும் நீர்ப் பிரவாகத்துக்குக் காலைக்கடன்களை முடிக்க அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கேயே கிருஷ்ணனும், சாத்யகியும் தங்கள் காலை அனுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டனர்.

திரும்பி வருகையில் தங்கமயமான மண் கலவை இருந்த இடத்தில் கரடி மனிதர்கள் முழங்காலளவுத் தண்ணீரில் நின்று கொண்டு மண்ணைச் சலித்துச் சலித்துத் தங்கத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த சத்யபாமா கண்ணனிடம் திரும்பி, “பிரபுவே, புனித குகையில் நாம் பார்த்த தங்கத் துகள்கள் அனைத்தும் இங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும்!” என்றாள். “ஆம்!” என்றான் கண்ணன். மேலும் தொடர்ந்து, “உன் தந்தை இந்தப் புனிதக்குகையில் ச்யமந்தக மணியின் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்படும் தங்கம் அனைத்தும் இந்த மணல் மூலமும் கரடி மனிதர்கள் மூலமும் பெற்றவையாக இருக்க வேண்டும். “இந்தக் கரடிப்பெண்களுக்கு இந்தத் தங்கத்தினால் ஏதும் பலன் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. அவர்கள் உன்னை விட மிகவும் புத்திசாலிகள்.”

பின்னர் குகைக்குத் திரும்பியதும் மூவருக்கும் காவலாளிகளால் உணவு அளிக்கப்பட்டது. மதிய நேரத்தில் அங்கிருந்த கரடி மனிதர்களில் பெரியவரான ஒருவர் வந்து சாத்யகியை மட்டும் அழைத்தார். கண்ணன் அவனிடம், “சென்று வா சாத்யகி! ஆனால் பொறுமையைக் கடைப்பிடி! அவர்கள் உன்னை எவ்வளவு அவமதித்தாலும் பொறுமையாக இரு! எதற்கும் கலங்காதே! கோபம் கொள்ளாதே! நாம் அனைவருமே ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருப்பதை நினைவில் கொள் சாத்யகி! குறைவாகவே பேசு! நீயாக எந்த முடிவையும் எடுக்காதே! இந்த மனிதர்கள் நம்மை எத்தகையதொரு சூழ்நிலையில் கொண்டு விடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் எனக்குக் கரடி அரசன் நம் நண்பன் என்றொரு எண்ணம் தோன்றுகிறது.” என்றான் கிருஷ்ணன்

No comments: