Sunday, May 1, 2016

பராசரரின் வேதனை!

“தந்தையே, தாங்கள் பிறக்கும் முன்னரே தாங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதேவா தாத்தா உங்களுக்கு வேதங்களைக் கற்பித்தார்? அது எப்படி தந்தையே? அது எப்படி அவர் உங்களுக்கு நீங்கள் பிறக்கும் முன்னரே சொல்லிக் கொடுத்தார்?”

“அவர் எந்நேரமும் வேதங்களை ஓதியவண்ணமே இருப்பார். கடவுளரிடம் பேசுவார் என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கடவுளர் அனைவரும் மற்ற மனிதருக்கு இல்லாத முக்கியத்துவத்தையும் அதிகாரங்களையும் இவருக்குக் கொடுத்திருந்தார்கள். மற்ற ரிஷிகளை விடவும் இவர் மிகவும் பிரபலமாக இருந்ததோடு அல்லாமல் வல்லமை உள்ளவராகவும் இருந்தார். அதை வைத்து அவரால் எல்லாம் நடத்திக் கொள்ள முடிந்தது!” ஒரு நீண்ட பெருமூச்சோடு கூறிய பராசரரின் கண்கள் எங்கோ தொலைதூரத்தில் நிலைத்தன. அந்த நாட்கள் அவர் கண்ணெதிரே மீண்டும் வந்தன. “ஆஹா, அவை எப்படிப் பட்ட நாட்கள்! அற்புதமான நாட்கள்!” என்றார்.

“ஓ, உங்கள் தாத்தாவிற்கு எனத் தனியாக ஆசிரமம் இருந்ததா, தந்தையே!”

“நான் தான் சொன்னேனே! குழந்தாய்! ஆர்யவர்த்தத்திலேயே மிகப் பெரிய ரிஷியாக இருந்து வந்தார். பல மன்னர்களின் குலகுருவாகவும் இருந்தார். அவருடைய ஆசிரமம் மிக மிகப் பெரியது. அவரிடம் படித்த முதிர்ந்த சீடர்களே இருநூறுக்கும் மேல் இருந்தனர். பலர் அந்த ஆசிரமத்திலேயே கற்பித்து வந்தார்கள். மற்றவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சிறிய ஆசிரமங்களை ஏற்படுத்திக் கற்பித்தனர்.”

“அப்படியா? அவர் ஏன் யுத்தம் செய்யும்படி ஆயிற்று? அதற்கு என்ன காரணம்?”

“அவர், என் தாத்தா சுதாஸ் என்னும் மன்னனுக்கு ராஜகுருவாகவும் மந்திரியாகவும் இருந்தார். தசராஜர்களுடன் நடந்த யுத்தத்தில் அவர் சுதாஸ் மன்னனுக்குப் பக்கபலமாக இருந்தார். அது மிகப் பெரிய யுத்தம். நீண்ட யுத்தம். கடைசியில் அந்த யுத்தத்தில் சுதாஸ் வென்றான். மகனே, இன்னும் வேறு கேள்விகள் என்ன இருக்கின்றன?”

(பி.கு.) இந்தப் பத்து மன்னர்களுடனான போரில் இந்திரன் சுதாஸுக்கு உதவி செய்ததாகச் சொல்லப்படுகிறது, இந்த யுத்தம் குறித்து ரிக்வேதத்தில் வருவதாகவும் தெரிய வருகிறது. என்றாலும் இந்த யுத்தத்தின் உண்மையான பொருளை வேறு மாதிரிச் சொல்லுகின்றனர். பத்து மன்னர்களையும் அழித்த சுதாஸுக்குப் பட்டாபிஷேஹம் செய்து வைத்தது வசிஷ்டர் என்றும் கேள்விப் படுகிறோம். வசிஷ்டர் மட்டுமில்லாமல் அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்திரனும் பரிபூரண ஒத்துழைப்புக் கொடுத்ததாகவும் அறிகிறோம். இதன் பின்னர் இருக்கும் தத்துவ ஞானம் வேறு மாதிரி சொல்கிறது.

நம்முடைய ஐம்புலன்களின் நுகர்ச்சிக்கு இந்திரனே காரணகர்த்தா. இந்த ஐம்புலன்களால் நமக்கு ஏற்படும் பல்வேறு விதமான அனுபவங்களால் இன்னும் ஐந்து விதமான நுகர்ச்சிகள் நமக்கு ஏற்படுகின்றன. இவை நமக்கு எதிரிகள் ஆவார்கள். அவை யாதெனில் ஐம்புலன்களால் ஏற்படும் நுகர்ச்சியை அடக்காமல் போகத்தில் மூழ்குவதால் தோன்றும் பற்று, இந்தப் பற்றைத் தொடர்ந்து ஏற்படும் அதீத ஆசை, ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றாலோ கிடைக்கவில்லை என்றாலோ ஏற்படும் கோபம், கோபத்தினால் கண்மண் தெரியாமல் ஏற்படும் அறிவு இழப்பு, அறிவு இழப்பினால் புலன்களை அடக்க முடியாமல் சரி எது தப்பு எது என்று புரியாமல் அழிந்து போகும்  விவேகம் ஆகியவற்றைச் சொல்வார்கள்.

இவற்றை எல்லாம் அடக்கினாலே மனிதனிலிருந்து தேவனாக ஆவதன் அடிப்படைக் குணங்கள் ஆகும். இவற்றை அடக்கி ஆளாதவனையே நாம் அசுரர்கள் என்கிறோம். அசுர குணத்தைக் கொடுக்கும் இந்தப் பத்து எதிரிகளையும் அழிக்க உதவி செய்பவன் இந்திரன். இந்தப் பத்து எதிரிகளை நாம் வெல்ல வேண்டிய அவசியம் குறித்துக் கிருஷ்ணரும் கீதையில் சொல்லி இருப்பதாக அறிகிறோம். இதையே சுதாஸுக்கு வசிஷ்டர் கூறி இருக்கிறார். இந்திரியங்களே இங்கு தசராஜர்களாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இது தத்துவார்த்தமான பொருளைக் கொண்டது. )

இனி மேலே நம் கதைக்குப் போவோம். இன்னும் என்ன கேள்விகள் இருக்கின்றனவா என்று பராசரர் கேட்டதற்கு த்வைபாயனன் ஆம் என்று தலையசைத்தான். “உங்கள் தந்தையின் பெயரும், தாயின் பெயரும் என்ன, தந்தையே?”

“என் தந்தையின் பெயர் சக்தி! என் தாயின் பெயர் அத்ரிஷாந்தி!”

“தந்தையே, நாம் இப்போது உங்கள் பாட்டனாரின் ஆசிரமத்துக்குப் போவோமா?”

“வேண்டாம் மகனே! அந்த ஆசிரமம் துயரமும், துன்பமும் நிறைந்த நாட்களை நினைவூட்டுகிறது! அது மிகவும் மனதை வலிக்கச் செய்யும் விஷயம், குழந்தாய்! நாம் அந்த ஆசிரமத்துக்குப் போய் மீண்டும் அந்தத் துயரமான நாட்களை நினைவு கூர வேண்டாம்.”

“சரி, அப்படியானால் வேண்டாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்குச் சொல்லுங்கள்! அவர் எப்போது இறந்தார்?”

“பல ஆண்டுகளுக்கு முன்! ஹூம், பொல்லாத கொடிய அரசன் சஹஸ்ரார்ஜுனன் தர்மக்ஷேத்திரத்தில் இருந்த அந்த ஆசிரமத்தை எரிக்க வந்துவிட்டான். அதைக் கண்ட என் பாட்டனார் அவன் கைகளில் சிக்கிக் கொண்டு இறப்பதை விட நாமாக இறந்துவிடுவது மேல் என நினைத்துக் கொண்டு தன் சுய விருப்பத்தின் பேரில் உயிரை விட்டார். இல்லை எனில் அவன் அவரைக் கொன்றிருப்பான்.”

“நாம் இப்போது தர்மக்ஷேத்திரம் போகப் போகிறோமா, தந்தையே?”

“இல்லை, அது இப்போது முற்றிலும் அழிந்து அங்கே பெருங்காடு உருவாகி விட்டது. அந்த இடத்தை இப்போது இருக்கும் நிலையில் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் கற்றறிந்த பெரிய ரிஷிகளும், முனிவர்களும் உலவிய இடம், எப்போதும் வேத முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருந்த ஓர் பகுதி, சீடர்களும், குருமார்களும் வாத விவாதங்கள் செய்து கொண்டு வேதங்களில் உள்ள சந்தேகங்களைப் போக்கிக் கொண்டிருந்த ஓர் இடம், இன்று ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டதைப் பார்க்க மனம் சகிக்கவில்லை!” துயரத்தோடு கூறினார் பராசரர்!

“உங்களுக்கென்று சொந்தமாக ஆசிரமம் இருக்கிறதா, தந்தையே! அப்படி எனில் நாம் எப்போது அங்கே போவோம்?”

“இப்போது இல்லை, மகனே!” இதைச் சொல்லும்போதே அவர் முகத்தில் படர்ந்த வேதனையைக் கவனித்த த்வைபாயனன் பேசாமல் வாயை மூடிக் கொண்டு மௌனம் காத்தான். மறுநாள் அவர்கள் அதிகாலையிலேயே பயணத்தைத் தொடர்ந்தனர். நதியில் சற்று தூரம் பயணப்பட்ட பின்னர் ஒரு இடத்தில் நதி வளைந்து நெளிந்து திரும்பிச் சென்றது. அந்த முடுக்கில் திரும்பும்போது த்வைபாயனன் நதிக்கரையில் ஓர் விசித்திரமான காட்சியைக் கண்டான். கரை ஓரமாக எங்கெங்கு பார்த்தாலும் சாம்பல் குவியலாகக் கிடந்தது. மரங்கள் எரிக்கப்பட்டுக் கிடந்தன. அந்த இடங்களில் பெரிய பெரிய எறும்புப் புற்றுகள் உண்டாகி இருந்தன. அங்கே மனிதர் இருந்ததற்கோ, வாழ்ந்ததற்கோ அடையாளமே இல்லை. பார்க்கவே பயங்கரமாகச் சுடுகாடு போல் காட்சி அளித்தது.

“அது என்ன, தந்தையே! அங்கே ஏன் அப்படி இருக்கிறது?”

“அது சாம்பல் குவியலின் இடம். மைதானம் முழுதும் சாம்பலாக ஆனது. நீ அதைப் பார்க்காதே. உன் கண்களை மூடிக் கொள்!”

படகு இப்போது ஒரு குக்கிராமத்தை அடைந்திருந்தது. அந்தக் கிராமத்தின் எளிய மக்கள் அங்கே குளித்துக் கொண்டும், தங்கள் ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டும், காலைக் கடமைகளைச் செய்து கொண்டும் இருந்தனர். பராசரரை அவர்களும் நொண்டி முனிவர் என்னும் பெயரால் அறிந்திருந்தார்கள். இப்போது அவரை இங்கே நேரில் கண்டதும் மகிழ்ச்சியுடன் வந்து எதிர்கொண்டு அழைத்து உபசரித்தார்கள். அவருக்கும் சீடர்களும் மற்றும் உடன் வந்தவர்களுக்கும் உணவும், பால் பழங்களும் கொடுத்தார்கள். அந்த ஊருக்குச் செல்லவேண்டிய பயணிகள் அங்கே விடைபெற்றுச் சென்றார்கள். த்வைபாயனன் தன் தந்தையுடன் அங்கிருந்த ஒரு பெரிய மரநிழலில் அமர்ந்து கொண்டு கிராமத்தார் கொடுத்த உணவை அனைவருடனும் பங்கிட்டு உண்டான். அப்போது படகோட்டி அங்கே வந்து, “ஐயா, தாங்கள் இன்னமும் மேலே செல்லப் போகிறீர்களா? அல்லது இங்கேயே தங்கப் போகிறீர்களா?” என்று பணிவுடன் கேட்டான்.

“நாங்கள் இங்கே தங்கவில்லை. மேலே செல்லப் போகிறோம்.” என்றார் முனிவர்.

“நாம் ஏன் படகோட்டியுடன் நதியோடு மேலே செல்லவேண்டும்? ஏன் இங்கேயே தங்கக் கூடாது? எனக்கு அந்தச் சாம்பலினால் ஆன இடத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. இந்தக் கரையோடு போனால் அதைப் பார்க்கலாம் அல்லவா?” என்று த்வைபாயனன் தந்தையிடம் கேட்டான். “அது சாபம் நிறைந்த இடம், குழந்தாய்! அங்கு நாம் செல்வது அவ்வளவு புனிதமானது அல்ல! நன்மை தரக்கூடியதும் அல்ல!” என்றார் பராசரர். ஆனால் த்வைபாயனின் ஆவல் அதிகரித்தது! “நாம் ஏன் இங்கேயே தங்கிக் கொண்டு அந்த மோசமான இடத்தைச் சென்று பார்க்கக் கூடாது?” என்று தந்தையிடம் மீண்டும் கேட்டான். தன் கண்களை ஒரு கணம் மூடித் திறந்த பராசரர், “நீ அதைக் குறித்து மேலும் அறிய நேர்ந்தால் மனம் வருந்துவாய்! அது எவ்வளவு துரதிர்ஷ்டம் பிடித்த இடம் என்பது தெரிந்தால் உன் மகிழ்ச்சியே போய்விடும்!” என்றார்.

தந்தையின் முகத்து வேதனையைக் கண்ட த்வைபாயனன் இதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். இருந்தாலும் தந்தையிடம், “அதைக் குறித்து நீங்கள் எனக்கு விளக்கமாகச் சொல்லவில்லை என்றால் தான் நான் மகிழ்ச்சி அற்று இருப்பேன் தந்தையே! அது என் மனதை உறுத்தியவண்ணம் இருக்கும். என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் தந்தையே!” என்ற த்வைபாயனன் மனதில் ஏதோ தோன்ற, “அதைக் குறித்துப் பேசுவதால் உங்கள் மனம் புண்படுமெனில் நீங்கள் அதைக் குறித்து என்னிடம் எதுவும் சொல்லவேண்டாம் தந்தையே!” என்றான்.

“சரி, பின்னால் ஓர் நாள் நீ இதைக் குறித்து அறிந்து கொள்ளத் தான் போகிறாய். வேறு யார் மூலமும் தெரிவதற்கு முன் நானே சொல்கிறேன். அது தான் என்னுடைய ஆசிரமம். அதாவது ஒரு காலத்தில் என் ஆசிரமமாக இருந்த இடம்!” என்றார் வேதனையுடன். அவர் குரலே ரகசியம் பேசுவது போல் கம்மிப் போயிற்று.

“என்ன உங்கள் ஆசிரமமா? ஆனால் வெறும் சாம்பல் குவியல் தான் மிச்சம் அங்கே!” ஆச்சரியத்துடன் கேட்டான் த்வைபாயனன்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

கடவுளே இத்தனை பெரிய மஹரிஷிக்கே இத்தனை துன்பங்களா.
வேதனையாக இருக்கிறது. வேதவியாசர் கொடுத்துவைத்தவர். அவரைப் படிக்கும் நாமும் கொடுத்து வைத்தவர்களே.

ஸ்ரீராம். said...

நன்றி...